சிறப்புக் கட்டுரைகள்

ஜனநாயக வேர்களில் மாற்றுத்திறனாளிகள்

பெ.இராமஜெயம்

தமிழ்நாடு சமூக நீதியின் தொட்டில் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் இயங்கும் கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று மாற்றுத்திறனாளிகள் துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது சமூக நீதியின் நீட்சி என்றே சொல்ல வேண்டும்.

சமூக நீதி வரலாறு: ஏற்கெனவே மாற்றுத்​திற​னாளி​களுக்கு அரசின் கல்வி, வேலைவாய்ப்பு​களில் 4% இடஒதுக்கீடு வழங்கப்​பட்டுவந்தா​லும், அது மட்டுமே நிரந்தரத் தீர்வு அல்ல. பாதிக்​கப்பட்ட சமூகங்​களின் எதிர்கால முன்னேற்​றத்​துக்குக் கோரிக்கைகளும் தீர்வு​களும் அவர்களிடம் இருந்துதான் பெறப்பட வேண்டும். மாற்றுத்​திற​னாளி​களுக்கு உள்ளாட்​சிகளில் இடஒதுக்கீடு குறித்து இளைஞர் நலன் - விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்​றத்தில் தனது முதல் ​பேச்சில் பேசியிருந்​தார்.

இந்நிலை​யில், தமிழ்​நாட்டில் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் 25 மாநகராட்​சிகள், 138 நகராட்​சிகள், 490 நகரப் பஞ்சா​யத்துகள், கிராமப்புற வளர்ச்சித் துறையின் கீழ் புதிதாக உருவாக்​கப்பட்ட மயிலாடுதுறை உள்பட 37 மாவட்டப் பஞ்சா​யத்துக் குழுக்கள், 388 ஒன்றி​யங்கள், 12,913 கிராமப் பஞ்சா​யத்து​களிலும் மாற்றுத்​திற​னாளிகள் நியமன உறுப்​பினர்​களாகும் மாபெரும் வாய்ப்பு உருவாக்​கப்​பட்​டிருக்​கிறது.

இதற்கு அடித்​தளமாக, தமிழ்நாடு ஊராட்​சிகள் சட்டம்​-1994, நகர்ப்புற உள்ளாட்​சிகள் சட்டம்​-1998 ஆகிய உள்ளாட்சிச் சட்டங்​களைத் திருத்தம் செய்யும் சட்ட முன்வரைவை முதல்வர் மு.க.ஸ்​டாலின் தாக்கல் செய்ய​விருக்​கிறார். இந்த ஒற்றைச் சட்டத்தால் சுமார் 14,000 மாற்றுத்​திற​னாளிகள் உள்ளாட்சி மன்றங்​களில் நியமன உறுப்​பினர்​களாகும் வாய்ப்பு பெறுவது சமூக நீதி வரலாற்றின் முக்கியமான மைல் கல். நீடித்த உள்ளார்ந்த வளர்ச்சிக்கு (Inclusive Development) சமூக நீதித் தத்து​வத்​துடனான மக்களாட்சிக் கொள்கை வலிமையான பாதை அமைக்கும் என்கிற நம்பிக்கை வெளிப்​படு​கிறது.

கரிசனம்: கிராமப் பஞ்சா​யத்து அமைப்புகள் இந்திய ஜனநாயகத்தில் கூட்டாட்சி அமைப்பின் மூன்றாவது அடுக்கு (Third Strata of federal structure) என்று அரசமைப்புச் சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். கிராமப்புற மக்களின் உள்ளூர்த் தேவைகளை நிறைவேற்ற அவர்களுள் ஒருவரை மக்கள் பிரதி​நி​தி​யாகத் தேர்தல் முறையில் தேர்ந்​தெடுத்து, முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கிட 1993இல் கொண்டு​வரப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 73, 74ஆவது சட்டத்​திருத்​தங்கள் முக்கிய​மானவை. ஐந்து ஆண்டு​களுக்கு ஒரு முறை உள்ளாட்சி அமைப்பு​களுக்குக் கட்டாயம் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற நிர்ப்​பந்​தத்​துடன் ஜனநாயக வேர்களை வலிமை​யாக்க இச்சட்டத் திருத்தம் நீர் வார்த்தது.

