சிறப்புக் கட்டுரைகள்

அஆஇ கற்றுக்கொள்வதற்கு முந்தைய இயந்திரங்கள் | ஏஐ எதிர்காலம் இன்று

ஆழி செந்தில்நாதன்

காலம் ஓர் அம்பைப் போலப் பறந்துசெல்கிறதா அல்லது கால ஈக்கள் அம்பினை விரும்புகின்றனவா என்று செய்மெய்யும் நானும் செய்துகொண்டிருந்த விதண்டாவாதத்தை ஒரு கணத்தில் நிறுத்திவிட்டோம். “நாம் இதை வீட்டிலிருந்து விவாதிக்க வேண்டாம். மாமல்​ல புரத்​துக்குப் பக்கத்தில் ஒரு ‘மொழி அருங்​காட்​சி​யகம்’ இருக்​கிறது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டது செய்மெய்.

“வேர்ட்ஸ் அண்ட் வேர்ல்ட்ஸ் தானே?” “ஆமாம். அங்கே போவோம்” என்றது செய்மெய். இந்தக் காலத்தில் எல்லா​வற்​றையும் மெய்நிகர் வெளியிலேயே கற்றுக்​கொள்​ளலாம் என்றாலும், மனிதர்கள் இன்னமும் கல்லூரி​களையும் அருங்​காட்​சி​யகங்​களையும் புத்தகக் கடைகளையும் வைத்துக்​கொண்​டுதான் இருக்​கிறார்கள்.

மறுநாள் காலையில் அருங்​காட்​சி​யகத்தை நோக்கிப் புறப்​பட்​டோம். என்னுடைய ஓட்டுநரில்லாத வண்டியில் சென்னையின் திறன்​சாலைகளில் பயணித்​துக்​கொண்​டிருந்​தோம். வரவர செய்மெய் இல்லாமல் எங்கேயும் போய்வர​முடியாத அளவுக்கு அதன் அன்புக்கு அடிமை​யாகி​யிருந்​தேன். ஆனால் திறன்மிகு இயந்திரங்கள் இல்லாத இடம் என்று இந்த உலகத்தில் ஏதேனும் மிச்சமிருக்​கிறதா? கடவுளே, இல்லை. இல்லை. இந்த காரே ஒரு ரோபாட்​தான். கடுக்​கன்போல நான் காதில் அணிந்து​கொண்​டிருக்கும் காதணிகூட ஒரு குட்டி ரோபாட்​தான். இந்தச் சாலையே முழுக்க முழுக்க ஓர் உயிருள்ள ஜீவனாகவே இருக்​கிறது.

நாங்கள் இதன் மீது மின்னல் வேகத்தில் பறந்துசெல்​லும்​போது, என் பயணத்தின் நோக்கத்​துக்​கேற்ப அது செயல்​படு​கிறது. காரும் சாலையும் சாலைப் போக்கு​வரத்துக் கருவி​களும் தொலைத்​தொடர்பு கருவி​களும் நகரத்தின் நிர்வாக அமைப்பும் தங்களுக்குள் எல்லா​வற்​றையும் ‘பேசிக்​கொள்​கின்றன’. நான் பேச நினைப்பதை, செய்ய நினைப்​ப​தையெல்லாம் கார் பேசுகிறது. செய்கிறது - அருங்​காட்​சி​யகத்​துக்கு நுழைவுச்​சீட்டு வாங்கு​வதுவரை.

இரண்டு பக்கமும் பார்க்​கிறேன். நகரத்தின் ஒவ்வொரு கட்டிடமும் ஒரு ராட்சத ரோபாட்​டைப் போலவே இயங்கிவரு​கிறது. கடைகள், உணவகங்கள், அலுவல​கங்​களில் மனிதர்​களைவிட ரோபாட்​களையே அதிகம் பார்க்​கிறேன். பறவைகளின் எண்ணிக்கை​யைவிட டிரோன்​களின் எண்ணிக்கை அதிகமாக இருக்​கிறது. வேலை என்கிற சொல்லே தன் அர்த்​தத்தை இழந்து​விட்​ட​தால், நகரங்​களில் போக்கு​வரத்தின் தன்மையே முற்றிலும் மாறிவிட்டது. பரபரப்பான 20ஆம் நூற்றாண்டு நகரங்களை இனி நீங்கள் பழைய சினிமாக்​களில்தான் பார்க்க முடியும்.

