சிறப்புக் கட்டுரைகள்

மருந்துகளைப் பொதுப்பெயரில் பரிந்துரை செய்வது சாத்தியமா?

கு.கணேசன்

‘நோயாளிகளுக்கான பரிந்துரைச் சீட்டில் பொதுப்பெயரில் (Generic name) மட்டுமே மருத்துவர்கள் மருந்துகளை எழுத வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் மருந்துகளின் விலை சாமானியர்களுக்கு எட்டாத தொலைவுக்குச் சென்றிருக்கிறது. மருத்துவத்துக்குச் செய்யும் செலவால் மட்டும் வருடத்துக்கு 6 கோடிக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுகிறார்கள் என்கின்றன ஆய்வுகள். இந்தச் சூழலில், இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது!

எது பொதுப்​பெயர் மருந்து? - நிறுவன அடையாளம் (Branded Medicine) பெற்றவை, பொதுவானவை (Generic Medicine) என மருந்துகள் இரண்டு​விதமாக இருக்​கின்றன. உதாரணமாக, ‘குரோசின்’ (Crocin) என்பது நிறுவனப் பெயர். ‘பாராசிட்​ட​மால்’ (Paracetamol) என்பது அதன் பொதுப்​பெயர். ‘பொதுப்​பெயர்’ என்பது ஒரு மருந்தின் வேதிப்​பெயர். மருத்​துவர்கள் வழக்க​மாகப் பரிந்துரைக்கும் மருந்துகள் நிறுவன அடையாளம் பெற்றவை; ‘காப்பு​ரிமை’ (Patent) பெற்றவை.

இந்த வகை மருந்துகளின் விலையை நிர்ண​யிக்​கும்​போது, மூலப்​பொருளின் செலவோடு மருந்தைக் கண்டு​பிடிக்க ஆன ஆராய்ச்சிச் செலவையும் சேர்த்தே விலை வைக்கப்​படும். இதனால்​தான், இந்த மருந்துகளின் விலை அதிகம். மாறாக, காப்பு​ரிமைக் காலத்தைக் கடந்து வந்த மருந்துகள் பொதுப்​பெயர்​களில் விற்கப்​படு​கின்றன. இவை ஆராய்ச்சிச் செலவைக் கடந்து​விட்​ட​தால், நிறுவன மருந்துகளைவிட 30% முதல் 80% வரை குறைந்த விலையில் கிடைக்​கின்றன.

சாமானியர்​களின் மருந்துச் செலவைக் குறைப்​ப​தற்கான ஒரு வழிமுறைதான் பொதுப்​பெயரில் மருந்துகளைப் பரிந்துரைக்கக் கட்டாயப்​படுத்தும் உத்தரவு. தேசிய மருத்துவ ஆணையமும் (National Medical Commission) 2016இல் இது போன்ற ஆணையைப் பிறப்​பித்தது. ஆனால், மருத்​துவர்​களிட​மிருந்து இதற்கு எதிர்ப்பு வந்ததால், இந்த ஆணை கிடப்பில் போடப்​பட்டது. இப்போது இந்தப் பிரச்சினை உச்ச
நீதிமன்​றத்​துக்குச் சென்றிருக்​கிறது. அங்கு வந்த உத்தர​வு​தான், பொதுப்​பெயரில் மட்டுமே மருந்துச்​சீட்டில் எழுத வேண்டும் என்பது. இந்த உத்தரவு நடைமுறைச் சாத்தியம் கொண்டதா என்னும் கேள்வி மருத்​துவர்கள் மத்தி​யிலும் மருந்து நிறுவனங்​களின் மத்தி​யிலும் எழுந்​திருக்​கிறது.

என்னென்ன பிரச்சினைகள்? - விளம்​பரங்கள் மூலம், ஒரு கிரிக்கெட் வீரர் ஒரு நிறுவனச் செயற்கைப் பானத்தை அருந்தச் சொல்லும்​போது, ஒரு பாலிவுட் நடிகர் ஒரு நிறுவனப் பாக்கைச் சுவைக்கச் சொல்லும்​போது, ஒரு மருத்​துவர் அரசு அனுமதி அளித்த ஒரு நிறுவன மருந்தைப் பரிந்துரைக்கக் கூடாது என்பது நகைமுரண். ஒற்றை வேதிமருந்தை அதன் பொதுப்​பெயரில் எழுதி​விடலாம். கூட்டு மருந்துகளைப் பொதுப்​பெயரில் எழுதுவது கடினம். உதாரணமாக, விட்டமின் மாத்திரைகளில் பத்துக்கும் மேற்பட்ட வேதிப்​பொருள்கள் இருக்​கும்.

