சிறப்புக் கட்டுரைகள்

திரை மறைக்கும் உணர்வுகளை மீட்டெடுக்கும் வழி என்ன?

என்.ஆனந்த் வெங்கடேஷ்

முன்பொரு காலத்தில் மனிதன் இந்த உலகை அப்படியே உள்வாங்கினான். குழந்தைகளின் சிரிப்பொலி, அந்தி சாயும் நேரத்து மெல்லிய நிழல், குளிர்க்காற்றில் இலைகள் உதிரும் சத்தம் – எல்லாமே அவனுக்கு ஒரு கதை, ஒரு கவிதை, ஒரு வண்ண ஓவியம். மற்றவர் பார்க்கத் தவறியதை அவன் கூர்ந்து கவனித்தான்.

தெருவோரப் பூக்களின் மென்மையை, பறவைகளின் கீச்சொலியை, காற்று வீசும் திசையை உணர்ந்தான். அந்த அனுபவங்களே அவன் கைகளுக்குள் கலையாகவும், எழுத்துகளாகவும், இசையாகவும் உயிர்பெற்று எழுந்தன.

​நாம் இழந்தவை... ஆனால் இன்று? கண்கள் திரைக்குள் தொலைந்து​விட்டன. கைபேசியின் ஒளியில், கணினியின் மாயையில், நிஜ உலகை மறந்து​விட்​டோம். பக்கத்தில் இருப்​பவரின் புன்னகையைக் கவனிக்​காமல், மரக்கிளையில் அமர்ந்​திருக்கும் பறவையின் பாடலைக் கேட்காமல், இயந்திரத்​தனமாக வாழ்க்கையை நகர்த்து​கிறோம். உலகின் அழகை, உணர்வு​களின் ஆழத்தை, மனித உறவுகளின் மென்மையை இழந்து தவிக்​கிறோம்.

காதல், நட்பு, துக்கம், ஏக்கம் – இவற்றையெல்லாம் நேரில் உணர்வது​போலத் திரையில் பார்ப்பது இனிமையாக இருக்குமா என்ன? காதலியின் கண்கள் பேசும் மொழியை, நண்பனின் தோளில் சாயும் சுகத்தை, தாயின் கனிவான அரவணைப்பை எந்தத் தொழில்​நுட்​பமும் தர முடியாது. ஒரு மனிதன் அனுபவிக்கும் வலியை, ஏக்கத்தை, சந்தோஷத்தை, இயந்திரம் எழுதும் கவிதை எப்படிப் பிரதிபலிக்​கும்? செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் இசை, இதயத்தின் ஆழத்திலிருந்து வரும் உணர்வுகளை எப்படித் தொட்டுச் செல்லும்?

இன்றைய தலைமுறை: கலை என்பது வெறும் திறமை மட்டுமல்ல, அது வாழ்வின் சாரம். ஒரு விவசாயி நிலத்தை உழும்​போது, ஒரு தொழிலாளி சுத்தியலை ஓங்கும்​போது, ஒரு தாய் குழந்​தையைத் தாலாட்டும்போது – அந்த ஒவ்வொரு தருணத்​திலும் கலை பிறக்​கிறது. ஆனால் இன்று, அதிகமான திரை நேரம், உடனடி​யாகக் கிடைக்கும் தகவல்கள், சுயமாகச் சிந்திக்​காமல், படைக்​காமல் இருப்பது நம் கற்பனையைக் கறையானாக அரித்து​வரு​கிறது.

நம் மனதில் உருவாகும் எண்ணங்கள், கனவுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகின்றன. செயற்​கைத்​தனமான படைப்புகள், உழைப்​பில்லாத வெற்றிகள், ஆன்மா இல்லாத அழகுகள் நம்மைச் சூழ்ந்து​கொள்​கின்றன.

