சிறப்புக் கட்டுரைகள்

டிரம்ப்பின் வர்த்தகப் போரும் பத்திரச் சந்தையின் சீற்றமும்

ஸ்ரீனிவாஸ் ராகவேந்திரா

கடந்த சில வாரங்களாக உலகப் பொருளாதாரம் பெரும் கொந்தளிப்பைச் சந்தித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி ‘சர்வதேச அவசரப் பொருளாதார அதிகாரச் சட்டம்’ என்கிற சட்டத்தை அமல்படுத்தி, ஒரு சர்வதேச வர்த்தகப் போரைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்.

அதேநேரம் அந்த வார இறுதிக்குள், ஊகப் பத்திரச் சந்தைகளின் நல்லறிவு, டிரம்ப் தொடங்கிய அபத்தமான வர்த்தகப் போரை நிறுத்தியது. வாரத்தின் பிற்பகுதியில், பத்திரச் சந்தைகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, தனது முந்தைய முடிவை டிரம்ப் மாற்றினார். ஏப்ரல் 9 அன்று பெரும்பாலான நாடுகள் மீதான கூடுதல் பரஸ்பர இறக்குமதி வரிகளை நிறுத்தி வைத்தார். ஆனால், சீனாவின் வரி மட்டும் 145% ஆக உயர்த்தப்பட்டது.

பரஸ்பர வரி: ஏப்ரல் 2ஆம் தேதி அனைத்து நாடுகளி​லிருந்தும் இறக்குமதி செய்யப்​படும் பொருள்​களுக்கு ‘விடுதலை’ தின வர்த்தக வரிக் கொள்கையை டிரம்ப் அறிவித்த பிறகு, பங்குச் சந்தை​களில் கொந்தளிப்பு தொடங்​கியது. இந்தக் கொள்கை இரண்டு அடுக்கு அமைப்பைக் கொண்டிருந்தது: முதலா​வதாக, அனைத்து நாடுகளி​லிருந்தும் இறக்குமதி செய்யப்​படும் பொருள்​களுக்கு அடிப்படை 10% பொருந்தும்; இரண்டாவதாக, சுமார் 100 நாடுகளால் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் என்று அமெரிக்க அரசாங்கம் கருதி​ய​வற்றின் மீது தனிப்பட்ட நாடு சார்ந்த ‘பரஸ்பர வரி’ விதிக்​கப்​பட்டது.

புதிய இரண்டு அடுக்கு வரி விதிப்பு முறை ஏப்ரல் 5, ஏப்ரல் 9ஆம் தேதிகளில் தொடங்கத் திட்ட​மிடப்​பட்டது. சீனா ஒரு சிறப்பு இலக்காக இருந்தது. சீனாவின் இறக்கும​திகள் மீது மிகப்​பெரிய வரி விதிக்​கப்​பட்டது. ஏப்ரல் 11இல், சீனப் பொருள்​களின் மீதான அமெரிக்​காவின் 145 சதவீத வரி அமலுக்கு வந்தது. இதற்கிடை​யில், இந்தியா போன்ற அமெரிக்​காவின் உற்பத்தி மையங்கள் 27% அதிகரிப்​புக்கு ஆளாகின. அதேநேரத்தில் இந்தோ​னேசியா (32%), வங்கதேசம் (37%), வியட்நாம் (46%) ஆகியவை கடுமையான வரிகளை எதிர்​கொண்டன.

பாதுகாப்பு​வாதக் கொள்கை: இந்த வர்த்தக வரி விதிப்பின் பின்னணியில் உள்ள தர்க்கம், உள்நாட்டு உற்பத்​தி​யாளர்​களுக்குப் பாதுகாப்பு அளிப்​ப​தாகும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகு​தி​யில், வெளிநாட்டுப் பொருள்கள் சுங்க வரிக்கு உட்படுத்​தப்​பட்டன. இது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்​களுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டுப் பொருள்களை அதிக விலை கொண்டதாக மாற்றியது.

இதனால், இருபதாம் நூற்றாண்டின் முற்பகு​தியில் பாதுகாப்பு​வாதக் கொள்கை​களின் கீழ் அமெரிக்க உற்பத்தி செழிக்க வரி விதிப்புகள் ஒரு பாதுகாப்புக் கவசத்தை வழங்கின. மூன்று தேர்தல்​களிலும் டிரம்ப்பின் அரசியல் முழக்கம் 1920களின் முற்பகு​தியில் இருந்த அதே பாதுகாப்பு​வாதப் பொருளாதார உத்தியை எதிரொலித்தது. ஆனால், அது தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்​கப்​பட்டது.

