மாவட்ட அளவில் கீழமை நீதிமன்றங்களால் சட்டத் தவறுகள் செய்யப்படும்போது, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமையை இந்திய அரசமைப்பு வழங்குகிறது. இதேபோல், உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியால் வழங்கப்படும் தீர்ப்புகள் நிறுவப்பட்ட சட்டக் கொள்கைகளுடன் முரண்பட்டால், அவற்றை இரு நீதியரசர் அமர்வில் மேல்முறையீடு செய்யலாம். அரசமைப்பு விஷயங்கள் தொடர்பான மேல்முறையீடுகள் பொதுவாகத் தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு பெரிய அமர்வின் முன் வைக்கப்படும்.
அதிகபட்ச அளவில், இந்திய உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்களின் இரு நீதியரசர் அமர்வுகளின் தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிக்கிறது - குறிப்பாக, அரசாங்கக் கொள்கையில் தலையிடும், குறிப்பிடத்தக்க நிதிப் பொறுப்புகளை விதிக்கும் அல்லது அரசமைப்பு விதிகளின் தவறான விளக்கங்களை உள்ளடக்கிய வழக்குகளில்.
இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் ஒரு குழப்பமான போக்கு உருவாகியுள்ளது: உச்ச நீதிமன்றத்தால் ஏற்கெனவே சட்ட நிலைப்பாடு உறுதியாகத் தீர்க்கப்பட்ட விஷயங்களில்கூடப் பல்வேறு மாநில அரசுத் துறைகள், அரசுப் பொதுத் துறை நிறுவனங்கள் அதிகளவில் ‘அற்பமான’ மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்துவருகின்றன.
தேவையற்ற அணுகுமுறை: மே 2023இல் ஒரு பொது மன்றத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய், “மத்திய, மாநில அரசுகள் மற்றும் அவற்றின் பொதுத் துறை நிறுவனங்களால் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகளில் 40% அற்பமானவை” என்று குறிப்பிட்டார். ஓய்வுபெற்ற ஊழியருக்கு வெறும் ரூ.700 செலுத்துவதை அரசாங்கம் எதிர்த்த ஒரு குறிப்பிடத்தக்க உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டினார் - இது ரூ. 7 லட்சத்துக்கும் அதிகமான சட்டச் செலவுகளை ஏற்படுத்தி, பொதுக் கருவூலத்துக்குத் தேவையில்லாமல் சுமையை ஏற்றியது என்று கூறினார்.
‘ஷ்யாம் செல் அண்டு பவர் லிமிடெட் - எதிர் - ஷியாம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ்’ (14/03/2022 தேதியிட்ட தீர்ப்பு) வழக்கில், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, அற்பமான அரசாங்க மேல்முறையீடுகளின் அதிகரித்துவரும் அலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.
நீதிமன்றத்தின் பணிச் சுமையில் அவற்றின் தாக்கம் குறித்துத் தெளிவுபடுத்தியது. ஓய்வூதியத் தகராறு தொடர்பான மற்றொரு வழக்கில் (எஸ்.எல்.பி - எண். 15917/2022), நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி மேல்முறையீடு செய்ததற்காகத் தமிழக அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தனர். மேல்முறையீடு 19/09/2022 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது; அது மட்டுமல்ல, அரசாங்கத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
09/02/2023 அன்று தீர்ப்பளிக்கப்பட்ட எஸ்.எல்.பி. (சி) - எண். 1595/2022இல் மீண்டும் மீண்டும், ஆதாரமற்ற வழக்குகள் மீதான விரக்தி தெளிவாகத் தெரிந்தது. இறந்த ஊழியரின் பணிக்கொடை தொடர்பான அரசாங்க மேல்முறையீட்டை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோர் தள்ளுபடி செய்து ரூ.50,000 அபராதம் விதித்தனர்.