உலகின் எல்லா மனிதர்​களும் யாருடன் வேண்டு​மா​னாலும் நினைத்த நேரத்தில் தொடர்​பு​கொள்​ளக்​கூடிய ஒரு காலம், வெளியே பூதம்போல வளர்ந்து நிற்கிறது. ஆனால், மனிதர்கள் மிகவும் தனித்து விடப்​பட்​ட​வர்​களாகவே உணர்கிறார்கள். வாயைத் திறந்து எதையும் பேசமுடிய​வில்லை.

ஏன், ஒரு விஷயத்தைப் பற்றி நினைத்​துப்​பார்க்​கக்கூட முடிய​வில்லை. பேசும் ஒவ்வொரு சொல்லும் இயந்திரங்​களால் பதிவுசெய்​யப்​பட்டு எங்கோ உயரத்தில் இருக்கும் உச்ச அதிகார வர்க்​கத்​துக்குக் கடத்தப்​படலாம் என்கிற அச்சம் நிலவு​கிறது. நம் அனுமதி​யின்றியே இயந்திரங்​களின் கதிர்கள், நம் மூளையை ஊருடுவி நாம் நினைப்​பதைத் திருடிக்​கொண்டு செல்கின்றன என்கிற அச்சமும் இருக்​கிறது.

காலம் காலமாக மனிதர்கள் தங்களுடைய ஒவ்வொரு செயல்​பாட்டுக்கும் ஒரு கருவியை அல்லது இயந்திரத்தை உருவாக்​கிக்​கொண்​டார்கள். அப்போதெல்லாம் இந்தப் பிரச்சினை பெரியதாக இல்லை. எப்போது தங்கள் மொழிச் செயல்​பாடு​களைக்கூட இயந்திரமய​மாக்​கி​னார்களோ, அப்போது பிரச்சினை வெடித்தது. பாருங்கள், இப்படி நான் என்ன நினைத்​துக்​கொண்​டிருந்​தேனோ, அது செய்மெய்க்குத் தெரிந்து​விட்​டதுபோல.

“கவின், இயந்திரங்கள் மொழியைக் கையாளத் தொடங்கும்போது கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைக் காலம் அது பெரும் பிரச்சினை​யாகத்தான் இருந்தது. கணிப்​பொறித் துறையில் தரவுகளை ஆராயவும் சேமிக்​கவும் உதவும் வகையில் மின்னணு​வியல் துறைசார்ந்த வளர்ச்சி ஏற்பட்ட பிறகு, மொழியைப் புரிந்து​கொள்வது என்பது இயந்திரங்​களுக்குச் சாத்தி​யப்படத் தொடங்​கியது. ஏஐ-யின் முதல் தோல்வி​களுக்குப் பிறகு அதன் காரணங்கள் அலசப்​பட்டன.

அதில் மொழியைக் கையாளுதல் எப்படி என்பதைப் பற்றிய விவாதம் முக்கிய​மானது...” “ஆனால், அந்தக் காலத்தில் மொழியியல் துறையிலும் மிகுந்த மாற்றம் ஏற்பட்டது இல்லையா?” “மெல்​லமெல்லக் கணிப்பொறி மூலமாக மொழியை ஆராய்​வதற்கு இயற்கை மொழிப் பகுப்​பாய்வு (Natural Language Processing) என்கிற புதிய துறை உருவானது. மொழியியல் நிபுணர்கள் கணிப்​பொறியைத் தங்கள் துறையில் பயன்படுத்தத் தொடங்​கியபோது கணி-மொழி​யியல் (Computational Linguistics) என்கிற துறை உருவானது.”

