இந்தியாவின் மாபெரும் இயற்கைப் புதையல் மேற்குத் தொடர்ச்சி மலை. அதைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு அமைத்த குழு 2011இல் அளித்த விரிவான அறிக்கை, அக்குழுவின் தலைவராக இருந்த பேராசிரியர் காட்கிலின் பெயரில் மாதவ் காட்கில் அறிக்கை எனப்படுகிறது. காடுகளைக் காப்பதற்கு அறிவியல் முறைப்படி அவர் அளித்திருந்த பரிந்துரைகளைத் தென் மாநில அரசுகள் கண்மூடித்தனமாக எதிர்த்தன.
அதனால், இந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. காடுகள் பாதுகாப்பில் நெடிய அனுபவம் வாய்ந்தவர் மாதவ் காட்கில். 1980இல் காடுகள் பாதுகாப்புச் சட்டம், உயிர்ப்பன்மைச் சட்டம் - 2002 ஆகியவற்றின் உருவாக்கத்திலும் முக்கியப் பங்காற்றியவர். இந்தியாவில் காடுகள், இயற்கை வளம் இன்றைக்கு மிச்சமிருப்பதற்கு அவரும் ஒரு முக்கியக் காரணம்.
தன் வாழ்நாள் முழுக்கத் தனக்கு உத்வேகம் அளித்து வரும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரை அடிப்படையாகக் கொண்டே தன் சுயசரிதைக்கு அவர் பெயரிட்டிருக்கிறார் - A Walk Up The Hill. ‘மலையில் ஒரு நடை - மக்களோடும் இயற்கையோடும் எனது வாழ்வு’ (ந.மனோகரன் மொழிபெயர்ப்பில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வெளியீடு) என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற அவரது சுயசரிதை ஒரு சூழலியல் சமூக வரலாற்று ஆவணம். இதை அவரது சுருக்கமான தன்வரலாறு என்றும் கூறலாம்.
இளமைக் காலத்தில் இருந்து, தான் வாழ்ந்த அனுபவங்களை ஓவியக் கோடுகளாகத் தீட்டிச் செல்கிறார். குமரியில் தொடங்கி நர்மதையின் தென்கரையில் அமைந்துள்ள சாத்பூராவில் முடியும் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீண்ட பெருநிலத்தை அழகிய மொழியில் விளக்கிச் செல்கிறார். தன்னுடைய இளமைக்காலம் தொட்டே இம்மலையைத் தீராக் காதலுடன் காதலிப்பதாகக் கவித்துவமாகப் பதிவுசெய்கிறார்.
ஆளுமைகளுடன் இளமைக் காலம்: மாதவ் காட்கிலின் தந்தை தனஞ்ஜெய் காட்கில் ஒரு பொருளியல் வல்லுநர். பறவை மனிதர் சாலிம் அலியும் தனஞ்ஜெயும் நண்பர்கள். மாதவ்காட்கிலுக்கு இளம் வயதிலேயே இயற்கையின் மீது காதல் வந்துவிட்டது. சிறுவனாக இருந்த காலத்திலேயே பறவை நோக்கும் உலாக்களுக்கு இருகண்ணோக்கியை (பைனாகுலர்) எடுத்துக்கொண்டு, சாலிம் அலியுடன் எண்ணற்ற பறவைகளைக் கண்ட அனுபவங்கள் அவருக்கு வாய்த்தன.
சாலிம் அலி, காட்கிலைவிட 46 வயது மூத்தவர் என்றாலும் நெருக்கமான நட்புடன் காட்கிலுடன் பயணித்துள்ளார். அலி மீது காட்கிலுக்கு அளவற்ற மதிப்பு இருந்தாலும், அவரிடம் வெளிப்பட்ட மேட்டுக்குடிப் பண்பு குறித்த விமர்சனமும் அவருக்கு இருந்தது. அடித்தட்டு மக்களைப் பற்றி சாலிம் அலியின் பார்வையையும் இந்தப் புத்தகத்தில் விமர்சன பூர்வமாகப் பதிவுசெய்திருக்கிறார் மாதவ்.
