“ஓர் உண்மையைத் தகவலாகக் கொடுப்பதைவிடவும் அதை ஒரு கதைக்குள் வைத்துத் தந்தால், சுமார் 22 மடங்கு காலம் அதிகமாக அவரின் நினைவில் தங்கும்” என்கிறார் அமெரிக்க உளவியலாளர் ஜெரோம் புருனர். வீட்டுக்குள் குழந்தைகளாக இருப்பவர்கள், பள்ளிக்குள் நுழைந்ததும் மாணவர்களாகிவிட முடியுமா? இரண்டுக்கும் என்ன வேறுபாடு? குழந்தைகளின் குறும்புகளை ரசிக்கிறோம்; குழந்தைமையை வியக்கிறோம்; அறியாமை களைய உதவுகிறோம்.
ஆனால், பள்ளியில் மாணவரானதும் குறும்புகள் தண்டனைக்கு உரியதாகிவிடுகின்றன. குழந்தைமை, ஒழுங்கின்மையாகப் பார்க்கப்படுகிறது. அறியாமைக்கு முட்டாள்தனம் எனப் பெயர் சூட்டப்படுகிறது. குழந்தை – மாணவர் என்னும் சொற்கள் எல்லாமே பெரியவர்களான நமக்குத்தான். குழந்தைகளுக்குத் தாங்கள் குழந்தைகள் என்பதுகூடத் தெரியாது. அவர்களால் பள்ளிச் சீருடை அணிந்த உடனே குழந்தையிலிருந்து மாணவராகக் கூடு விட்டுக் கூடு பாய முடியாது.
குழந்தைகளின் கற்றல் என்பது ஒன்றைத் தெரிந்துகொள்வதில் இருந்து அல்ல... ஒன்றைப் புரிந்துகொள்வதில் இருந்துதான் தொடங்குகிறது. கதை கேட்கும் ஒரு குழந்தை, அக்கதையின் நிகழ்வுகளைத் தம் மனத்தில் காட்சிகளாக விரித்துக்கொள்கிறது. காட்சிகளாகத் தம்முள் விரித்துக்கொள்வது என்பது கதைசொல்லியின் சொற்களைப் புரிந்துகொள்வதில் இருந்து தொடங்குகிறது. எங்கு தம்மால் காட்சிகளாக்க முடியவில்லையோ அங்கு, குழந்தைகள் சந்தேகங்கள் கேட்கத் தொடங்குவார்கள். அந்த இடத்தைத் தெளிவாக்கிக்கொண்டே கதையை நகர்த்த அனுமதிப்பார்கள். இது கற்றலின் மிக முக்கிய அம்சம்.
எதுவொன்றையும் மனப்பாடமாக மட்டுமே அல்லாமல் தாம் பார்த்த / கேட்டவற்றின் துணையோடு அதைப் புரிந்துகொள்ளும்பட்சத்தில், அதன் தொடர்ச்சியாகக் கூறப்படும் கதையை அல்லது நடத்தப்படும் பாடத்தை எதிர்கொள்ள எவ்விதத் தயக்கமோ அச்சமோ இன்றிக் குழந்தைகள் காத்திருப்பார்கள். எதுவொன்றும் குழந்தைகளின் நினைவில் தங்குவதற்குக் கதைகளே உதவும். இப்படிச் சொல்வதால் தொடக்க நிலைக் குழந்தைகளுக்கான விஷயம் என்று மற்றவர்கள் ஒதுங்கிச் சென்றுவிட வேண்டாம்.
ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற கதைகளே அவர்களை இயக்கும்; வழிநடத்தும். தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்குக் காடும் வானமும் என்றால், நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்குக் கீழடியும் இமயமலையும் எனக் கருப்பொருள்கள் மாறும். உயர்நிலை மாணவர்களுக்கு விண்வெளி, செயற்கைக்கோள், வேற்றுக்கிரகவாசிகள் என அறிவியல் தகவல்களோடு வியக்க வைக்கும் கருப்பொருள்களைத் தாங்கும் கதைகள் வேண்டும்.
