சிறப்புக் கட்டுரைகள்

மரபணு திருத்தப்பட்ட நெல் இந்தியாவுக்குத் தேவையா?

அ.நாராயணமூர்த்தி

புதிய வகை நெல் ரகங்கள் கண்டுபிடிப்பில் இந்தியா சாதனை படைத்துள்ளது. ஆமாம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) சமீபத்தில் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில், உலகின் முதல் மரபணு திருத்தப்பட்ட (Genome-edited) இரண்டு நெல் வகைகளை மத்திய வேளாண் அமைச்சர் வெளியிட்டதன் மூலம், இந்தியா விவசாயக் கண்டுபிடிப்புகளில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளது. வேளாண் அமைச்சகத்தின் 2024-25ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டின்படி, முதன்முதலாக சீனாவின் நெல் உற்பத்தியை (14.7 கோடி டன்) விஞ்சி, இந்தியா 14.95 கோடி டன் உற்பத்தி செய்து, உலகின் மிகப்பெரிய நெல் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.

இது கூடுதலாக ஒரு சாதனை! அதேவேளை​யில், இது தொடர்பான சில முக்கியக் கேள்வி​களும் எழுகின்றன. இந்தியா ஏற்கெனவே தேவைக்கு அதிகமாக நெல் பயிரிடும்​போது, மரபணு திருத்​தப்பட்ட நெல் தேவையா? புதிய நெல் ரகங்கள் பாதுகாப்​பானவையா? இந்தியாவின் மொத்த விவசா​யிகளின் எண்ணிக்கை​யில், 86%ஐக் கொண்டுள்ள குறு, சிறு விவசா​யிகளுக்கு இப்புதிய ரகங்கள் பயனளிக்​குமா?

ஏன் நெல்லைத் தேர்வுசெய்ய வேண்டும்? - நெல் தற்போது இந்தியாவில் சுமார் 4.7 கோடி ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்​படு​வதோடு மட்டுமல்​லாமல், பரப்பளவில் முதன்மைப் பயிராகவும் திகழ்​கிறது. அதேவேளை​யில், ஒரு கிலோ நெல் உற்பத்​திக்கு 3,000 - 5,000 லிட்டர் தண்ணீர் தேவைப்​படு​வ​தால், பல மாநிலங்​களில் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்​சுவதற்கு நெற்பயிர் காரணமாக உள்ளது.

தண்ணீரை அதிகம் வயலில் நிறுத்தி நெல் சாகுபடி செய்யப்​படு​வ​தால், அதிகளவில் மீத்தேன் வெளியேறு​வ​தாக​வும், இதனால் இந்தியாவின் மொத்த விவசாயப் பசுங்குடில் வாயு வெளியீடு அதிகரிப்​ப​தாகவும் கூறப்​படு​கிறது. ஆனால், புதிதாக அறிமுகப்​படுத்​தப்​பட்​டு உள்ள மரபணு திருத்​தப்பட்ட நெல் வகைகள், மூன்று முக்கிய நன்மைகளை வழங்கு​வ​தாகக் கூறப்​பட்​டுள்ளது. ஒன்று, சீக்கிரம் முதிர்ச்சி​யடைவ​தால், அறுவடைக் காலம் அதன் தாய் நெல் வகைகளைவிட 15-20 நாள்கள் குறைகிறது.

இரண்டு, அறுவடைக் காலம் குறைவ​தால், நீர்ப்​பாசனத்தில் இரண்டு முதல் மூன்று சுற்றுத் தண்ணீர் தேவையைக் குறைக்​கிறது. மூன்று, இவ்வகை நெல் ரகங்கள் விளைச்சலை 15-20% அதிகரிப்​ப​தோடு, வறட்சியைத் தாங்கும் தன்மை​யையும் கொண்டுள்ளன. நெல் சாகுபடிக்கான இடுபொருள்​களின் தேவை குறைந்து, விவசா​யிகளின் வருமானத்தை அதிகரிப்​ப​தோடு, நெகிழ்வான பயிர்ச் சுழற்சிகளை (flexible crop cycles) நடைமுறைப்​படுத்து​வதற்கு இப்புதிய நெல் ரகங்கள் உதவக்​கூடும். சில விவசாய அமைப்புகள், மரபணு திருத்​தப்பட்ட நெல் ரகங்கள் பற்றிய அச்சத்தை வெளிப்​படுத்​தி​யுள்ளன.

