நீண்ட காலமாக, இந்திய அரசின் பொதுநலக் கொள்கை உருவாக்கத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் முதுகெலும்பாகத் திகழ்கின்றன. சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி போன்ற துறைகளில் நுட்பமான திட்டமிடல்களை மேற்கொள்ளும் வகையில் இத்தரவுகள் பெரிதும் உதவிகரமாக இருந்தன. இந்நிலையில், அடுத்த தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது - சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்துக்கொள்வதாக - நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் துல்லியமான புள்ளிவிவரத் தரவுகளைச் சேகரிப்பது, பலருடைய நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இருப்பினும் சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தேவைக்கு அதிகமாக வலியுறுத்துவது, ஆளும் கட்சியின் அக்கறை, நோக்கம் ஆகியவை குறித்த கவலையை ஏற்படுத்துகிறது. துல்லியமான தரவுகள் இல்லாததால்தான் விளிம்புநிலை மக்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்குவதில் - நியாயப்படுத்த முடியாத அளவுக்கு - காலதாமதம் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.
மிகைப்படுத்துவதன் ஆபத்து: பல்வேறு சாதிக் குழுவினர், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதியினரின் சமூக, பொருளாதார நிலையைக் கண்டறிய அறிவியல்பூர்வமான தரவுகள் தேவை என சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிப்போர் வாதிடுகின்றனர். ஆணையங்களின் பரிந்துரையையும் அரசின் மதிப்பீடுகளையும் நீதிமன்றம் சில நேரம் கேள்விக்கு உள்ளாக்குவதால், இத்தகைய தரவுகள் இருப்பது இடஒதுக்கீடு உள்ளிட்ட நலத்திட்டங்களைச் சட்டபூர்வமாக வழங்குவதற்கு அரசுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கூடுதலாக, பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக, பொருளாதார வேறுபாடுகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு எனப் புதிய நலத்திட்டங்களை உருவாக்கவும் இத்தரவுகள் பயன்படும். இத்தகைய வாதங்கள் எல்லாம் சரியானவைதான்: எனினும், சாதிவாரிக் கணக்கெடுப்பினால் ஏற்படும் விளைவை மிகைப்படுத்திக் கூறுவது ஆபத்தானது.
இந்தியா போன்ற பல்வேறு சமுதாயங்களைக் கொண்ட ஒரு நாட்டில், அரசின் முறையான சாதிவாரிக் கணக்கெடுப்பு கட்டாயம் தேவைப்படுகிறது. ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பைச் சமூக, பொருளாதார நீதிக்கு முன்நிபந்தனையாக ஆக்குவதோ அல்லது அரசின் பொதுக் கொள்கையை உருவாக்குவதற்கான முதன்மை ஆவணமாக மாற்றுவதோ குறைபாடு உடையதாகும். இது மிகவும் ஆபத்தானது மட்டும் அல்ல; சாதிவாரிக் கணக்கெடுப்பின் நோக்கத்தையே தவறாகப் புரிந்துகொள்வதும் ஆகும்.
தரவுகளைத் தாண்டி... தலைமைப் பதிவாளர், இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் ஆகியோரின் பணி, உண்மையான, சார்பற்ற தரவுகளைச் சேகரித்து வழங்குவதுதானே தவிர, அரசின் சமூக நலத்திட்டங்களை வரையறுத்து உருவாக்க வலியுறுத்துவது அல்ல. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அரசியல் சீர்திருத்தத்துக்கான ஒரு கருவியாக மாற்றுவது, அந்நிறுவனத்தின் அதிகாரத்தை மீறிய செயல் என்பதோடு, அந்நிறுவனத்தை அரசியல்படுத்தும் ஆபத்துக்கும் அது வழிவகுக்கும்.
அதுவும் முற்றிலும் எதிரெதிர் அரசியல் சூழலில், மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயல்பாடுகளின் நோக்கத்தை நிலை நிறுத்துவது மிகவும் முக்கியமானது. அரசிடம் உள்ள தரவுகள், அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், நலிவடைந்த சமூகக் குழுக்களுக்கான பொது நலத்திட்டங்களை உருவாக்குவது, ஆளும் அரசில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாகும். வரலாற்று அடிப்படையில் பார்த்தால், சமூக நீதிக்கான கொள்கைத் திட்டங்கள் முழுமையான தரவுகளுக்காகக் காத்திருப்பதில்லை.
குறிப்பிடத்தகுந்த முன்முயற்சியான இடஒதுக்கீடு, நிலச்சீர்திருத்தங்கள், மண்டல் குழு பரிந்துரைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தியது போன்றவை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அரசியல் போராட்டங்கள், பெருந்திரளான மக்களின் ஒருங்கிணைப்பு, ஆளும் அரசியல் வகுப்பினரின் உறுதிப்பாடு ஆகியவற்றால்தான் அவை சாத்தியமாகின.
