சிறப்புக் கட்டுரைகள்

கட்டுமானத் தொழில்நுட்பம் சந்திரயான் போல் மேம்பட வேண்டாமா?

சி.கோதண்டராமன்

தென்னிந்தியக் கோயில்கள், ஐரோப்பிய தேவாலயங்கள், எகிப்திய பிரமிடுகள் போன்றவை குத்துமதிப்பு விதிகளைப் (Rules of Thumb) பின்பற்றிக் கட்டப்பட்டவை; அது அந்தக் காலம். ‘முப்பரிமாண அச்சிட்ட கட்டுமானம்’ (3D Printed Construction) அரங்கேறும் காலம் இது. இரண்டும் இரண்டு துருவ நிகழ்வுகளாக இருப்பினும், இவற்றுக்கு இடையே ஒரு நெருக்கம் உண்டு. அப்போது நடந்தது அதிசயம். தற்போது நிகழ்வது புரட்சி.

முப்பரிமாண அச்சுப்பொறி: அமெரிக்​காவைச் சேர்ந்த ஜோசப் நெக்வட்டால் கணினி-உதவி ஓவியங்கள் உருவாக்கு​வதில் நிபுணர். காகிதத்தில் முப்பரிமாண பிம்பங்களை உருவாக்க முடியும்​பட்​சத்​தில், அதே தொழிநுட்ப உதவியுடன் கட்டிடங்​களையும் உருவாக்க முடியும் என்று அவர் 1990களில் அனுமானித்​தார். கலிபோர்னியா பல்கலைக்​கழகப் பேராசிரியர் பெஹ்ரோக் கோஷ்னேவீஸ் அந்த உணர்வு​களுக்கு உயிர்​கொடுத்​தார்.

2004ஆம் ஆண்டு மட்டக்கோடு வடிவமைப்பு (Contour Crafting) என்கின்ற முறையைப் புகுத்தி, முதன்​முறையாக முப்பரிமாண அச்சிட்ட கட்டிடங்களை - முழுஅளவு வீடுகளை உலகுக்குக் கொடுத்​தார். சீனா 2014இல் பிரம்​மாண்டமான முப்பரிமாண அச்சுப்​பொறியை உருவாக்​கியது.

‘வெளித்​தள்ளும் தொழில்​நுட்​பத்​துடன்’ (Extrusion Technique) செயல்​படும் அக்கரு​வியின் உதவியுடன் ஐந்து மாடிக் கட்டிடங்​களைக் கட்டி​னார்கள். அவர்கள் 10 வீடுகளை 24 மணி நேரத்தில் கட்டி​முடித்​துள்ளனர். துபாய், அமெரிக்கா, டென்மார்க் போன்ற நாடுகள் அச்சு இயந்திரங்களை உருவாக்கி​யுள்ளன. டெக்சாஸ், மெக்ஸிகோ நகரங்​களில் ஏழை மக்களுக்கு இல்லங்கள் கட்டப்​பட்​டிருக்​கின்றன.

நீடித்து உழைக்கும் கட்டு​மானங்கள்: இயற்கையின் அழிவில்தான் ஒவ்வொரு புதிய கட்டிடமும் உருவாகிறது. இழப்பை நம்மால் முழுமையாக ஈடுசெய்ய முடியாது. இயற்கையின் வளங்கள் சிதைந்து​கொண்டே வருகின்றன. ஆகவே ஒரு கட்டு​மானம் என்பதைச் சமுதா​யத்தில் நிகழ்​கின்ற முக்கிய நிகழ்​வாகக் கவனிக்க வேண்டும்.

‘என் மண், என் பொருள், என் கட்டிடம், என் விருப்பம்’ என்கின்ற பாணியில் தன்னிச்​சை​யாகச் செயல்பட இயற்கை யாரையும் அனுமதிப்​ப​தில்லை. இவற்றை நாம் பொருட்​படுத்​தாமல் செய்த நெடிய பயணத்தின் விளைவு​தான், இன்று புவியின் வெப்பம் நம் கட்டுப்​பாட்டை மீறி உயர்கிறது. பசுங்குடில் வாயு வெளியேற்​றத்தில் கட்டு​மானத் துறையின் பங்களிப்பு 38%ஐத் தாண்டு​கிறது.

“எதிர்​வரும் காலத்தில் கட்டிடங்​களைக் குறைந்த​பட்சம் 300 வருடங்கள் உழைக்​குமாறு நாம் கட்ட வேண்டும். நம் கட்டு​மானத் தேவைகளைக் கட்டுக்குள் கொண்டு வர, இது ஒன்றுதான் வாய்ப்பு” என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் குமார் மேத்தா குறிப்​பிடு​கிறார்.

இரட்டைத் தவறு: தற்போது இருவிதமான கட்டுமான முறைகள் நடைமுறையில் உள்ளன; களக் கட்டு​மானம், முன்வார்ப்பு (precast) கட்டு​மானம். முன்வார்ப்புக் கட்டு​மானம் எண்ணற்ற சாதகங்களை உள்ளடக்​கியது. தரமான, உறுதியான, அழகான, மலிவான, துரிதமான, நீடித்து உழைக்கும் கட்டிடங்களை அமைக்க முன்வார்ப்புக் கட்டுமான முறைதான் சீரிய வழி. களக் கட்டு​மானத்தில் தரக் கட்டுப்பாடு என்பது ஓர் உலகளாவிய சவால். ஏனென்​றால், அது தொழிலா​ளர்​களின் வளத்தைச் சார்ந்துள்ளது.

