ஐ.நா.வின் உலகளாவிய தேசிய மனித உரிமை நிறுவனங்களின் கூட்டமைப்பு, ஜெனிவாவில் மார்ச் மாதம் தனது 45ஆவது கூட்டத்தை நடத்தியது. இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு இதுவரை அளிக்கப்பட்டுவந்த முதன்மைத் தர அங்கீகாரத்தை விலக்கிக்கொள்வது என அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் வாக்களித்தல் உள்ளிட்ட உரிமைகளை இந்திய ஆணையம் இழக்கும்; அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும். எனினும் ஆணையம் தன் செயல்பாடுகளையும் சட்டக் கட்டமைப்புகளையும் மாற்றிக்கொள்ள வாய்ப்பு தருவதற்காக இந்தத் தர இறக்கத்தை ஓராண்டுக்கு நடைமுறைப்படுத்தாமல் இருக்க ஐ.நா. முடிவு செய்துள்ளது. இது இந்திய மனித உரிமை ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவு.
ஆணையம் உருவான வரலாறு: 1991 பாரிஸ் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில், 1993இல் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையம் உள்பட மனித உரிமை சார்ந்த சில நிறுவனங்கள் உருவாக இச்சட்டம் வழிவகுத்தது. ஆனால், தேசிய மனித உரிமை நிறுவனம் என்பது பாரிஸ் மாநாட்டின் கொள்கை அடிப்படையில் செயல்பட வேண்டும்.
அவ்வாறு செயல்படும் நிறுவனங்கள் மட்டுமே முதல் நிலை அங்கீகாரம் பெறும். பாதி அளவு மட்டும் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் இரண்டாம் தரத்துக்குத் தள்ளப்படும். 1993லிருந்து, முதல் தரத்துடன் இருந்த இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம், அதன் தரத்தைத் தற்போது இழந்துள்ளது.
அடிப்படைத் தகுதிகள்: பாரிஸ் கொள்கை முடிவின்படி, மனித உரிமை ஆணையம் என்பது அரசியல் தலையீடு இன்றிச் சுதந்திரமாகவும் தன்னாட்சி அதிகாரத்துடனும் பன்முகத்தன்மையுடனும் செயல்பட வேண்டும்; சுயமாக முடிவு எடுக்கவும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கவும் தடுக்கவும் தலையீடு செய்ய வேண்டும், அரசைச் சாராத நிதி ஆதாரம் ஆணையத்துக்கு அவசியம்.
மேற்கண்ட காரணிகளில் இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் கடந்த காலங்களில் முறையாகச் செயல்படவில்லை. இதற்கென ஆய்வுசெய்யும் ஐ.நா. துணைக் குழு 2011, 2016, 2017, 2023இல் நடத்திய ஆய்வுகளில் இந்த விலகல்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டியது.
ஆணையத்தின் செயலிழப்பு: ஆணையத்தின் ஊழியர்கள், பெரும்பாலும் மத்திய அரசின் பிற துறைகளில் இருந்து தற்காலிகமாக இங்கு பணிபுரிய நியமிக்கப்பட்டவர்கள். ஆணைய உறுப்பினராகவும் புலனாய்வு அதிகாரியாகவும் பெரும்பாலும் ஆட்சியாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளே இத்துறைக்கு நியமிக்கப்படுகின்றனர். ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்குத் தலைவர் பொறுப்பு வழங்கப்படுகின்றது. அவர்கள் மனித உரிமையில் அக்கறை கொண்டவர்களா என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்லை.
2016, பிப்ரவரியில் நீதிபதி தத்து பதவியேற்றுக்கொண்ட பின்னர், தேசிய மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகள் பெரும்பாலும் அதன் அடிப்படை நோக்கத்திலிருந்து விலகின எனலாம். நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரம், பொது இடங்களில் நிகழ்ந்த குழு வன்செயல்கள், கருத்துரிமை பறிப்பு, பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், அதிகரித்த காவல் துறைச் சித்ரவதைகள், மோதல் சாவுகள் எனப் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மனித உரிமை ஆணையம் செயல்படாமல் இருந்தது; மனித உரிமை அமைப்புகள், செயல்பாட்டாளர்களுடன் நட்பு அடிப்படையிலான செயல்பாட்டைத் தவிர்த்துக்கொண்டது; அரசுக்கு எதிராக வரும் புகார்களை மாநில மனித உரிமை ஆணையங்களுக்கு மாற்றிவிட்டது.
புகார்கள் கையாளப்பட்ட விதம்: 2017-18இல் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு நாடு முழுவதுமிருந்து 86,187 புகார்கள் வந்தன. இவற்றில் 33,290 புகார்களை விசாரிக்காமலேயே ஆணையம் தள்ளுபடி செய்தது. 15,364 புகார்கள் வழிகாட்டி அறிவுரை வழங்கப்பட்டு முடித்துவைக்கப்பட்டன. 21,652 புகார்களை உரிய மாநில மனித உரிமை ஆணையங்களுக்குத் திருப்பிவிட்டது. வெறும் 691 வழக்குகளில் மட்டும் இழப்பீடு வழங்கப் பரிந்துரைத்தது.
