1950 ஆம் ஆண்டு இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு. ஆம், அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு, உலக அரங்கில் குடியரசு நாடாக தன்னைப் பறைசாற்றிக் கொண்டது. அதே ஆண்டு இன்னொரு வகையில் உலக இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. 1950, ஏப்ரல் 15 ஆம் நாள் அத்தகைய சிறப்பிற்கு காரணமாக இருந்தது.
குழந்தை இலக்கியத்தின் அடையாளமாகத் திகழ்ந்து வருகிற அழ.வள்ளியப்பா சென்னையில், பதிப்புத்துறை வித்தகரும் தனது நண்பருமான பழனியப்பாவின் வீட்டில் ஏப்ரல் 15 அன்று ஒரு முக்கியமான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த வீடு தான் குழந்தைப் பதிப்பக அலுவலகமாகவும் அப்போது செயல்பட்டது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், சிறார் இதழ்களின் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள் என குழந்தை இலக்கியச் செழுமைக்கு வித்திடுகிற அனைத்து தரப்பிற்குமான அழைப்பு அது.
அந்தச் சந்திப்பு தான் குழந்தை இலக்கியத்தின் மிக முக்கியமான சரித்தரமாக மாறியது. ‘குழந்தை எழுத்தாளர் சங்கம்’ என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. பதிப்புத்துறையில் பல புதுமைகளை முயற்சித்த சக்தி வை.கோவிந்தன் தலைவராகவும் அழ.வள்ளியப்பா மற்றும் வானதி திருநாவுக்கரசு ஆகியோர் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன் பிறகு தெய்வ சிகாமணி, ஆர்.வெங்கட்ராமன், கல்வி கோபாலகிருஷ்ணன், சௌந்தர், நல்ல தம்பி எனப் பலரும் தலைவர் பொறுப்பில் இருந்து செயல்பட்டனர். 1955 ஆம் ஆண்டு சங்கத்தின்தலைவராக பொறுப்பேற்று கொண்டார் அழ.வள்ளியப்பா. பின்னர், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் குழந்தை இலக்கியம் பற்றி பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்தது; அதன் பின் அவரது மறைவு வரையிலுமாக சுமார் கால் நூற்றாண்டு காலம் என, சங்கத்தின் பொறுப்பில் இருந்து, குழந்தை இலக்கியத்தின் பொற்கால ஆட்சியை அழ.வள்ளியப்பா நடத்தினார் என்றே சொல்ல வேண்டும்.
இன்று புத்தகத் திருவிழாக்கள் தமிழ்நாடு அரசின் அக்கறை, முயற்சி காரணமாக மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்றன. கிட்டதட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை அப்படி அல்ல. ஆனால் சென்னையில் இந்தியாவின் முதல் புத்தகத் திருவிழாவை நடத்தியது குழந்தை எழுத்தாளர் சங்கம். படைப்பாளர்களின் முழு விவரங்களையும் கணினியில் ஒரு தட்டுத் தட்டி, தேடி எடுக்கும் காலம் அல்ல அன்று.
பல்வேறு புனைப் பெயர்களில் எழுதிக் கொண்டிருக்கும் தங்கள் விருப்பத்திற்குரிய எழுத்தாளர்களை அறியும் ஆவல் வாசகர்களுக்கு மிகுதியாக இருக்கும். அதை நிறைவு செய்யும் பொருட்டு அன்றே குழந்தை எழுத்தாளர் புகைப்படக் கண்காட்சியை நடத்தியது சங்கம். குழந்தை இலக்கிய எழுத்தாளர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தியது. நூல் வெளியிட முடியாதவர்களின் நிலைமை அறிந்து கையெழுத்து பிரதியையும் அனுப்பலாம் என அறிவித்து சிறந்த படைப்புகள் நூலாக்கம் பெற சங்கமே வழிவகை செய்தது. படைப்பாளர்களுக்குத் துணை நிற்கும் ஓவியர்கள், பதிப்பாளர்களையும் விழாக்களில் கவுரவித்து மகிழ்ந்தது.