தற்போதைய உலகமய​மாக்கல் சூழலில், அமெரிக்​கர்​களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கு​வதற்காக, வெளிநாடு​களில் உள்ள அமெரிக்க நிறுவனங்களை அமெரிக்​காவில் உற்பத்தி செய்ய அழைத்து வருவதைத்தான் பாதுகாப்புவாத முழக்கமாக டிரம்ப் மாற்றியமைத்​தார். அதற்காக அவருக்கு வர்த்தக வரிகள் என்கிற பாதுகாப்புக் கவசம் தேவைப்​பட்டது.

2017 முதல் 2021 வரையிலான தனது முதல் பதவிக் காலத்​தில், சூரிய மின்சக்தித் தகடுகள் முதல் சலவை இயந்திரங்கள் வரை அனைத்​துக்கும் இறக்குமதி வரிகளை அதிகரித்​தார். அந்தக் காலக்​கட்​டத்​தில், அமெரிக்க சோயாபீன்ஸ் மீதான வரிகளை அதிகரிப்பதன் மூலம் சீனா அப்போது பதிலடி கொடுத்தது. இது அமெரிக்க விவசா​யிகளைப் பாதித்தது. இப்போது, இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்​கிய​வுடன், டிரம்ப் அதே பாதுகாப்பு​வாதப் பொருளாதார உத்தியின் அளவை விரிவுபடுத்​தி​யுள்​ளார். தற்போதைய சூழலில் சர்வதேச வர்த்​தகத்தின் உள்ளார்ந்த தர்க்கம், அமெரிக்​காவில் அமெரிக்​கர்​களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்கிற பாதுகாப்பு​வாதத்தைச் செல்லாத​தாக்கு​கிறது.

மனம் மாறிய அதிபர்: 1980களில் இருந்து, அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த உற்பத்திச் செலவுகள், நெகிழ்வான வணிகம், தொழிலாளர் ஒழுங்கு​முறைச் சூழல், அதிக மனித வளங்களைக் கொண்ட நாடுகளில் முதலீடு செய்துள்ளன. மேலும், உலகெங்​கிலும் குறைந்த பெருநிறுவன வரி (corporate tax) உள்ள நாடுகளில் அந்நிறு​வனங்கள் லாபத்தையும் காண்கின்றன. எனவே, உலகமய​மாக்​கலைப் பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்கள் உலகம் முழுவதும் உற்பத்தி, நிதி, வரிக்குப் பிந்தைய லாப மதிப்புச் சங்கி​லிகளை உருவாக்கி வளர்த்​துள்ளன. டிரம்ப்பின் ‘பரஸ்பர’ வரிக் கொள்கை இதையெல்லாம் உடைக்கும் என்று நாம் எதிர்​பார்க்க முடியாது.

ஏனெனில், இறக்குமதி வரி விகிதங்கள் அதிகரித்​தா​லும்கூட, வளரும் நாடுகளில் உற்பத்​தி​செய்து அமெரிக்​காவில் விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள், அந்தந்த நாடுகளில் உற்பத்தி செலவு​களைக் குறைப்பதன் மூலமோ, உற்பத்​தித்​திறனை அதிகரிப்பதன் மூலமோ தங்கள் லாபத்தை அதிகரிக்க முடியும். எனவே, இந்தப் புதிய இறக்குமதி வரிக் கொள்கை உலகளாவிய உற்பத்திக் கட்டமைப்பை அமெரிக்கா​வுக்கு மாற்றும் என்கிற வாதம் நடைமுறைக்கு மாறானது. ஆனால், இவையெல்லாம் இந்த வர்த்தகப் போரை டிரம்ப் இடைநிறுத்த வைத்த காரணங்கள் அல்ல.

ஏப்ரல் 2ஆம் தேதி முதல், அமெரிக்கப் பங்குச் சந்தை​களும், உலகச் சந்தை​களும் மிகவும் நிலையற்​றவையாக இருந்தன. ஏப்ரல் 7ஆம் தேதி எஸ் & பி 500 குறியீடு 12%க்கும் மேல் சரிந்தது. அப்போதும்கூட டிரம்ப் கவலைப்​ப​டாமல் இருந்​தார். ஆனால், அந்த வாரத்தில் அமெரிக்கக் கருவூலத்தின் பத்திரச் சந்தையில் (US Treasury Bonds) ஏற்பட்ட எதிர்​வினைகள் அவரது மனதை மாற்றின. பொதுவாக, பங்குச் சந்தை வீழ்ச்சி​யடை​யும் ​போது, முதலீட்​டாளர்கள் அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களை (டி-பத்​திரங்கள்) வாங்கு​வார்கள்.

