இன்றைய வாழ்க்கைச் சூழலில் மூத்த குடிமக்கள், நிதிப் பாதுகாப்பின்மை, மற்றவர்களைச் சார்ந்திருத்தல், எழுத்தறிவின்மை, சமூகப் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள், சுகாதாரச் சவால்கள், முதுமையால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள், தனிமை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.
இவற்றின் காரணமாக, முதியவர்களுக்கு மிகவும் வலுவான சமூகப் பாதுகாப்பு அமைப்புகள், வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் ஆகியவை தேவைப்படுகின்றன. நிம்மதியான, ஓய்வான எதிர்கால வாழ்க்கைக்காகச் சொத்து சேர்த்து வைக்கும் மக்கள், மூத்த குடிமக்களான பிறகு அப்படிப்பட்ட நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கிறார்களா என்பது மிகப் பெரிய கேள்வி. இன்னொருபுறம், கால மாற்றங்கள், மருத்துவ முன்னேற்றங்களின் அடிப்படையில் முதியோர் என்பதற்கான வரையறைகள் இயல்பாக மாறிவருகின்றன. இந்தச் சூழலில், முதியோர் கொள்கையில் புதிய மாற்றங்கள் அவசியம்.
குடும்பச் சிறை: இன்றைய தேதியில், அறுபது வயதைக் கடந்தவர்கள் ஓரளவுக்காவது அசையாச் சொத்து வைத்திருந்தால் அதன் பின்னணியில், ஏராளமான உடல் உழைப்பு இருந்திருக்கும். ஏனென்றால், முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு வரை நிலம், கட்டிடம் போன்ற சொத்துக்களின் மதிப்பு குறைவாக இருந்தாலும், உடல் உழைப்புக்கான ஊதியமும் மிக மிகக் குறைவாகவே இருந்தது. சம்பாதிப்பதற்காக, இளமையின் இனிமைகள் பலவற்றைத் தியாகம் செய்ய வேண்டியிருந்திருக்கும்.
குழந்தைகளின் பொருட்டு, அரசுப் பணியில் அல்லது தனியார் பணியில் கிடைக்கும் உபரி வருமானங்களுக்காகத் தம்மை வருத்திக்கொண்டிருந்திருப்பார்கள். அலுவலகம் சார்பான வெளியூர்ப் பயணங்களுக்குக் கிடைக்கும் படித்தொகையை மிச்சம் பிடிப்பதற்காகச் சாதாரண சுகங்களையும் இழந்திருப்பார்கள். பொழுதுபோக்கு அம்சங்கள், உயர் வகுப்புப் பயணங்கள், சொந்த வாகனம் போன்றவற்றை ஒதுக்கி வைத்திருப்பார்கள். ஆனால், இந்த இழப்புகளை ஈடுசெய்யும் வகையிலான அந்திமக் காலம் பலருக்கு வாய்ப்பதில்லை.
தம்முடைய நிம்மதியான எதிர்காலத்துக்காக என்று சேர்த்துவைக்கப்பட்ட சொத்துக்களாலேயே பெரியவர்கள், மற்றவர்களின் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். அதிலும் குறிப்பாக, தம் வாரிசுகளாலேயே அதிகம் சங்கடப்படுகிறார்கள். குடும்பப் பிரச்சினையை வெளியில் சொல்லக் கூடாது எனச் சொந்தச் சிறைகளில் அடைபட்டபடி ரத்தக் கண்ணீரை மௌனமாக வடித்துக்கொண்டு தம்மை வருத்திக்கொள்ளும்
முதியவர்கள் அதிகம்.
தேசியக் கொள்கை: பெரியவர்களால் தாம் நினைத்த விதத்தில் தம் பணத்தையே செலவழிக்க முடியாதபடி கண்ணுக்குப் புலப்படாத கட்டுக்கள் நம் நாட்டில் நிறைய உள்ளன. பணமும் வசதியும் இருந்தும் சரியான உணவு கிடைக்காத கொடுமை பல முதியவர்களுக்கு இருப்பதை மறுக்க முடியாது. வயதில் மூத்த பெற்றோர் தம் வாரிசுகளால் சர்வசாதாரணமாகக் கைகழுவி விடப்படுகிறார்கள்.
பெண் குழந்தைகளை மட்டுமே பெற்று அவர்களை மணமுடித்துத் தந்த பெற்றோர்; புதிய சூழல், பழக்கமில்லாத மொழி, கலாச்சார வேறுபாடுகளால் - வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளுடன் சென்று தங்க இயலாத பெற்றோர்; வேலைப் பளுவின் காரணமாகவும் குடும்பச் சுமையின் காரணமாகவும் தனிக்கவனம் செலுத்த நேரமில்லாத பிள்ளைகளின் பெற்றோர்; முழுநேரச் செவிலியர் துணை தேவைப்படும் அளவுக்கு உடல்நலக் குறைவானோர் என்று இன்று தனிமையில் இருக்கும் மூத்த குடிமக்களின் வகைகள் ஏராளம்.
