காலை நடைக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் வள்ளுவர். அமைச்சர் வந்து வணங்கினார். “அரசர் உங்களைப் பார்க்க வந்து கொண்டிருக்கிறார்” என்று சொன்னார். “வரட்டுமே, அவரும் என்னுடன் சேர்ந்து நடக்கலாமே?!” என்றார் வள்ளுவர். அரசர் தேரைவிட்டு இறங்கினார்.
கடற்கரை ஓரமாக இருவரும் சேர்ந்து நடக்கத் தொடங்கினார்கள். அரசர் பேச ஆரம்பித்தார்: “போர் ஒன்று மூளவிருக்கிறது, உங்கள் ஆலோசனை தேவை. “போரைத் தவிர்க்க முடியாதா?” என்றார் வள்ளுவர். “முடியாது. அது காலத்தின் கட்டாயம்.” “நான் என்ன செய்ய வேண்டும்?” “உங்கள் அறிவுரை வேண்டும்.” “முழு விவரங்கள் சொன்னால் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.” “எதிரி வலிமையானவர்.
அவருக்குத் துணையாகச் சில நிலப்பிரபுக்களும் இருக்கிறார்கள். வலிமையானவர் என்றாலும் வெல்ல முடியாதவர் அல்ல. முன்பு வென்றிருக்கிறோம். ஆனால், இப்போது சற்று பலவீனமாக இருக்கிறோம். இந்தப் போரில் ஜெயிக்காவிட்டால் என் அமைச்சர்களே என்னை வறுத்தெடுத்து விடுவார்கள். போரை எப்படி அணுகலாம் எனக் குழப்பமாக இருக்கிறது.”
வள்ளுவர் உறுதியான குரலில் சொன்னார்: “வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.” அரசர் சொன்னார்; “ஐயா! நீங்கள் இப்படி இரண்டு வரியில் நறுக்கென்று சொல்லிவிடுகிறீர்கள். ஆனால், அதற்குப் பலர் பலவிதமாக பக்கம் பக்கமாக விளக்கம் எழுதிக் குவிக்கிறார்கள். நீங்களே இதை விளக்கிச் சொல்லிவிட்டால் நன்றியுடையவனாக இருப்பேன்.”
“நாம் இறங்கப்போகும் செயல் எத்தகையது, எவ்வளவு கடினமானது, எவ்வளவு வலிமையானது என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். பிறகு, நம்மால் அதை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட முடியுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். முடியும் என்று தோன்றினாலும் உடனே களத்தில் இறங்கிவிடக் கூடாது. அதை எதிர்க்கக்கூடிய எதிரிகள் யார், அவர்களுடைய வலிமை என்ன என்பதை ஆராய வேண்டும்.
அப்போது நிலைமை ஓரளவு தெளிவாகும். அந்த வேலையை முடிக்கக் கூட யாரையாவது துணை சேர்த்துக்கொள்ளலாம் என்று தோன்றும். அப்படித் துணைவரைச் சேர்த்துக்கொள்ளும் முன் அவர்களது பலம் என்ன என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.” வள்ளுவரின் மதிநுட்பத்தைக் கேட்ட அரசனின் கண்கள் வியப்பால் விரிந்தன. மனதில் தெளிவும் நம்பிக்கையும் பிறந்தன. கண்கள் பனிக்க நன்றியோடு தலைகுனிந்து வணங்கினான்.
போருக்கு மட்டுமல்ல, எந்தத் துறையானாலும் வெற்றி பெறுவதற்கான சூத்திரம் இதுதான். கடல் கடந்து வணிகம் செய்பவராக இருந்தாலும், கட்டை வண்டியில் வாழைப்பழம் விற்பவரானாலும், திரைப்படம் எடுப்பவராக இருந்தாலும் யூடியூப் சானல் நடத்துபவராக இருந்தாலும் இதுதான் சூத்திரம். அப்படியிருக்க, அரசியல் மட்டும் எப்படி இதற்கு விதிவிலக்காக இருக்க முடியும்? பாஜக-அதிமுக கூட்டணி இந்த அடிப்படையில் உருவாகி இருக்கிறது.
