அண்மையில், திருப்பூர் மாவட்டத்தில் முதுகலைப் பட்ட மாணவி ஒருவர், தனது சகோதரரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப வறுமையிலும் பகுதிநேர வேலைக்குச் சென்று படித்துவந்த அந்தப் பெண், வெண்மணி என்கிற ஆய்வு மாணவரைக் காதலித்து உள்ளார்.
இருவரும் எதிர்காலத்தில் திருமணம் செய்ய முடிவுசெய்திருந்த நிலையில், அந்தப் பெண் கொல்லப்பட்டிருக்கிறார். திருப்பூர் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் இந்தக் கொலையை ஆணவக் கொலை எனக் கூற முடியாது என்று கூறியதாக வெளிவந்த செய்தி, சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் கொண்டு வருவது குறித்த விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது.
பொதுப் புத்தியும் புரிதலின்மையும்: ‘ஆணவக் கொலை’ எனப் பழைய - புதிய இந்திய தண்டனைச் சட்டத்தில் தனி வகைப்பாடு இல்லாததைக் காவல் துறையினர் பல தருணங்களில் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த ஆணவக் கொலை தொடர்பான தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கும் இதுதான் காவல் துறைத் தரப்பின் பதிலாக இருந்தது.
ஆனால், இது உண்மை நிலையை முன்வைக்கும் பதில் அல்ல. ஏனெனில், தொடர்ந்து நீதிமன்றங்கள் ஆணவக் கொலை தொடர்பாகப் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன. ஆணவக் கொலைகள் என்பவை சுய விருப்பத்தின் அடிப்படையில் சாதியையும் மதத்தையும் மீறித் திருமண உறவைத் தேர்வுசெய்த காரணத்தால் குடும்பத்தினரால் நிகழ்த்தப்படும் கொலைகள் எனச் சட்ட ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
காதல் திருமணம் புரிவதால், மணமுறிவு கோருவதால், திருமண உறவுக்கு முரணான உறவுநிலையால், பாலியல் தாக்குதல் பாதிப்புக்கு உள்ளானதால் தாக்கப்படுவதை / கொலை செய்யப்படுவதை ஆணவக்குற்றம் / ஆணவக்கொலை என உச்ச நீதிமன்றம் முடிவுசெய்கிறது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் சட்டங்கள்தான். இந்த வரையறைகளைக் காவல் துறையினர் ஆணவக்கொலை தொடர்பான சட்ட வரையறை எனக் கருத வேண்டும்.
பொதுப் புத்தியில், குழு மனநிலையில் காதலர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை நியாயப்படுத்தும் சாதிய மனநிலை கட்டமைக்கப்படுகிறது. இக்குற்றங்களைக் கண்டிக்காமல் செல்லும் மனநிலை, ஏதோ ஒருவகையில் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஊக்கத்தை வழங்கக்கூடும்.
நீதிமன்றங்கள் ஆணவக்கொலையைக் கடுமையாக எடுத்து தண்டனை தரும் சூழலில், அதன் தாக்கம் பொதுச் சமூகத்தில் முறையாக உணரப்படுவதில்லை. அது தொடர்பாக அரசியல் - சமூகத் தளங்களில் உரையாடல்களை விரிவுபடுத்த வேண்டியது அவசியம்.
ஆட்சியாளர்களின் நிலைப்பாடு: ஆணவக்கொலைகள் நிகழும்போது, ஆணவக்கொலைக்கு எனத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன. ஆனால், வாக்கு வங்கி அரசியல் காரணமாக ஆட்சியாளர்கள் அதுபோன்ற சட்டத்தை இயற்றத் தயங்குகின்றனர். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய பின்னரும் ஆணவக்கொலைகளுக்குத் தனியாகச் சட்டம் இயற்ற மத்திய அரசு முன்வரவில்லை.
இப்படி ஒரு சட்டம் கொண்டுவர 15 மாநிலங்கள் மட்டும் இசைவு தெரிவித்ததாகவும், மற்ற மாநிலங்களில் அது பற்றி ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அரசு ஒரு காரணம் கூறியது. ஹரியாணா போன்ற மாநிலங்களில் காப் பஞ்சாயத்து என்கிற பெயரில் நடைபெறும் சாதியப் பஞ்சாயத்துக்களைத் தடை செய்ய அரசியல்வாதிகள் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். சில மாநிலங்களில் மறைமுகமாக ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பு எழுந்தது.
