இன்றைய காலக்கட்டத்தில், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்கு நடுவே நெல் சாகுபடியைத் தமிழ்நாட்டின் விவசாயிகள் துணிவோடு மேற்கொண்டு வருகிறார்கள். மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் என மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே தெரிந்துகொள்ளும் அறிவியல் தொழில்நுட்பம் தற்போது இருந்தாலும், இத்தகைய அறிவிப்புகளைக் கண்டு அச்சப்பட்டு சாகுபடியை விவசாயிகள் நிறுத்திவிடுவதில்லை.
தங்கள் வாழ்வாதாரம் என்பதைத் தாண்டி, மக்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துடன் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு விவசாயத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் கொள்முதலைச் சீர்ப்படுத்துவதற்குப் பதிலாக, தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான நடவடிக்கைகளே மறைமுகமாக முன்னெடுக்கப்படுகின்றன. இது விவசாயிகளைப் பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது.
மாறிப்போன வரலாறு: 1972இல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation [TNCSC]) என்கிற பொதுத் துறை நிறுவனத்தை அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி - இந்தியாவிலேயே முதன்முதலில் - கொண்டுவந்தார். மக்களுக்குப் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தரமான உணவுப் பொருள்களை வழங்குவதற்கான அடிப்படை நோக்கோடு இந்த நிறுவனத்தை அவர் அறிமுகப்படுத்தினார்.
விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்து, தரமான அரிசியை மக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை காவிரி டெல்டாவை மையமாக வைத்தே 1975இல் கருணாநிதி தொடங்கினார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக்கப்பட்ட கொள்முதல் அமல்படுத்தப்பட்டது.
மாவட்டத்துக்கு மாவட்டம் கொள்முதல் நடவடிக்கை வேறுபட்டாலும், தமிழக அரசு முழுப் பொறுப்பேற்று கொள்முதல் செய்துவந்தது. விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, சந்தை உத்தரவாதத்துடன் கூடிய கொள்முதல் கொள்கை தமிழ்நாட்டில் நெல்லுக்கு மட்டுமே இருந்துவந்தது. இதனால், ஏறக்குறைய 35 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தமிழகம் முழுவதும் நெல் உற்பத்தியை நம்பிக்கையுடன் விவசாயி
கள் அதிகரித்தனர். ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது.
தனியாருக்கு அனுமதி: மத்திய அரசின் ‘தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு’ என்கிற கூட்டுறவு நிறுவனத்தைப் பயன்படுத்தத் தமிழக அரசு அனுமதித்தது பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக, சில மாநிலங்களில் தானியக் கொள்முதலில் இந்நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. இந்நிறுவனத்தை வணிக நோக்கோடு பயன்படுத்திக்கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில் சந்தைப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.
அதை எதிர்த்து விவசாயிகள் போராடிய நிலையில், அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஆனால், உழவர் - உற்பத்தியாளர் குழுக்கள் மூலமாகக் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் வகையில் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு தொடர்ந்து தானியக் கொள்முதலில் அனுமதிக்கப்பட்டது.
பல்வேறு மாநிலங்களில் கொள்முதல் கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் இருந்தாலும், உணவு தானியங்களைக் கொள்முதல் செய்வதில் இந்த நிறுவனத்துக்கு மிகப்பெரும் பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தோடு தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைச் செய்துகொண்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாகச் சில மாவட்டங்களில் கொள்முதல் செய்ய அந்நிறுவனம் அனுமதிக்கப்பட்டது. அம்மாவட்டங்களில் கொள்முதலுக்கு உடனடியாக உரிய தொகை வழங்காமல் இந்நிறுவனம் காலங்கடத்தியதால், அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
இதற்கிடையே, 2024-25ஆம் ஆண்டு பருவக் கொள்முதலின்போது, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு மூலம், ‘தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு’ என்கிற ஒரு தனியார் நிறுவனத்தோடு இடைத்தரகர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள முடிவுசெய்யப்பட்டது. தமிழக ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர் எனக் கருதப்படுபவரை நிர்வாக இயக்குநராகக் கொண்டு இயங்கும் நிறுவனம் இது.
தமிழக அரசின் நிர்ப்பந்தத்தாலேயே, நெல் கொள்முதலில் எந்தவொரு முன் அனுபவமும், கட்டமைப்பும், நிதித் தகுதியும் இல்லாத இந்நிறுவனத்துடன், தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு ஒப்பந்தம் செய்ததாக அதனுடைய மண்டல மேலாளர் தெரிவிக்கிறார். இதனால், தமிழகம் முழுவதும் நடப்பு 2024-25ஆம் ஆண்டில் கொள்முதலுக்கு அந்நிறுவனம் அனுமதிக்கப்பட்டது. இதனை எதிர்த்துத் தமிழகத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினோம்.