நேற்று வரை ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டிருந்தார்களே, அவர்கள் எப்படிக் கூட்டணி சேர முடியும்? கொள்கைரீதியாக முரண்பட்டவர்கள் ஆயிற்றே என்றெல்லாம் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். நியாயமான கேள்விதான். அவர்களுக்கு வரலாறு பதில் சொல்கிறது. “கம்யூனிஸ்ட்டுகள் என் முதல் எதிரி” என்று பகிரங்கமாக அறிவித்த ராஜாஜி, அதே கம்யூனிஸ்ட்டுகள் இடம்பெற்ற திமுக கூட்டணியில் 1967இல் இணைந்தார்.
காரணம், அவர் அப்போது காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்று விரும்பினார். 1967 தேர்தலில் ராஜாஜியால் வீழ்த்தப்பட்ட காங்கிரஸ் 1971இல் அதே ராஜாஜியோடு ‘கிராண்ட் அலையன்ஸ்’ கண்டது. திமுக ஆட்சியை அகற்றுவது அவர்கள் நோக்கம். அண்ணா இருந்தவரை காங்கிரஸை விமர்சித்துக்கொண்டிருந்த திமுக, அவர் மறைவுக்குப் பின் காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்தது. அவர்களது நோக்கம் எம்.ஜி.ஆரின் வெற்றியைத் தடுத்துநிறுத்துவது.
நெருக்கடி நிலையை எதிர்த்து அதன் காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமை அனுபவித்த திமுக, அதே நெருக்கடி நிலைக்குக் காரணமான நேருவின் மகளை நிலையான ஆட்சி தர அழைத்ததும் உண்டு. பரதேசி பண்டாரக் கட்சி என்று விமர்சித்து வந்த பாஜகவோடும் 1999இல் திமுக கூட்டணி கண்டது. “என்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் இனி பாஜகவோடு கூட்டணி வைக்க மாட்டேன்” என்று 1999இல் சொன்ன ஜெயலலிதா, 2004இல் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டார்.
அதிமுக, திமுக இரண்டையும் எதிர்த்துக் கட்சி தொடங்கியிருப்பதாகச் சொன்ன விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவரானார். 2016இல் திமுகவை ஊழல் கட்சி என்று சொல்லி அதற்கு எதிராக மக்கள் நலக் கூட்டணி கண்ட கம்யூனிஸ்ட்டுகளும் வைகோவும் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணியில் ஐக்கியமானார்கள். அதற்கு அவர்கள் சொன்ன நியாயம், ‘பாஜகவைத் தடுப்பது’.
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள் ஒரு கட்சியைத் தங்கள் பொது எதிரியாகக் கருதிவிட்டால், அதை வீழ்த்த முரண்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டுக் கூட்டணி அமைத்துக்கொள்வது தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுக்க நடந்துகொண்டிருக்கும் விஷயம்தான்.
பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றுதானே மம்தாவும் மார்க்சிஸ்ட்டுகளும் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றார்கள்? மெஹ்பூபா முஃப்தியோடு பாஜக கூட்டணி வைத்துக்கொள்ளவில்லையா? நெடுங்காலமாகக் காங்கிரஸை எதிர்த்துவந்த சிவசேனா, அதனுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லையா? பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய தெலுங்கு தேசம் இப்போது அதனுடன் இணைந்துகொள்ளவில்லையா? நிதீஷ்? அவரும் ஒரு காலத்தில் பாஜகவை எதிர்த்தவர்தான்.
