பெண்களுக்கு உடலில் இயற்கையாக நிகழும் மாற்றங்களை அறிவியல்பூர்வமாக அணுகாமல், அவர்களின் உடல் மீது கட்டுக்கதைகளையும் தேவையற்ற அழுத்தங்களையும் சமூகம் திணித்துள்ளது. மாதந்தோறும் நிகழும் மாதவிடாயைப் புனிதம் என்றும் தீட்டு, அசுத்தம் என்றும் வகைப்படுத்தியதால், சமூகத்தில் கடைக்கோடிப் பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் எதிர்கொள்ளும் சவால்களையும், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் சந்தைப் பொருளாதாரத்தையும் பற்றி விவாதிக்கத் தவறிவிட்டோம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் பரவலாக இருக்கும் அவலம் இது!
கட்டுக்கதைகள்: 19 ஆம் நூற்றாண்டில் உலகளவில் ‘நோய்க்கிருமிக் கோட்பாடு’ பேசுபொருளானது. இக்கோட்பாடு, மாதவிடாய் ரத்தத்தைத் தூய்மையற்றதாகவும், அருவருக்கத்தக்கதாகவும் வரையறுத்ததன் மூலம், தாங்கள் சுத்தமற்றவர்கள் என்னும் தாழ்வு மனப்பான்மையில் பெண்கள் சிக்க வைக்கப்பட்டனர். நோய்க்கிருமிக் கோட்பாட்டையும், பெண்களின் தாழ்வு மனப்பான்மையையும் பயன்படுத்திக்கொண்ட பெருநிறுவனங்கள், சில நறுமணமூட்டும் பொருள்களைத் திருமணமான பெண்கள் மத்தியில் திணித்தன.
இப்பொருள்கள் உடலை, குறிப்பாக இனப்பெருக்க உறுப்பை நறுமணத்துடன் வைத்திருக்கும் தன்மை உடையவை. பெண் உடல் புத்துணர்ச்சியுடனும், நறுமணத்துடனும் இருக்க வேண்டும் என்பது ஆணாதிக்கச் சிந்தனை மட்டுமல்ல, பெருநிறுவனங்களின் சந்தைப் பொருளாதாரத்துக்கும் அது உதவுகிறது.
இச்சமூகம் மாதவிடாய் ரத்தத்தை அசுத்தம் என்று கூறுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை, மாதவிடாய்க் காலத்தில் பெண்களே அசுத்தம் எனக் கூறி வீட்டைவிட்டுப் பெண்களைத் தள்ளிவைக்கிறது. இந்தியாவின் கிராமங்கள், சிறுநகரங்களில் பெண்கள் இக்கொடுமைகளால் அவதிக்கு உள்ளாகிறார்கள். பெண்களை விலங்குகள்போல் வீட்டுக்கு வெளியிலும் கொட்டகையிலும் தங்கவைக்கும் குடும்பங்கள் உண்டு.
வீட்டைவிட்டு எவ்வளவு தூரம், எத்தனை நாள் தங்குவது என்பது மட்டும் இடத்துக்கும், குடும்பக் கலாச்சாரத்துக்கும் ஏற்றவாறு மாறுபடுமே தவிர, பெண்களை ஒதுக்கிவைக்கும் பழக்கம் இன்னும் பரவலாகவே காணப்படுகிறது. தமிழகத்தின் சில கிராமங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கட்டிடங்களில் மாதவிடாய் நாள்களில் பெண்களைத் தங்கவைக்கும் பழக்கம் உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் புழக்கத்தில் இருக்கும் ‘முத்துவீடு’ கலாச்சாரம் ஓர் உதாரணம். இவ்வாறான பழக்கவழக்கங்கள் பெண்களின் மாண்பைச் சீர்குலைக்கின்றன.