மரபணு திருத்தம், மரபணு மாற்றப்பட்ட பயிர்​களி​லிருந்து (Genetically Modified Crops) முற்றிலும் வேறுபட்டது என்பதைப் புரிந்து​கொள்ள வேண்டும். மரபணு திருத்தம் என்பது வேறு பயிர்​களின் வெளி மரபணுக்களை (foreign genes) அறிமுகப்​படுத்​தாமல், ஒரு தாவரத்தின் அதன் சொந்த டிஎன்​ஏ-இல் இலக்கு மாற்றங்​களைச் செய்து உருவாக்​கப்​படு​வ​தாகும். ஆனால், இதற்கு நேர்மாறாக, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், பிற இனங்களி​ல் இருந்து (other species) மரபணுக்களை எடுத்துப் பயிர்​களில் செருகு​வ​தால், அவை சுற்றுச்​சூழல், சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்​தக்​கூடும்.

இந்த முக்கியமான வேறுபாட்டை அங்கீகரித்து, இந்தியா 2022ஆம் ஆண்டு வெளியிட்​டுள்ள ‘மரபணு திருத்​தப்பட்ட தாவரங்​களின் பாதுகாப்பு மதிப்​பீட்டுக்கான வழிகாட்டு​தல்கள்’ பற்றிய அறிக்கை, சில மரபணு திருத்​தப்பட்ட பயிர்களை, மரபணு மாற்றப்பட்ட பயிர்​களுக்கு உள்ள நீண்ட ஒழுங்குமுறை செயல்​முறையி​லிருந்து விலக்கு அளித்​துள்ளது. இது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள உலகளாவிய ஒழுங்குமுறை விதிகளுடன் ஒத்துப்​போகிறது.

கடுமையான அறிவியல் நெறிமுறை​களின் கீழ் உருவாக்​கப்​படு​கின்ற, மரபணு திருத்​தப்பட்ட பயிர்கள் நச்சுத்​தன்மை வாய்ந்தவை என்பதற்கான எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. உண்மை​யில், மரபணு திருத்​தப்பட்ட முறையில், வழக்க​மாகச் செய்யப்​படும் பயிர் இனப்பெருக்​கத்தைவிட (crop breeding) வேகமாக​வும், துல்லிய​மாகவும் புதிய பயிர்களை உருவாக்கி, பயிர்​களின் மீள்தன்மையை (crop resilience) உயர்த்தி, உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும் எனக் கூறப்​படு​கிறது.

விவசா​யிகளின் வருமானத்தை அதிகரிக்​குமா? - இந்தியாவில் 86%க்கும் மேற்பட்ட விவசா​யிகள் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் குறு, சிறு விவசா​யிகள். அவர்களுக்கு அறிவியல் புதுமை​யைவிட மலிவு விலை விதைகள், காலநிலை மாற்றத்தைச் சமாளித்தல், நிலையான வருமானம் ஆகியவை மிக முக்கியம். மரபணு திருத்​தப்பட்ட நெல் விதைகளும், கலப்பின விதைகள் (Hybrid seeds) அல்லது மரபணு மாற்றப்பட்ட விதைகள் (GM seeds) போல அதிக விலை நிர்ணயம் செய்யப்​பட்​டால், விவசா​யிகள் பாதிக்​கப்​படு​வார்கள். இருப்​பினும், தற்போது வெளியிடப்​பட்​டுள்ள இரண்டு புதிய நெல் வகைகளும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ்வரும் பொதுத் துறை நிறுவனங்​களால் உருவாக்​கப்​பட்​டுள்ள​தால், இவற்றின் விலை அதிகமாக இருக்காது என நம்பலாம்.

இருந்த​போ​தி​லும், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், பிஎம் கிஸான் விதை, மினி-கிட்கள் போன்ற அரசுத் திட்டங்கள் மூலமாக​வும், வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும் இவ்விதைகளைக் குறைவான விலையில் விநியோகித்தால் சிறு, குறு விவசா​யிகளும் பயன்படுத்த முடியும்.
2024–25இல் ஒரு குவிண்டால் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.2,320 கொடுக்​கப்​பட்டு, கொள்முதல் செய்யப்​பட்​டாலும் உரம், டீசல், கூலிச் செலவுகள் வேகமாக அதிகரித்து​வரு​வ​தால், பயிர்ச் செலவை மீட்ப​தற்கு விவசா​யிகள் பெரிதும் போராடு​கிறார்கள்.

மேலும், சமீப காலமாக ஏற்பட்​டுள்ள ஒழுங்கற்ற வானிலை, பயிர் சாகுபடியில் நஷ்டங்களை அதிகரித்​துள்ளது. குறுகிய அறுவடைக்​காலம், வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்ட மரபணு திருத்​தப்பட்ட நெல் வகைகள், இடுபொருள்​களின் பயன்பாட்​டையும் நீர்ப்​பாசனத் தேவைகளையும் குறைத்து அதிக மகசூல் கொடுப்​பதால் விவசா​யிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவக்​கூடும்.

