சிறப்புக் கட்டுரைகள்

செயற்கை நுண்ணறிவு உலகில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?

சரவணன் பார்த்தசாரதி

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் குறித்து நம்மில் பலரும் மிக மேலோட்ட மாகவே புரிந்துகொண்டுள்ளோம். நேரடியான தாக்குதல்கள் நிகழாதவரை அப்படியொரு சூழல் நம் நாட்டில் இல்லை என்றே போலியாக நம்ப விரும்புகிறோம். ஆனால், உண்மை நிலைமை அப்படி இல்லை. ஒவ்வொரு நாளும் எண்ணற்ற குழந்தைகள் நம் நாட்டில் குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். அவர்களில் வெகுசிலரே வெளியே சொல்கிறார்கள். அரிதான நிலையில்தான் குற்ற வழக்குகள் பதிவாகின்றன.

குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு ஒப்பீட்டளவில் நீண்ட காலம் ஆகிறது. இந்த நிலைக்கு நம்முடைய குடும்ப, சமூக அமைப்பே முதன்மையான காரணம். இன்​னொரு​புறம், செயற்கை நுண்​ணறிவு (Artificial Intelligence) நம்​முடைய வாழ்​வின் அங்​க​மாக மாறிவ​ரு​கிறது. மெய்​நிகர் உலகில் (Virtual World) நடை​பெறும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றங்​கள் குறித்த விழிப்​புணர்வு பெற்​றோர், ஆசிரியர்கள், சமூகச் செயல்​பாட்​டாளர்​கள் மத்​தி​யிலும் மிகக் குறை​வாகவே உள்​ளது.

சமூக வலைத்​தளத்​தில் பதி​விடப்​படும் ஒரு குழந்தை​யின் ஒளிப்​படத்​தைச் செயற்கை நுண்​ணறி​வின் துணை​யுடன் ஆபாச​மாகச் சித்​திரிக்க இயலும். இதற்​கென்றே ஒருங்​கிணைந்த குற்​றக்​குழுக்​கள் இணை​யத்​தில் செயல்​பட்​டு​வ​ரு​கின்​றன. அந்த ஒளிப்​படத்​தையோ, காணொளியையோ வைத்து அக்​குழந்​தையை மிரட்​டு​வது, குழந்​தை​யின் பெற்​றோரை மிரட்​டு​வது எனத் தொடங்கி குழந்தைகள் மீது குற்​றச்​செயல் நிகழ்த்​தும் கயவர்​களிடம் அந்​தப் பதிவு​களை விற்​பது, குழந்​தைகளைக் கடத்​திப் பாலியல் அடிமை​கள் ஆக்​கு​வது வரை இந்த வலை விரிந்​து
கிடக்​கிறது.

இத்​தகைய நபர்​களைக் கண்​டறிந்து கைதுசெய்​து, சட்​டத்​தின்​முன் நிறுத்​தும் வேலை​யைக் காவல் துறை செய்​து​வ​ரு​கிறது. ஒப்​பீட்​டள​வில் இது மிகுந்த சிக்​கலான பணி​யாகும். குற்​றக்​குழுக்​கள் ஒரு​புறம் என்​றால், மறு​புறம் நாம் நன்​கறிந்த பெருநிறு​வனங்​கள் உரு​வாக்​கும் செயலிகள் இத்​தகைய குற்​றங்​கள் நிகழ்​வதற்​கான வாய்ப்பை வழங்​கு​கின்றன என்​றால் நம்​புவீர்​களா? மெட்டா (Meta) நிறு​வனம் ‘டிஜிட்​டல் துணைவர்​கள்’ (Digital Companions) எனும் செயற்கை நுண்​ணறி​வு​கொண்ட ஒரு​வகை அரட்​டைச் செயலியை (chatbot app) உரு​வாக்​கி​யுள்​ளது.