விலங்குகளுக்கான கொட்டகையில், ஊருக்கு ஒதுக்குப்புறமான தனி அறையில் தங்கவைக்கப்படும் பெண்கள் விஷக்கடிகளுக்கும் பாலியல் அச்சுறுத்தலுக்கும் ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொடுமை என்னவென்றால், குடும்பத்துக்கு நல்லது எனக் கருதிப் பெண்களே இப்பழக்கவழக்கங்களுக்கு உடன்படுகின்றனர். சாதியின் பெயரிலான ஒடுக்குமுறையைத் தீண்டாமை என்கிறோம், மாதவிடாயின் பெயரில் தீட்டு என்கிறார்களே அதற்குப் பெயர் என்ன?
மாதவிடாய் வறுமை: உலகம் முழுவதும் சுமார் 180 கோடி பெண்கள் மாதவிடாயை எதிர்கொள்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினருக்கு நாப்கின்கள், சுத்தமான தண்ணீர், கழிப்பறை வசதிகள் போன்றவை கிடைப்பதில்லை. ஐ.நா.வின் அறிக்கை இதைத் தெளிவுபடுத்துகிறது. உலகின் 12 நாடுகளில் வாழும் 10 பெண்களில் ஒருவர் மாதவிடாய்க் காலத்தில் நாப்கின் மாற்றுவதற்கும், உடலைச் சுத்தப்படுத்திக்கொள்வதற்கும் இடம் இல்லாமல் அவதியுறுகிறார். இந்தியா, வங்கதேசம், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் வாழும் பெண்கள் நாப்கின்களுக்குப் பதிலாகத் துணியைப் பயன்படுத்துவதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
வளர்ந்த நாடு என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அமெரிக்காவில் பதின்பருவப் பெண்களில் நான்கில் ஒருவருக்கும், வயதுவந்த பெண்களில் மூன்றில் ஒருவருக்கும் மாதவிடாயின்போது பயன்படுத்துவதற்கான பொருள்கள் கிடைப்பதில்லை. லண்டனைச் சேர்ந்த 10 பெண்களில் 3 பேர் நாப்கின் கிடைக்காமல் வேறு வழியின்றி டாய்லெட் பேப்பரைப் பயன்படுத்துவதாக அரசுசாரா நிறுவனமான ‘பிளான் இன்டர்நேஷன’லின் ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை தரமான நாப்கின் வாங்குவதற்குக் குறைந்தபட்சம் 45 ரூபாய் செலவு செய்தாக வேண்டும். ஏழை எளிய பெண்களுக்கு இது சாத்தியமானதல்ல. திருத்தணி அருகில் உள்ள கிராமங்களில் வாழும் பழங்குடியினப் பெண்கள் பூப்பறிக்கச் செல்வதன் மூலம் 50 ரூபாய் மட்டுமே வருமானமாக ஈட்டுகின்றனர். இப்பெண்களால் 45 ரூபாய் நாப்கினுக்காக மட்டும் எப்படிச் செலவு செய்ய முடியும்? தமிழக அரசு சார்பாக இலவச நாப்கின்கள் வழங்கப்பட்டாலும், அனைத்துப் பெண்களையும் இது சென்றடைவதில்லை என்பதுதான் உண்மை நிலை.
இந்திய நகரங்கள், பெயரளவில் மட்டுமே நவீனமயம் ஆகியுள்ளன. நகரங்களை உருவாக்கிய உழைப்பாளர்களுக்கு அடிப்படை வசதிகள்கூடக் கிடைக்கவில்லை. நகரத்தின் பெருவாரியான உழைப்பாளர்கள் வாழும் குடிசைகளில் கழிப்பறை வசதியும் சுத்தமான தண்ணீரும் இருப்பதில்லை. குடிசைப் பகுதிகளில் வாழும் பெண்கள் வெகுதூரம் பொதுக் கழிப்பறைக்கு நடந்து சென்றாக வேண்டும். இரவிலும் விடியற்காலையிலும் மட்டும் கழிப்பறைக்குச் செல்லும் பெண்கள் நம்மிடையே அதிகம்.
