சிறப்புக் கட்டுரைகள்

விழிப்புணர்வு விழாக்கள் வீண் விரயங்களா?

பெ.நா.மாறன்

மூன்று ஆண்டுகளுக்கு முன் எங்கள் நிறுவனத்தின் கடைக்கோடி மாவட்டத்தின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே கழிப்பறையை உபயோகிக்க வேண்டி உள்ளே சென்றேன். இருட்டாக இருந்த அறை நான் நுழைந்த மறு கணம் விளக்கு எரிய வெளிச்சம் பெற்றது. வெளியே வந்ததும் விளக்கு தானாகவே அணைந்தது. எங்கள் ஊழியர் ஒருவர் தன்னார்வமாக அங்கே ஓர் உணர்கருவி (சென்சார்) பொருத்தி இருப்பதாகச் சொன்னார்.

“பெரும்பாலும் கழிப்பறை விளக்குகள் 24 மணி நேரமும் எரிந்தபடி இருக்கின்றன. நம் அசைவினை உணர்ந்து விளக்குகள் எரியும்படி செய்ததில் கொஞ்சமாவது மின்சாரத்தைச் சேமிக்கிறோம்” என்றார். அவரைப் பாராட்டிவிட்டு, என்னுடைய தலைமை அலுவலக அறையில் அதனைப் பொருத்துவதற்கும் ஏற்பாடு செய்தேன்.

தனி அறையில் அமரும் வாய்ப்பு பெற்றுள்ள எந்த உயர் அதிகாரியும் ஒரு நாளில் மூன்று மணி நேரத்​துக்கு மேல் தன் அறையில் அமர்ந்​திருக்க இயலாது. கருத்​தரங்குகள், வெளி நிகழ்ச்சிகள் என்று எங்காவது வெளியே சுற்றியபடிதான் இருக்க வேண்டிவரும். ஆனால், அவர்களுடைய அறையில் மின் விளக்​குகள், குளிர்சாதன இயந்திரங்கள் காலை முதல் இரவு வரை பயன்பாட்டில் இருந்து​கொண்டே இருக்​கும்.

என்னுடைய அறையில் உணர்கருவி பொருத்​தப்​பட்டு, நான் இருக்​கும்போது மட்டுமே மின்கருவிகள் இயங்கும்படி செய்ததில் மின் செலவு எவ்வளவு மிச்ச​மாகிறது என்று கணக்கெடுத்து, எங்கள் அலுவலகச் சந்திப்பு​களில் அறிவித்​தேன். எல்லாரும் கைதட்​டி​னார்களே அன்றி, ஒருவரும் தம் அறைகளில் அதனைச் செயல்​படுத்​திடத் தயாராக இல்லை. ஓர் எளிய விஷயத்தை நடைமுறைப்​படுத்திப் பார்க்கத் தயாராக இல்லாத நாம் அடுத்​தவர்​களுக்குக் கருத்​தரங்குகள், போட்டிகள், விழாக்கள் மூலம் என்ன சொல்ல நினைக்​கிறோம் என்று கேட்டுப் பார்த்தும் பலனில்லை.

ஒவ்வோர் ஆண்டும் மின் சிக்கனம், எரிபொருள் சிக்கனம் குறித்து இருவார விழிப்பு​ணர்வு விழாக்கள் நடத்து​கிறோம். அதன் ஒரு பகுதி​யாகக் கல்லூரி​களில், பள்ளி​களில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்து​கிறோம். இவற்றில் ஆர்வத்​துடன் பங்கேற்​பவர்கள் பரிசு வெல்லும் நோக்கத்தைத் தாண்டி, அந்த விஷயங்களை எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்​கிறார்கள் என்பது விவாதத்​துக்​குரிய விஷயம். இந்த ஆண்டின் மின் சிக்கன விழா நிகழ்ச்சியின் இறுதி​யில், போட்டிகளில் வென்ற மாணவ - மாணவியருக்கு அவர்தம் பெற்றோர், ஆசிரியர்கள் முன்னிலையில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

என் அறையில் வெறும் ஐந்நூறு ரூபாய் செலவில் பொருத்​தப்பட்டிருக்கும் உணர்கருவி பற்றி நான் குறிப்​பிட்டு, “உங்கள் இல்லத்தில் குறிப்​பாகக் கழிப்​பறை​களில் இதுபோல் சென்சார் பொருத்தி, அது வேலை செய்யும் விதத்தைக் காணொளிக் காட்சியாக எனக்கு அனுப்புங்கள். முதலில் அனுப்பும் 25 பேருக்குத் தலா 1,000 ரூபாய் ஊக்கப் பரிசு” என்று அறிவித்​தேன். பெரிய கைத்தட்டல். இரண்டு மாதங்கள் கடந்து​விட்டன. ஒரே ஒரு நான்காம் வகுப்பு மாணவி மட்டும் அவருடைய தந்தை​யிடம் பேசித் தங்கள் வீட்டில் அதைப் பொருத்​தி​
யிருக்​கிறார்.

