எனது பள்ளிக் காலத் தமிழ் ஆசிரியர் யாரெனக் கேட்டால், எனது உடனடி பதில் எழுத்தாளர் வாண்டுமாமா என்பதாகவே இருக்கும். வாண்டுமாமா பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர், அவர் எந்தப் பள்ளியில் கற்றுத் தந்தார்? எந்தப் பள்ளியிலும் அவர் ஆசிரியராக பணிபுரிந்திருக்கவில்லை. ஆனால் ‘பூந்தளிர்’, ‘கோகுலம்’, தன் சிறார் நூல்கள் வழியாக ஆயிரக்கணக்கான தமிழ்ச் சிறாருக்கு அவர் ஆசிரியராக இருந்திருக்கிறார் என உறுதிபடக் கூற முடியும்.
தமிழ்ச் சிறார் எழுத்துக்கு வலுவான அடித்தளத்தை அழ.வள்ளியப்பா, பெரியசாமித் தூரன், ஆர்.வி. போன்றவர்கள் இட்டிருந்தார்கள். அடுத்த கட்டமாக அதைப் பெரிய அளவில் வளர்த்தவர்களில் முதன்மையானவர் வாண்டுமாமா. 1990கள், 2000 வரையிலான தமிழ்ச் சிறார் எழுத்தாளர்கள் இலக்கணப் பிழையின்றி, எளிய தமிழில், சுவாரசியமாக எழுதும் திறன் வாய்க்கப் பெற்றிருந்தார்கள். அழ.வள்ளியப்பா, வாண்டுமாமா போன்றோரை தொடர்ச்சியாக வாசித்த ஒருவர் தமிழில் சரளமாக வாசிக்கும், எழுதும் திறனை எளிதாக வளர்த்துக்கொண்டுவிடலாம்.
தொடக்கப் பள்ளியில் இருந்து நடுநிலைப் பள்ளிக்குச் சென்றிருந்த காலத்தில் தமிழில் வாசிக்கவும் எழுதவும் நான் தடுமாறிக் கொண்டிருந்தேன். அப்போது எனது அத்தையின் பரிந்துரையால் சிறார் இதழ்களை தேடிப் போனேன். கடையில் ‘அம்புலிமாமா’, ‘ரத்னபாலா’, ‘பாலமித்ரா’, ‘பூந்தளிர்’, ‘கோகுலம்’ ஆகிய இதழ்களைக் கண்டேன். அவற்றில் பூந்தளிர் என் மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது. காரணம் அதில் வெளியான கபீஷ், காக்கை காளி, வேட்டைக்கார வேம்பு, மந்திரி தந்திரி, முல்லா நசீருதின் உள்ளிட்ட கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட படக்கதைகள். அத்துடன் குறுக்கெழுத்துப் போட்டி என் தமிழ் ஆர்வத்தைத் தூண்டி புதிய சொற்களை யோசிக்க வைத்தது. புதிர்கள், கதைகள் சிந்தனைக்கு விருந்தாக அமைந்தன.
படக்கதைகளில் பாதி கதை படத்திலேயே தெரிந்துவிடும். மீதியை எழுத்துக்கூட்டி வாசித்து அறிந்துவிடலாமே. அதற்கடுத்தபடி வாண்டுமாமாவின் வரலாறு, அறிவியல், பொதுஅறிவுக் கட்டுரைகள், துணுக்குகள் போன்றவை ஈர்த்தன. சிறார் இதழ் படிப்பது எவ்வளவு சுவாரசியமானது என்பதை மனதார உணர முடிந்தது. மாதம் இருமுறை வெளியாகும் ‘பூந்தளி’ரின் நிரந்தர ரசிகனாக மாறிப்போனேன். அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் என் வாசிப்புத்திறன் மேம்பட்டது. திருச்சி மத்திய நூலகத்தில் சிறார் நூல்களைத் தேடிப்போய் வாசிக்கும் அளவுக்கு அது வளர்ந்தது. நாளிதழ்கள், பெரியவர்களுக்கான இதழ்களையும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். இப்போது சொல்லுங்கள், வாண்டுமாமா எனது ஆசிரியர்தானே.
