தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி மாநிலத்தில் முதன்முறையாகப் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது கவனம் ஈர்த்தது. மாநிலத் திட்டக் குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’ தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வியாளர்கள், பல்துறை ஆய்வாளர்கள், அரசியல் விமர்சகர்கள், இதழாளர்கள் என்று பல்வேறு தரப்பினருக்கும் பயன்படும் முக்கியமான சான்றாதாரம் இது.
பொருளியலின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிந்தவர்கள் மட்டுமல்லாது, அனைத்துத் தரப்பினரும் வாசிக்கத்தக்க வகையில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் எளிமையான அறிமுகம் வழங்கப்பட்டிருப்பது சிறப்பு. உதாரணத்துக்கு, பணவீக்கம் குறித்த அத்தியாயம், பொருளியலில் அதன் முக்கியத்துவம் குறித்து எளிமையான அறிமுகத்தை வழங்கியுள்ளது. தொழில் துறை, சேவைத் துறைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவை ஒவ்வொன்றின் கீழும் இடம்பெற்றுள்ள துணைத் துறைகளைப் பற்றிய அறிமுகங்களும் இடம்பெற்றுள்ளன.
தேசிய அளவில் ஒப்பீடு: தமிழ்நாட்டின் பொருளாதாரம் என்பது இந்தியாவைக் காட்டிலும் சர்வதேசப் பொருளாதாரப் போக்குகளோடு இணைந்து இயங்குவதை இந்த ஆய்வறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. வாகனங்கள், உதிரி பாகங்கள், ஜவுளி, தோல் பொருள்கள் முதலிய துறைகளில் தமிழ்நாடு முன்னணி ஏற்றுமதியாளராக இருப்பது சர்வதேசப் போக்குக்கு இணையாகப் பயணிக்க உதவுகிறது.
முதன்மைத் துறையான வேளாண்மையில், வேளாண் கடன்கள் வழங்குவதிலும் அங்கக வேளாண்மையிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமான வளர்ச்சி, தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. தொழில்வளர்ச்சி பெற்ற மாநிலங்களைப் போல, பெருநகரத்தையே மையமிட்டு தமிழ்நாட்டின் தொழில் துறை இயங்காமல் மாநிலம் முழுவதும் பரவலாக அமைந்துள்ளது.
நகர்ப்புற-ஊரக இடைவெளியும் இங்கே குறைவு. இந்திய அளவில், அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. இந்நிலையில், மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளைப் பெருமளவில் உருவாக்க, தொழில் துறை வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அதற்கு, ஊரகத் தொழில்முனைவோருக்கு ஊக்கம் - ஆதரவு தருதல், திறன் மேம்பாடு, பெண்கள் பங்கேற்பு ஆகியவை அவசியம் என்று இந்த ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ளத் தொழில் துறை 4.0 தொழில்நுட்பங்களில் தொழிலாளர்களுக்கு மறுதிறன் பயிற்சி வழங்கிட வேண்டும் என்றும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்திய அளவில் வறுமை நிலை 11.28%ஆக இருக்கும்போது தமிழ்நாட்டின் வறுமை நிலை 1.43% என்ற அளவில் இருக்கிறது என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுவது மிக முக்கியமானது. பணவீக்கத்தின் அழுத்தத்தைக் குறைப்பதில் மாநில அரசு நடைமுறைப்படுத்தி வரும் சமூகநலத் திட்டங்களும் பங்காற்றுகின்றன என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் சார்ந்த செயல்பாட்டில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பது நிதி ஆயோக் குறியீடுகளின் வழியே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. செல்ல வேண்டிய தொலைவு இன்னும் இருக்கிறது. அதற்கான பாதையை இந்த ஆய்வறிக்கை தெளிவுபட எடுத்துரைக்கிறது.
சார்புகள் அற்ற ஆய்வு: உள்ளடக்கத்தில் மட்டுமன்றி வடிவமைப்பிலும் கவனம் கொண்டிருப்பது ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது. குறிப்பாக, தமிழ் மொழிபெயர்ப்பில் கலைச்சொல்லாக்கத்தில் காட்டப்பட்டுள்ள அக்கறை. சரக்குப் பெயர்ச்சிமை (Logistics), ஆயத்தநிலை அலுவலகங்கள் (Pluck and play), ஆளில்லா வான்கலங்கள் (Drones) என்பன போன்று துறைசார் வல்லுநர்களால் கையாளப்பட்டுவரும் சொற்களையும், புதிய சொல்லாக்கங்களையும் பரவலான வாசகவெளிக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது இந்த மொழிபெயர்ப்பு.