கண்டிக்கும் நீதிபதிகள்: ஆசிரியர் நியமன வழக்குகளில் நீதிமன்ற முடிவுகளுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு பத்து தனித்தனி மேல்முறையீடுகளைச் செய்தது - இவை அனைத்தும் ஒரே மாதிரியாகத் தீர்ப்பளிக்கப்பட்டன. 13/08/2024 தேதியிட்ட (டபிள்யூ.ஏ. (எம்.டி.) எண். 1354 முதல் 1363, 2024) உத்தரவில், நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசின் நடவடிக்கைகளைக் ‘கொடூரமானது’ என்று குறிப்பிட்டது. மேலும், தனிப்பட்ட பொறுப்பிலிருந்து தப்பிக்கும் அதிகாரிகளிடையே பொறுப்புக்கூறுதல் இல்லாததை விமர்சித்து, மேல்முறையீட்டுக்கு ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்தது.
மற்றொரு விஷயத்தில் (டபிள்யூ.ஏ.(எம்.டி.) எண். 1436/2024), இலங்கை அகதிகள் முகாமில் ஒரு குழந்தையின் மரணத்துக்கான இழப்பீட்டை எதிர்த்து மாநில அரசு தொடர்ந்த மேல்முறையீட்டை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இந்த மேல்முறையீடு ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்டு, ரூ.50,000 அபராதம் விதித்து, 21/08/2024 அன்று ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தீர்ப்பை உறுதிசெய்தது.
சமீபத்தில், ‘தமிழ்நாடு மாநிலம் - எதிர் - உயர் கல்வித் துறையின் அரசாங்க முதன்மைச் செயலாளர்’ என்கிற வழக்கில், ஏற்கெனவே உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டும் தீர்த்துவைத்த ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரிய நீதிப் பேராணை மேல்முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள் முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு, அரசுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது. இறுதி செய்யப்பட்ட பிரச்சினையை ‘மீண்டும் மேற்கொள்ளப்பட்ட முறையீடு’ என்று மேல்முறையீட்டை நீதிபதிகள் கண்டித்தனர்.
அதிகரிக்கும் போக்கு: இந்த ஆதாரமற்ற மேல்முறையீடுகள் சட்டப் பிரதிநிதிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோரின் நம்பகத்தன்மையைச் சிதைப்பது மட்டுமல்லாமல், மாநிலத்தின் மீது தவிர்க்கக்கூடிய நிதிச் செலவுகளையும் அதிகரிக்கவைக்கின்றன. மிக முக்கியமாக, அவை நீதியைத் தாமதப்படுத்துகின்றன - குறிப்பாக தொழிலாளர்கள், பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்கள் போன்ற சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
அவர்கள் பெரும்பாலும் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குக்கூட நீண்ட கால வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் அதிகரித்துவரும் வழக்குகளின் சுமை, இத்தகைய தகுதியற்ற வழக்குத் தாக்கல்களின் நேரடி விளைவாகும்.
முன்னோக்கிச் செல்லும் வழி: இந்தப் பிரச்சினையைத் தணிக்க, அரசுத் துறைகள் - குறிப்பாக சட்டம் மற்றும் நிதித் துறைகள் - நன்கு தீர்க்கப்பட்ட சட்ட நிலைப்பாடுகளின் அடிப்படையில் நீதிமன்றங்கள் தெரிவிக்கும் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளைத் தடை செய்யும் தெளிவான உள் வழிகாட்டுதல்களை உருவாக்குவது கட்டாயமாகும்.
மேலும், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் பதிவாளர்களுக்கு அற்பமான மேல்முறையீடுகளை ஆரம்பக் கட்டத்திலேயே நிராகரிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். நீதித் துறையின் சுமையைக் குறைப்பது மட்டுமல்லாமல், பொது வளங்களைப் பாதுகாப்பதற்கும், நீதி வேண்டிக் காத்திருப்பவர்களுக்கு விரைவாக நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்கும் இதுபோன்ற வழக்குகளைக் குறைப்பது அவசியம்.
- தொடர்புக்கு: dss1961@gmail.com