“எதிரிக்கு எதிரி நண்பன்”, “அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, பகைவனும் கிடையாது” என்றெல்லாம் இதற்கு வியாக்கியானம் சொல்வார்கள். ஆனால் யதார்த்தம் என்னவென்றால், குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. யாரும் அரசியலில் புனிதர்கள் கிடையாது. அரசியல் நீரோட்டங்களை அறிந்தவர்கள் யாரும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து ஆச்சரியப்பட மாட்டார்கள். ஆனால், அண்ணாமலையின் அபிமானிகளுக்கு அவரைப் பலி கொடுத்துவிட்டதாக வருத்தமும் சினமும் இருக்கிறது. அது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.
முள்ளை முள்ளால் எடுக்கலாம் என்பதைப் பின்பற்றி திராவிட மாடல் பாணியில், (தனிமனிதனை முக்கியத்துவப்படுத்தி கட்சியை வளர்ப்பது, அதிரடியாக அறிவிப்புகள் வெளியிடுவது, சுடச்சுட பதிலடி கொடுப்பது) எனக் கட்சியை வளர்க்க முயன்றார் அவர்.
அது இன்றைய வாக்காளர்களுக்கு - குறிப்பாக இளைய தலைமுறைக்குப் பிடித்திருந்தது. அவர்கள் அரசியல்வாதிகளிடமிருந்து உபதேசங்களையோ, கருத்தாடலையோ எதிர்பார்ப்பதில்லை. யூடியூப், சமூக ஊடகம் என்று அமெச்சூர் ஊடகங்கள் பரவலாகி, அவை ‘கண்டெண்ட்’க்காகப் பசியுடன் வெறி கொண்டு அலைகையில், அவரது செய்தியாளர் சந்திப்புகளும் சாட்டையடிகளும் அவற்றுக்குத் தீனியாக அமைந்தன.
அவர் பாஜகவின் வாக்கு சதவீதத்தை அதிகரித்துக் காட்டினார் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் பலன் என்ன? ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை. அதிகார அமைப்பில் பங்குபெறுவதே தேர்தலை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக அரசியலில் முழுமையான வெற்றி. கொண்ட கொள்கையை எத்தனைதான் உரக்கச் சொன்னாலும், அதை நிறைவேற்றி நினைத்ததை சாதிக்க வேண்டுமானல், தேர்தல் வெற்றி அவசியம் என்பதுதான் நடைமுறை உண்மை.
அதிகாரத்தில் அமராத, குறைந்தபட்சம் பங்குபெறாத கட்சிகள் விரைவிலேயே பலவீனமாகிவிடும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், பாமக இவையெல்லாம் உதாரணம். அதை உணர்ந்த பின்னர், அரசியல் கட்சிகள் ஆட்சியிலும் பங்கு எனக் குரல் எழுப்புகின்றன.
அவர் தலைமையில் இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக மூன்றாவது அணி ஒன்றைக் கட்டியிருக்கலாமே என்பது சிலரது வாதம். தமிழக அரசியலில் மூன்றாவது அணி எப்போதுமே வென்றதில்லை. மூப்பனார் முயன்றார்... விஜயகாந்த் முயன்றார்... ராமதாஸ் முயன்றார்... தமிழிசைகூட முயன்றார்... கம்யூனிஸ்ட்டுகள் முயன்றார்கள். யாரும் வெற்றி பெறவில்லை. சரி, இந்தக் கூட்டணி வெற்றி பெறுமா? வெற்றி பெறுமா என்கிற கேள்வியுடன் எதிரே வந்து நின்றவரைப் பார்த்தார் வள்ளுவர்.
“வாசுகி கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா” என்று உள்ளே பார்த்துச் சொன்னார். வாசுகி குவளையில் தண்ணீரோடும் ஓர் ஊசியோடும் வந்தார். “இப்போது ஊசி வேண்டாம், குடிக்கத்தான் நீர் கேட்டேன்” என்று குவளைத் தண்ணீரைப் பருகிவிட்டுத் தொண்டையைச் செருமிக் கொண்டு கணீரென்ற குரலில் சொன்னார்: “அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும். பெருமை முயற்சி தரும்.”
- தொடர்புக்கு: maalan@gmail.com