கதைப் புத்தகங்கள் அவர்களைச் சென்று சேர வேண்டும் என்பதைப் போலவே, ஒரு கதையை எப்படி அணுகுவது என்பதையும் நாம் பழக்கத்தான் வேண்டும். இல்லையெனில், தேனின் சுவையைத் தாளில் படித்த உணர்வே இருக்கும். நேரடியாக ஒரு கதைசொல்லி, புதிய புதிய கதைகள் வழியே நிலங்களையும் விலங்குகளையும் பறவைகளையும் மனித அன்புப் பரிமாற்றத்தையும் குழந்தைகளுக்கு அள்ளித்தந்தால் நிச்சயம் அவை அவர்களின் ஆழ்மனதில் பதியும்.
“கரடுமுரடான கல்விப் பாட வேளைகளை இதமான உணர்வுகளால் எளிமையாக்கக் கோமாளிகளால்தான் முடியும். எனவே, பள்ளிக்கு ஒரு கோமாளி தேவை” என்பார் குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலுசரவணன். அது உடனடிச் சாத்தியமா என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு பள்ளிக்கு ஒரு கதைசொல்லி தேவை. அது ஆசிரியர்களில் ஒருவராகவும் இருக்கலாம்.
கதையின் வழியாக நெகிழ்வான, கலகலப்பான உரையாடல் குழந்தைகளிடம் நடத்தப்பட வேண்டும். தம் ஆழ்மனதில் அவர்களை அறியாமலே புதைந்திருக்கும் ஏக்கங்களைக் கதைகளாகப் பகிர்வார்கள். அதற்கு ஓர் உதாரணம்: ஒரு பள்ளியில் நான் நடத்திய கதை முகாமில் ‘பாட்டி வடை சுட்ட கதை’யில் காகமாக இருந்த ஒரு சிறுமி கதை சொன்னார். அதில் அவரே ஒரு மாற்றமும் செய்தார். அதாவது, நரி ஏமாற்றுவது தெரிந்தே வடையைக் காகம் விட்டதாகச் சொன்னார்.
ஏன் எனக் கேட்டபோது, “இந்த உலகம் தோன்றியதில் இருந்து கணக்குப் பார்த்தால் ஒரு காகத்திடம், ‘நீ அழகாக இருக்கிறாய்... உன் குரல் இனிமையாக இருக்கிறது’ என்று முதன்முதலில் சொன்னது அந்த நரிதான். பொய்யாக இருந்தாலும் பரவாயில்லை” என்று அந்தச் சிறுமி சொன்னார். அச்சிறுமி கறுப்பு நிறம். அவரிடம் பெற்றோர் தவிர வேறு யாருமே ‘அழகாக இருக்கிறாய்’ என்று அவரிடம் சொல்லியிருக்க மாட்டார்களோ என்ற கேள்வியைத் தந்தது அவரின் பதில்.
இதற்கான வாய்ப்பை எங்கிருந்தோ வந்த ஒரு கதைசொல்லி ஏற்படுத்தித் தர வேண்டியுள்ளது. மாறாக, அப்பள்ளியிலேயே ஒரு கதைசொல்லி இருப்பின், அப்பள்ளிக் குழந்தைகளின் ஆழ்மனதில் இருப்பதை வெளியே கொண்டுவந்திருப்பார். அதற்கேற்றவாறு பள்ளியின் சூழல் மாறியிருக்கும். இது குழந்தைகள் மனதின் இறுக்கங்களைக் களையவும் உதவும். சிறுசிறு தோல்விகளில் வெம்பி, தவறான முடிவுகளை நோக்கிச் சென்றுவிடாமலும் காக்கக்கூடும். அலைபேசி வழியே காட்சிவலைக்குள் சிக்கியிருக்கும் குழந்தைகளைப் பள்ளியில் உலவும் கதைசொல்லி மீட்டெடுக்க முடியும். வாரம் இரண்டு கதை வகுப்புகள் என்றிருந்தால், அதில் கதை சொல்லவும் எழுதவும் பழக முடியும்.
சிரிப்பும் திகிலும் எனப் பல்வேறு உணர்வோடு கழியும் அந்த வகுப்புகள், அவர்களுக்குள் உறங்கிக் கிடக்கும் படைப்பூக்கத்தைத் தட்டி எழுப்பும். படைப்பூக்கமே பின்னாளில் அவர்கள் தனித்துவமாகத் தம்மை வெளிப்படுத்த உதவும். பள்ளியில் கரும்பலகை, பாடங்கள் ஆகியவற்றோடு கதைசொல்லி என்னும் நண்பரும் காத்திருக்கிறார் என்றால், பள்ளிக்குள் மகிழ்ச்சியோடு குழந்தைகள் நுழைவர்.
- தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com