அதன் வாயிலாக அதிகார அமைப்பு​களில் புறக்​கணிக்​கப்​படு​பவர்களாக இருந்த பெண்கள், பட்டியல் சாதியினர், பழங்குடி​யினர் சமூகத்​துக்கு அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புடன் இடஒதுக்கீடு வழங்கப்​பட்டது. நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு​களில் பல்லா​யிரக்​கணக்கான பெண்கள், பட்டியல் சாதி, பழங்குடி​யினத்தவர் கிராம வார்டு உறுப்​பினர் பதவியில் தொடங்கி பேரூராட்சி, நகராட்சித் தலைவர், மாநகராட்சி மேயர் பதவி வரை பொறுப்​பேற்றதன் விளைவாக, ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்பட்டு இருக்​கிறது.

ஆனால், இந்த அதிகாரப் பரவல் அமைதியாக, எளிதில் நிகழ்ந்து​விட​வில்லை; பலர் கொல்லப்​பட்​டனர். தொடர்ந்து அச்சுறுத்​தல்​களையும் அவமானங்​களையும் தாங்கி அதிகாரத்தைக் கையாள முடியாமலும் நாற்காலியில் அமரும் உரிமையைப் பெற முடியாமலும் பலர் தவிக்​கின்​றனர்.

இதுபோன்று சமூகம் சார்ந்து பல்வேறு சோதனைகளை நேரடியாக எதிர்​கொள்ள இயலாத மாற்றுத்​திற​னாளி​களைத் தேர்தல் காட்டாற்றில் இறக்கி​வி​டாமல், அவர்களின் நிலை உணர்ந்து, நியமன உறுப்​பினர்​களாகப் பங்கேற்க வைப்பது ஜனநாயகத்தின் உன்னதமான மாற்றுச் செயல்​வடிவம். இன்னொன்று, சமூக நீதியைத் தீர்மானிப்​பதில் சாதி அடையாள அரசியல் பெரும் பங்கு வகிக்​கிறது.

அந்த அடையாளங்​களுக்குள் மாற்றுத்​திற​னாளிகள் சிக்காமல் இருக்க சுய கட்டுப்​பாட்டுடன் இயங்கும் வழிகளைக் கண்டறிவது தலையாய கடமை. இந்தச் சட்டம் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. நாடாளு​மன்றம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு அமைப்புகள் இந்தச் சட்ட முன்வரைவை முன்னு​தா​ரண​மாகக் கொள்ளக்​கூடும்.

முன்னுதாரண மாநிலம்: தமிழ்நாடு இது போன்ற பல்வேறு வகை விளிம்​புநிலை மக்களுக்கான சமூகச் சீர்திருத்த, முன்னேற்றக் கொள்கைகளுக்கு நாட்டுக்கே முன்னோடி​யாகத் திகழ்​கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, 1969-74 ஆட்சிக் காலத்தில் சமூகத்தால் புறக்​கணிக்​கப்பட்ட பிச்சைக்​காரர்​களுக்கு மறுவாழ்வு மையங்கள், கைவிடப்பட்ட கைம்பெண்​களுக்கு மறுமணச் சட்டம், 2006-11 ஆட்சிக் காலத்தில் மாற்றுத்​திற​னாளிகள், திருநங்​கைகள் - புதிரை வண்ணார் சமூகங்​களுக்கு நல வாரியங்கள் என மாறிவரும் சமூகச் சூழல்​களுக்கு ஏற்றவாறு சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்​களைச் சாத்தி​யப்​படுத்​தியது இதற்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து இன்றைய முதல்வர் மு.க.ஸ்​டாலின் தலைமையிலான அரசானது, முற்போக்குச் சமூகக் கொள்கை மூலம் சாதி, மதம் உள்ளிட்ட சமூக அடையாளங்​களைத் தாண்டித் தனிநபர், குடும்பம், குடியிருப்பு, சமுதாயம் என அனைத்துத் தளங்களி​லும், ஒடுக்​கப்பட்ட மாற்றுத்​திறனாளி சமூகத்தை ஜனநாயகத்தின் மைய நீரோட்​டத்தில் இணைத்​திருக்​கிறது; இதன் மூலம் சமூக உள்ளடக்​குதல் (Social Inclusion) தத்து​வத்​துக்குப் புது ரத்தம் பாய்ச்சி இருக்​கிறது.