இதனை அறிந்த முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா தவிர்த்து, தமிழகத்தில் மற்ற மாவட்டங்கள் முழுவதும் தனியார் கொள்முதல் செய்வதற்கு அனுமதிப்பதாக அரசாணை வெளியிட்டார். யார் அளித்த அழுத்தத்தின் பேரில் இந்த அரசாணை வெளியிடப்பட்டது எனத் தெரியவில்லை. இதற்கு உடன்படாத உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்கள். தமிழ்நாட்டில் தனிநபரிடம் ஒட்டுமொத்த தமிழகத்தினுடைய கொள்முதலையும் ஒப்படைக்க முன்வந்தது மிகப் பெரிய முரண். இதன் மூலம் ஒட்டுமொத்த விவசாயிகளையும் அழிவுப் பாதைக்குக் கொண்டுசென்றிருக்கிறது தமிழக அரசு.
குளறுபடிகள்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினுடைய அனைத்துக் கட்டமைப்புகளையும், பணியாளர்களையும் கொண்டு கொள்முதல் செய்வதற்கு இந்நிறுவனம் அனுமதிக்கப்படுகிறது. கொள்முதல் செய்யும் நெல், அரிசியின் தரத்துக்கும் சம்பந்தப்பட்ட டிஎன்சிஎஸ்சி அதிகாரிகளே பொறுப்பாவார்கள். இடைத்தரகு ஒப்பந்தம் செய்திருக்கிற தனியார் நிறுவனம் தனது சொந்த நிதியிலிருந்து விவசாயிகளுக்கு 48 மணி நேரத்துக்குள் நெல்லுக்கான பணப்பட்டுவாடா வழங்க வேண்டும்.
கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான அரிசியை மத்திய அரசின் உணவுக் கழகத்திடம் வழங்கிவிட வேண்டும். பிறகு, தமிழகப் பொது விநியோகத் திட்டத்துக்கு இந்நிறுவனம் அரிசியை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அரிசிக்கான தொகையை மட்டுமே இந்த நிறுவனத்துக்குத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்கும் என ஒப்பந்தம் கூறுகிறது.
பல மாவட்ட ஆட்சியர்கள் இவ்வாறான கொள்கையில் உடன்பாடு இல்லை என அனுமதிக்க மறுத்துவிட்டனர். ஆனால், சென்னையைச் சுற்றி இருக்கிற செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களின் ஆட்சியர்கள் இதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றனர். தற்போது ரூ.500 கோடி மதிப்பிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இதுவரையிலும் விவசாயிகளுக்குக் கிரயத் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இந்தச் சூழலில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் இந்நிறுவனம் முன்பணமாகப் பெற்ற ரூபாய் 170 கோடிக்கான அரிசியையும், அதற்கான கணக்கு வழக்குகளையும் சமர்ப்பிக்கவில்லை என்றும், விவசாயிகளுக்கும் உரிய தொகை வழங்கப்படாத நிலை உள்ளதாக அறிந்து, இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த கொள்முதல் அனுமதியைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாகவும் கூறியிருக்கும் டிஎன்சிஎஸ்சி மேலாண்மை இயக்குநர், உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள் கொள்முதல் நிலையங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். இத்தகைய குளறுபடிகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். போராட்டங்களும் தொடர்கின்றன.
என்ன செய்ய வேண்டும்? - ரூ.500 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை இந்நிறுவனம் மோசடி செய்திருப்பதாகத் தெரியவருகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த நிறுவனத்தைப் பரிந்துரை செய்து, இதற்கான ஒப்புதலையும் கொடுத்து, விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாடிக்கொண்டு இருக்கிற உணவுத் துறை அமைச்சர் அ.சக்கரபாணி, இதில் நிகழ்ந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய தொகைக்குத் தமிழக அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
மத்திய அரசிடம் ஒரு கிலோ அரிசியை ரூ. 20க்குப் பெற்றுக்கொண்டு, அதனைத் தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்துக்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு, ஒரு கிலோ 42 ரூபாய்க்கு விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தைத் தமிழக நெல் உற்பத்தியாளர் கூட்டமைப்பே செய்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.
இவ்வாறான மோசடி ஒப்பந்த நடவடிக்கைகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. இதனால் நெல் உற்பத்தி அடியோடு அழியும் நிலை ஏற்பட்டதோடு, விவசாயிகள் வாழ்க்கையும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.