சிறப்புக் கட்டுரைகள்

ஊடகங்கள் நினைத்தால் தற்கொலைகளைத் தடுக்கலாம்! - மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார்

ஆனந்தன் செல்லையா

மனநல மருத்துவத் துறையில் இந்திய அளவில் அறியப்பட்ட ஆளுமை, மருத்துவர் லட்சுமி விஜயகுமார். 1986இல் இவர் தொடங்கிய ‘சினேகா’ என்கிற அமைப்பு, தற்கொலைத் தடுப்புப் பணிகளில் நாட்டுக்கே முன்மாதிரியாக விளங்குகிறது. ஐ.நா. போன்ற உலக அளவிலான அமைப்புகளின் மனநல மேம்பாட்டுப் பணிகளிலும் பங்கேற்றுள்ள இவரது நேர்காணல்:

மனநலச் சிக்கல் குறித்த புரிதல் சமூகத்தில் முன்பைவிட மேம்பட்டுள்ளதா? - மக்​களிடையே மனத்தடை முழுமையாக நீங்க​வில்லை என்றாலும், விழிப்பு​ணர்வு ஏற்பட்​டுள்ளது. மனநல மருத்​துவத்​துக்கு அங்கீ​காரம் கிடைத்​துள்ளது; கரோனா பெருந்​தொற்றுக் காலத்தில் மனநலம் எவ்வளவு முக்கிய​மானது என்பது பரவலாக உணரப்​பட்டது. மனச்சிதைவு (Schizophrenia), இருமுனையக் கோளாறு (Bipolar disorder) போன்ற பிரச்சினைகள் எப்போதுமே இருக்​கின்றன. கடந்த 30 ஆண்டு​களில் மன அழுத்தம், மனப் பதற்றம் (Anxiety) ஆகிய பிரச்சினைகள் அதிகரித்​துள்ளன. மாற்றம் வேகமாக நடக்கிறது. நேற்று கற்றுக்​கொண்டது, இன்றைக்குத் தேவையற்​ற​தாகி​விடு​கிறது.

குழந்தைகளும் மாணவர்களும் மன அழுத்தத்துக்கு உள்ளாவது அதிகரித்துள்ளதே? - ஏறத்தாழ 30 ஆண்டு​களுக்கு முன், தங்கள் குழந்தை​களின் படிப்பு குறித்த பெரிய திட்ட​மிடல்கள் பெற்றோருக்கு இல்லை. இப்போது குழந்தை​களின் படிப்பு குறித்துப் பெற்றோருக்குப் பல ஆசைகள் இருக்​கின்றன. ஆனால், தங்கள் ஆசைகளைக் குழந்தைகள் மீது திணிக்​கும்​போது, பல குழந்தை​களால் சமாளிக்க முடிவ​தில்லை. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க முடியாது. ஒவ்வொரு​வருக்கும் ஒரு தனித்​தன்மை இருக்​கிறது.

மதிப்​பெண்ணை முன்னிறுத்தும் கல்வி அமைப்​பையும் நாம் குறைகூற வேண்டி​யுள்ளது. பொறியியல், மருத்​துவப் படிப்​புக்கான தேர்வு​களில் ஒரு மதிப்​பெண், இரண்டு மதிப்பெண் வித்தி​யாசத்தில் மாணவர்கள் வாய்ப்பை இழக்கின்​றனர். ஒரே ஒரு தேர்வில் வெற்றி பெறுவதை மட்டும் தகுதி​யாகக் கருதாமல், ஆண்டு முழுவதும் மாணவர் பெறும் மதிப்​பெண், அவர்களது விருப்பம் போன்ற​வையும் கணக்கில் எடுத்​துக்​கொள்​ளப்பட வேண்டும்.