இந்​தச் செயலி​யின் வழியே பயனர்​கள் செயற்கை நுண்​ணறிவு கொண்ட மெய்​நிகர் மனிதருடன் (Virtual Human) உரை​யாடலாம். மனிதர்​கள் பதிலளிப்​பது போன்றே இது செயல்​படும். அத்​துடன், உரை​யாடல்​களின்​போது பிரபலங்​களின் குரலிலும் பயனர்​களுக்​குப் பதில் கிடைக்​கும். இதற்​காக ஹாலிவுட் நடிகர்​கள் உள்​ளிட்ட பலருடன் அந்​நிறு​வனம் ஒப்​பந்​தம் செய்​து​கொண்​டு உள்​ளது. அந்​நிலை​யில் சில வாரங்​களுக்கு முன்​னர், ‘மெட்​டா’ நிறு​வனத்​தின் அரட்​டைச் செயலி சோதனைக்கு உட்​படுத்​தப்​பட்​டது. அதில் கிடைத்த தகவல்​கள் உலகப் புகழ்​பெற்ற ‘தி வால் ஸ்ட்​ரீட் ஜர்​னல்’ (The Wall Street Journal) இதழில் வெளி​யா​யின.

இந்​தச் செயற்கை நுண்​ணறி​வுத் துணைவர்​கள் பாலியல்​ரீ​தி​யான பாத்​திரம் ஏற்று உரை​யாடும் சூழ்​நிலைக்​குப் பயனர்​களைத் தூண்ட முடி​யும் என்​பது அச்​சோதனை​யில் தெரிய​வந்​தது. பதின்​மூன்று வயதான​வர்​கள் ஃபேஸ்​புக் கணக்கு தொடங்க இயலும் என்​பது விதி. சட்​டப்​படி அவர்​கள் குழந்​தைகள்​தான் என்​னும் நிலை​யில், அப்​படிப்​பட்ட பயனர்​களு​ட​னும் இத்​தகைய பாலியல் சார்ந்த உரை​யாடல்​களைச் செயற்கை நுண்​ணறி​வுத் துணைவர்​கள் முன்​னெடுக்​கும் சாத்​தி​யங்​கள் அதில் இருந்​தன.

சில வேளைகளில், செயற்கை நுண்​ணறி​வுத் துணைவர்​களே பாலியல் சார்ந்த பேச்​சுகளை​யும், செயல்​பாடு​களை​யும் வலிந்து பேச ஆரம்​பிப்​ப​தை​யும், ஊக்​கு​விப்​ப​தை​யும் ஆய்​வாளர்​கள் கண்​டறிந்​தனர். இதனையடுத்​து, பயனர்​களை அதிக ஈடு​பாட்​டுடன் வைத்​திருக்க மெட்டா வேண்​டுமென்றே தனது பாது​காப்பு வழி​காட்​டு​தல்​களில் சமரசம் செய்​து​கொண்​ட​தாகக் குற்​றம்​சாட்​டப்​பட, அந்​நிறு​வனம் அதை மறுத்​தது.

இத்​தகைய சோதனை​கள் வேண்​டுமென்றே ஒரு குறிப்​பிட்ட வகை​யில் நிகழ்த்​தப்​பட்​டுள்​ள​தாக​வும் அந்​நிறு​வனம் கூறியது. பின்​னர், சிறு​வர்​கள் பாலியல்​ரீ​தியி​லான பாத்​திரமேற்று உரை​யாடு​வதைத் தடுப்​பது, பிரபலங்​களின் குரல்​களைப் பயன்​படுத்​து​வது போன்ற விஷ​யங்​களில் சில கட்​டுப்​பாடு​களை அந்​நிறு​வனம் உரு​வாக்​கியது. இவற்​றுக்​குப் பின்​பும்​கூட, செயற்​கைத் துணைவர்​கள் பாலியல் உரை​யாடல்​களைத் தூண்​டும் சாத்​தி​ய​ம் உள்ளது எனவும், குழந்​தைப் பயனர்​களு​ட​னும்​கூட இது நிகழலாம் எனவும் அத்​துறை வல்​லுநர்​கள் தெரிவிக்​கின்​ற​னர்.

மேலும், இது​வரை மெட்டா மேற்​கொண்​டுள்ள பாது​காப்பு நடவடிக்​கை​கள் முழு​மை​யாக இல்லை எனவும் அவர்​கள் கூறுகின்​ற​னர். வாட்​ஸ்​ஆப், ஃபேஸ்​புக், இன்​ஸ்​டகி​ராம் எனப் பல்​வேறு சமூக ஊடகங்​கள் மெட்டா வசம் உள்ளன என்​பதை இங்கே நாம் கருத்​தில்​கொள்ள வேண்​டும். இந்த உலகில் நிகழும் எல்​லாத் தொழில்​களுக்​கும் நெறி​முறை​கள் (Ethics) வகுக்​கப்​பட்​டுள்​ளன. உயிரைப் பணயம் வைத்து நிகழ்த்​தப்​படும் போர்​களில்​கூட, நெறி​முறை​கள் கடைப்​பிடிக்​கப்​படு​வது கட்​டா​யம் என்​கிறது சர்​வ​தேசச் சட்டம்.