இவற்றை எல்லாம் மனதில் கொண்டுதான் 1999இல் முதியோர்களுக்கான தேசியக் கொள்கை மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் விரிவுபடுத்தப்பட்ட வடிவத்தில் மூத்த குடிமக்களுக்கான தேசியக் கொள்கை (National Policy on Senior Citizens 2011) அமலுக்கு வந்தது. முதியவர்கள், குறிப்பாக மூத்த பெண்களின் நிதிப் பாதுகாப்பு, சுகாதாரம், தங்குமிடம் மற்றும் பிற தேவைகளுக்கு அரசு ஆதரவை வழங்குவதன் மூலம் அவர்களுடைய நல்வாழ்வை உறுதிசெய்வது அதன் நோக்கம்.
துஷ்பிரயோகம், சுரண்டல் போன்றவற்றில் இருந்து முதியோருக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதோடு அவர்களின் திறனை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும், சமூகத்துக்கு அவர்களின் பங்களிப்பை நாடுவதிலும் இது கவனம் செலுத்தியது. இது மட்டும் போதாது. இன்னொரு விஷயத்தையும் பரிசீலித்தாக வேண்டும்.
முதியோர் யார்? - மூத்த குடிமக்கள் என்போர் யார் என்பது குறித்து 06.05.2010இல் மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் ரூபானி எழுப்பிய கேள்விக்கு அப்போதைய சமூக நீதி - அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் நெப்போலியன், “இந்தியாவில் 60 வயதினைக் கடந்த எவரும் மூத்த குடிமக்கள் என்கிற தகுதியைப் பெறுகிறார்கள்” என்று பதில் அளித்தார். ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007’இன் அடிப்படையில் அளிக்கப்பட்ட பதில் அது.
இந்தியாவின் மக்கள்தொகை 2000இல் 100 கோடி. அந்த ஆண்டில் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 62.67 வருடங்கள். எனவே, 2007இல் 60 வயது கடந்தோரை மூத்த குடிமக்கள் என்று அறிவித்திருக்கலாம். இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 2021இல் 70.15 ஆண்டுகள். அது 2025இல் 72.2 ஆக அதிகரித்திருக்கிறது. 2030இல் 74 ஆகவும் 2050இல் 80-க்கு மேல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்
படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், இப்போதும் 60 வயதினையே மூத்த குடிமக்களுக்கான தகுதி வரம்பாக நீட்டிப்பது சரியா என்னும் கேள்வி எழுகிறது. மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் 62 என்றிருந்த காலத்தில் 60 வயதைக் கடந்தோர் மூத்த குடிமக்கள் என்று கருதப்பட்டுச் சலுகைகள் பெற்றுவந்தனர்; ஆனால், இன்று மனிதர்களில் சராசரி ஆயுள்காலம் 75ஐ நெருங்கிக் கொண்டு இருக்கும்போதும் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை ஏன் 60ஆகவே வைத்திருக்கிறோம்? அதனை ஏன் 70ஆக உயர்த்தக் கூடாது? இன்னுமொரு 10 ஆண்டுகள் அவர்களுடைய மனித சக்தியைத் தேச வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாக உபயோகிக்க ஏன் திட்டமிடக் கூடாது?
மாற்றத்துக்கான தருணம்: இப்போதைய மருத்துவ உலகின் மேம்பட்ட சிகிச்சைகளின் உதவியுடன் பெரும்பாலான மனிதர்களால் சராசரியாக எழுபது வயது வரை வேலைக்கான தகுதித் திறனுடன் இருக்க முடிகிறது. 60 வயதில் பணி ஓய்வு கொடுத்து அனுப்பிய பிறகு, அவர்களில் தகுதியானவர்களின் அனுபவ அறிவு, வேலைத் திறன்களை அரசுப் பணிகளிலோ, நிறுவன முன்னேற்றப் பணிகளிலோ சரியான வகையில் உபயோகித்துக்கொள்ளும் மனிதவளக் கொள்கைகள் தேவை.
இத்தனைக்கும் மத்திய - மாநிலக் கல்வித் திட்டங்களில் மூத்த குடிமக்கள் குறித்த அடிப்படை விழிப்புணர்வைப் பள்ளிப் பருவத்திலேயே ஏற்படுத்துவது என்கிற அம்சம், மூத்த குடிமக்களுக்கான தேசியக் கொள்கைப் பிரகடனத்தில் இருக்கிறது. மத்திய - மாநில அரசுகள் இரண்டும் இணைந்து அந்தக் கொள்கையின் பிரிவுகளை நடைமுறைப்படுத்தத் தீவிரமான முன்னெடுப்புகளை எடுக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், மூத்த குடிமக்களுக்கான கண்ணியமான வாழ்க்கைக்கு ஓரளவுக்கு உத்தரவாதம் இருக்கும்.
‘பெற்றோர் - மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007’ பெற்றோர் - மூத்த குடிமக்களைப் பாதுகாப்பது குடும்பத்தாருடைய தலையாய கடமை என்று வலியுறுத்திக் கூறுகிறது. அதற்கான விழிப்புணர்வு, வழிகாட்டுதல், வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல் போன்றவற்றில் அரசின் பங்கு இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது 2021இல் 100 வயதைக் கடந்து வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கிட்டத்தட்ட 3 லட்சமாக இருந்தது. அது, 2050இல் 20 லட்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்குக் கௌரவமான வாழ்க்கையை உறுதிசெய்ய, தேசிய அளவிலான கொள்கையில் மாற்றங்கள் வரும் என எதிர்பார்ப்போம்!
- மின்னஞ்சல்: pnmaran23@gmail.com