மாற்றுத்​திற​னாளி​களின் வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். பிறப்​பாலும், வளரும்போது நிகழும் சில விபத்து​களாலும் ஏற்படும் குறைபாடு​களால் வாழ்நாள் முழுதும் பிறரைச் சார்ந்து வாழும் வாழ்க்கையின் துயரம் ஒரு பக்கம்; குடும்ப உறுப்​பினர்​களின் மனநலப் பாதிப்புகள் இன்னொரு பக்கம் என நிறைய வேதனைகள் உள்ளன.

கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக அரசு, குடிமைச் சமூக அமைப்பு​களின் செயல்​பாடு​களால் இளம்பிள்​ளை​வாதம், அம்மை, தொற்றுநோய் குறித்த மகப்பேறு மருத்துவ விழிப்பு​ணர்வின் மூலம் மாற்றுத்​திற​னாளிகள் குறித்த பார்வை அறிவியல்​பூர்வமாக மாறத் தொடங்​கியது.

அதனால், மாற்றுத்​திற​னாளி​களுள் கல்வி கற்கும் சதவீதம் உயர்ந்தது. அவர்களது கற்றல் திறன் மேம்பாடு, தொழிற்​கல்​வியின் முக்கி​யத்து​வத்தை உணர்ந்து கல்வி​யியல் தொழில்​நுட்​பத்தின் மூலம் சுயசார்புத் தன்மையை அதிகரிக்க அரசுகளும் தனிக் கவனம் செலுத்தின. அதன் தொடர்ச்சியாக, 1998இல் 4% இடஒதுக்கீடு வழங்கிக் கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை உறுதி​செய்து பல்வேறு நலத்திட்​டங்கள் முன்னெடுக்​கப்​பட்டன.

மாற்றம் நிகழும்: கடந்த 2011ஆம் ஆண்டின் மக்கள்​தொகைக் கணக்கெடுப்​பின்படி ஏறக்குறைய 13.5 லட்சம் மாற்றுத்​திற​னாளிகள் இருந்​தனர். இந்த எண்ணிக்கை இப்போது அதிகரித்​திருக்​கும். இதுபோன்ற சமூகப் பிரச்சினைகளை உணர்ந்து, அவர்களின் வாழ்வா​தாரம் காக்க மூன்று சக்கர வண்டிகளும், சக்கர நாற்காலிகளும் வழங்கிப் பொது நீரோட்​டத்தில் இணைக்க அரசுடன் தனியார் தொண்டு நிறுவனங்​களும் சேர்ந்து அக்கறை​யுடன் செயல்​படு​கின்றன.

அலுவல​கங்​களில் மாற்றுத்​திற​னாளிகள் எளிதில் வந்து செல்லச் சாய்வுத் தளங்கள், அவர்களின் பயன்பாட்டுக்கு உகந்த கழிப்​பறைகள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்​றமும் அவர்களது உரிமை​களில் அக்கறை செலுத்து​கிறது. இருப்பினும் ரயில், பேருந்து போக்கு​வரத்துப் பயணம் அவர்களுக்குப் பெரும் சிரமமானதாவே இருக்​கிறது. பொதுத் தளங்
களில் மாற்றுத்​திற​னாளிகள் தங்களுக்கான சமஉரிமையைக் கேட்கும்​போது, அவர்களை உதாசீனப்​படுத்தும் உளவியல் சிக்கல் பொதுச் சமூகத்​திடம் அடிக்கடி வெளிப்​படு​கிறது.

இந்த முரண்பட்ட அணுகு​முறையே அவர்களின் போராட்டக் குணத்தைச் சீண்டிப் பார்ப்​ப​தாகவும் அமைந்து​விடு​கிறது. இனி, மாற்றுத்​திற​னாளி​களிடம் பொதுச் சமூகம் தனது உரையாடலை நியமன உறுப்​பினர்கள் மூலம் தொடர வாய்ப்பு இருக்​கிறது. இனியேனும் அவர்களைப் பொதுச் சமூகம் சரியாகப் புரிந்து​கொள்​ளும்; சட்டங்கள் அதற்குத் துணை நிற்கும் என்கிற நம்பிக்கை பிறக்​கிறது.

- தொகுப்பு: vprambdu75@gmail.com

SCROLL FOR NEXT