சிறப்புக் கட்டுரைகள்

குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 - விவசாயிகள் பயனடைவார்களா?

அ.நாராயணமூர்த்தி

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி, வரும் செப்டம்பர் 1, 2025 முதல் ஒரு குவிண்டால் நெல் ரூ.2,500க்குக் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக உணவு - குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஏப்ரல் 8, 2025 அன்று சட்டசபையில் கூறியுள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து (2020-21) மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை (MSP-Minimum Support Price) ரூ.1,888. இது வரும் ஜூன் மாதத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான கரீப் பருவப் பயிர்களுக்கு அறிவிக்கப்பட இருக்கின்ற எம்எஸ்பி விலைப் பட்டியலில் ரூ.2,500ஐத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நேரத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட விலையைச் சற்றும் உயர்த்தாமல், நடப்பு ஆண்டு முதல் கொடுக்கப்படும் என்கிற அறிவிப்பால் நெல் விவசாயிகளுக்கு ஏதாவது பயன் ஏற்படுமா?

நெல்லின் முக்கி​யத்துவம்: தமிழ்​நாட்டில் மட்டுமல்​லாமல், இந்தியாவில் அதிகமான பரப்பளவில் பயிரிடப்​படு​வ​தால், விவசாயக் குடும்​பங்​களின் வருமானத்தை நிர்ண​யிப்​பதில் நெல் முக்கியப் பங்கு வகிக்​கிறது. 1960-களின் நடுப்​பகு​தி​யில், பசுமைப் புரட்சி அறிமுகப்​படுத்​தப்பட்ட காலத்​திலிருந்து, நெல் உற்பத்தியை அதிகப்​படுத்தி உணவுப் பற்றாக்​குறையை நீக்கு​வதற்காக, நெல்லுக்கு 1965-66லிருந்து எம்எஸ்பி கொடுக்​கப்​பட்டு, இன்றுவரை மத்திய அரசால் இப்பயிர் கொள்முதல் செய்யப்​பட்டு வருகிறது. 1965-66இல் ரூ.39.81ஆக இருந்த ஒரு குவிண்டால் நெல்லுக்கான எம்எஸ்பி தொடர்ந்து உயர்த்​தப்​பட்டு, 2024-25இல் ரூ.2,320ஆக வழங்கப்​படு​கிறது.

எம்எஸ்பி விலையுடன் நெல் அதிகளவில் கொள்முதல் செய்யப்​படு​வ​தால், இந்தியாவின் மொத்த நெல் சாகுபடிப் பரப்பளவு 1970-71இல் 375.87 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 2024-25இல் 477.30 லட்சம் ஹெக்டேராக (அதாவது 27%) அதிகரித்​துள்ளது. ஆனால், தமிழ்​நாட்டில் நெல் சாகுபடிப் பரப்பளவு, குறிப்பாக 1980-81ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து குறைந்து​வரு​கிறது. நெல் சாகுபடி செய்யும் முக்கிய மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்​களில் சாகுபடிப் பரப்பளவு குறைய​வில்லை.

தமிழ்​நாட்டின் நிலவரம்: நெல் சாகுபடியில் கிடைக்கும் குறைந்த வருமானம் அதன் சாகுபடிப் பரப்பளவு குறைவதற்கு மிக முக்கியக் காரணமாக இருக்க முடியும் எனத் தரவுகள் கூறுகின்றன. வேளாண் செலவுகள் - விலை ஆணையம் (Commission for Agricultural Costs and Prices - CACP) 1974-75 முதல் 2021-22 ஆண்டு வரை வெளியிட்​டுள்ள தரவுகளின்படி, பயிர் சாகுபடிக்குச் செய்யப்​படும் மொத்தச் செலவின் (C2 cost) அடிப்​படையில் பார்த்​தால், தமிழ்​நாட்டின் விவசா​யிகள் நெல் சாகுபடி மூலமாக 15 ஆண்டுகள் மட்டுமே லாபம் ஈட்டி​யுள்​ளார்கள். குறிப்பாக, 2000-01ஆம் ஆண்டுக்குப் பிறகு, வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே லாபம் ஈட்டி​யுள்​ளார்கள்.

