20ஆம் நூற்றாண்டில் வங்காள மறுமலர்ச்சி இயக்கத்தின் நீட்சியாக விளங்கிய கவிகுரு ரவீந்திரநாத் தாகூர், கவிஞர், பாடலாசிரியர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இசை வல்லுநர், நாடக ஆசிரியர், ஓவியர், கல்வியாளர், தேசபக்தர், சர்வதேசவாதி, மனிதநேயர், தீர்க்கதரிசி, வழிகாட்டி, தத்துவஞானி என்கிற வகைகளில், தனது பன்முகத் தன்மையின் மூலம், அப்போது விடுதலைக்குப் போராடிவந்த இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலக நாடுகள் முழுவதற்குமே பல்வேறு வழிகளில் தன் கருத்துகளை வழங்கிக்கொண்டே இருந்தார்.
தேசத்தின் பாதை: இந்தியா எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைத் தாகூர் தெளிவுபடச் சுட்டிக்காட்டினார். ‘இந்தியா தன் எதிர்காலத்தைத் தானே நிர்ணயிக்க வேண்டும்; நவீன காலத்தை மேற்கொள்வதென்ற பெயரால், அது தன் கடந்த காலத்தை ஒருபோதும் ஒளித்து மறைத்துவிடக் கூடாது; கீழைத்தேயமும் மேற்குலகும் வழங்கும் மிகச்சிறந்த அம்சங்களை எடுத்துக் கொண்டு, இணக்கமிக்க புதியதொரு கலாச்சார வடிவத்தினை அது உருவாக்க வேண்டும்; அதற்குக் கடந்த கால வரலாற்றையும், நிகழ்கால வரலாற்றையும் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியம்’ என்பதையும் அவர் முன்வைத்தார்.
தொலைநோக்கு மிக்க சமூக, அரசியல் சிந்தனையாளராகவும் தாகூர் திகழ்ந்தார். இந்தியச் சமூகத்தில் நிலவிவரும் சாதியப் படிநிலை முறை, குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் மனிதர்களை அடைத்துவைக்கும் நிலை ஆகியவையே இந்தியாவின் மிகப் பலவீனமான பகுதிகளாக விளங்குகின்றன என்று அவர் கருதினார். நூறாண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய ‘கீதாஞ்சலி’யிலேயே, ‘நாம் புறக்கடையில் அடைத்து வைத்திருப்போர்தான் நம்மைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டிருப்பார்கள்’ என்று அவர் உறுதிபடக் கூறினார்.
நவீன உலகில், இந்தியா முன்னேற வேண்டுமெனில், நிராதரவற்ற மக்களை அவமானப்படுத்துவதும், ஒதுக்கிவைப்பதுமான செயல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் எடுத்துக் கூறினார். மேலும், சமூகத்தின் வளர்ச்சி என்பது கீழிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
இவை அனைத்துக்கும் அடித்தளமாக, அவர் தன் வாழ்நாள் முழுவதும் முன்னெடுத்து வந்த மூன்று அடிப்படைக் குறிக்கோள்களாக, கிராமங்களின் சுயாட்சி, அனைவருக்கும் கல்வி, பெண்களின் அதிகாரம் ஆகியவை அமைந்திருந்தன. தன்னளவில் ஒரு செயல்பாட்டாளராக, இந்த மூன்று குறிக்கோள்களை முன்னெடுக்கும் செயல்களில் அவர் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
கிராம சுயாட்சியை முன்னெடுக்கும் வகையில் அவர் உருவாக்கிய நிகேதன் என்ற கிராமப்புற மேம்பாட்டு இயக்கம், பின்தங்கிய கிராமங்களிலும்கூட, தொடர்ச்சியான, முறையான நடவடிக்கைகளின் மூலம் எவ்வாறு தன்னிறைவை நிலைநிறுத்த முடியும் என்பதை நாட்டின் இதர பகுதி மக்களுக்கு எடுத்துக்காட்டுவதாக இருந்தது.
வளர்ச்சியடைந்த மேற்குலகுடன் சரிசமமாக நாம் உறவாடுவதற்கு அடிப்படை, நமது நாட்டின் வளர்ச்சிதான் என்ற வகையில், பெரும்பான்மையாக உள்ள கிராமங்களின் முழுமையான வளர்ச்சியும் அதனோடு கூடிய மனித வளமுமே இந்தச் சமநிலைக்கு அடித்தளமாக அமையும் என்று அவர் நம்பினார்.
1922 ஜூலையில் ‘மண்வளக் கொள்ளை’ என்ற தலைப்பில் நிகேதனின் இயக்குநரான எல்மிர்ஸ்ட் ஆற்றிய சொற்பொழிவின் நூல் வடிவத்துக்கு அளித்த முன்னுரையில் தாகூர் இவ்வாறு கூறியிருந்தார்: ‘வறண்டு போயிருக்கும் கிராமப்புற வாழ்க்கையில் மகிழ்ச்சி என்னும் ஓடையை ஓடவிடுவதுதான் எமது நோக்கம். இதற்கு நமது அறிஞர்களும், கவிஞர்களும், இசைக் கலைஞர்களும், கவின் கலைஞர்களும், அறிவியல் நிபுணர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.’