உண்மையான கலை பிறப்பது தனிமை​யில். அது கண்ணீரில் கரையும், வியர்​வையில் நனையும். வலியைச் சிரிப்பாக மாற்றும், துயரத்தைப் பாடலாக மாற்றும். வெற்றியைத் தேடி ஓடாமல், உண்மையைத் தேடும் மனங்கள்தான் இந்த உலகத்தை மாற்றும். ஆனால் இன்றைய தலைமுறை வசதிக்​கும், வாய்ப்​புக்​கும், புகழுக்கும் அடிமை​யாகி​விட்டது. கலை என்ற கடினமான பாதையை, எத்தனை பேர் தேர்ந்​தெடுப்​பார்கள்? கலை இல்லாமல் மனித வாழ்க்கை வெறும் எலும்​புக்​கூடு.

ஓவியங்கள் இல்லாமல் உணர்ச்சிகளை எப்படிப் புரிந்து ​கொள்வது? கதைகள் இல்லாமல் ஒருவருக்​கொருவர் எப்படி ஆறுதல் சொல்வது? இசை இல்லாமல் இதயத்தை எப்படி அமைதிப்​படுத்துவது? நாம் யார் என்பதை மறந்து, எதற்காக வாழ்கிறோம் என்பதே தெரியாமல், வெறும் பொம்மைகளாக வாழ்ந்து மடிவோம்.

இதை உணர்ந்த பலரும், எதிர்​காலத்தைப் பற்றி எச்சரிக்​கிறார்கள். தொழில்​நுட்பம் நம்மை ஆட்டிப்​படைக்​கும், செயற்கை நுண்ணறிவு நம்மை வழிநடத்தும் என்று பயப்படு​கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. தொழில்​நுட்பம் ஒரு கருவி மட்டுமே. அதை எப்படிப் பயன்படுத்து​கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் விளைவு இருக்​கும்.

கலை பிறக்க வேண்டிய இடம் – அது நம் மனதின் ஆழத்தில், நம் அனுபவங்​களின் சாரத்​தில், நம் போராட்​டங்​களின் வலிமையில் இருக்​கிறது. அதை இயந்திரங்​களிடம் ஒப்படைத்​தால், மனிதத்தின் ஆன்மாவே அழிந்து​விடும்.

முடிவு நம் கையில்: இன்னும் நம்பிக்கை இருக்​கிறது. ஒரு கவிஞன் பேருந்தில் கேட்ட ஒரு வார்த்தை, ஓர் ஓவியன் மழையில் நனைந்த நகரத்தைப் பார்த்த ஒரு நொடி – இவை எல்லாம் நம்மைத் தட்டி எழுப்பு​கின்றன. திரைகளைத் தூக்கி எறிந்து​விட்டு, உலகை நேரில் பார்க்​கும்​போது, அந்த நொடியே புதிய கலை பிறக்​கிறது. இப்போது நாம் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டும்.

திரைக்கு அடிமை​யாகி, நிஜ உலகை வெறுக்​கப் ​போகிறோமா? அல்லது நம் மனக்கண்​களைத் திறந்து, உணர்வு​களின் உலகத்​துக்குள் பயணிக்​கப்​போகிறோமா? இயந்திரங்கள் நம்மை ஆள அனுமதிப்​போமா? அல்லது நம் ஆன்மாவின் தீயை அணையாமல் பாதுகாப்​போமா?

திரை ஒளி – ஒரு மாயக் கடல்,
அதில் தத்தளிக்கும் நம் பார்வைத் தும்பிகள்,
நிஜம் – ஓர் அழகு மலர் வனம்,
குழந்​தையின் சிரிப்பு – வெயிலில் மின்னும் நீர்த்​துளி,
பறவையின் பாடல் – காற்றில் தவழும் கவிதை.
ஆயிரம் நொடிகள் திரை நதியில் மூழ்கி​னாலும்,
ஒரு கணம் மண்ணைத் தொட்டால்,
உள்ளத்தில் வேரூன்றும் மரம் நீ,
உன் உணர்வுகள் கிளை விரிக்​கும்,
உலகம் உன் வண்ணங்​களாய் மலரும்.
திரை – கனவுகளின் பனித்​துளி,
நிஜம் – உயிரின் தீப்பொறி,
எந்தப் பக்கம் நீ பறக்க விரும்​பு​கிறாய்?
மாயை வழியா? இல்லை, உண்மை நிலமா?
உன் இதயம் என்ன சொல்கிறது?

- தொடர்புக்கு: anaushram44@gmail.com

SCROLL FOR NEXT