சாம்சங் தொழிலாளர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்குக் கிடைத்திருக்கும் ஊதிய உயர்வை மட்டும் ஒரு வெற்றியாக இங்கு குறிப்பிடவில்லை. தாங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்ட ஒரு தொழிற்சங்கத்தை மதிக்க மறுத்த நிர்வாகம், தங்களது சங்கத்தோடு ஓர் உடன்பாட்டை எட்டியிருப்பதுதான் சாம்சங் தொழிலாளர்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வெற்றி.
ஒரு பன்னாட்டு நிறுவனம், உள்நாட்டுச் சட்டங்களை மதித்தே தனது உற்பத்தியை இங்கே நடத்த வேண்டும் என்பதை அரசாங்கம் அல்ல, அந்த நிறுவனத்தின் எளிய உழைப்பாளிகள் உறுதிசெய்துள்ளனர் என்பது கவனத்துக்குரியது. தங்களை வருத்திக்கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தை அறிந்தே களத்தில் இறங்கி, தங்களது எதிர்காலம் பற்றிய கேள்விகள் இருந்தாலும் நம்பிக்கையோடு அவர்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்களால்தான் இது சாத்தியமானது. அந்த வகையில் இந்த வெற்றி இன்னும் சிறப்பானது.
தொழிற்சங்கம் வந்த கதை: கடந்த ஆண்டு செப்டம்பரில், சாம்சங் தொழிலாளர்களின் போராட்டப் பந்தலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அன்றாடம் அங்கே திரண்டு, கடும் வெயிலில் நாள் முழுக்க ஆர்ப்பாட்ட முழக்கங்கள் எழுப்பவும் தலைவர்களது விளக்க உரைகள் கேட்கவுமாக இருந்த நாள்கள் அவை. நாங்கள் அங்கு சென்றது ஒரு மதிய நேரம்.
சீருடையிலேயே வந்திருந்த தொழிலாளர்கள் வரிசையாக நின்று மதிய உணவைப் பெற்றுக்கொண்டு, உற்சாகத்தோடு கூட்டம் கூட்டமாக நின்று உண்ணவும், மீண்டும் பந்தலுக்குத் திரும்புவதுமாக இருந்தனர். அவர்களில் சிலரிடம் பேசினேன். “எப்போது வேலைக்குத் திரும்புவோம் என்கிற நிச்சயமற்ற தொடர் வேலைநிறுத்தத்தில் இருக்கிறீர்கள், குடும்பத்தினர் என்ன சொல்கின்றனர்?” என்று கேட்டபோது, தொழிலாளர்கள் தங்களது நியாயத்தை மிகவும் பக்குவத்தோடு வீட்டில் இருப்போருக்கு எடுத்துச் சொல்லி வந்திருக்கின்றனர் என்பது மலைக்க வைத்தது.
அதற்கு ஒரு வலுவான காரணம் இருந்தது. 17 ஆண்டுகளாக அங்கே தொழிற்சங்கம் கிடையாது. யார் வேண்டுமானாலும் எதற்காகவும் தண்டிக்கப்படலாம் என்பதுபோல் நடைமுறை வழக்கமாகி இருந்தது. ஒருவருக்காக மற்றவர் போய்ப் பேசினால், அது குற்றமாகப் பார்க்கப்பட்டது. முழுமையாக விவரிக்க முடியாத வகைகளில் தொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளில் இருந்தே அவர்கள் தங்களை ஒன்றுபடுத்திக்கொண்டு, ஒற்றைக் குரலாக ஒலிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துள்ளனர். ஆம்! ஓரிரவில் வந்தடைந்த இடமல்ல, தொழிற்சங்கம்.
தொழிற்சங்க வரலாறு: இந்திய விடுதலைப் போரில், தொழிற்சங்கங்களின் தலைமையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் காலனி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடினர். ஏஐடியுசி சங்கத்தின் முதல் தலைவர் லாலா லஜபதி ராய், தன்னிகரற்ற சுதந்திரப் போராட்ட வீரர். ஒரு போராட்டத்தில் அவரது தலையிலேயே அடித்துக் குருதி பெருக வைக்கும் கொடுமையைச் செய்தார் பிரிட்டிஷ் காவல் அதிகாரி சாண்டர்ஸ்.
மாவீரன் பகத் சிங், சந்திரசேகர ஆசாத், அவர்களது தோழர்கள் பெரும் ஆவேசம் கொண்டு எழுந்தனர். தென்னகத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, 1908இலேயே தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களது வேலைநிறுத்தத்துக்குத் தலைமை வகித்தார். 1946 கடற்படை எழுச்சி பம்பாயை உலுக்கியபோது, நாடெங்கிலும் எழுந்த சகோதரத்துவக் குரல்களில், லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் பேரணி சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடந்தது குறிப்பிடப்பட வேண்டியது.
இப்படியான வரலாற்றுப் பின்னணியில்தான் விடுதலைக்கு முன்பே தொழிற்சங்கச் சட்டம் (1926) உருவாக்கப்பட்டது. தொழில் தகராறு சட்டம் (1947) சுதந்திரத்துக்கு முன்பே நடைமுறைக்கு வந்தது. ஆனாலும், சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், 2024இல் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தைப் பதிவுசெய்யக்கூட அந்தத் தொழிலாளர்கள் 38 நாள்கள் வேலைநிறுத்தம் செய்ய நேர்ந்தது.