தற்கொலை எண்ணத்தில் இருந்த ஒரு பள்ளி மாணவி, 2024இல் என்னிடம் அழைத்து வரப்பட்​டார். அம்மா, அப்பா இருவருமே மருத்​துவர்கள். மாணவி மிக நன்றாகப் படிக்​கக்​கூடியவர். தேர்வு நேரத்தில் அவருக்கு டைபாய்டும் சின்னம்​மையும் வந்து​விட்டன. 90% மதிப்பெண் எடுத்​திருந்​தா​லும், மருத்​துவப் படிப்பில் சேர முடியாத​தால், மன அழுத்​தத்​துக்கு அவர் உள்ளாகி​யிருந்​தார். “பாடங்கள், டென்னிஸ், பரத நாட்டியம் எல்லாம் எனக்குக் கற்றுத்​தந்​தனர். தோல்வி ஏற்பட்டால் எப்படி எதிர்​கொள்வது என யாருமே கற்றுத் தரவில்லை” என அந்த மாணவி கூறினார். பிரச்சினைக்குத் தீர்வு காணும் மனநிலையைச் சிறு வயதிலேயே குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும்​.

பெண்கள் மனநலச் சிக்கல்களுக்கு உள்ளாகும் சாத்தியம் அதிகம் இருக்கிறதா? - எல்லா நாடுகளிலும் மன அழுத்​தத்​துக்கு அதிகம் உள்ளாவது பெண்கள்​தான். ஆனால், அதிகமாக ஆண்கள்தான் தற்கொலை செய்து​கொள்​கின்​றனர். பெண்கள் தங்களுக்குப் பிரச்சினை எனில், யாரிட​மாவது அதைப் பற்றிப் பேசுகின்​றனர். ஆண்கள் அப்படிப் பேசுவதால் தங்கள் மரியாதை பாதிக்​கப்​படும் எனக் கருதுகின்​றனர்; பலர் மன அழுத்​தத்தைச் சமாளிக்க மது அருந்துகின்​றனர்; மதுவுக்குப் பழகி, நாளடைவில் தற்கொலை முடிவை எடுக்​கின்​றனர். இந்தியாவில் 30% தற்கொலைகள் குடிபோதையில் இருக்​கும்போது நிகழ்​கின்றன. இந்தியாவில் பெண்கள் இறப்ப​தற்கான காரணி​களில் பிரசவ மரணங்​களைவிட, தற்கொலைகள் முன்னணி வகிக்​கின்றன என்பதும் கவலைக்​குரியது.

தற்கொலை குறித்த செய்திகளை வெளியிடும்போது ஊடகங்களின் பொறுப்பு என்ன? - ஊடகங்கள் இதில் பரபரப்பை உருவாக்க முயலக் கூடாது. படம் போட்டு, ஆர்வத்தைத் தூண்டும் தலைப்பு வைத்து, தற்கொலை செய்த விதத்தை விவரமாகக் கூறும்​போது, அதைத் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரிக்​கின்றன. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து, நாங்கள் ஓர் ஆய்வை மேற்கொண்​டோம். ஊடகங்​களின் பரபரப்பு பாணி அணுகு​முறை​யால், தற்கொலைகள் 15% அதிகரிப்பது ஆய்வில் தெரிய​வந்தது.

பல ஆண்டு​களுக்கு முன், ஒரு நிகழ்ச்சிக்காக இயக்குநர் பாலசந்​தரைப் பார்க்கச் சென்றிருந்​தேன். “தற்கொலைக்கு எதிரான விழிப்பு​ணர்வைப் பரப்பும் உங்கள் நிகழ்ச்சியில் கலந்து​கொள்ளும் தகுதி எனக்கு இல்லை” என மறுத்த அவர், தனக்கு வந்த சில கடிதங்​களைக் காட்டி​னார்.

அவர் இயக்கிப் பெரும் வெற்றி பெற்ற ‘ஏக் துஜே கேலியே’ படத்தைப் பார்த்து​விட்டுச் சிலர் எழுதிய கடிதங்கள் அவை. அந்தப் படத்தின் நாயகனும் நாயகியும் முடிவில் தற்கொலை செய்து​கொள்​வார்கள். ‘எங்களுடைய பிரச்சினைக்காக நாங்களும் இதே முடிவை எடுக்​கிறோம்’ என அந்தக் கடிதங்​களில் எழுதப்​பட்​டிருந்தது. “எத்தனை பேர் இப்படித் தவறான முடிவெடுத்​தார்​களோ?” என பாலசந்தர் வருந்​தி​னார்.