சட்டம் மட்டும் போதுமா? - நிச்சயமாகச் சட்டம் மட்டும் குற்றங்களைத் தடுத்துவிடாது. ஆனால், அதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கும், கடுமையாக எதிர்ப்பதற்கும் துணைபுரியும் சட்ட வடிவமாக ஒரு தனிச் சட்டம் இருந்திருக்கும். ‘சக்திவாகினி எதிர் இந்திய யூனியன்’ என்கிற வழக்கில் 2018 மார்ச் 27 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஆணவக்கொலைக்கான தனிச் சட்டம் என்று பலர் உருவகித்திருக்கும் அம்சங்களைக் கொண்டிருக்கிறது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சந்திரசூட், கன்வல்கர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு இது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஆணவக் குற்றங்கள் அல்லது கொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கை, குற்றத்தில் ஈடுபடுவோருக்குத் தண்டனை நடவடிக்கை என மூன்று பகுதிகளாக இந்தக் குற்றத்தை அரசு அணுக வேண்டும். தடுப்பு நடவடிக்கையின்படி, ஆணவக் குற்றம் நிகழ்த்தப்படும் சாத்திய முள்ள கிராமங்களையும் பகுதிகளையும் அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காவல் துறையினர் தங்களின் மேலதி காரிகளுக்கு உடனே அது பற்றித் தகவல் தெரிவித்துப் பதிவுசெய்ய வேண்டும்.
தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து, வட மாநிலங்களில் காப் பஞ்சாயத்து என சாதி மறுப்புத் திருமணம் புரிவோருக்கு அல்லது பிற திருமணங்களில் பெண்களின் முடிவுகளுக்கு எதிராகக் கூட்டம் கூடினால், மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் இணைந்து அவற்றைச் சட்டவிரோதக் கூட்டம் எனத் தடுக்க வேண்டும். காதலர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
காதலர்கள் அல்லது இணையர்களுக்குப் பாதுகாப்பான முறையில் திருமணம் செய்து, முறையாகப் பதிவுசெய்யக் காவல் துறை முன்வர வேண்டும். அவர்கள் தங்குவதற்குக் காவல் துறை கண்காணிப்பாளர் கண்காணிப்பில் உள்ள பாதுகாப்பான விடுதிகள் எல்லா மாவட்டங்களிலும் உருவாக்கப்பட வேண்டும். குறைந்த கட்டணத்தில் பாதுகாப்புடன் அவர்களைத் தங்கவைக்க வேண்டும். பாதுகாப்பற்ற சூழல் நிலவும் நிலையில், ஓராண்டு வரைகூட அவர்கள் அங்கு தங்கலாம்.
இணையர்களுக்கு அச்சுறுத்தல் தரும் சக்திகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். மேலும், அவசர உதவி கோரும் காதலர்கள் 24 மணி நேரமும் காவல் துறையினரையும் அரசையும் தொடர்புகொள்ள இலவச எண்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டும். அவற்றை எல்லாரும் அறியும்படியான பரப்புரைகள் அவசியம். இந்தப் பணிகளை மாவட்டச் சமூக நல அதிகாரி, காவல் துறை கண்காணிப்பாளர் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய உள் விசாரணை மேற்கொண்டு தண்டிக்கப்பட வேண்டும். மேலும், அதனை அவர்களின் பணிப் புத்தகத்தில் பதிவுசெய்ய வேண்டும். இந்த வழிகாட்டி நடைமுறையை மாநில அரசு, மத்திய ஆட்சிப் பகுதிகளில் உடனே நடைமுறைப்படுத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உரிய தலைமைச் செயலர்களுக்கு 31.5.2018 சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளது.
நமது அரசமைப்புச் சட்டக்கூறு 141இன்கீழ் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா நீதிமன்றம், மாநிலங்களைக் கட்டுப்படுத்தும். அவையும் சட்டங்களே. மேற்கண்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்த மாநில அரசு மறுக்க இயலாது. ஆணவக் கொலைகளுக்குத் தனிச் சட்டம் வரும்போது வரட்டும். அது இந்த வழிகாட்டியைவிட வலுவானதாக இருக்கப்போவதில்லை. ஒருவேளை, வழக்கு விசாரணையில் நிரூபிக்கும் பொறுப்பு மட்டும் குற்றம்சாட்டப்பட்டவர் மீது தனிச் சட்டத்தில் சுமத்தப்படலாம். ஆனால், அது விவாதத்துக்குரியது.
ஆணவக் குற்றங்களுக்கு எதிராகத் தனிச் சட்டத்துக்காகச் சமூகம் காத்திருக்கத் தேவையில்லை. உச்ச நீதிமன்றம் வழங்கிய மேற்கண்ட தீர்ப்பு சார்ந்த சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மேற்கண்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் செயல்படாத அரசு, நிர்வாகம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பு செய்வதாகவும், நீதி வழங்கும் முறையில் தலையீடு செய்வதாகவும் சிவில் நீதிமன்ற அவமதிப்பாகவும் கருதப்படும்.
ஒருவேளை இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தலில் தடுக்க முயல்வது, குற்றம் சார்ந்த நீதிமன்ற அவமதிப்பு என வகைப்படுத்தப்படும். ஆணவக் குற்றங்களுக்குத் தனிச் சட்டம் எனக் கோருவோர் இந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறதா எனக் கண்காணிக்க வேண்டும். எப்போதும் விழிப்புடன் இருப்பது சுதந்திர - ஜனநாயகச் சமூகத்தினைப் பாதுகாக்க உதவும்!
- தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com