இவர்களுக்கு மாதவிடாய்க் காலம் எவ்வளவு சங்கடங்களைத் தரும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை! கிராமங்களில் பள்ளிக்கூடம், நூலகம், அரசுக் கட்டிடம் மட்டுமல்லாமல் கழிப்பறைகளும்கூட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வாழும் பகுதியில் அமையாதது ஒரு புதிர். என் சொந்த ஊரான பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆலம்பள்ளம் என்னும் கிராமத்தில்கூட இதே நிலைதான். பட்டியல் சாதி / பழங்குடிப் பெண்கள் கழிப்பறையைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இவர்களின் மாதவிடாய் நாள்கள் மிகவும் கொடுமையானவை.
மாதவிடாய் விடுமுறை: மாதவிடாய் நாள்களின் அடிப்படைத் தேவைகளில் ஓய்வும் அடங்கும். இன்றைய காலக்கட்டத்தில் சமூக முன்னேற்றத்துக்குப் பெண்களின் உழைப்பு இன்றியமையாதது. அப்படியிருக்க, ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அவர்களின் உரிமை. பெண் உடலில் நிகழும் இயற்கை மாற்றங்களுக்கான விடுமுறை என்கிற கருத்தாக்கம் 19ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலத்தில் ரஷ்யாவில்தான் முதன்முதலில் உருவானது. அதன் பின் 1947இல் ஜப்பானில் பெண்களுக்கான பிரத்யேக விடுமுறைக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோதும், அக்கொள்கை நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
சீனாவிலும், தென் கொரியாவிலும் மாதவிடாய் விடுமுறையை அந்நாட்டு அரசுகள் சட்டமாக்கியுள்ளன. இந்தோனேசியா, மெக்சிகோ போன்ற நாடுகளில் மாதவிடாய் விடுமுறைக் கொள்கை அமலில் உள்ளது. ஆனால், இந்திய அரசு சட்டமாகவோ, கொள்கையாகவோ மாதவிடாய் விடுமுறையை வரையறுக்கவில்லை. கேரளத்தின் அனைத்துப் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையை அம்மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பிந்து அறிவித்தது, சற்று ஆறுதல் தரக்கூடிய செய்தி.
என்ன செய்ய வேண்டும்? - இந்தியாவில் சில நிறுவனங்கள் மாதவிடாய் விடுமுறையை அறிவித்துள்ளன. ஆனால், அவற்றின் எண்ணிக்கை மிகச் சொற்பம். அனைத்து மாநிலங்களிலும் மாதவிடாய் விடுமுறையை அமல்படுத்த வேண்டும். மாதவிடாய் நாள்களில் ஏற்படும் உடல் வலி, மன அழுத்தம் ஆகியவற்றுடன் வேலைச் சுமையையும் சுமப்பது பெண்களுக்கு எளிதான காரியமில்லை. மாதவிடாய் விடுமுறைக்கான பிரச்சார இயக்கத்தை முன்னெடுப்பது சமூகச் செயல்பாட்டாளர்களின் முதன்மையான கடமை.
வீடு, தொழில் நிறுவனங்கள், பொது வெளிகளில் தங்களின் உழைப்பைப் பெண்கள் அளவுக்கு அதிகமாகவே செலுத்துகின்றனர். அப்படியிருக்க அவர்கள் சோர்வுறும் நாட்களில் அரவணைக்கும் செயலைச் சமூகமாக முன்னெடுக்க வேண்டும். குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்கள், போதுமான ஊட்டச்சத்து, ஓய்வு ஆகியவை பெண்களுக்குக் கிடைப்பதற்கான வழியை உருவாக்குவது நம் அனைவரின் கடமை.
மாதவிடாய் வறுமையை வெறும் பெண்களின் பிரச்சினையாக மட்டும் கருதிவிட முடியாது; இது சமூகத்தின் அவலநிலை. சமூகத்தைப் பாதிக்கும் எதுவும் அரசியல் பிரச்சினைதான். மாதவிடாய் வறுமையை அரசியலாக
அணுகக்கூடிய தெளிவு நம் அனைவருக்கும் அவசியம்.
மே 28: மாதவிடாய் சுகாதார நாள்
- தொடர்புக்கு: sowmi0693@gmail.com