இன்றும் பொருத்தமான குறிக்கோள்கள்: அதைப் போன்றே, அனைவருக்குமான கல்வி என்ற குறிக்கோளை அவர் நாடு முழுவதும் எடுத்துச் சென்றதோடு, தான் முன்னெடுத்த சாந்திநிகேதன் என்ற கல்விப் புலம் எவ்வாறு முழுமையான மனிதனை உருவாக்கும் கல்வியை வழங்குகிறது என்பதை, பெண்களை முன்னிறுத்திய கல்வி எத்தகைய முன்னேற்றத்தைச் சமூகத்தில் உருவாக்கும் என்பதை, நடைமுறையில் நிரூபித்தும் காட்டினார்.
ரவீந்திரரின் கல்விப்புல முயற்சிகள் ஒரு புதிய மனிதனைப் படைப்பதில் வெற்றி பெற்றன என்பதை சத்யஜித் ரே, அமர்த்ய சென், மகாஸ்வேதா தேவி போன்ற பலரும் நமக்கு நிரூபிக்கின்றனர். தான் வாழ்ந்த சமூகத்தில் பெண்களுக்கான அதிகாரம் எத்தகையதாக இருந்தது என்பதை நன்கு அறிந்திருந்த ரவீந்திரர், சிறுகதை, நாவல், நாடகம், நாட்டியம் போன்ற பல்வேறு வடிவங்களின் மூலம் சமூகத்தின் ஒரு பாதியான பிரிவினரின் மேம்பாடு எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதைத் தொடர்ந்து வலுவாகச் சுட்டிக்காட்டிக்கொண்டே வந்தார்.
இந்தக் குறிக்கோள்களை வென்றடைவதன் மூலமே வளமிக்க, நல்லிணக்கம் மிக்க, மேலாதிக்க உணர்வற்ற ஒரு சமூகத்தை முழுமையான வகையில் உருவாக்க முடியும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. அவர் மறைந்து 83 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, இந்தக் குறிக்கோள்கள் இன்றும் பொருத்த மானவையாகவே நீடிக்கின்றன.
கடந்த 75 ஆண்டுகளில் பல்வேறு பெயர்களில் மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தபோதிலும், ரவீந்திரர் கனவு கண்ட முழுமைபெற்ற ஒரு கிராம சுயாட்சியை நிறுவ இன்றுவரை இயலவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உரிய அதிகாரங்கள் மறுக்கப்படுகின்றன.
சாதி அடிப்படையிலான புறக்கணிப்புகளையும் அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறது. மறுபுறத்தில், கல்வி இன்று வணிகரீதியான ஓர் அம்சமாக அனைத்து வகையிலும், அனைத்து மட்டங்களிலும் கையாளப்படுகிறது. பெண்களின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
இன்றைய நவீன யுகம் பெண்களை, அவர்களது கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது. எனினும், சமூகத்தில் அவர்களின் நிலையில் எவ்வித மாற்றமும் உருவாகிவிடவில்லை; பாதுகாப்பற்ற ஒரு நிலையில்தான் இச்சமூகம் இன்னமும் அவர்களை வைத்திருக்கிறது என்பதை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்கள் நிரூபிக்கின்றன.
சமத்துவத்தை வலியுறுத்தியவர்: முதலாம், இரண்டாம் உலகப் பெரும் போர்களின் பின்னணியில், மேற்குலக நாடுகள், உலகின் பெரும்பகுதியில் உள்ள மக்களை அடிமைப்படுத்தி, இயற்கை வளங்கள் அனைத்தையும் முற்றாக ஒழித்துக் கட்டுவதில் முனைப்புக் காட்டுகின்றன என்பதை எவ்விதத் தயக்கமுமின்றி தாகூர் சுட்டிக்காட்டியே வந்தார்.
அன்றைய அமெரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்குத் தனிப்பட்ட முறையில் பயணம் செய்து, அங்குள்ள மக்களின் கடுமையான எதிர்ப்புக் குரல்களுக்கு இடையிலும், உலக மக்கள் அனைவரின் சமத்துவத்தை, கூட்டுறவை வலியுறுத்திப் பேசிய ஒரே இந்தியர் அவர்தான். இதன் காரணமாக, தேசவெறி என்ற கருத்தாக்கத்தில் கட்டுண்டு கிடந்த இந்தப் பகுதிகளில் இருந்த அறிவுஜீவிகளின் ஆதரவையும் அவர் இழக்க நேர்ந்தது.
இன்றைய நவீன அறிவியல், இந்த ஆழி சூழ் உலகை ஒரு சின்னஞ் சிறு கிராமமாக உருமாற்றியுள்ள நிலையில், உலகில் சமநிலை நிலவ வேண்டும் என்ற குரலை அனைத்துலக மனிதனை நோக்கி முதன்முதலில் எழுப்பியவரான தாகூரின் சிந்தனைகள் இன்றைக்கு மேலும் பொருத்தமானவையாக நீடிக்கின்றன. அவரது பிறந்தநாள் தருணத்தில் அவற்றை மேலும் பரவலாக மக்களிடையே எடுத்துச் செல்வோம் எனச் சூளுரைப்போமாக!
குறிப்பு: ஆங்கில நாள்காட்டி முறைப்படி தாகூரின் பிறந்தநாள் மே 7 அன்றும், வங்காள நாள்காட்டி முறைப்படி மே 9 (வைசாக் மாதம் 25ஆம் நாள்) அன்றும் அனுசரிக்கப்படுகிறது.
ரவீந்திரநாத் தாகூர்: 165வது பிறந்தநாள் தொடக்கம்
- தொடர்புக்கு: vbganesan@gmail.com