‘நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் மேதை’ என்று உலகமே கொண்டாடியபோதும், ஐன்ஸ்டைனை இன்னும் உயரத்தில் வைத்துப் பார்க்க யூதர்கள் விரும்பினர். தாங்கள் உருவாக்கிய இஸ்ரேலின் இரண்டாவது அதிபராக ஐன்ஸ்டைனை ஆக்குவதற்கு அவர்கள் முயன்றனர்; அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார் என்பது வேறு விஷயம். ஆனால், அவருக்கு அந்தப் பொறுப்பை வழங்க முயன்ற யூதர்களின் முனைப்பு முக்கியமானது. அது ஒரு சமூகத்தின் கடமை; நன்றிக்கடன். தங்களிடையே உருவாகும் ஆகப்பெரும் ஆளுமைகளைப் பாதுகாப்பதும் மதிப்புமிக்க பதவிகளில் வைத்து அழகு பார்ப்பதும் அச்சமூகத்தின் நாகரிகத்துக்கு அணி சேர்க்கும்.
கொண்டாடப்பட வேண்டிய மேதை: கோடம்பாக்கம் பாலத்துக்குக் கீழே - உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய இடத்தில் - இசை உலகில் 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜாவின் இசைக்கூடம் இருக்கிறது. மிக எளிமையான கட்டிடம் அது. உலக இசை வல்லுநர்கள் பலரை வியப்பில் ஆழ்த்தும் பல இசைக் கோவைகள் அங்குதான் பிறக்கின்றன. உலகின் ஆகச் சிறந்த இசை வல்லுநர்களுக்கு எல்லாம் கனவாகவே முடிந்துபோன சிம்பொனி என்கிற வகைமையை 30 நாள்களில் எழுதி முடித்த தமிழ்ச் சமூகத்தின் ஓர் ஆளுமையை - அவர் வாழும் காலத்திலேயே - சிறப்பான ஓரிடத்தில் வைத்து அழகுபடுத்திப் பார்ப்பது ஓர் அரசின் / சமூகத்தின் கடமை இல்லையா?
‘பணம் பெற்றுக்கொண்டு திரைப்படங்களுக்கு இசையமைப்பவர்தானே? அவருக்கு நாம் ஏன் சிறப்புச் செய்ய வேண்டும்?’ என்று சிலர் கேட்கலாம். ஆனால் பீத்தோவன், மொஸார்ட் போன்ற மேதைகளின் படைப்புகள் ஏராளமான வசதி வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கின என்பதற்காக, மக்கள் அவர்களைக் கொண்டாடத் தவறவில்லை. இங்கே விவாதிக்கப்பட வேண்டியது, இளையராஜா எவ்வளவு உயரத்தில் வைத்திருக்கப்பட வேண்டியவர் என்கிற ஆதங்கம் மட்டும் அல்ல; தமிழ்ப் பொதுவெளியில் அவரைச் சுற்றி எழுப்பப்படும் உரையாடல்களும்தான்.
கட்டமைக்கப்படும் பிம்பம்: அரை நூற்றாண்டாக, இளையராஜாவைக் குறைத்து மதிப்பிட்ட உரையாடல்களை - கிராமிய இசை, தலைக்கனம், ராயல்டி - எனச் சில சொற்களில் அடக்கிவிடலாம். சில வல்லுநர்கள் அவருடைய இசையை விதந்து பேசினாலும், அதில் ஒரு சிரத்தை இன்மை வெளிப்படும். தம்முடைய இசையில் ராஜா முயற்சி செய்த மேற்கத்திய இசையின் நுட்பங்களையோ, கர்னாடக இசையின் லாகவங்களையோ அவர்கள் வசதியாக மறந்துவிடுவார்கள். ஆனால், “நாங்கள் யாரும் சாதித்தவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக இளையராஜா சாதித்துவிட்டார்” என்றார் திரை இசை மேதையான நௌஷாத்.