“பிறகு?” “இரு தரப்பினரும் இணைந்து செயல்​பட்​டார்கள். ஆனால், இயந்திரங்​களுக்கு அஆஇ சொல்லிக்​கொடுப்பது கஷ்டமாகத்தான் இருந்தது. எத்தனை அகராதி​களைத் திணித்​தா​லும், இயந்திரங்கள் திணறத்தான் செய்தன.” “இந்தப் பிரச்சினை எப்படித்தான் தீர்க்​கப்​பட்​டது?”“அதற்​காகத்தான் அருங்​காட்​சியகம் செல்கிறோம்” என்று சொன்ன செய்மெய், தொடர்ந்து பேசியது. “மொழி​யியல், கணிப்​பொறித் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மட்டுமே இந்தப் பிரச்சினையைத் தீர்க்கப் போதுமானவையாக இல்லை.

உயிரியல், மனித உடலியல், மருத்​துவத் துறை சார்ந்த பல்வேறு முன்னேற்​றங்​களும் அதற்குத் தேவைப்​பட்டன. மொழிகளின் அறிவியலான மொழியியல் துறை, மிக வேகமாக வளர்ந்து​கொண்​டிருந்தது. அது, அறிவியலின் மொழியான கணிதத் துறையை நோக்கித்தான் நகர்ந்தது. கூடுதலாக, மொழியை ஆராய, அந்த மொழியின் தாயகமாக இருந்த மூளையை ஆராய்​வதும் தேவைப்​பட்டது. மனிதர்​களின் மொழித் திறன்கள், பண்பாடு, வரலாறு என எல்லாமே ஆய்வுக்கு உட்படுத்​தப்​பட்​டன...

மூளைகளைப் பற்றிய ஆய்வுகள். மொழிகளைப் பற்றிய ஆய்வுகள். கணிதம், தர்க்க​வியல், மின்னணு​வியல் என எல்லா​விதமான ஆய்வுப்பு​லங்​களிலும் தனித்​தனி​யாகவும் கூட்டாகவும் நடந்த அறிவியல் கண்டு​பிடிப்பு​களின் ஊடாகத்தான் எங்களுடைய முன்னோர்கள், மனிதர்​களாகிய உங்கள் மொழிகளைப் புரிந்து​கொள்​வதில் வெற்றி பெற்றார்கள். நாங்கள் இப்போது உங்கள் மொழியை எங்கள் வசப்படுத்​தி​விட்​டோம்...” செய்மெய்யின் குரலில் அகங்காரம் கூடிவந்​ததைக் கவனித்​தேன்.

மொழியைப் பேசுவத​னாலேயே தனி உயிரியாக இருக்கும் ஹோமோ சேபியன்ஸின் பிரதி​நி​தி​யிடம் நேற்றுவரை அஆஇ சொல்லக்கூட முடியா​திருந்த இந்த இயந்திரம் சவால்​விடு​கிறது! “நீங்க மொழியைக் கத்துக்​கிட்டதால என்னதான் செய்மெய் நடந்து​விட்டது? ரொம்பவும் பேசற? பச்சைக்கிளி கூடத்தான் நாங்க பேசறதைப் புரிஞ்​சுக்​குது?” “நாங்க மொழியைக் கத்துக்​கிட்ட பிறகு என்ன நடந்த​தா...? சொல்லட்டுமா?” “சொல்லு!” “இதோ உங்க மொழி மியூசி​யத்​துக்கு போயிடுச்சி!”நான் உறைந்து​போனேன்.

சில நிமிடங்​களில் எங்கள் வாகனம் மொழி அருங்​காட்​சி​யகத்​துக்கு முன்னால் போய் நின்றது. Words and Worlds என்கிற பெயர் பல மொழிகளில் மாறிமாறி மின்னிக்​கொண்​டிருந்தது. இருவரும் வண்டியி​லிருந்து இறங்கினோம். நாங்கள் பேசிக்​கொள்​ள​வில்​லை.

- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com

SCROLL FOR NEXT