நெல் சாகுபடி செய்யும் பஞ்சாப் விவசா​யிகள் பெரும்​பாலான ஆண்டுகள் பெரிய அளவில் லாபம் ஈட்டி​யுள்​ளார்கள். 1974-75
முதல் 2021-22ஆம் ஆண்டு வரையில் தரவுகள் கிடைக்​கப்​பெற்ற 42 ஆண்டு​களில், ஒரே ஓர் ஆண்டைத் தவிர, மற்ற 41 ஆண்டு​களில் பஞ்சாப் விவசா​யிகள் லாபம் ஈட்டி​யுள்​ளார்கள். அதிகபட்சமாக 2020-21இல், ஒரு ஹெக்டேர் நெல் சாகுபடியில் ரூ.42,686 லாபம் ஈட்டி​யுள்​ளார்கள். இதுவரை, தமிழ்​நாட்டு விவசா​யிகளுக்கு நெல் சாகுபடி மூலம் அதிகபட்சமாக 2012-13இல் ரூ.7,109 மட்டுமே லாபமாகக் கிடைத்​துள்ளது.

தமிழ்​நாட்டின் பின்னடைவுக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, நெல் சாகுபடி செய்வதற்கு ஆகும் செலவு மற்ற மாநிலங்​களோடு ஒப்பிடு​கையில் மிகவும் அதிகம். 2021-22ஆம் ஆண்டுக்கு சிஏசிபி வெளியிட்​டுள்ள தரவுகளின்படி, ஒரு ஹெக்டேர் நெல் சாகுபடி செய்வதற்குத் தமிழ்​நாட்டின் விவசா​யிகள் ரூ.88,380 செலவு செய்துள்ளார்கள். ஆனால், அதிகளவில் நெல் சாகுபடி செய்யும் ஒடிஷா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்​களின் விவசா​யிகள் ரூ.71,291இலிருந்து ரூ.74,657வரை மட்டுமே செலவு செய்துள்ளார்கள். தமிழ்​நாட்டின் விவசா​யிகள் ஏறக்குறைய ரூ.15,000 அதிகமாகச் செலவு செய்துள்ளார்கள்.

மற்றொரு முக்கியக் காரணம், அரசு நிறுவனங்​களால் குறைவாகச் செய்யப்​படும் நெல் கொள்முதல், அரசு நிறுவனங்​களால் நெல் கொள்முதல் செய்யப்​பட்டால் மட்டுமே, விவசா​யிகளால் மத்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் உயர்த்தி வழங்கப்​படும் எம்எஸ்பி விலையைப் பெற முடியும். இல்லை​யெனில், குறைவான விலைக்கு நெல்லைத் தரகர்​களிடம் விற்க வேண்டிய சூழ்நிலைக்கு விவசா​யிகள் தள்ளப்​பட்டு​விடு​வார்கள்.

தமிழ்​நாட்டில் செய்யப்​படும் நெல் கொள்முதலின் அளவு மற்ற மாநிலங்​களோடு ஒப்பிடும்​போது, பல ஆண்டுகளாக மிகவும் குறைவாக உள்ளது. உதாரணமாக, 2023-24இல் இந்தியாவில் மொத்தமாக 524.48 லட்சம் டன் நெல் எம்எஸ்பி விலையில் கொள்முதல் செய்யப்​பட்​டுள்ளது. இவற்றில், தமிழ்​நாட்டின் பங்கு வெறும் 4.52% மட்டுமே. பஞ்சாப் மாநிலத்தின் பங்கு மட்டும் 23.62% என்பது குறிப்​பிடத்​தக்கது.

நெல் கொள்முதல் குறைவாகச் செய்யப்​படு​வ​தால், எம்எஸ்பி விலையால் பயன்பெற்ற விவசா​யிகளின் எண்ணிக்கையும் தமிழ்​நாட்டில் மிகவும் குறைவு. 2023-24இல் இந்தியாவில் மொத்தமாக 106.58 லட்சம் நெல் விவசா​யிகள் எம்எஸ்பி விலையில் தங்களுடைய நெல்லை விற்பனை செய்துள்ளார்கள். இவற்றில் தமிழ்​நாட்டில் பயன்பெற்ற விவசா​யிகளின் எண்ணிக்கை 3.94 லட்சம் மட்டுமே. தமிழ்​நாட்டின் பெரும்​பாலான நெல் விவசா​யிகள் தனியாரிட​மும், தரகர்​களிட​மும், எம்எஸ்பி விலைக்குக் கீழே குறைவான விலைக்கு நெல்லை விற்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்​படு​கிறார்கள்.