எங்கள் நிறுவனத்தின் சார்பில் சாலைப் பாதுகாப்பு வாரம் கொண்டாடப்​பட்ட​போது, தலைக்​கவசம் அணிவதன் முக்கி​யத்து​வத்தை மக்களுக்கு விளக்கும் பொருட்டு, முக்கிய நகரம் ஒன்றின் மையப்​பகு​தியில் வாகன ஓட்டிகளை நிறுத்தி, சாலைப் பாதுகாப்பு சம்பந்தமான சில விநாடி வினா கேள்வி​களைக் கேட்டோம்.

சரியான விடை அளிப்​பவர்​களுக்குப் பரிசு வழங்கியதோடு, தலைக்​கவசம் அணியாமல் குடும்பத்​துடனோ குழந்தை​களுடனோ வருபவர்​களுக்கு அறிவுரை வழங்கி இலவசமாகத் தரமான தலைக்​கவசங்​களும் வழங்கினோம்.

சிலர் தங்களிடம் தலைக்​கவசம் வீட்டில் இருப்பதாக ஒப்புக்​கொண்டு அதனை அணியாமல் பயணிப்​ப​தற்கு வருத்தம் தெரிவித்​தும், சிலர் புன்னகை​யுடனும் அவற்றைப் பெற்றுச் சென்றனர். மறுநாளே அந்தப் பகுதி போக்கு​வரத்துக் காவல் அதிகாரி அலைபேசியில் தொடர்​பு​கொண்டு, “சார், நீங்கள் நேற்று கொடுத்த தலைக்​கவசத்தையும் வீட்டில் வைத்து​விட்டு, இன்றும் வழக்கம்போல் செல்கிற சிலரை என்னால் அடையாளம் காண முடிகிறது” என்றார். மனம் சங்கடப்​பட்டது.

ஆண்டு​தோறும் எரிபொருள் சிக்கன வாரம், சாலைப் பாதுகாப்பு வாரம், சுற்றுச்​சூழல் விழிப்பு​ணர்வு வாரம் என்று பல்வேறு வார விழாக்கள் அரசு சார்பாகவும் தொழில் நிறுவனங்கள் சார்பாகவும் கொண்டாடப்​படு​கின்றன.

இவை பெரும்​பாலும் சம்பந்தப்பட்ட ஊழியர்​களுக்கும் மக்களுக்கும் அந்தந்தப் பொருள் குறித்த விழிப்பு​ணர்வு ஏற்படுத்து​வதைவிட இந்த ஆண்டு கொண்டாடப்​பட்டதா; சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு சிறப்​பாகக் கொண்டாடப்​பட்டு அதிகப் பணம் செலவழிக்​கப்​பட்டதா என்கிற புள்ளி​விவரப் பட்டியலை ஆண்டறிக்கையில் இணைப்​பதையே முதன்மை நோக்க​மாகக் கொண்ட​வையாக மாறிவரு​கின்றன. சுற்றுச்​சூழல் விழிப்பு​ணர்வு விழாக்​களின் சிறப்பு விருந்​தினர்​களுக்கு ஞெகிழியால் சுற்றப்பட்ட பூங்கொத்து​களையும் பரிசுப் பொருள்​களை​யும்தானே இன்றைக்கும் வழங்கிவரு​கிறோம்?

ஊழல் விழிப்பு​ணர்வு என்பது கிட்டத்தட்ட நகைமுரண் ஆகிவருகின்ற சமூகச் சூழலில், சிந்தனைப் போக்கே மாசுபட்டுக்​கொண்​டிருக்கும் அடுத்த தலைமுறை இளைய சமுதா​யத்தை எப்படிக் கறைபடாமல் தூய்மையாக வளர்த்​தெடுக்கப் போகிறோம்? கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றச் சென்றிருந்த​போது, “மாணவச் செல்வங்களே, நீங்கள் உங்கள் பெற்றோரிடம் ஏதாவது ஒன்றினைக் கேட்டு அவர்கள் வாங்கித் தருகிறபோது அவர்களிடம் ‘நீங்கள் நேர்மை​யாகச் சம்பா​தித்த காசில்தானே இதை வாங்கித் தருகிறீர்கள்? தயவுசெய்து எனக்காக நீங்கள் தவறு செய்து, அதன் தீய பலனை என் தலையில் சுமத்​தாதீர்கள்’ என்று கேள்வி கேட்கும் மனநிலையை வளர்த்​துக் ​கொள்​ளுங்கள். சமூகம் தானாகவே மெல்ல மெல்லத் தூய்மை​யாகி​விடும்” என்று குறிப்​பிட்​டேன்.

நிகழ்ச்சி முடிந்​தவுடன் கல்லூரித் தலைவர் என்னிடம் தனிமை​யில், “இந்தக் கருத்தினை மாணவர்கள் மத்தியில் சொல்வதை இனிமேல் தவிர்த்து​விடுங்கள் சார். இது வேறு சிக்கல்​களைத் தங்களுக்கு உண்டு பண்ணலாம்” என்று வேண்டு​கோளாகத் தெரிவித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. எந்தத் ​திசையில் பயணித்​துக்​கொண்​டிருக்​கிறோம் ​நாம்​?

- தொடர்புக்கு: pnmaran23@gmail.com

SCROLL FOR NEXT