ஓர் ஆண்டுக்கு ஏறக்குறைய ஒரு லட்சம் புகார்களைத் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு மக்கள் அனுப்புகின்றனர். இந்தி பேசாதமாநிலங்களிலிருந்து வரும் புகார்களையும் ஆங்கிலத்தில் வரும் புகார்களையும் ஆணையம் முறையாகப் பரிசீலிப்பது இல்லை என நீண்ட நாள் முறையீடு உள்ளது. ஆணையம் தனது நிதிக்காக நிதி அமைச்சகத்தையே எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதனால் அதன் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
சர்ச்சைக்குரிய நியமனங்கள்: 2021இல் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ராஜீவ் ஜெயின் முன்னதாக மத்தியப் புலனாய்வு அமைப்பில் இயக்குநராகவும் குஜராத் மாநிலத்தில் உளவுத் துறைத் தலைவராகவும் இருந்தவர். 2021இல் முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் பணிக் காலத்தில் பல்வேறு வழக்குகள் வேறு நீதிபதிகளின் அமர்விலிருந்து தன்னிச்சையாக அவரது அமர்வுக்கு மாற்றப்பட்டன. மாவட்ட நீதிபதி லோயா என்பவரின் மரணம் தொடர்பான வழக்கு இவரின் அமர்வுக்குத் திடீரென மாற்றப்பட்டதன் பின்னணியில் நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 2018, ஜனவரி 18 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளிருந்தே எழுந்த குற்றச்சாட்டு: 2017இல் இந்த ஆணையத்தின் சிறுபான்மை மக்கள் மனித உரிமை சார்ந்த துணைக் குழுவில் இருந்த முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரியான ஹர்ஷ் மந்தர் பதவி விலகினார். சிறுபான்மை மக்கள் மீதான மத நோக்கிலான தாக்குதல், குழு வன்முறை, வெறுப்புக்கு எதிராக அவர்களது மனித உரிமையைக் காக்க ஆணையம் தவறிவிட்டது என்பது அப்போது அவர் முன்வைத்த குற்றச்சாட்டு. உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் சிறுபான்மை மதத்தவர் மீது காவல் துறை நடத்திய மோதல் கொலைகளுக்கு எதிராகப் புகார் கொடுக்கப்பட்டும் ஆணையம் விசாரிக்கவில்லை.
ஆணையம் மறந்துவிட்ட வரலாறு: கடந்த காலங்களில் தேசிய மனித உரிமை ஆணையம் மனித உரிமைகளைப் பாதுகாக்கப் பல்வேறு தலையீடுகளைச் செய்துள்ளது; நீதிமன்றத்தில் அதற்காக வழக்குகளைக்கூடத் தாக்கல் செய்திருக்கின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஒன்றைப் புதிதாக அரசு கொண்டுவந்தபோது, அது அவசியமற்றது என அரசுக்கு ஆணையம் சுட்டிக்காட்டிய வரலாறு உண்டு. ஆனால், தற்போது அது தனது தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் இழந்து, அரசின் ஒரு நிறுவனம் ஆகச் சுருக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைக் காப்பாளர்களைப் பாதுகாக்கவும் உபா (UAPA) உள்ளிட்ட கொடும் சட்டங்களின் அத்துமீறல்களைப் பேசவும் தவறியது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் நிகழ்ந்த உரிமை மீறல்களுக்கு மௌனம் காத்தது. கரோனா காலத்தில் சாமானியத் தொழிலாளர்களும் ஏழை எளியவர்களும் எதிர்கொண்ட நெருக்கடிகளை அறிந்திராதது. மத்திய இந்தியாவின் பழங்குடியினரின் கோரிக்கைகளையும் மணிப்பூர் மனித உரிமை மீறல்களையும் கணக்கில் கொள்ளாதது எனக் கடும் விமர்சனங்கள் அதன் எதிரில் நிற்கின்றன. உச்ச நீதிமன்றம்கூடத் தனது மணிப்பூர் விசாரணைக் குழுவில் ஆணையத்தைச் சேர்க்கவில்லை.
ஆணையத்தின் தலைவர், உறுப்பினர் தேர்வில் வெளிப்படைத்தன்மையும் இருப்பது இல்லை. நாடாளுமன்ற இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகள்கூட இவற்றில் புறக்கணிக்கப்படுகின்றன. மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுகையில் மனித உரிமை ஆணையம் சமூகத்துக்கு ஒரு ஜனநாயகரீதியிலான நம்பிக்கையை அளிக்கிறது. இந்த நிறுவனத்தை மீட்டெடுப்பது நாட்டுக்கு நல்லது.
- தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com