நான் பள்ளி முடித்த காலம்வரை செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசைகள் அறிமுகமாகி இருக்கவில்லை. அன்றைக்கு இருந்த பொழுதுபோக்குகள் வாசிப்பு, விளையாட்டு, சினிமா எனச் சொற்பமே. அதிலும் தமிழ் வாசிப்பு மட்டுமே உலகத்துக்கான பலகணியாக இருந்தது. இந்தப் பின்னணியில், எந்த ஒரு துறை சார்ந்த அடிப்படைத் தகவல்களையும் தமிழில் வாசித்து அறிந்துகொள்ள முடியும்; அதுவும் எளிய, சுவாரசியமான மொழியில் என்பதை பூந்தளிர், கோகுலம், தனது நூல்கள் வழியாக சாதித்துக் காட்டியவர் வாண்டுமாமா.
ஒரு ஓவியராக இதழியல் உலகில் நுழைய முயன்றவர் வி.கிருஷ்ணமூர்த்தி என்கிற வாண்டுமாமா. ஆனால், அவருக்கு அது சாத்தியப்படவில்லை. இதனால் எழுத்துத் துறை, இதழியல் எடிட்டிங் (செம்மைப்படு்த்தி பதிப்பித்தல்) சார்ந்து சிறிய நிறுவனங்களில் இயங்கத் தொடங்கினார். கல்கி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கே பெரியவர்களுக்கான எழுத்தைத் தாண்டி சிறாருக்கு எழுதத் தொடங்கினார். அதன் மீதான அவரது தீவிர ஆர்வத்தைப் பார்த்து, அவரை மையமாகக் கொண்டு ‘கோகுலம்’ இதழை அந்நிறுவனம் தொடங்கியது. ‘அணில்’, ‘கண்ணன்’, ‘பூஞ்சோலை’ உள்ளிட்ட இதழ்களைத் தொடர்ந்து சிறார் இதழியல் உலகில் கோகுலம் தனித்துவ இடத்தைப் பெற்றது. கெடுவாய்ப்பாக கல்கி நிறுவனப் பொருளாதார சிக்கல், தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் அந்த இதழ் நிறுத்தப்பட்டது. மீண்டும் அது வெளிவரத் தொடங்கியபோது அழ.வள்ளியப்பா அதன் ஆசிரியர் ஆனார்.
இதற்கிடையே வாண்டுமாமா வேறு இதழ்களில் பணிபுரிந்துவந்தார். பணியில் இருந்து முறைப்படி ஓய்வு பெற்ற பின், பூந்தளிர் இதழுக்கு ஆசிரியர் ஆனார். 1984 முதல் 1989 வரை வந்த இந்த இதழ்களை நடத்தியது பைகோ நிறுவனம். கேரளத்தைச் சேர்ந்த எஸ்.வி.பையால் நடத்தப்பட்ட இந்த நிறுவனம் அன்றைய பம்பாயைச் சேர்ந்த டிங்கிள், அமர் சித்திர கதைகளின் உரிமத்தை வாங்கி மலையாளத்தில் பூம்பாட்டா (வண்ணத்துப்பூச்சி), தமிழில் பூந்தளிர் என்கிற இதழ்களில் வெளியிட்டது.
பலே பாலு, சமர்த்துச் சாரு போன்ற அவருடைய கதாபாத்திரங்கள் கோகுலத்தில் முதலில் வெளியாகின. வாண்டுமாமாவின் மகன், மகளின் பெயரே இந்தக் கதாபாத்திரங்களின் பெயரானது. பலே பாலு ஒரு சேட்டைக்காரப் பையன், அதேநேரம் புத்திசாலி. சாருமதியும் அப்படித்தான். பாலுவின் சேட்டைகளில் துடுக்குத்தனம் மட்டுமில்லாமல் அறிவியலும் ஒளிந்திருக்கும். ஒரு டிராயரை அணிந்துகொள்வதன் மூலம் பல வரலாற்றுக் காலங்கள், புராணக் கதைக் காலங்களுக்கு அவன் காலப்பயணம் செய்வதும், முக்கியமான/சிக்கலான கட்டத்தில் டிராயரை கழற்றுவதன் மூலம் நிகழ்காலத்துக்குத் தப்பி வருவதும் எனக் கதைகளில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.