இங்கே பல குணவான்கள், “இளையராஜாவுக்குப் பணிவு வேண்டும்” என்பர். பணிவு ஓர் உயிரியல் குணம் அல்ல. அது, தனிமனிதனின் தேர்வு. அவர்கள் சொல்லும் அதே பணிவையும் தாய் கொடுத்த 400 ரூபாயையும் பெற்றுக்கொண்டு, மதுரை சென்று அதுவரை யாருக்காக ஊர் ஊராகப் போய்ப் பாடினாரோ, அக்கட்சியின் தலைவரைச் சந்தித்துத் தங்க இடம் கேட்டபோது - “யாரைக் கேட்டு இங்கு வந்தீர்கள்?” என்று அந்தத் தலைவர் கேட்டிருக்கிறார்.
அந்த நொடியில் - பிறரிடம் வலிந்து காட்டும் பணிவைவிடத் தனக்குள் உறையும் அமைதியே தன்மையானது என்கிற முடிவுக்கு இளையராஜா வந்திருக்கக்கூடும். தவிர, ‘கர்வம்’ என்பதைத் தமிழ்ச் சமூகத்துக்கு ராஜாதான் அறிமுகப்படுத்தியதுபோலச் சிலர் ஆதங்கப்படுவதையும் பார்க்க முடிகிறது. அதே சிலர்தான் அரசியல்வாதிகளின் ஆணவத்தை ‘தைரியம்’ என்றும் எழுத்தாளர்களின், கவிஞர்களின் தலைக்கனத்தை ‘ஞானச்செருக்கு’ என்றும் புகழ்கின்றனர்.
‘தான் ஏற்றுக்கொண்ட விழுமியங்களோடு முரண்படும் ஆளுமைகள் தொடர்பான படங்களுக்கு இசையமைக்கச் சம்மதிக்கவில்லை’ என்பது இளையராஜா மீது வைக்கப்படும் மற்றொரு விமர்சனம். நெப்போலியனுக்காக Eroica என்றொரு சிம்பொனி எழுதினார் பீத்தோவன். பின்னாளில் நெப்போலியனின் செயல்பாடுகளில் ஆதிக்கம் வெளிப்படுவதை உணர்ந்து, எதிர்ப்பை வெளிப்படுத்தத் தன் கையால் எழுதிய இசைக் குறிப்பை அவரே எரித்துவிட்டார்.
அந்த சிம்பொனி எந்த அளவுக்குப் புகழ்பெற்றதோ அதற்கு இணையாகப் புகழ்பெற்றது, பாதி எரிந்த நிலையில் இருந்த அந்த இசைக் குறிப்பு! இளையராஜாவுக்கும் எழுதுவதற்குத் தாள்கள் வைத்துக்கொள்ள உரிமையும் சுதந்திரமும் இருப்பதுபோலவே, ஒரு தீப்பெட்டியை வைத்துக்கொள்வதற்கும் அவருக்குச் சுதந்திரமும் உரிமையும் உண்டு என்பதை ஏற்பதற்கு நமக்கு எது தடையாக இருக்கிறது?
தனி வகைமை: ‘திரைப்பட இசையமைப்பாளர்’ என்கிற சட்டகத்துக்குள் மட்டுமே இளையராஜாவை அடைத்து, அதைச் சார்ந்தே உரையாடல்கள் நிகழ்த்தப்படுவதுதான் இளையராஜாவுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி. இசையின் மீதான அவருடைய மேதைமை தனித்த ஒன்றல்ல; இளையராஜா ஆகச் சிறந்த ஓவியர், புகைப்படக் கலைஞர், கவிஞர். அரிதான அவருடைய Baritone குரல்வளம், ஆழமானது மட்டுமல்ல; மனிதம் நிரம்பியது. அவருடைய மற்ற திறமைகளும் அவருடைய இசையும் பின்னிப் பிணைந்தவை; அக்கட்டமைப்புடனேயே இயங்குபவை.