காட்கிலின் குடும்பப் பின்னணி அவரை நல்ல வாசிப்பாளராக மாற்றியிருந்தது. ஆயிரக்கணக்கான நூல்கள் அவருடைய வீட்டில் இருந்துள்ளன. அவரது குடும்பம் உயர்சாதிப் பின்னணி கொண்டதாக இருந்தபோதும் அவரது தந்தை, மாமாக்கள் ஆகிய சுற்றத்தினர் முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களாக இருந்துள்ளனர். இதனால், அடித்தட்டு மக்களை அவரால் நேசிக்க முடிந்தது. வளர்ச்சித் திட்டங்கள் என்கிற பெயரில் மக்கள் வெளியேற்றப்படுவதை எதிர்த்து எழுதியவர் அவரது மாமா. அதேபோல், காட்கிலின் தந்தை பௌத்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தது, அறிஞர் அம்பேத்கருடனான தொடர்பு ஆகியவை சாதி மறுப்பில் காட்கில் ஆர்வம் கொள்ள வாய்ப்பாக அமைந்தன.
பல்வேறு கதைகள்: மகாராஷ்டிரத்தில் பிறந்து வளர்ந்த காட்கில், நாக்பூரில் உள்ள அவரது முன்னோர்களின் ஆரஞ்சுத் தோட்டம், கரும்புத் தோட்டம் பற்றிய நினைவுகளை இந்நூலில் பகிர்கிறார். குடகு மலையின் அழகும் சோலைக் காடுகளின் பெருமாண்பையும் யானைகளின் உலாக்களையும் வியந்து விவரிக்கிறார்.
தினைக்குருவி முதல் சத்ரபதி சிவாஜிக்கு உதவிய உடும்பு, பழங்குடிகளான தங்கர்காவ்லி மக்கள், அவர்களது பளபளக்கும் கருந்தோல் எருமைகளின் வனப்பு, அவர்கள் தரும் சுவைமிகுந்த மோர் வரையான பல்வேறு கதைகளை விவரித்துக்கொண்டே செல்கிறார். காட்டுக்குள் நடந்து செல்லும் ஓர் ஆற்றுப்படை இலக்கிய அனுபவத்தை இதில் உணர முடிகிறது.
பள்ளிக் கல்வி முடித்து புணே நகரின் கல்லூரியில் சேரும்போதே சூழலியலாளராக ஆக வேண்டும் என்று மாதவ் காட்கில் முடிவுசெய்திருந்தார். அப்போதிருந்தே களப் பயணங்களை விரும்பும் ஒருவராகவும் மாறிவிட்டிருந்தார். ரத்தினகிரியின் வளமான காடுகள், அவற்றைப் பற்றி வனத் துறையினருக்கு இருந்த குறைவுபட்ட புரிதல் பற்றியெல்லாம் புத்தகத்தில் சுட்டிக்காட்டுகிறார்.
தனது கல்லூரித் தோழி சுலோசனாவை மாதவ் காதலித்து மணமுடித்தது பற்றிய கதை சுவையானதொரு காதல் கதை. தனது துணைவியுடன் 1965ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றார் காட்கில். அவ்வளவு பெரிய, முற்போக்கான பல்கலைக்கழகத்தில் ஒரு கறுப்பினப் பேராசிரியர்கூட இல்லாத முரணும் அவருக்கு வருத்தம் அளித்தது.
காடுகள் பாதுகாப்பு: மனிதனும் சுற்றுச்சூழலில் ஒரு பகுதியே என்கிற அத்தியாயம் இப்புத்தகத்தில் மிக முக்கியமானது. சுற்றுச்சூழலில் வேதிப் பூச்சிக்கொல்லிகள் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள், அதை எதிர்த்து எழுத வந்த ரேச்சல் கார்சன், அவருக்கு ஏற்படுத்தப்பட்ட அநியாயங்கள் என்று விரிவான வரலாற்றுச் செய்திகளைத் தந்திருக்கிறார். வியட்நாமின் அரிய வெப்பமண்டலக் காடுகளில் தடை செய்யப்பட்ட தாவரக்கொல்லிகள் அமெரிக்காவால் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட அழிவு போன்றவை இன்றைய ஆய்வாளர்களுக்குப் போதுமான தகவல்களுடன் உள்ளன. அணுத் தொழில்நுட்பம் எவ்வளவு கொடுமையானது, அதன் பின்னணியில் உள்ள உலக அரசியல் என்று அணு அரசியலை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்துள்ளார்.