எதிர்​காலம் நோக்கி: இந்தியாவில் நெல் உற்பத்​தியில் ஏற்பட்​டு உள்ள அதீத வளர்ச்சி, பிற அத்தி​யா​வசியப் பயிர்​களில் உள்ள பெரும் பற்றாக்​குறையை மறைக்​கிறது. உள்நாட்டு உற்பத்தி போதாத காரணத்​தால், 2023–24இல் மட்டும் நமது நாடு 1.59 கோடி டன்களுக்கு மேல் சமையல் எண்ணெயை​யும், ஏறத்தாழ 47.4 லட்சம் டன் பருப்பு வகைகளையும் இறக்குமதி செய்த காரணத்​தால், ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமான இறக்குமதிச் செலவு ஏற்பட்​டு உள்ளது.

நெல் பயிர்​களுக்குக் கொடுக்​கப்​படு​கின்ற பயிர் இனப்பெருக்க ஆராய்ச்சி முன்னுரிமை, அதனுடன் தொடர்​புடைய முதலீடுகள், பருப்பு, எண்ணெய்​வித்துப் பயிர்​களுக்குக் கொடுக்காத காரணத்​தால், இப்பயிர்​களின் உள்நாட்டு மகசூல் உலகளவில் ஒப்பிடும்போது மிகக் குறைவாக உள்ளது.

இந்த ஏற்றத்​தாழ்வை மரபணு திருத்தம் செய்யப்பட்ட விதைகளை உருவாக்குவதன் மூலம் சரிசெய்ய முடியும். ஊட்டச்​சத்து, விவசா​யிகளின் உயர் வருமானத்​துக்கு முக்கியமான கொண்டைக் கடலை, துவரம் பருப்பு, நிலக்​கடலை, கடுகு போன்ற பயிர்​களில், வறட்சியைத் தாங்கி, பூச்சி எதிர்ப்புத்​தன்மையை அதிகரித்து, மகசூலை உயர்த்த இப்புதிய தொழில்​நுட்பம் உதவக்​கூடும். மரபணு திருத்​தப்பட்ட நெல் ரகங்கள் மூலமாக, நெல் சாகுபடிப் பரப்பளவை விரிவுபடுத்து​வதற்கோ அல்லது ஒற்றைப் பயிர் (mono-crop) சாகுபடியை மேலும் தீவிரப்​படுத்து​வதற்கோ முயற்சி எடுக்​கப்​பட்​டால், அது வேளாண் வளர்ச்சியில் பல பிரச்சினைகளை ஏற்படுத்​தக்​கூடும்.

மாறாக நீர்ப் பற்றாக்​குறை, காலநிலை பாதிப்​புக்கு உள்ளான பகுதி​களில், தற்போதுள்ள நெல் சாகுபடிக்குப் பதிலாக நிலையான முறையில் பயிர் செய்வதற்கு ஒரு கருவியாக இந்தப் புதிய நெல் ரகங்களைப் பயன்படுத்த வேண்டும். இதன் நன்மை விவசா​யிகளுக்குக் கிடைக்க, பொது விதை அமைப்புகள் எந்தவித நெருக்​கடிக்கும் ஆளாகாமல் மலிவு விலையில் விதைகள் கிடைப்பதை உறுதிப்​படுத்த வேண்டும்.

அதேநேரத்​தில், நெல்லைவிட அதிகப் பரப்பளவில் பயிரிடப்​படும் பருப்பு, எண்ணெய்​வித்துப் பயிர்​களில், உற்பத்​தித்​திறன் மிகவும் குறைவாக உள்ள காரணத்​தால், இப்பயிர்​களில் மரபணு திருத்​தப்பட்ட விதைகளை உருவாக்க ஆராய்ச்சிகளை முடுக்​கிவிட வேண்டும்.

மரபணுத் திருத்தம் மாற்றத்​துக்கான ஒரு சக்தி​வாய்ந்த நெம்பு​கோலாக இருக்க வேண்டு​மென்​றால், அது இடுபொருள்​களின் சார்புநிலையைக் குறைத்து, மீள்தன்மையை மேம்படுத்தி, நாட்டில் அதிகமாக உள்ள குறு, சிறு விவசா​யிகளுக்கு உதவக்​கூடிய பரந்த இலக்கு​களுடன் இருக்க வேண்டும். அறிவியல் முன்னேற்றம் சமூகத்​துக்குப் பெருமளவில் பயனளித்தால் மட்டுமே, அதற்கு உண்மையான மதிப்பு இருக்கும் என்பதைக் கொள்கை வகுப்​பாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்​.

- தொடர்புக்கு: narayana64@gmail.com

SCROLL FOR NEXT