கதைகள் படிக்க எனக்குப் பிடிக்கும் என்றாலும், கதைகள் சொல்லத் தெரியாது (இப்போதும்தான்). வானதி பதிப்பகம் பதிப்பித்த ‘குள்ளன் ஜக்கு’ என்கிற மிகைப்புனைவுக் கதையைப் படித்திருந்தேன். அரேபிய இரவுகள் கதையைப் போல கதைக்குள் முடிச்சு, மிகைக் கற்பனை, சங்கிலித் தொடர் போல் சிக்கல்கள் என விரிந்துகொண்டே செல்லும். ஒவ்வொரு சம்பவமும் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்வது மிகுந்த சுவாரசியமாக இருக்கும். இந்தக் கதை உருவாக்கிய வசீகரத்தில் ஒரு உறவினர் திருமண நிகழ்வில் என் வயதுக் குழந்தைகளை கூட்டி உட்கார வைத்துக் கதை சொல்லத் தொடங்கிவிட்டேன். எல்லாம் வாண்டுமாமாவும் குள்ளன் ஜக்கு கதையும் கொடுத்த அசாத்திய தைரியம்தான்.
‘தேதியும் சேதியும்’ என்கிற தலைப்பில் ஒவ்வொரு நாளிலும் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், ‘தோன்றியது எப்படி’ என்கிற தலைப்பில் பல முக்கியமான விஷயங்கள் தோன்றிய கதை, ‘தெரியுமா? தெரியுமே!’ என வாண்டுமாமா கைவைக்காத பிரிவே இல்லை. ஓவியர் செல்லத்துடன் இணைந்து தமிழ்ச் சித்திரக்கதைகளில் ஒப்பிட முடியாத படைப்புகளை வாண்டுமாமா தந்திருக்கிறார். துப்பறியும் கதைகள், விலங்குக் கதைகள், வரலாறு, அறிவியல், விளையாட்டு, மருத்துவம் எனப் பல துறைகளைப் பற்றி மனிதர் எழுதிக் குவித்திருக்கிறார். பொதுஅறிவு என்கிற துறையை அவரைப் போல் இலகுவாகவும் விரிவாகவும் கையாண்டவர்களை தேடித்தான் கண்டறிய வேண்டும்.
இதழ்கள், எழுத்து வழியாகவே உலகை அறிய முடியும் என்கிற நிலை இருந்த அந்தக் காலத்தில் வாண்டுமாமா தமிழுக்கு உருவாக்கித் தந்தவை அனைத்தும் அறிவுப்புதையல்கள். மற்ற மொழிப் படைப்புகளில் இருந்து உத்வேகம் பெற்ற அவர், இணையற்ற கற்பனைத் திறனுடனும் சிறாருக்கே உரிய எளிய மொழி வன்மையுடனும் தமிழைக் கையாண்டார்.
150க்கும் மேற்பட்ட நூல்களையும் பெரியவர்களுக்கான படைப்புகளையும் அவர் எழுதியிருக்கிறார் என்றாலும், சிறார் எழுத்தாளர் என்றே நிரந்தர அடையாளம் பெற்றுவிட்டார். அதற்குக் காரணம் 70கள், 80களில் தங்கள் பால்ய காலத்தைக் கழித்த தமிழ்ச் சிறார்கள் மனதில் ஒரு வழிகாட்டியாக-ஆசிரியராக அவர் தங்கிவிட்டதுதான். பல மொழிகளில் சிறார் இலக்கியத்துக்காக அர்ப்பணித்துக்கொண்ட சில எழுத்தாளர்கள் அந்த மொழியின் அடையாளமாகவே மாறியிருப்பார்கள். அதுபோன்று ‘தமிழ்ச் சிறார் இலக்கிய மாஸ்டர்’ என்கிற அடைமொழி வாண்டுமாமாவுக்குப் பொருத்தமாக இருக்கும்.
ஏப்ரல் 21 வாண்டுமாமா நூற்றாண்டு நிறைவு