அமெரிக்காவில் படித்துத் திரும்பி, புணேவுக்கு வந்து பணியில் இணைந்தார். அதன் பிறகு மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஆழமாக அலசி ஆராய்ந்தார். இந்தியாவின் உயிர்ப்பன்மையைக் காக்க ஆராய்ச்சிகள் மட்டுமல்லாமல், அவற்றுக்குச் சட்டப் பாதுகாப்பு விதிகளும் தேவைப்பட்டன. சட்ட உருவாக்கத்தில் அவர் ஈடுபட்டது தொடர்பான செய்திகள் இப்புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. சரணாலயங்கள், வனக் காப்பகங்கள், காப்புக் காடுகள் என்று அப்போது வரையறை செய்யப்பட்டன.
அறிவுக் கருவூலம்: காடழிப்பில் தொழிற்சாலைகள் எந்த மாதிரியான பங்களிப்பை வகிக்கின்றன என்கிற செய்தியை மூங்கில் காடுகளைப் பற்றிய தலைப்பில் அறிய முடியும். ஆயிரம் கிலோ மூங்கிலை, ஒன்றரை ரூபாய்க்குத் தொழிற்சாலைகளுக்கு அரசு கொடுத்த அவலத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார். காட்டில் மூங்கில் வளம் அழிந்த வரலாறும், அதன் விளைவாக மக்கள் வாழிடங்களை நோக்கி யானைகள் வருவதையும் நாம் இணைத்துப் புரிந்துகொள்ள முடிகிறது.
மனிதர்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் இடையே ஏற்படும் மோதல்கள்; குறிப்பாக யானை, காட்டுப் பன்றி ஆகியவற்றால் ஏற்படும் சிக்கல்களையும் மாதவ் விளக்கியுள்ளார். காட்டுப் பன்றிகள் வேட்டையாடப்பட வேண்டும் என்பது இவரது கருத்து. ஒரு சூழலில் ஓர் உயிரினம் அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது, அதை வேட்டையாடலாம் என்கிறார்.
மேய்ச்சல் சமூகமும் வேளாண்மைச் சமூகமும் எப்படி இயங்கிவந்தன, அவை எப்படிச் சிதைக்கப்பட்டன என்பதை விளக்குகிறார். கால்நடை வளர்ப்பும் வேளாண்மையும் ஒன்றிணைந்து நீடித்த வாழ்வைக் கொடுத்தன. பழங்குடிகளை முதலில் நாகரிகமில்லாத காட்டுவாசிகள் என்றதும், பின் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்றதும் வரலாற்றில் நுணுக்கமாகத் திட்டமிட்டு நடந்தேறின.
இப்படி மிகத் துணிச்சலான செய்திகளை அச்சமின்றித் தெரிவிக்கிறார். வளர்ச்சித் திட்டங்கள் என்கிற பெயரில் அவர்கள் மீது நிகழும் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார். தேக்கு, சந்தனம் போன்ற காட்டு வளங்களைக் கொள்ளையிட வெள்ளை அரசு உருவாக்கிய சதிகாரச் சட்டங்களும் திட்டங்களும் இன்றும் தொடர்வதைக் கவனப்படுத்துகிறார். நீடித்த வளர்ச்சியே மக்களுக்கான அடிப்படைத் தேவை என்று கூறும் இவரது நூல், ஒரு சூழலியல் வரலாற்றுப் பெட்டகம், அறிவியல் கருவூலம்.
- தொடர்புக்கு: pamayanmadal@gmail.com