அது மட்டுமல்ல, அரசுத் தலையீட்டுக்குப் பிறகும் தீர்வு கிடைக்காமல் நீதிமன்றத்தில் போராடி, அதில் சாதகமாகக் கிடைத்த நீதிமன்ற உத்தரவைத் தொழிலாளர் துறை நடைமுறைப்படுத்தக் கெடுநாள்கள் முடிந்து, கடைசி நாள் வரை போராட வேண்டியிருந்தது. தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமையை நிர்வாகம் மதிக்காமல் பிடிவாதம் செய்துவந்த சூழலில், அதையும் எதிர்கொண்டு பேச்சுவார்த்தை மேஜைக்கு வரவைத்து ஓர் உடன்பாட்டை எட்டியிருப்பதால் இந்த வெற்றி உரத்துப் பேச வேண்டியதாகிறது.
பரப்பப்பட்ட நச்சுக் கருத்துகள்: எட்டு மாதப் போராட்டம் இது. தொழிற்சங்க உரிமையை அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்ளாத எதிர்மறை உளவியலில் பக்கம்பக்கமாக எழுதிக் குவிப்போர் மும்முரமாக இயங்கிய காலமும் இது. குறிப்பாக, இடதுசாரித் தொழிற்சங்கம் என்றாலே ‘தொழிலுக்கே எதிரானவர்கள்’, ‘தொழிலாளியை நடுவீதியில் கொண்டுவந்து நிறுத்துவார்கள்’, ‘நிறுவனத்தை மூடாது ஓய மாட்டார்கள்’, ‘மாநிலத்துக்கு முதலீடுகளே இனி வராமல் செய்துவிடுவார்கள்’ என்றெல்லாம் சிலர் சமூக ஊடகங்களில் நஞ்சு பரப்பிக்கொண்டிருந்தனர். நிறுவனத்துக்கு அருகில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காலி மனையில் போடப்பட்டிருந்த போராட்டப் பந்தலைக் காவல் துறை பிய்த்து எறிந்தது. தொழிற்சங்க முக்கிய நிர்வாகிகளை நள்ளிரவில் வீடு சென்று கைதுசெய்து சிறையில் அடைத்தது.
கடுமையான பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன், முத்துக்குமார் ஆகியோரின் அலைபேசிகளையும் பறித்துத் தனி அறையில் அடைத்து வைத்தது. அது ஒரு பன்னாட்டு நிறுவனம், கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று துணை முதல்வரே ஊடகக் கேள்விக்குப் பதில் சொன்னார்.
இல்லாத ஒரு பொம்மைச் சங்கத்தோடு ஏதோ ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், மறுநாள் எல்லாரும் பணிக்குத் திரும்பிவிடுவார்கள் என்றும் அரசு சார்பிலேயே செய்தி வழங்கப்பட்டது. தங்களது வாழ்க்கையில் முதல் அனுபவமாகத் தொழிற்சங்கத்தில் இணைந்த சாம்சங் தொழிலாளர்கள் இவற்றுக்கெல்லாம் சளைத்துவிடவில்லை. பொதுத் துறை, நிதித் துறை உள்ளிட்ட சங்கங்கள் இவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியது அவர்களுக்கு மேலும் நம்பிக்கை ஊட்டியது.
ஒளிமயமான உடன்பாடு: இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தொழிலாளர்கள் உளமார உறுதியாகப் பற்றி நின்றனர். அனுபவம் வாய்ந்த தொழிற்சங்கத் தலைவர்கள் தங்களுக்காக எதிர்கொண்ட தாக்குதல்களைக் கண்டு மேலும் உரமேற்றிக்கொண்டனர். இது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தில் நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையேயான போராட்டம் அல்ல, மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையேயான முரண்பாட்டில் இருந்து தெறிக்கும் ஒரு பெரும் போராட்டம் முன்னுதாரணமாக எழுகிறது. அதன் பெருமைக்குரிய பகுதியாகத் தாங்கள் அமைய இருக்கிறோம் என்கிற கம்பீரத்தோடு அவர்கள் வலுவாகத் திரண்டனர்.
நெடிய போராட்டக் காலம், சாதாரண காலங்களில் கிடைக்க வாய்ப்பற்ற தங்களுக்கான தத்துவ தரிசனத்துக்கும் அவர்களை உட்படுத்தியதுதான் இந்த வெற்றியை மேலும் உன்னதமாக்குகிறது. சங்கம் அமைக்கப்படாத காலத்திலும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் இருக்கத்தான் செய்தது. சலுகைகள் வழங்கப்பட்டுதான் வந்தன. ஆனால், தாழ்ந்த குரலில்கூட எதையும் எப்போதும் நிமிர்ந்து பார்த்துக் கேட்டுவிட முடியாது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, கண்ணியமிக்க தொழிலாளர்களாகத் தங்களது கடமையை அவர்கள் ஆற்ற முடியும் என்பதை இந்த உடன்பாடு அவர்களுக்கு ஒளிமயமாக உணர்த்திவிட்டது.
- தொடர்புக்கு: sv.venu@gmail.com