சமீபத்திய பாகிஸ்தான் - இந்தியா மோதல்களில் நம் தரப்பில் என்ன வகை ஏவுகணைகள் ஏவப்பட்டன, எதிராளியின் என்ன வகை ட்ரோன்கள் முறியடிக்கப்பட்டன, எந்த வகை வான் பாதுகாப்பு மண்டலங்கள் சிதைக்கப்பட்டன என்பது குறித்தெல்லாம் விவரங்கள் வெளியாகின. ஆனால், உங்கள் பின்னால் எதிரி வந்துகொண்டிருக்கும்போது அதை அறிய முடியவில்லை என்றால், உங்கள் வாள் எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் பயனில்லை.
கண்ணுக்குப் புலப்படாத எதிரி இருட்டில் நெருங்கிக்கொண்டிருக்கும்போது, கையில் கேடயம் இருந்தாலும் அதனால் பலனில்லை. என்னதான் சுதர்சன சக்கரம், ஹாமர், ரஃபேல், ஆகாஷ்தீர், ஸ்கால்ப், பார்கவ் போன்றவை தாக்குதலில் நமக்குக் கைகொடுத்தாலும், வேறொரு தொழில்நுட்ப வசதி இல்லை என்றால், இவற்றால் இந்த அளவு பலன் இருந்திருக்காது. அது செயற்கைக்கோள்!
இந்தியாவின் பலம்: இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் இஸ்ரோவால் 1975இல் ஏவப்பட்டது. ‘ஆர்யபட்டா’, ‘பாஸ்கரா’ தொடங்கி இதுவரை செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்குத் தகவல் தொடர்பு, கண்காணிப்பு, ஆராய்ச்சி என்று பல்வேறு நோக்கங்கள் உண்டு. தவிர, இவற்றில் குறைந்தது பத்து செயற்கைக்கோள்களாவது தேசியப் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டவை.
பாகிஸ்தானின் விண்வெளி நிறுவனத்தின் பெயர் சுபார்கோ (Suparco). பாகிஸ்தான் இதுவரை எட்டு செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது. அவை பூமி கண்காணிப்பு, தகவல் தொடர்பு ஆகியவை தொடர்பானவை மட்டுமே. இந்நிலையில், எதிரிகளின் படைகள் எல்லை தாண்டி இயங்குகின்றனவா என்பதை அறிய நமக்குச் செயற்கைக்கோள்கள் பெரிதும் உதவுகின்றன. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டி எதிரிகள் நம் எல்லைக்குள் வரும்போது அதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி எச்சரித்ததும் செயற்கைக்கோள்தான்.
ஆபரேஷன் சிந்தூரில் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. அந்த முகாம்கள் எங்கே உள்ளன என்பதைத் தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டியது செயற்கைக்கோள்கள்தான். குறிப்பாக, நமது ‘கார்டோசாட் வரிசை’ செயற்கைக்கோள்கள் அதிஉயர் துல்லியமான ஒளிப்படங்களை வெளியிட்டு வான் தாக்குதலைச் சிறப்பாக மேற்கொள்ளப் பயன்பட்டன.
கடினச் சூழலில் கைகொடுக்கும்: ரிசாட் (ரேடார் இமேஜிங் சாட்டிலைட்) என்கிற வகைச் செயற்கைக்கோள்கள் எந்த விதமான வெப்பச் சூழலிலும், பகலிலும் இரவிலும் செயல்பட்டன. 2019இல் பாலகோட் வான்வழித் தாக்குதல்களிலும் இந்த வகை செயற்கைக்கோள்கள் நமக்குப் பெரிதும் உதவின.