அவ்வளவையும் தனித்​தனியாக எழுத முடியாது. மருந்துகளைப் பொதுப்​பெயரில் பரிந்துரை செய்ய ஒரு சட்டபூர்வ ஆணை அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவில் தெரிவித்​துள்ளது. இதன்படி பார்த்​தால், ஒரு மருந்தை அதன் நிறுவனப் பெயரில் பரிந்துரை செய்வது சட்ட விரோத​மாகி​விடும். மருத்​துவர்​களுக்கு நிறுவனப் பெயரில் பரிந்துரைக்க இப்படித் தடை விதித்து​விட்​டால், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை நிறுவனப் பெயரில் இந்தியாவில் சந்தைப்​படுத்த முன்வருமா என்பது இன்னொரு கேள்வி.

இந்தியாவின் மருந்து வணிகம் 2023இல் 5,460 கோடி அமெரிக்க டாலர். இதில் பாதிக்குப் பாதி வெளிநாடு​களுக்கான ஏற்றும​தியில் கிடைத்​திருக்​கிறது. 2025இல் 6,500 கோடி டாலர் மருந்து வணிகத்தை​யும், 2030இல் 13,000 கோடி டாலர் மருந்து வணிகத்தையும் மத்திய அரசு எதிர்​பார்க்​கிறது. ஆப்ரிக்கா​வுக்கு 50%, அமெரிக்கா​வுக்கு 40%, பிரிட்​ட​னுக்கு 25% மருந்துத் தேவைகளுக்கு இந்தியாவே ஏற்றுமதி செய்கிறது.

உலகளா​விய தடுப்​பூசிச் சந்தையில் 60% இந்தியாவின் ஏற்றும​தி​தான். ஆகவேதான் அரசு 100% அந்நிய முதலீட்டை மருந்து வணிகத்​துக்கு அனுமதித்​திருக்​கிறது. அதேவேளை, பொதுப்​பெயர் மருந்துகளை மட்டுமே உலகச் சந்தை விரும்​பு​கிறது என்பதற்காக, ஏற்றுமதிச் சந்தைக்கு முன்னுரிமை கொடுத்து​விட்டு, நிறுவன மருந்தைக் கொண்டாடும் உள்நாட்டுச் சந்தையை இந்தியா விட்டுக்​கொடுக்​குமா?

மருந்தை மாற்றிக் கொடுத்​தால்? - ஒரு மருத்​துவர், ஒரு நோயாளிக்கு எந்த நிறுவன மருந்து வேலை செய்யும் என்று தனது அனுபவத்தில் தெளிவுற்று, நோயாளிக்குப் பரிந்துரைக்​கிறார். பொதுப்​பெயர் மருந்துகளை எழுதும்​போது, என்ன மருந்தைக் கொடுக்க வேண்டும் என்னும் உரிமை, மருந்து விற்பனை​யாள​ருக்குச் சென்று​விடும். நாட்டில் தரம் குறைந்த மருந்துகளும் கிடைக்​கின்றன என்பதை அரசே ஒப்புக்​கொள்​கிறது.

இந்தச் சூழலில், பொதுப்​பெயர் மருந்துகளை மருந்துக் கடைகளில் நோயாளிகள் வாங்கும்​போது, அவற்றுக்கு இணையான மற்றொரு நிறுவனத்தின் தரம் குறைந்த, அதேவேளை அதிக லாபம் தருகிற மருந்துகளை விற்பனை​யாளர் மாற்றித் தரவும் சாத்தியம் உள்ளது. அப்படி மாற்றித் தரப்படும் மருந்துகள் பலன் தரவில்லை என்றால், நோயாளியின் ஆரோக்​கி​யத்​துக்கு யார் பொறுப்​பேற்பது?

அடுத்து, தங்கள் நிறுவன மருந்தைப் பரிந்துரைக்கப் பல மருந்து நிறுவனங்கள் மருத்​துவர்​களுக்கு நெறிமுறை தவறி, ‘பரிசு’களை வழங்கு​வ​தாகப் பொதுவெளியில் ஒரு குற்றச்​சாட்டு உள்ளது. ‘டோலோ’ (Dolo) மருந்தைப் பரிந்துரைக்க அந்த நிறுவனம் மருத்​துவர்​களின் ‘பரிசு’களுக்கு 1,000 கோடி ரூபாய் செலவிட்டதாக வந்த புகாரை இங்கு நினைவு​கூரலாம்.

நீதிமன்ற உத்தரவின் விளைவால், மருத்​துவரைவிட விற்பனை​யாளர்தான் மருந்துகளைத் தேர்வு செய்வதில் அதிக உரிமை பெற்று​விடு​கிறார். இந்த நிலையில், தங்கள் தயாரிப்பு​களுக்கு முன்னுரிமை கொடுக்க, மருந்து விற்பனை​யாளர்​களுக்கும் ‘பரிசு’கள் வழங்குவதை மருந்து நிறுவனங்கள் பின்பற்றாது என்பது என்ன நிச்சயம்?

