சிறப்புக் கட்டுரைகள்

ஏன் இந்தப் போர் வெறி?

மு.இராமனாதன்

ஒரு போரில் முதலில் பலியாவது உண்மை -இப்படிச் சொன்னவர் ஹிரம் ஜான்சன், அமெரிக்கர், செனட்டராக இருந்தவர். அது முதலாம் உலகப் போரின் காலம். அந்நாளில் வதந்திகள் வாய் வார்த்தையாகத்தான் பரவின.

இந்நாளில் அவை சமூக ஊடகங்களில் ஏறி இறக்கை கட்டிப் பறக்கின்றன. கடந்த சில வாரங்களில் சமூக ஊடகங்கள் வதந்திகளைப் பரப்புவதில் முழு மூச்சாக இயங்கின. அவை பொய்ப் படங்களையும் போலிக் காணொளிகளையும் தரித்து உண்மை வேடம் பூண்டன. அவை போர் வெறியை ஊதிப் பெரிதாக்கின. இந்தப் பொய்யுரையிலும் போர் வெறிப் பரப்புரையிலும் காட்சி ஊடகங்களும் இணைந்துகொண்டன.

போர் வெறியும் பொய்யுரையும் ‘க​ராச்சி துறை​முகத்​தைத் துவம்​சம் செய்தது இந்​தி​யப் படை’, ‘இஸ்​லா​மா​பாத் கைப்​பற்​றப்​பட்​டது’, ‘பாகிஸ்​தான் விமானி கைது’, ‘வீட்டுக் காவலில் தளபதி முனீர்’- இவையெல்​லாம் காட்சி ஊடகங்​கள் ‘உரு​வாக்​கிய’ செய்​தி​கள். இவற்​றோடு திரிக்​கப்​பட்ட காணொளி​கள் சேர்க்​கப்​பட்​டன. செய்தித் தொகுப்​பின் பின்​னணி​யில் ராணுவ சைரன்​கள் ஒலித்​தன. முன்​னணி​யில் உச்​சக் குரலில் அதன் நெறி​யாளர்​கள் முழங்​கினர்.

பாகிஸ்​தான் இரண்டு ஜேஎஃப்​-17 போர் விமானங்​களை இழந்​த​தாக அதன் தளபதி ஒரு​வரே ஒப்​புக்​கொண்​டார். அந்​தக் காணொளி பெரும் பரவலானது. ஆனால், அது செயற்கை நுண்​ணறி​வின் வாயி​லாக உரு​வாக்​கப்​பட்ட போலிக் காணொளி. சில சமூக ஊடகர்​கள் இந்​தப் பொய்​களை மும்​முர​மாகப் பரப்​பி​னார்​கள். கராச்சி துறை​முகம் குறித்த ஒரு எக்ஸ் தளப் பதிவுடன் ஒரு படமும் இணைக்​கப்​பட்​டிருந்​தது.

அது சில மாதங்​களுக்கு முன்பு காஸா​வில் இஸ்ரேல் நடத்​திய வான்​வழித் தாக்குதலின் படம் என்பதை, உண்மை அறி​யும் ஒரு குழு கண்டறிந்​தது. ஆனால், யாருக்கு வேண்டும் உண்​மை? கராச்​சி​யில் நடத்​தப்​பட்ட தாக்குதல் என நம்​பியே அந்​தப் பதிவை 25 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​ட​வர்​கள் பார்த்​தனர். ஆயிரக்​கணக்​கானோர் பகிர்ந்​து​கொண்​டனர். இந்​தப் பரிமாற்றங்​கள் நேராகவோ மறைபொருளாகவோ போரை விதந்​தோ​தின.

பஹல்​காமில் பாகிஸ்​தானியப் பயங்கர வாதி​கள் நடத்​திய படு​கொலை​களுக்கு எதிர்​வினை​யாக இந்​திய ராணுவம் மே 7 அன்று பயங்​கர​வா​தி​களின் ஒன்​பது தளங்​களின் மீது ஏவு​கணைத் தாக்​குதல் நடத்​தி​யது. இதை ‘இலக்கு நோக்​கிய, அளவான நடவடிக்​கை’ என்று விளக்​கியது இந்​திய அரசு. அடுத்த நாள்​களில் பாகிஸ்​தான் நமது எல்​லை​யோரக் கிரா​மங்​களைத் தாக்​கியது. இந்த முறை பாகிஸ்​தானின் ராணுவத் தளங்​களை இந்​தியா தாக்​கியது.

மோதல்​கள் வலுத்​து​வந்த வேளை​யில், மே 10 அன்று மாலை இரு தரப்​பும் தங்​கள் துப்​பாக்​கி​களை மௌனிக்க ஒப்​புக்​கொண்​டன. மே 7 முதல் 10 வரை நமது ராணுவத் தளபதிகளும் அதி​காரி​களும் வெளி​யுறவுத் துறைச் செயலரும் தொடர்ந்து செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​தனர். மிகுந்த நிதானத்​தோடும் பொறுப்​புணர்​வோடும் பேசி​னார்​கள். சில தொலைக்​காட்சி அலை​வரிசைகளுக்கு இந்த நிதானம் உவப்​பாக இல்​லை. அவை போரைத் தங்​கள் ஸ்டுடியோ​விலேயே உரு​வாக்​கின. கெடு​வாய்ப்​பாகச் சில தமிழ் ஊடகங்​களும் இதில் இணைந்​து​கொண்​டன.