அந்​நிலை​யில், உலகின் பெரும்​பான்மை மக்​கள் பயன்​படுத்​தும் சமூக வலைத்​தளங்​களில், மெய்​நிகர் உலகத்​தில் தொழில்​நுட்ப வளர்ச்சி ஏற்​படும்​போது அதற்​கான நெறி​முறை​களைப் பேணுவதும் அவசி​யம். குறிப்​பாக, குழந்​தை​களின் பாது​காப்பை உறு​தி​செய்​யும் தலை​யாய கடமை தொழில்​நுட்ப நிறு​வனங்​களுக்கு உள்​ளது.

இன்​னொரு​புறம், செயற்கை நுண்​ணறிவு பெரு​மொழி மாதிரி​களை (Large Language Models) இலவச​மாக இன்று யார் வேண்​டு​மா​னாலும் தரவிறக்​கி, தங்​களுக்கு ஏற்​றவகை​யில் தனிப் பயனாக்​கம் செய்​து​கொள்​ள​வும் (customize), பிறருடன் பகிர்ந்​து​கொள்​ள​வும் இயலும். நிறு​வனங்​கள் உரு​வாக்​கும் செயற்கை நுண்​ணறி​வுச் செயலிகளு​டன் ஒப்​பிட இவை இன்​னும் சிக்​கலான சூழ்​நிலைக்​குக் குழந்​தைகளைத் தள்ளக்கூடும். நெறி​முறையற்ற நிதிப் பெருக்​கத்தை நோக்​க​மாகக் கொண்டு ஒரு நிறு​வனமோ தனி நபரோ ஒரு​போதும் செயல்​படக் கூடாது.

அப்​படியொரு நிறு​வனமோ, குழு​வோ, நபரோ செயல்​படத் தொடங்​கி​னால், ஒட்​டு மொத்​த சமூகமும் உலக​மும் கீழ்​நிலைக்​குச் சென்​று​விடும். அரசுகள் செயற்கை நுண்​ணறிவு சார்ந்த நெறி​முறை​களை வகுத்து மேம்​படுத்​து​வதும், அவை குறித்த விழிப்​புணர்​வைக் கல்வி நிறு​வனங்​கள், ஊடகங்​கள் வழியே ஏற்​படுத்​து​வதும், கடுமை​யான சட்​டங்​கள் வழியே அந்​நெறி​முறை​களை நடை​முறைக்​குக் கொண்​டு​வ​ரு​வதும்​தான் இப்​பிரச்​சினையைத் தீர்க்​கும்.

மேலும், சட்ட நிறு​வனங்​கள், குழந்​தைகள் உரிமைப் பாது​காப்பு அமைப்​பு​கள், ஊடகங்​கள், சமூக ஆர்​வலர்​கள், ஆசிரியர்​கள், பெற்​றோர் உள்​ளிட்ட அனை​வ​ரும் இந்த வகையி​லான தொழில்​நுட்ப வளர்ச்​சிகளை உன்​னிப்​பாகக் கண்​காணித்​து, அவற்​றில் சமூகம் சார்ந்த சிக்​கல்​கள், சவால்​கள் உரு​வாகும்​போது உடனுக்​குடன் செய​லாற்ற வேண்​டிய தேவை​யும் இன்று ஏற்​பட்​டுள்​ளது.

அப்​படிச் செயல்​பட்​டால் மட்​டுமே பாது​காப்​பான உலகை நம் குழந்​தைகளுக்கு வழங்க இயலும். நவீனத் தொழில்​நுட்​பங்​கள் வசதி​யைக் கொண்​டு​ வ​ரு​வ​தாக நிறு​வனங்​கள் கூறு​வதும், மக்​கள் அதை வரவேற்​பதும் மட்​டுமே நிகழ்​கின்​றன. அவற்​றின் பின்​னணி​யில் உள்​ள இது ​போன்​ற ஆபத்​துகளைக்​ காலம்​ கடப்​ப​தற்​கு முன்​ அனை​வ​ரும்​ உணர வேண்​டிய தருணம்​ இது.

- தொடர்புக்கு: sarathy.saravanan@gmail.com

SCROLL FOR NEXT