முன்வார்ப்புக் கட்டு​மானத்தில் சீனா உலகின் முன்னோடி. புதிய கட்டு​மானங்​களில் 40-50 சதவீதம் முன்வார்ப்புக் கட்டு​மானங்​கள்​தான். சியோங்கன், ஷென்சென், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்கள் முழுவதும் முன்வார்ப்புக் கட்டு​மானங்​கள்​தான். மற்ற நகரங்​களில் அடுக்​ககங்கள் முன்வார்ப்புக் கட்டுமான முறையில்தான் கட்டப்​பட்​டிருக்​கின்றன. பெய்ஜிங், ஷாங்காய், ஷென்சென் போன்ற மேல்தட்டு நகரங்​களைத் தவிர, மற்ற நகரங்​களில் கட்டப்​பட்​டிருக்​கின்ற வீடுகளின் எண்ணிக்கை அவர்களின் தேவைகளை மிஞ்சி​விட்டது.

ஒவ்வொரு நகரத்​திலும் ஆயிரக்​கணக்கான வீடுகள் மூடிக்​கிடப்​பதால் ‘பேய் நகரங்கள்’ என்று அழைக்​கப்​படும் அளவுக்குப் பல நகரங்கள் கைவிடப்​பட்​டிருக்​கின்றன. முன்வார்ப்புக் கட்டு​மானத்தில் சில வரம்புகள் உண்டு. பொறியியல், அரசியல், சமுதாயரீ​தியாக அவற்றை அணுகிக் களைய முயற்சி செய்யாமல், களக் கட்டு​மானத்தையே நாம் பெரியளவில் பின்பற்றுகிறோம். நம் நாட்டில் 85-90% களக் கட்டு​மானம்​தான். இதனால் தரம், எண்ணிக்கை என இரண்டையும் பூர்த்தி முடியாமல் நாம் பின்னடைந்துள்ளோம்.

முப்பரிமாண அச்சிட்ட கட்டு​மானங்கள்: இந்நூற்​றாண்டின் கண்டு​பிடிப்பு​களில். ‘முப்​பரிமாண அச்சிட்ட கட்டு​மானம்’ ஆகச்சிறந்த ஒன்று. கட்டுமான நேரம் 30-60%, தொழிலாளர் செலவு 50-80%, பொருள்கள் வீணாவது 30-60%, கட்டு​மானச் செலவு 25-30% குறையும். இவை எல்லா​வற்றுக்கும் மேலாக, கரிமத் தடம் (carbon footprint) 70% வரை குறையும். இத்தொழில்​நுட்பம் மனித குலத்​துக்குக் கிடைத்த வரப்பிர​சாதம்.

இக்கட்டுமான முறை இன்றளவில் தொடக்க நிலையில் உள்ளது. சென்னை ஐஐடி-டிவஸ்டா நிறுவனத்​தினரும் இணைந்து ஏறத்தாழ 600 சதுர அடியில் ஒரு கட்டு​மானத்தை 5 நாள்களில் முடித்​துள்ளனர். எல் அண்ட் டி நிறுவன அலுவலகம் ஒன்று 2021ஆம் ஆண்டு கட்டப்​பட்​டிருக்​கிறது. பெங்களூரு-அல்​சூரில் 2023ஆம் ஆண்டு 1,000 சதுரடியில் ஒரு அஞ்சல் நிலையம் கட்டப்​பட்​டுள்ளது.

இந்தத் தொழில்​நுட்​பத்தில் மேலும் பல மேம்பாடுகள் தேவைப்​படு​கின்றன. இருப்​பினும் தற்போதுள்ள நுட்பங்களை உரிய பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். அதனால் நாம் பெறும் அனுபவம் அடுத்த உயர்நிலைக்கு நம்மை எடுத்​துச்​செல்ல வழிவகுக்​கும். இதில் நாம் செய்யும் தாமதம் பெரும் பின்னடைவை ஏற்படுத்​தும். அனைவருக்கும் இல்லம் என்கிற கனவு நிஜமாக நமக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்​துள்ளது.

முன் செல்லும் உபாயம்: சீனர்கள் பொதுவாகத் தங்களின் வளர்ச்சியைப் பறைசாற்றிக்​கொள்​வ​தில்லை. ஒரு தொழில்​நுட்பம் உலகத்​துக்கு வெளிப்​படும்​போது, அவர்கள் எட்டி​யுள்ள வளர்ச்சி இமயத்தைத் தொட்டிருக்​கிறது. பத்து ஆண்டு​களுக்கு முன்பே அவர்கள் 5 மாடிக் கட்டிடங்களை இப்புதிய தொழில்​நுட்​பத்​துடன் மின்னல் வேகத்தில் கட்டி​முடித்​துள்ளனர் என்கிற உண்மையை நாம் மனதில் ஏற்ற வேண்டும்.

இந்தியாவில் 2023-24இல் பிரதமர் வீடு கட்டும் திட்டத்​தின்கீழ் ரூ.25,100 கோடி ஒதுக்​கப்​பட்டது, ஆனால், ஆராய்ச்சிக்குப் பெரிய முக்கி​யத்துவம் கொடுக்​கப்​பட​வில்லை. சந்தி​ரயான் 4-5-6 என்று கனவு காணும் நாம், முப்பரிமாண அச்சிட்ட கட்டு​மானம் பற்றி மௌனமாக இருக்​கிறோம். ஒரு நாட்டின் தொழில்​நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்ப முடியாது. இது எல்லா நாட்டுக்குமே பொருந்தும்.

மிகவும் அவசியமான தொழில்​நுட்பம் உலகில் வளர்ந்து​வரும்​போது, மனிதவளத்தின் முன்னோடியான நாம் மௌனமாக இருப்பது வருத்​தமளிக்​கிறது. தேவையான நிதி ஒதுக்கி பல்வேறு நிலைகளில் ஊக்கமளித்து இத்துறையில் ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்​.

- தொடர்புக்கு: skramane@gmail.com

SCROLL FOR NEXT