ஏனெனில் அமெரிக்கக் கருவூலப் பத்திரங்கள் தவறுகள் நிகழாத, உத்தர​வாதமான, நிலையான வருவாய் விகிதப் பத்திரங்​களாகக் கருதப்​படு​கின்றன. எனவே, டி-பத்​திரங்​களுக்கான அதிகத் தேவை அமெரிக்க டாலரை வலுப்​படுத்​தும். ஆனால், இந்த முறை, டி-பத்​திரங்​களின் விலை குறைந்து பத்திரம் வாங்கும் விகிதம் அதிகரித்தது. குறிப்பாக, ஏப்ரல் 4 - 11ஆம் தேதிகளுக்கு இடையில், 10 ஆண்டு, 20 ஆண்டு, 30 ஆண்டு டி-பத்​திரங்​களின் வாங்கும் விகிதம் முறையே 5.5%, 5.05% மற்றும் 5% ஆக உயர்ந்தது.

இதற்குக் காரணம், வர்த்தகப் போர் அமெரிக்​காவில் பணவீக்​கத்தையும் வளர்ச்சித் தேக்கத்தையும் ஏற்படுத்தும் என்று எதிர்​பார்த்​த​தால், முதலீட்​டாளர்கள் அமெரிக்கப் பத்திரங்களை விற்று, மற்ற பாதுகாப்பான முதலீடு​களுக்குச் சென்றனர் (ஜெர்மன் பத்திரங்​கள்). எனவே, டி-பத்திர விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி அமெரிக்க நிர்வாகத்​துக்கு நடுக்​கத்தை ஏற்படுத்​தியது.

பலவீனமடையும் டாலர்: ஏப்ரல் 8ஆம் தேதி, அமெரிக்க அரசாங்கம் 3 ஆண்டு டி-பத்​திரங்களை 58 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏலத்தில் விற்பதாக அறிவித்தது. முக்கிய முதலீட்​டாளர்களான ஹெட்ஜ் நிதிகள் (Hedge Funds), வெளிநாட்டு நிறுவன முதலீட்​டாளர்கள் (FII) பத்திரங்களை வாங்க முன்வர​வில்லை.

ஹெட்ஜ் நிதிகள் அமெரிக்க டி-பத்​திரங்​களில் ரிவேட்டிவ் வர்த்​தகத்​துக்காக 800 பில்லியன் டாலர் தொகுப்பு​முதலீட்டை (portfolio) வைத்திருக்​கின்றன. எனவே, அவர்கள் டி-பத்​திரங்களை விற்கத் தொடங்​கிய​போது, இந்தச் சந்தை​களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, டி-பத்திர விலைகளில் வீழ்ச்சியைத் தீவிரப்​படுத்​தியது.

டி-பத்திர விலைகளின் இந்தச் சரிவு, அமெரிக்க நிர்வாகத்​துக்கு அச்சத்தை ஏற்படுத்​தியது. ஏனெனில், டி-பத்​திரங்​களின் விலைகளில் ஏற்படும் சரிவு அமெரிக்க டாலரின் மதிப்​பிலும் வீழ்ச்சிக்கு வழிவகுக்​கிறது. இதனால், டி-பத்​திரத்தின் விலையில் ஏற்படும் வீழ்ச்சி (அல்லது அதன் வாங்கும் விகிதத்தில் ஏற்படும் உயர்வு) யூரோ போன்ற பிற நாணயங்​களுக்கு முதலீட்​டாளர்களை மாற்றி​விடும்.

மற்ற நாட்டுப் பத்திரங்களை வாங்குவது அமெரிக்க டாலரின் மீதான நம்பிக்கை இழப்பைக் குறிக்​கிறது. உலகின் ‘இருப்பு நாணய’மாக (Reserve currency) அமெரிக்க டாலர் பலவீனமடைவதற்கான அறிகுறியாக டி-பத்​திரச் சந்தையில் ஏற்பட்​டுள்ள கொந்தளிப்பு பார்க்​கப்​படு​கிறது.

டிரம்ப்பின் வரிக் கொள்கையின் முரண்​பாடுகள் அவருக்கு டி-பத்​திரச் சந்தையால் காட்டப்​பட்டன - அமெரிக்கா​வுக்கு வேலைகளைத் திரும்பக் கொண்டு​வரு​வதற்கான வர்த்தக வரிப் போரின் விலை, உலகின் இருப்பு நாணயமாக இருக்கும் அமெரிக்க டாலரின் அபரிமிதமான சலுகையை இழக்க வைத்து​விடும்.

அத்தகைய நிலை, அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவது என்கிற டிரம்ப்பின் அரசியல் முழக்​கத்தின் அடித்​தளத்தையே சீர்குலைக்​கிறது. நிச்சயமற்ற தன்மை இன்னும் தீரவில்லை. ஆனால், பத்திரச் சந்தையில் ஏற்பட்​டுள்ள இந்தச் சீற்றம் பொருளா​தா​ரத்தை நிர்வகிப்​பதில் டிரம்ப்​புக்கு உள்ள எல்லையை வரையறுத்துக் காட்டி​யுள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது.

- தொடர்புக்கு: raghav.srinivasan@apu.edu.in

SCROLL FOR NEXT