ஆளுங்கட்சியின் சாதனை மலர்களில் ஒன்றாக்கிவிடாமல், பொருளாதார ஆய்வறிக்கையை அத்துறை சார்ந்த முதனிலைச் சான்றாதாரமாக உருவாக்கி, தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்கிறது. இனிவரும் ஆண்டுகளிலும் பக்கச்சார்புகள் அற்ற அத்தன்மை தொடர வேண்டும் (பொருளாதார ஆய்வறிக்கையின் தமிழ், ஆங்கில வடிவங்கள் தமிழ் மின்னூலகத்தில் (https://www.tamildigitallibrary.in/) வாசிக்கக் கிடைக்கின்றன).
உடனடிச் செயலாக்கம்: ஆய்வறிக்கையின் பல பரிந்துரைகள் நடப்பு நிதிநிலை அறிக்கையிலேயே கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. முதியவர்களும் பெண்களும் பயன்படுத்த ஏற்றவகையில் வேளாண் இயந்திரங்கள் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பொருளாதார ஆய்வறிக்கையின் பரிந்துரைகளில் ஒன்று.
நடப்பாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையிலேயே அது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. சிறு, குறு உழவர்கள் சிறிய நிலப்பரப்பில் தாங்களே வேளாண் பணிகளை மேற்கொள்ள உதவும் வகையில் 7,900 விசைக் கலப்பைகளும் 6,000 விசைக் களையெடுப்பான்களும் மானிய விலையில் வழங்கப்படவுள்ளன.
வேளாண்மையை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் நடவு இயந்திரம், விசைக் களையெடுப்பான் வாங்குவதற்கு சிறு, குறு உழவர்களுக்கான மானியம் 50%இலிருந்து 60%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் முதியோர் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டும் ஆய்வறிக்கை, அவர்களுக்கான சுகாதாரம், நிதித் திட்டமிடல், உகந்த கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளது.
நடப்பு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்களைப் பராமரிக்கும் பராமரிப்பு மையங்களான ‘அன்புச் சோலை’கள் அத்தகையதொரு தொலைநோக்குத் திட்டமிடலையே காட்டுகிறது. ஆய்வறிக்கையின் பரிந்துரைகளை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இடைவெளியின்றிப் பின்தொடர வேண்டும்.
வேளாண்மை, தொழில், சேவை என்று பொருளாதார நோக்கில் மட்டும் அணுகாமல் சமூகநலன், காலநிலை மாற்றம் குறித்தும் தனி அத்தியாயங்கள் இவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன. நீடித்த வளர்ச்சி குறித்து அக்கறை கொள்ளும் இந்த அறிக்கை, நடுத்தரக் கால நோக்கில் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடலுக்கு வழிகாட்டியுள்ளது.
எனினும், வேளாண்மையை அடுத்து அதிக வேலைவாய்ப்பைத் தரும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறித்தும் விரிவான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம். அதுபோல, கணிசமான அளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் மருத்துவச் சுற்றுலாத் துறை குறித்தும் இந்த ஆய்வறிக்கை கவனம் செலுத்தியிருக்கலாம்.
போட்டித் தேர்வர்களுக்கு: போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் இந்த ஆவணம் பயன்படக்கூடியது. இந்தியக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் முதனிலைத் தேர்வில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வினாக்களுக்காகவும் முதன்மைத் தேர்வில் விடையெழுதும் வினாக்களுக்காகவும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களில் இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கையும் ஒன்று.
குடிமைப் பணித் தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் தமிழ்நாடு ஆய்வறிக்கை இரண்டு விதங்களில் உதவக்கூடும். முதலாவது, பொருளியலின் அடிப்படைகளைத் தமிழிலேயே படித்துப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். இரண்டாவது, தமிழ்வழியில் எழுதுபவர்களுக்குப் பொருளியல் துறைசார்ந்த சொற்கள், அவற்றின் பயன்பாடுகள் குறித்த அறிமுகம் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் இறுதியாகப் பள்ளிப் பாடத்திட்டம் திருத்தியமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பாடநூல்கள் வெளிவந்த பிறகு தேர்வாணையங்கள் அவற்றைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இதனால் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளின் தரமும் கூடியுள்ளன.
குடிமைப் பணித் தேர்வுகளைப் போல, மாநிலத் தேர்வாணையங்களும் பொருளாதார ஆய்வறிக்கையிலிருந்து வினாக்களைக் கேட்கும்பட்சத்தில் பொருளியல் சார்ந்த கேள்விகளின் தரம் இன்னும் கூடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள வினாத்தாள் வடிவமைப்பு முறையிலுமே, தமிழ்நாட்டுப் பொருளாதாரம் தொடர்புடைய கேள்விகளைப் புரிந்துகொள்ளவும் எளிதில் விடையளிக்கவும் பொருளாதார ஆய்வறிக்கையை வாசிப்பது உதவியாக அமையும்.
- தொடர்புக்கு: ilavenilse@gmail.com