சிறப்புக் கட்டுரைகள்

நினைவில் உலவும் யானை | நாவல் வாசிகள் 8

எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரே பெயர் கொண்ட இருவர் சந்தித்துக் கொள்ளும்போது அவர்களை அறியாமலே கூச்சம் வந்துவிடுகிறது. சில நேரம் பெயரின் காரணமாகவே கூடுதல் நெருக்கமும் ஏற்படுகிறது. ஒரே பெயர் வைத்திருப்பதால் இருவரும் ஒன்றுபோல இருக்க மாட்டார்கள். ஆண் பெயர் கொண்ட பெண்களும், பெண் பெயர் கொண்ட ஆண்களும் தனது பெயருக்காகத் தொடர்ந்து குழப்பங்களைச் சந்திக்கிறார்கள்; தவிக்கிறார்கள். பெயரில் என்ன இருக்கிறது, என்று எளிதாக விட்டுவிட முடியாது.

ஆங்கில எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸ் லண்டனிலுள்ள கல்லறைக்குச் சென்று அங்குள்ள பெயர்களைத் தனது குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்வாராம். அந்தப் பெயர்களைச் சற்று மாற்றியே தனது கதாபாத்திரங்களுக்கு வைப்பது அவரது வழக்கம். ஒரு முறை டெல்லியில் டாக்சியில் அக்பர் சாலை வழியாகச் சென்றேன். மன்னர்கள் மறைந்துவிட்டாலும் அவர்களின் பெயர்கள் மறையவில்லை என்று காரோட்டி வேடிக்கையாகச் சொன்னார். அவர் சொன்னது உண்மை. சில பெயர்கள் காலம் காலமாக மறையாமல் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. சில பெயர்கள் காலத்தின் கைகளுக்குள் மறைந்து விடுகின்றன.

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் வைக்கம் முஹம்மது பஷீரின் ‘எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்தது’ நாவலில் அப்படித் தனது பெயரைக்கொண்ட மற்றவர்களைப் பற்றிக் குஞ்சுப்பாத்துமா கோபம் கொள்கிறாள். அவளது வீதியில் அவளது பெயரைக் கொண்ட வேறு சிலரும் இருக்கிறார்கள். இப்படித் தனக்கென ஒரு பெயர்கூடத் தனித்துவமாக இல்லையே என அவள் கவலைப்படுகிறாள். எந்தப் பிச்சைக்காரனும் தனது மகளுக்கு எந்த மகாராணியின் பெயரையும் வைக்கலாம். அதற்கு ஒரு தடையும் கிடையாது. பெயரின் மூலமாவது அவர்களுக்கு ராஜவாழ்க்கை கிடைக்கட்டும் என்கிறார் பஷீர். பஷீரின் எழுத்துகளில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. 1959ஆம் ஆண்டு கே.சி.சங்கரநாராயணன் மொழிபெயர்ப்பில் சாகித்திய அகாடமி வெளியிட்டுள்ளது. இஸ்லாமியக் குடும்பம் ஒன்றின் வாழ்க்கையை மிகவும் அழகாக, நுட்பமாக பஷீர் சித்தரித்துள்ளார். நாவலில் வெளிப்படும் கேலியும் கிண்டலும் அபாரமானது.

அழுகையை விடவும் உயர்வானதில்லையா, சிரிப்பு என நாவலின் ஒரு இடத்தில் பஷீர் சொல்கிறார். அது அவரது எழுத்திற்கான அடையாளம். குஞ்சுப்பாத்துமாவின் தாத்தாவுக்குச் சொந்தமாகப் பெரிய கொம்பன் யானை இருந்தது என்கிறார்கள். அவள் யானை மக்காரின் பேத்தி. அந்தப் பெருமையைக் கேட்டு வளர்ந்த குஞ்​சுப்​பாத்​துமா தான் காணாத யானையை நேசிக்கிறாள். அதைப் பற்​றிக் கனவுகாண்​கிறாள். அந்த யானை அவளது உம்​மா​வின் சொல்​லில் பிறந்தது; நினை​வின் கொட்​டடி​யில் கட்​டப்​பட்​டிருக்​கிறது.