இந்தியாவில் பொதுநலக் கொள்கைகள் மின்னணுத் தரவுகளாலோ, கணக்கெடுப்பு வரைபடங்களாலோ தீர்மானிக்கப்படுவதில்லை; அவை பெரும்பாலும் தேர்தல் அரசியல் உத்திகள், கொள்கை உறுதி, பொது மக்களின் அழுத்தம் ஆகியவற்றாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மோடி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு திட்டம், உண்மையான புள்ளிவிவரத் தரவுகளாலோ, ஆணையத்தின் பரிந்துரைகளாலோ நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக, அத்தகைய கொள்கைத் திட்டத்தைத் துணிந்து செயல்படுத்துவதற்கான அதிகாரம் ஆளும் கட்சிக்கு உள்ளது என்பதையே இது காட்டுகிறது.
தவிர, சாதிய ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையிலான விரிவான தரவுகள் ஏற்கெனவே அரசிடம் உள்ளன. சுதந்திரத்துக்குப் பிறகு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் குறித்த தகவல்கள் இடம்பெற்றுவந்துள்ளன.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம், தேசியக் குடும்ப நல்வாழ்வுக் கணக்கெடுப்பு போன்ற பிற கணக்கெடுப்புகளும் கல்வி, பொருளாதார - சமூகக் குறைபாடுகளைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றன. பாலியல் வன்கொடுமைகள், பட்டியல் சாதியினர் - பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையிலான வன்கொடுமைகள் தங்குதடையின்றி அதிகரித்துவருவதைத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் ஆவணப்படுத்தியுள்ளது.
அதேபோல, பிஹார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு, அதற்கு முன்னர் எடுக்கப்பட்ட சமூக, பொருளாதார - சாதிக் கணக்கெடுப்பு ஆகியவை பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இடையே உள்ள ஆழமான பொருளாதாரப் பாதிப்புகளையும் வேறுபாடுகளையும் அம்பலப்படுத்தி உள்ளன. பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முறைசாரா வேலைவாய்ப்பு, பாதுகாப்பற்ற குறைந்த வருவாய் ஈட்டும் பணிகளிலேயே சிக்கி, மிகக் குறைந்த சமூகப் பாதுகாப்புடன் அல்லது சமூகப் பாதுகாப்பு முற்றிலும் இல்லாமல், முன்னேற்றத்துக்கு வழி இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அரசியல் துணிச்சலின் அவசியம்: தரவுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் நிலையில், மத்திய அரசு துணிச்சலான சீர்திருத்தக் கொள்கைத் திட்டங்களை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை, தேசிய அளவில் குறிப்பிடத்தக்க கொள்கை வெற்றிடம் நிலவுகிறது.
முக்கியமாக, செல்வாக்கு பெற்றுள்ள தனியார் பொருளாதாரத் துறைகளான பெருநிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பத் தொழிற்சாலைகள், ஊடக நிறுவனங்களில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதாக, பல்வேறு கல்விப் புல ஆய்வுகளும் அறிக்கைகளும் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இத்தகைய அதிகாரம் / சிறப்புரிமையைப் பெற்றுள்ள நிறுவனங்களில் அம்மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க, இதுவரை குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், அரசு நிறுவனங்களில் குறிப்பாக, உயர் கல்வித் துறை, நீதித் துறை, உயர் அதிகாரத் துறையிலும் அம்மக்களின் பங்கேற்பு இல்லை. தற்போதுள்ள அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலான கணக்கெடுப்புகள், அறிக்கைகள், ஆய்வுகள், ஓர் அடிப்படையான உண்மையை உணர்த்துகின்றன.
அது, தரவுகள் பொதுநலக் கொள்கையை உருவாக்குவதில்லை என்பதுதான். மாறாக, ஆளும் வகுப்பினரின் உள்ளார்ந்த நோக்கமும் மக்களின் ஜனநாயகபூர்வமான அழுத்தமுமே பொதுநலக் கொள்கை உருவாகக் காரணமாக இருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு, நோயைக் கண்டறிய உதவலாம்; ஆனால் அதுவே நோயைக் குணப்படுத்திவிடாது. தரவுகள் வெறும் வரைபடங்கள்தான்; அவை தன்னளவில் பயணத்தை நடத்த முடியாது.
நீதியின் பாற்பட்டு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையில் இந்தியா முன்னேற வேண்டும் எனில், ஆளும் வகுப்பினரின் அரசியல் - அறம் சார்ந்த கொள்கை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அரசியல் உறுதிப்பாடற்ற அறிவியல் ஆதாரங்கள் செயலற்றவையே. தற்போதைய மத்திய அரசின் முன்னுள்ள உண்மையான சவால், சாதி அடிப்படையிலான சமூக, பொருளாதாரத் தகவல்களைச் சேகரிப்பதில் அல்ல; சமூகத்தில் பின்தங்கியவர்களின் நலனுக்காக, அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் நடைமுறைப்படுத்துவதில்தான் இருக்கிறது.
நன்றி: ‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில்: புனித பாண்டியன்