ஒரு நெறி​யாள​ருக்கு இந்​தச் செய்​தி​கள் பெரும் ‘மஜா’​வாக இருந்​தது. மஜா என்​பது பாரசீகச் சொல். என்​றாலும் நமக்கு அதன் பொருள் தெரி​யும். போர் ஒரு கொண்​டாட்​டம் அல்ல. அது கிரிக்​கெட் போட்​டியோ, வீடியோ விளை​யாட்டோ அல்ல. போர் என்​பது துயரம், மரணம், ஊனம், குரு​தி, அழி​வு, இழப்​பு. காஷ்மீரின் எல்​லை​யில் அது​தான் நடந்​தது. 12 குடிநபர்​களும் ஒரு ராணுவ வீரரும் பாகிஸ்​தானின் குண்​டு​வீச்​சில் உயி​ரிழந்​தனர்.

அதில் குழந்​தைகளும் இருந்​தனர். எல்​லை​யோரக் கிரா​மத்​தில் பிறந்​ததைத் தவிர அவர்​கள் செய்த பிழை என்ன? இந்த எளிய மக்​களின் மரணம், பல ஊடகங்​களில் செய்​தி​யாகக்​கூட இடம்​பெற​வில்​லை. போர் நிறுத்​தம் அறிவிக்​கப்​பட்​டு, ஒரு வாரத்​துக்​குப் பின்பும்​கூட பல எல்​லை​யோரக் கிரா​மங்​களில் இயல்பு வாழ்க்கை திரும்​ப​வில்​லை. எல்​லை​யி​லிருந்து பல மைல் தொலை​வில் பாதுகாப்​பான இடங்​களில் இருந்​து​கொண்டு இந்த ஊடகர்​கள் போர் நெருப்பை உரு​வாக்கிக் குளிர் காய்ந்தார்​கள்.

வெறியும் வன்மமும்: இவர்​கள் யாரும் போர் நிறுத்​தத்தை எதிர்​பார்க்​க​வில்​லை. அதை அதி​காரபூர்​வ​மாக அறி​வித்​தவர் இந்​திய வெளி​யுறவுச் செயலர் விக்​ரம் மிஸ்​ரி. எக்ஸ் தளப் பக்கத்தில் பலர் அவதூறுகளை எழுதினர். ஆகவே, சமூக ஊடகர்​கள் மிஸ்​ரி​யின் மகளைத் தாக்​கி​னார்​கள். அவரது அலைபேசி எண்​ணைப் பொது​வெளி​யில் பகிர்ந்​தார்​கள். மிஸ்ரி தனது எக்ஸ் தளக் கணக்​கைப் பூட்​டி​வைத்​தார். இவர்​களின் தாக்​குதலுக்கு உள்​ளான இன்​னொரு பெண் ஹிமான்ஷி நர்​வால்.

இவரது கணவர் லெப்​டினன்ட் வினய் நர்​வால், கடற்​படை அதி​காரி; பஹல்​காமில் சுட்​டுக்​கொல்​லப்​பட்ட 26 பேரில் ஒரு​வர். இவர்​களுக்கு மணமாகி ஒரு வாரமே ஆகி​யிருந்​தது. கொலை​யுண்ட கணவரின் அரு​கில் செயலிழந்து அமர்ந்​திருக்​கும் ஹிமான்​ஷி​யின் படம் இந்​தத் தாக்​குதலின் அடை​யாள​மானது. அது சமூக ஊடகங்​களில் பரவலானது.

பஹல்​காம் துயரத்​தின் முக​மாக இருந்​தவர் மீது வன்​ம​மும் வெறுப்​பும் ஏன் கட்​ட​விழ்த்து விடப்​பட்​டன? “இந்​தப் பயங்​கர​வாதத்​துக்​குக் காரண​மான அனை​வ​ரும் தண்​டிக்​கப்பட வேண்​டும். ஆனால், நாம் காஷ்மீரியரை​யும் இஸ்​லாமியரை​யும் தாக்​கு​வது நியாய​மா​காது” என்று அவர் சொன்​னது​தான் காரணம். மத வெறுப்​புக்கு ஆட்​பட்​டிருந்த சில சமூக ஊடகர்​களால் இதைச் சகித்​துக்​கொள்ள முடிய​வில்​லை. அவர்​கள் வன்​மத்​தை​யும் வெறுப்​பை​யும் கக்​கி​னார்​கள்.

அவரை ‘ஆன்டி - இந்​தி​யன்’ என்று விளித்​தார்​கள். கல்​லூரிக் காலத்​தில் அவருக்​குக் காஷ்மீரிய நண்​பர்​கள் இருந்​ததைச் சிலர் ‘கண்​டு​பிடித்​தார்​கள்’. தேசி​யப் பெண்​கள் ஆணை​யம் (NCW) இந்த வெறுப்​பாளர்​களைக் கடுமை​யாகக் கண்​டித்​தா​லும், அதோடு நிறுத்​திக்​கொண்​டது.