கடந்​த​காலப் பெருமை என்​பது ஒரு அலங்​கார கிரீடம். அதைச் சூடிக் கொள்ள யார் தான் விரும்​புவ​தில்​லை. ஆனால், அந்​தக் கிரீடம் தங்​கமில்​லை. வெறும் காகிதம் என அறிய வரும் போது மனம் ஏற்க மறுக்​கிறது. குஞ்​சுப்​பாத்​து​மாவை​விட​வும் அவளது உம்மா, நாவலில் அதி​கம் உயிர்த் துடிப்​புள்​ளவ​ராக வெளிப்​படு​கிறாள். பஷீ​ரால் சொற்​களைக் கொண்டு கதா​பாத்திரங்​களை உயிருள்ள மனிதர்​களாக நடமாட​விட முடிகிறது.

குஞ்​சுப்​பாத்துமா​வின் இடதுகன்​னத்​தில் பெரியமரு உள்​ளது.அதை அதிர்​ஷ்டத்​தின் அடையாள​மாக அவளது உம்மா நினைக்கிறாள்; பெரு​மைப்​படு​கிறாள். குஞ்​சுப் பாத்​து​மாவுக்​குத் திரு​மணம் செய்து வைக்க மாப்​பிள்ளை தேடு​கிறார்​கள். நல்ல இடம் அமைய​வில்​லை. வயது கூடிக்​கொண்டே போகிறது. இப்​போது அதே மரு, துர​திருஷ்டத்​தின் அடைய​மாக மாறி​விடு​கிறது. அவளது உம்மா அதைச் சொல்​லிக் காட்​டு​கிறாள். மச்​சம் என்​ப​தைக் கடவுள் வைத்த முற்​றுப்​புள்ளி என்​கிறார்​கள். அதை மனிதர்​களால் மாற்​றி​விட முடி​யாது. தான் திரு​மணம் செய்து கொள்​ளப்​போகும் ஆணை திரு​மணத்​திற்கு முன்​பாக ஒரேயொரு முறை பார்த்​து​விட வேண்​டும் என்று குஞ்​சுப்​பாத்​து​மா​வின் மனதில் ஒரு ரகசிய ஆசை இருக்​கிறது. அப்​படி ஒரு ஆசையை அவளது குடும்​பம் அனு​ம​திக்​காது. அப்​படி அவள் நினைப்​பதே தவறானது எனக் கருதக்​கூடியது அவளது குடும்​பம். ஆனால், அவளது மனதில் அந்த ஆசை ரகசி​ய​மாக முளை​விடு​கிறது. அது நிஜ​மாகும் விதத்​தைப் பஷீர் அழகாக எழு​தி​யிருக்​கிறார்.

கடந்​த​காலப் பெரு​மை​களைக் கொண்டு மட்​டும் எவரும் நிகழ்​காலத்​தில் வாழ்ந்​து​விட முடி​யாது. குஞ்​சு​பாத்​து​மா​வின் குடும்​ப​மும் வீழ்ச்​சி​யைச் சந்​திக்​கிறது. வாழ்ந்து கெட்​ட​வர்​களின் முகத்​தில் சொல்ல முடி​யாத வேதனை எப்​போதும் ஒளிந்​திருக்​கும். அவர்​களால் முழு​மை​யாகச் சிரிக்​கக்​கூட முடி​யாது. கயிறு அறு​பட்​டுக் கிணற்​றில் விழுந்த வாளியைச் செய்​வதறி​யாமல் பார்த்​துக் கொண்​டிருக்​கும் சிறு​வனைப் போல நடந்து கொள்​வார்​கள். குஞ்​சு​பாத்​துமா குடும்​பத்​தில் திரு​மணம் செய்​து​கொண்ட பெண்​கள் மட்​டுமே வெற்​றிலை போட அனு​ம​திக்​கப்படு​கிறார்​கள். ஆகவே வெற்றிலை போட்​டுக் கொள்வதற்​காகவே அவள் திருமணம் செய்​து​கொள்ள நினைக்கிறாள். அவளுக்​குக் கல்​யாணம் என்​பது ஒரு விளை​யாட்​டு; அனு​ம​திச் சீட்​டு.