மருந்து நிறுவனங்​களின் வாழ்வா​தாரம்: இனிமேல் மருந்துகள் பொதுப்​பெயரில்தான் பரிந்துரைக்​கப்​படும் என்றால், நிறுவன மருந்துகளைத் தயாரித்து, அதைத் தொழிற்​சாலை​யி​லிருந்து நோயாளிக்குக் கொண்டு செல்லும் லட்சக்​கணக்கான தொழிலா​ளர்கள், மருந்து விற்பனைப் பிரதி​நி​திகள், அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நுண், சிறு, குறு மருந்து நிறுவனங்​களின் (MSME) வாழ்வா​தாரம் பறிபோகும். இவர்களுக்கு அரசு என்ன மாற்று வழி வைத்திருக்​கிறது? இந்தியாவில் மருந்துகளைத்தான் அதிகமாகத் தயாரிக்​கிறோம். அவற்றின் மூலப்​பொருள்கள் பன்னாட்டு நிறுவனங்​களின் கைகளிலோ, ஆதிக்​கத்​திலோதான் இருக்​கின்றன.

MSME நிறுவனங்கள் அவர்களிடம் மூலப்​பொருள்கள் வாங்கி, மருந்து தயாரித்து, இந்தியாவில் விற்பனை செய்கின்றன. உலகச் சந்தைக்காக, நிறுவன மருந்துகளைத் தவிர்த்து​விட்டு, பொதுப்​பெயர் மருந்துகளை மட்டும் இந்தியாவில் பயன்படுத்​தி​னால், ஒட்டுமொத்த பொதுப்​பெயர் மருந்துகளின் விலைகளை நிர்ணயம் செய்யும் உரிமை பன்னாட்டு நிறுவனங்​களுக்குச் சென்று​விடும். அப்போது அவர்கள் சொல்வதே விலை என்றாகும். இதனால், பொதுப்​பெயர் மருந்துகளின் விலை அதிகரிக்​கக்​கூடும்.

இப்படி, மருந்துகளைப் பொதுப்​பெயரில் பரிந்துரைப்​ப​தில், நம் அடிப்படை மருத்​துவக் கட்டமைப்பில் பலதரப்பட்ட போதாமைகள் இருக்​கின்றன. மேற்கத்திய நாடுகள், ஐக்கிய அரேபிய நாடுகளில் உள்ளது​போல், இந்தப் போதாமை​களைச் சட்டப்படி சரிசெய்த பின்னர், தற்போது வந்துள்ள உச்ச நீதிமன்ற உத்தரவை அரசு பரிசீலிப்பது மருந்து நிறுவனங்​களுக்கும் மருத்​துவர்​களுக்கும் மக்களுக்கும் நல்லது.

அதுவரை என்ன செய்ய​லாம்? - இப்போது பல அத்தி​யாவசிய மருந்துகளின் விலையை மத்திய அரசே நிர்ண​யித்​திருப்​பது​போல், மருந்து நிறுவனங்​களுடன் பேசி உற்பத்திச் செலவுடன் எவ்வளவு லாபம் வைப்பது என்னும் வரைமுறையைக் கொண்டு​வந்​தால், இன்னும் பல மருந்துகளின் விலையைக் கட்டுப்​படுத்​தலாம். சாதாரண வலி மாத்திரைகள், சத்து மாத்திரைகள் தவிர மற்ற மருந்துகளுக்கு மருத்​துவரின் பரிந்துரை இல்லாமல் பயனாளிக்கு வழங்கக் கூடாது என்பதைச் சட்டமாக்​கலாம்.

பலருக்கும் நிறுவன மருந்துகளே பாதுகாப்​பானவை என்னும் நம்பிக்கை இருக்​கிறது. ஆகவே, மருத்​துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைக்​கும்போது முடிந்தவரை பொதுப்​பெயர், நிறுவனப் பெயர் இரண்டையும் எழுதச் சொல்லலாம். பயனாளியின் வசதியைப் பொறுத்து எந்த மருந்​தையும் அவர் வாங்கிப் பயன்படுத்த வழி செய்ய​லாம்.

மலிவு விலை மருந்​தகங்களை அதிகப்​படுத்​தலாம். நிறுவனப் பொதுப்​பெயர் மருந்துகளுக்கு (Branded Generics) இங்கே முன்னுரிமை கொடுக்​கலாம். அடுத்து, இங்கு எல்லா மருந்துகளும் கிடைப்​ப​தில்லை என்றும் புகார் வருகிறது. இதைக் கவனிக்க வேண்டும். மலிவு விலை மருந்துகள் குறித்த விழிப்பு​ணர்வு இன்னும் மக்களிடம் அவ்வளவாக இல்லை.

விலை மலிவு என்பதால் மருந்தின் தரம் குறைவாக இருக்குமோ என்னும் சந்தேகமும் பலருக்கு இருக்​கிறது. இந்த அவநம்பிக்கையையும் தகர்க்க வேண்டும். இதற்கு, கடைகளில் விற்கப்​படும் எல்லா மருந்துகளும் தரமானவை என்பதை அரசு உறுதிப்​படுத்த வேண்டும். ஏனென்​றால், மருந்துகள் மக்களின் உயிர் தொடர்​பானவை!

- தொடர்புக்கு gganesan95@gmail.com

SCROLL FOR NEXT