ஓர் ஒளிப்படத்தை எடுக்கும் அதே நேர்த்தியோடு அவர் இசைக் கோவையை உருவாக்குகிறார் என்பது, மேற்கத்திய இசையை அறிந்தவர்களுக்கு நன்கு விளங்கும். திட்டுக்களாக வண்ணங்களைத் தீட்டி, காண்பவரைப் படைப்பின் அங்கமாக்கும் ஒரு ‘எக்ஸ்பிரஷனிஸ’ ஓவியனைப் போல் இசைச் சேர்க்கையை அவர் அமைக்கிறார்; வெண்பாவின் ஒழுங்கோடும் ஒழுக்கத்தோடும் இசைக் கருவிகளைக் கையாள்கிறார். பலராலும் புரிந்துகொள்ளப்படாத அவருடைய ஆன்மிகமே, அவருடைய இசையின் வழியாக ஊற்றெடுக்கிறது.
இன்று, திரைப்படம் என்கிற வகைமையில் இருந்தும் தன்னைப் பிரித்துக்கொண்டு, இளையராஜாவின் இசை தனி வகைமை (Genre) ஆகிவிட்டது. அது என்ன படம், யார் நடித்தது என்பதெல்லாம் தெரியாமலேயே ராஜாவின் இசையை மட்டுமே உள்வாங்கும் ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது. இளையராஜா உள்வாங்கிய ஆப்ரிக்கப் பழங்குடி இசை, பாஸனோவா, மேற்கத்திய, இந்திய நாட்டுப்புற இசை, ஜாஸ், பாப், டிஸ்கோ, சிக்கடெல்லா, ராக் அண்ட் ரோல் போன்ற அனைத்து இசை முறைமைகளையும் - திரைப்படம் என்கிற வெட்டவெளியில்தான் கொட்டித் தீர்க்க வேண்டும்.
உணர்வுகளில் கலந்து ‘அத்வைதம்’ ஆகிப்போன ஓர் இசை நிலத்தை, ‘சினிமா பாட்டுக்காரன்’ என்கிற வட்டத்துக்குள் சிலர் அடைக்க எண்ணுகிறபோது, ஆற்றாமையில் பதற்றம் அதிகரிக்கிறது. அங்கீகாரம் கொடுக்காத சமூகத்தால் மட்டுமல்ல; அங்கீகரிக்கத் தெரியாத சமூகத்தாலும் ‘வான்காவின் காதுகள்’ வெட்டப்படலாம்.
இசைஞானியின் பெயரில் இசைக் கல்லூரிகளும் இசையை விளக்கும் காட்சிக்கூடங்களும் அமைக்க வேண்டியது, தமிழ்ச் சமூகத்தின் / தமிழ்நாடு அரசின் இன்றியமையாத கடமை. தான் கொண்டாடப்பட வேண்டிய அளவுக்குக் கொண்டாடப்படவில்லை என்பது குறித்த அக்கறையோ சிந்தனையோ இளையராஜாவுக்கு இல்லை என்றாலும், ஒரு திரைப்படத்தில் அவரே எழுதிய பாடல் ஒன்று மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது:‘ஊர்கள் கூடும் திருநாளை / தொடங்கி வைக்கும் என் கூட்டம்/ முடிந்தால் ஊரோரம் ஒதுங்கி வாழ வேண்டும் / இசை தெய்வம் கலைவாணி எனக்கருளும் போதும் / ஊர் தெய்வம் பேசாது சாட்சி போலப் பார்க்கும்...’‘ஊர் தெய்வங்கள்’ பேசவில்லை என்பதற்காக, அந்தக் கூட்டத்தில் ஒருவராக நிற்கும் நாமும் பேசாமல் இருக்கலாமோ!
- தொடர்புக்கு: thayappan.neruda@gmail.com
ஜூன் 2: இளையராஜா பிறந்த நாள்