அறிவித்ததை உறுதி​செய்ய வேண்டும்: இந்தியப் புள்ளி​யியல் அலுவலகம் (National Statistical Office) 2021இல் வெளியிட்ட வேளாண் குடும்​பங்கள் பற்றிய மதிப்பீட்டு (Situation Assessment Survey of Farmers Households) அறிக்கை​யின்படி, பயிர் சாகுபடி மூலம் விவசா​யிகளுக்குக் கிடைக்கும் மாத வருமானத்​தில், தமிழ்நாடு வெறும் ரூ.2,129 உடன் இந்தி​யளவில் 22ஆம் இடத்தில் உள்ளது. கடந்த 30 ஆண்டு​களில் விவசாயம் தொடர்​புடைய பல வளர்ச்சிக் குறியீடு​களில் தமிழ்​நாட்டின் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது. பயிர்ச் சாகுபடியில் வருமானம் இல்லாத காரணத்​தால், தரிசு நிலப்​பரப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.

நெல் சாகுபடிக்குத் தேவைப்​படும் செலவு வேகமாக அதிகரித்து வருகின்ற காரணத்​தால், அதன் பரப்பளவு குறைவதோடு, உற்பத்​தியும் குறைந்து​வரு​கிறது. இந்தியாவின் மொத்த நெல் உற்பத்​தியில் தமிழ்​நாட்டின் பங்கு 1980-83இல் 8.62%இலிருந்து, 2019-22இல் 5.64%ஆகக் குறைந்து​விட்டது. இது மேலும் தொடர்ந்​தால், பணவீக்கம் அதிகரித்து அரசுக்​கும், நுகர்​வோருக்கும் பல சங்கடங்களை ஏற்படுத்​தக்​கூடும்.

நிலைமை இப்படி இருக்​கும்​போது, நெல் விவசா​யிகளை ஊக்கு​விக்கும் வகையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கப்​படும் என்று ஐந்து ஆண்டு​களுக்கு முன்னால் கொடுக்​கப்பட்ட வாக்குறுதி, 2025ஆம் ஆண்டு இறுதியில் அமலுக்கு வரும் என்கிற அறிவிப்பால் தமிழக விவசா​யிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்​கப்​போவ​தில்லை.

மத்திய அரசு தற்போது (2024-25) நெல் குவிண்டால் ஒன்றுக்கு எம்எஸ்பி விலையான ரூ.2,320 கொடுத்துக் கொள்முதல் செய்து​வரு​கிறது. இது வருகின்ற ஜூன் மாதத்தில் - அதாவது, 2025-26ஆம் ஆண்டு கரீப் பருவப் பயிர்​களுக்கு அறிவிக்​கப்பட உள்ள எம்எஸ்பி விலைப் பட்டியலில் ரூ.2,500ஐத் தாண்டி​விடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ஐந்து ஆண்டு​களுக்கு முன்னால் (2020-21) தேர்தல் அறிக்கையில் கூறிய ரூ.2,500க்​கும், மத்திய அரசு அப்போது வழங்கிய எம்எஸ்பி விலைக்கும் இருந்த வித்தி​யாசம் 32.42%. இதனைக் கணக்கில் கொண்டு, வருமானக் குறைவால் பல சிக்கல்​களைச் சந்தித்து​வரும் தமிழக விவசாயக் குடும்​பங்​களைக் காப்பாற்றும் விதமாக, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,311 (ரூ.2,500+32.42%) தமிழக அரசு வழங்க வேண்டும். இல்​லை​யெனில், நெல் ​விவ​சா​யிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்​காமல்​போவதோடு, நெல் உற்​பத்​தியும் குறையக்​கூடும்​.

- தொடர்புக்கு: narayana64@gmail.com

SCROLL FOR NEXT