தரைவழித் தகவல் தொடர்புகளில் சிக்கல்கள் உண்டு. பாலைவனம், மலை போன்ற பகுதிகளில் தகவல் தொடர்பு வசதிகளை உருவாக்குவது கடினமானது. தவிர, படைகள் தொடர்ந்து நகர்ந்துகொண்டிருக்கும்போது தகவல் தொடர்பு வசதிகளை நிலைநிறுத்த முடியாமல் போகலாம். போர்முனைகளில் உள்ள செல்போன் கோபுரங்கள், இணைய சேவைகள் போன்றவை எதிரிகளால் முடக்கப்படலாம்.
அப்போது தரைவழித் தகவல் தொடர்பு கொள்ள முடியாது போகும். எதிரியின் வான்வழித் தாக்குதல், தொழில்நுட்பத் தாக்குதல் மூலம் கம்பிகள், ரிலே டவர்கள், ரேடியோ நிலையங்கள், தொலைத்தொடர்பு வசதிகள் போன்றவை அழிக்கப்படலாம். எலெக்ட்ரானிக் ஜாமிங் என்கிற முறையில் நமது ரேடார் அல்லது இணைய ஒலிபரப்பை எதிரி முடக்கக்கூடும். வாக்கி டாக்கி, ரேடியோ போன்றவற்றைக்கூடத் தொலைதூரத்திலிருந்தே முடக்கிவிட முடியும். எனவே, செயற்கைக்கோள் மூலம் தகவல் பரிமாற்றம் என்பது மேலும் முக்கியமாகிறது.
விண்வெளியில் உள்ள இந்தியச் செயற்கைக்கோளுக்கு நமது ராணுவத் தலைமையகம் தகவல் அனுப்பும். இதை ‘அப்லிங்க் ஃபிரீக்வன்ஸி’ என்பார்கள். செயற்கைக்கோள் அந்தத் தகவலைப் பெற்று, நாம் குறிப்பிட்டுள்ள ஒரு பகுதிக்கு அதை அனுப்பும். பயனர் அதை, டவுன்லிங்க் ஃபிரீக்வன்ஸி என்பதன் மூலம் பெறுவார். செயற்கைக்கோள் மூலம் அனுப்பப்படும், பெறப்படும் தகவல்கள் சங்கேத மொழியில் (encrypted) இருக்கும். கடல், மலை, காடு போன்ற எந்தப் பகுதிக்கும் இப்படித் தகவல்களை அனுப்பவும் பெறவும் முடியும்.
நம்பகமான அஸ்திரம்: செயற்கைக்கோள்களின் மூலம் வான்வழித் தாக்குதல், ராணுவ வீரர்களின் நகர்வு, கடற்படையின் நடவடிக்கைகள் போன்றவற்றை ஒருங்கிணைக்க முடியும். உத்தரவுகளை (கடைசி நிமிடத்தில் மாற்றம் செய்யப்பட்டவை உள்பட) செயற்கைக்கோளின் மூலம் கடத்த முடியும். கூட்டுத் தாக்குதல்களுக்கும் செயற்கைக்கோள் பெரிதும் உதவுகிறது. அதாவது ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றுக்கு இடையே தகவல் தொடர்புக்கு இவை உறுதுணையாக உள்ளன.
இந்தியக் கடற்படை தொடர்ந்து ‘ஜிசாட்7’ (GSAT 7) மூலம் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் உள்ள நம் கப்பல்களுடன் தொடர்புகொள்கிறது. ‘ஜிசாட் 6’, ‘ஜிசாட் 6ஏ’ மூலம் ராணுவத் தரப்பு வாகனங்கள், போர்க்களத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாம். ‘ஜிசாட் 7ஏ’ செயற்கைகோள் மூலம், விமானப் படைக்கான தகவல்தொடர்பு நடந்தேறும். மொத்தத்தில், செயற்கைக்கோள்களின் சரியான வழிகாட்டுதல் இல்லை என்றால், நம் தாக்குதல்கள் உரிய பலனைப் பெற்றிருக்காது. துல்லியத் தாக்குதல்களும் சாத்தியமாகியிருக்காது!
- தொடர்புக்கு: aruncharanya@gmail.com