தங்​கள் குடும்​பச் சொத்​துகளை இழந்தவுடன் குஞ்​சுப்​பாத்​து​மா​வின் வாப்பாவிற்​குச் சட்​டெனத் தலைநரைத்​துப் போய்​விடு​கிறது. மனதின் வேதனைகள்​தான் தலைம​யிர்​களை நரைக்க வைக்​கின்​றன. அதன் பிறகு அவர் யாருட​னும் பேசுவ​தில்​லை. அவளது உம்மா பழைய வீட்​டிலிருந்து வெளி​யேறி வரும்​போது தனது ஒரு ஜோடி செருப்​பு​களை மட்​டுமே எடுத்து வரு​கிறாள். அதைத் தனது கூடவே வைத்​துக் கொள்​கிறாள். சிண்ட்​ரெல்​லா​வின் செருப்​பு​கள் போல அவை மாய​மானவை அல்ல. ஆனால், கடந்​த​கால மகிழ்ச்​சி​யின் அடை​யாளம். குஞ்​சுப்​பாத்​து​மா​வின் உம்மா சாப்​பிடும்​போது தனது பிறந்த வீட்​டின் பெரு​மை​களைப் பேசக்​கூடிய​வள். அது​தான் அவளது உண்​மை​யான உணவு.

குஞ்​சுப்​பாத்​து​மா​வின் உலகில் மனிதர்​கள் மட்​டுமில்​லை. யானை​யும் குரு​வி​யும் மீனும் தண்​ணீர்ப்​பாம்​பும் அட்​டை​யும் இருக்​கின்​றன. அவள் தன்​னைக் கடிக்​கும் அட்​டை​யிடம்​கூடப் பேசுகிறாள்; அறி​வுரை சொல்​கிறாள். குருவி​கள் சண்​டை​யிட்​டுக் கொள்​ளும்​போது விலக்​கி​விடு​கிறாள். தூய வெளிச்​சம் ஒரு பெண்​ணாக ஆவது​போலக் குஞ்​சுப்​பாத்​துமா சித்​தரிக்​கப்​படு​கிறாள். ஆயிஷா​வும் அவளும் முதன்​முறை​யாகச் சந்​தித்து உரை​யாடும் காட்சி அபார​மானது; அதில் வெளிப்​படும் கேலி மறக்க முடி​யாதது.

நிசார் அகமதுவை குஞ்​சுப்​பாத்துமா சந்​திப்​பதும் அவனைக் காதலிக்​கத் தொடங்​கு​வதும் மிக​வும் அழகாக எழுதப்​பட்​டிருக்​கிறது. சுடரை ஏந்​திக் கொள்​ளும் விளக்​கைப் போலிருக்​கிறான் நிசார். மரத்​திலிருந்து விழுந்த நாவல் பழத்​தில் மண் ஒட்​டிக் கொள்​வது போல அவ்​வளவு இயல்​பாக அவர்​களுக்​குள் காதல் உரு​வாகிறது. காதல் வசப்​பட்ட பின்பு ஒரு இரவு அவள் மிகுந்த மகிழ்ச்​சி​யாக உணர்​கிறாள். தன்​னைக் கடிக்​கும் எறும்​பினைக்​கூட நசுக்​காமல் விரலால் எடுத்து அந்​தப் பக்​கம் விடு​கிறாள். தனது தலை​யணை​யைக் கிள்ளி வலிக்​கிறதா எனக் கேட்​கிறாள். கனவில் அவள் ஒரு பூ மரமாக மாறுகிறாள். கைகால்​கள் எல்​லாம் மரத்​தின் கிளை​களாகின்​றன. மரம் பூத்​துக் குலுங்​கு​கிறது. காதலின் பித்தை பஷீர் மிக​வும் அழகாக எழு​தி​யிருக்​கிறார். திருமண நாளில் அவளது கருத்​த மரு மின்​னுகிறது. எங்​கள் தாத்​தா​விற்கு ஒரு யானை இருந்​தது நாவலை எப்​போது நினைத்​துக்​ கொண்​டாலும்​ அந்த மரு​தான்​ மனதில்​ தோன்​றுகிறது. அது ​தான்​ பஷீரின்​ வெற்​றி.

SCROLL FOR NEXT