இந்த விசைப்​பலகை வீரர்​களின் வன்​மத்​துக்கு உள்​ளான இன்​னொரு​வர் கொச்சியைச் சேர்ந்த ஆர்த்தி மேனன், பஹல்​காமில் தந்தை ராமச்​சந்​திரனைப் பறி​கொடுத்​தவர். “அந்த நிரா​தர​வான வேளை​யில், எனக்​கும் என் பிள்ளை​களுக்​கும் உறு​துணை​யாக இருந்​தவர் இரு​வர். டாக்சி ஓட்​டுநர் முசாபிர், அவரது நண்​பர் சமீர். இவர்​கள் காஷ்மீரில் எனக்​குக் கிடைத்த சகோ​தரர்​கள்.” ஆர்த்தி இவ்​விதம் சொன்​னதும் சமூக ஊடகர்​களின் படை இவரது துக்​கத்​தைச் சந்​தேகித்​தது. பிறப்​பை​யும் சந்​தேகித்​தது.

ஏன் இந்த வெறி​யும் வன்​ம​மும்? - காட்சி ஊடகங்​களி​லும் சமூக ஊடகங்​களி​லும் உற்​பத்​தி​யாகிற இந்த வன்​மத்​துக்கு ஊற்றுக்​கண் எது? இந்​தப் போர் வெறிக்கும் பொய்​யுரைக்​கும் அவதூறுக்​கும் பின்​னால் இருப்​பது மத வெறுப்​பு. அதைச் சில வாட்ஸ்​ஆப் பல்​கலைக்​கழ​கங்​கள் ஊட்டி வளர்க்​கின்றன. சிலர் அதைத் தொடர்ந்து உட்கொள்​கி​றார்​கள்.

நாளாவட்​டத்​தில் தங்​கள் கருத்து மட்​டுமே சரி என்​கிற முடிவுக்கு வருகி​றார்கள். நாடெங்​கிலும் தங்​களுக்கு உவப்​பான குரல்​கள் மட்​டுமே ஒலிக்க வேண்​டும் என்று கருதுகி​றார்​கள். எதிர்க் குரல்​களை அவதூறு ஆயுதங்​களால் அடக்க முற்​படு​கி​றார்​கள். அது வலிமைமிக்க அரசுச் செயல​ராக இருந்​தா​லும் சரி, எளிய குடிநப​ரான ஆர்த்​தி​யாக இருந்​தா​லும் சரி, வன்​மத்​தைக் கக்​கு​கி​றார்​கள்.

என்ன செய்​ய​லாம்? - பயங்​கர​வாதத்​தைக் கடுமை​யாக எதிர்​கொள்ள வேண்​டும். அதில் எந்​தச் சந்தேகமும் இல்​லை. அதே வேளை​யில், ஒரு போரை நோக்​கிப் போவதைத் தவிர்க்க வேண்​டும். போர் ஒரு​போதும் அமை​தி​யைக் கொண்​டு​வரா​து. போர் எந்​தப் பிரச்​சினை யையும் தீர்த்த​தாக வரலாறு இல்​லை.

முதல் கட்​ட​மாக, காட்சி ஊடகங்​களில் பொய்​யுரையைப் பரப்​பிய​வர்​கள் யாரென்று அனை​வ​ருக்​கும் தெரி​யும். அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். இரண்​டாவ​தாக, மிஸ்​ரி, ஹிமான்​ஷி, ஆர்த்தி முதலானோரை அவதூறு செய்​தவர்​களை, அவர்​கள் எந்​தப் பெயரில் ஒளிந்​திருந்​தா​லும் தேடிக் கண்​டடைந்​து, இணை​யக் குற்றங்​களின் கீழ் வழக்​குப் பதிவுசெய்ய வேண்​டும்.

இது பொய்​யுரைகளைப் பரப்​புவோர்க்கு எச்சரிக்​கை​யாக அமை​யும். மூன்​றாவ​தாக, நமது அரசமைப்பு மதச் சார்​பின்​மையை உயர்த்​திப் பிடிக்​கிறது. அரசு இயந்​திரம் அதை முன்​னெடுக்க வேண்​டும். ஆன்​மிக​வா​தி​களும்​ அரசி​யலர்​களும்​ ஆர்​வலர்​களும்​ அதைப்​ பரப்ப வேண்​டும்​. இறு​தி​யாக, நம்​மள​வில்​ செய்​யக்​கூடியது ஒன்​று உண்​டு. வன்மத்தை​யும்​ வெறியை​யும்​ பரப்​பும்​ ஊடகங்​களை​யும்​ ஊடகர்​களை​யும்​ புறக்​கணிக்க வேண்டும். போர்​ தீது. வன்​மம்​ ​கொடிது.

- Mu.Ramanathan@gmail.com

SCROLL FOR NEXT