1956ஆம் ஆண்டு, நவம்பர் 14ம் தேதி நேருவின் பிறந்த நாள் அன்று தில்லியில் அனைத்திந்திய புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த நேரு அனைத்து மொழிகளிலும் குழந்தைகளுக்காக வெளிவந்த நூல்கள் பற்றி அழ.வள்ளியப்பாவிடம் கருத்துப் பரிமாற்றம் செய்திருக்கிறார். அதன் விளைவு, அழ.வள்ளியப்பா அதை ஒரு பேரியக்கமாக மாற்றி விட்டார். ஆம், அடுத்து 1957ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு குழந்தைகள் தினத்திலும் குழந்தைகளுக்கான நூல்களை வெளியிடுவதை பதிப்பகங்கள், படைப்பாளர்களிடம் பேசி வழக்கப்படுத்தினார். 1957 – 1975 வரையிலும் அப்படி வெளிவந்த நூல்களின் எண்ணிக்கை 783.
குழந்தை எழுத்தாளர் யார்? எவர்? என்கிற தொகுப்புகளையும் சங்கம் வெளியிட்டது. 1975 ஆம் ஆண்டு சங்கத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு 370 பேருடைய விவரங்களை கொண்ட தொகுப்பு வெளியானது. புதியவர்களைப் பயிற்றுவிக்க அனுபவம் – அறிமுகம் எனும் நிகழ்ச்சிகள், வெளிநாட்டு குழந்தை இலக்கிய படைப்பாளிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், சிறார் நாடகத் திருவிழாக்களை நடத்தியது குழந்தை எழுத்தாளர் சங்கம். நூல்கள் வெளியிடுவதோடு தன் பணிகள் முடிந்து விட்டதாக கருதாத சங்கம், நூலகத்தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் தலைமையில்ஒருமுறை குழு அமைத்தது. 263 நூல்களைக் கொடுத்து நூல்களின் தரம், உள்ளடக்கம், வடிவமைப்பு பற்றி ஆய்வு செய்து தரக் கோரியது. ஆய்வு முடிவுகளையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டனர்.
1959 ஆம் ஆண்டில் இருந்து குழந்தை இலக்கிய மாநாடுகளையும் நடத்தத் தொடங்கியது சங்கம். 1959, 1961, 1963, 1972, 1977, 1979, 1981, 1987 என எட்டு மாநாடுகளை மிகச் சிறப்பாக நடத்தியது. மாநாடுகளில் குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் என மிக முக்கியமான ஆளுமைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குழந்தைகளுக்காக எழுதிய அமெரிக்க எழுத்தாளர் மன்றோ லீப், “குழந்தைகளுக்காக எழுதுவோர் ஒன்று கூடி சங்கம் அமைத்திருப்பது பாராட்டிற்குரியது; வரவேற்கத் தக்கது; உலகத்திற்கே ஒரு புதுமை” என்று பாராட்டி இருக்கிறார். இத்தகைய சிறப்பு மிக்க பணிகளை மேற்கொண்ட சங்கம் 1975 ஆம் ஆண்டு தமது வெள்ளி விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடியது. இந்த 2025 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் பவள விழா ஆண்டாகும். ‘‘என் குழந்தைக்கு என்ன புத்தகம் வாங்கித் தரலாம்? எங்கு கிடைக்கும்?’’ என்று இன்றும் கூட ஏராளமான பெற்றோர்கள் கேட்பது உண்டு. இதற்காகத்தான், 1987 ஆம்ஆண்டிலேயே குழந்தைகளுக்காக வெளிவந்த நூல்களின் விவரத் தொகுப்பினைதமிழக அரசு வெளியிட வேண்டும் என சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது. இப்போதும் அந்த கோரிக்கை பொருத்தமான ஒன்று தான்.
ஏராளமான வீடுகளுக்கு குழந்தை இலக்கிய நூல்கள் சென்று சேர வேண்டும். குழந்தைகளின் கைகளில் அந்நூல்கள் தவழ வேண்டும். விலை குறைய வேண்டுமாயின் குழந்தை இலக்கிய நூல்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்பது குழந்தை எழுத்தாளர் சங்க வெள்ளி விழா (1975) மாநாட்டின் மிக முக்கிய கோரிக்கை ஆகும். இப்போதும் அந்த கோரிக்கை நீடிக்கிறது. சிறார் இலக்கிய வளர்ச்சியின் அனைத்துக்கோணங்களிலும் சிந்தித்து செயல்பட்ட குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் பணிகளைப் போற்றுவோம்; குழந்தை இலக்கியப் பயிர் வளர்ப்போம்; வளர்த்தெடுப்போம்.