அதற்குத் தீர்வாக, “தற்கொலை எண்ணத்தில் இருப்​பவர்கள், அதிலிருந்து வெளியேறி வாழ்க்கையை எதிர்​கொள்​வதுபோல ஒரு படம் எடுங்கள்” என நான் கூறினேன். அவர் ‘வானமே எல்லை’ எடுத்​தார். அந்தப் படத்தைப் பார்த்துத் தற்கொலை முடிவைக் கைவிட்​ட​தாகப் பலர் அவருக்குக் கடிதம் எழுதினர். ஊடகத்தால் தற்கொலையைப் பரபரப்​பாக்கி, அதிகப்​படுத்​தவும் முடியும்; அதிலிருந்து மீண்டு வரலாம் எனக் கூறித் தடுத்​து​நிறுத்​தவும் முடியும்​.

‘சினேகா’வின் முக்கியமான பங்களிப்புகளைப் பகிர முடியுமா? - தேர்வு முடிவுகள் வெளியாகும்​போது, மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகம் நிகழ்வது குறித்து ஓர் ஆய்வு நடத்தினோம். தற்கொலை செய்வோரில் மாணவி​கள்தான் அதிகம். தேர்ச்சி பெறாத மாணவனுக்கு மீண்டும் படிக்கக் குடும்பத்தில் வாய்ப்பு அளிக்​கப்​படும். மாணவிகள் தேர்ச்சி பெறாதபோது அவர்களது படிப்பே நிரந்​தரமாக நிறுத்​தப்​பட்டு விடுவதுதான் இதற்குக் காரணம். 2003இல் பெற்றோர் சார்பாக ஒரு கடிதத்தை அன்றைய தமிழகக் கல்வித் துறையிடம் அளித்​தோம்.

“நாம் இந்த மாணவர்​களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தால் போதும். ஒன்று அல்லது இரண்டு பாடங்​களில் தேர்ச்சி பெறாதோர்தான் தற்கொலை செய்வோரில் அதிகம். இதற்காக அவர்கள் ஓராண்டையே தவறவிடும் நிலை உள்ளது. தேர்வு முடிவுக்கு அடுத்த இரண்டு மாதங்​களுக்குள் இந்த வகையினருக்​காகக் கூடுதல் தேர்வு நடத்துங்கள்.

‘விரை​விலேயே மீண்டும் தேர்வு எழுதி மற்றவர்​கள்போல நாமும் படிப்பைத் தொடரலாம்’ என்கிற நம்பிக்கையில் தற்கொலை முடிவுகள் தவிர்க்​கப்​படும்” எனக் கோரிக்கை வைத்தோம். எங்கள் ஆலோசனையைப் பாராட்டிய அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, அன்றே அதை 12ஆம் வகுப்பு மாணவர்​களுக்​காகச் செயல்​படுத்த உத்தர​விட்​டார். இந்தியா​விலேயே முதன்​முதலாகத் தமிழகத்​தில்தான் கூடுதல் தேர்வு முறை (Supplementary exam) கொண்டு​வரப்​பட்டது. தமிழகத்தில் தேர்வு முடிவு​களால் நிகழும் தற்கொலை, முன்பைவிட 70% குறைந்துள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்​னார்​கோயில் பகுதியில் மக்கள் பூச்சிக்​கொல்லியை அருந்தித் தற்கொலை செய்வது முன்பு அதிகம் நிகழ்ந்தது. அதைத் தடுப்​ப​தற்காக கண்டமங்கலம் என்னும் ஊரில் ஒவ்வொரு விவசா​யிக்கும் தனித்தனி லாக்கர்களை அமைத்​தோம். ‘பூச்சிக்​கொல்லியைத் தோட்டத்​திலோ, வீட்டிலோ வைக்காதீர்கள். இந்த லாக்கரில் வைத்துப் பூட்டுங்கள். தேவைப்​படும்போது மட்டும் எடுத்​துக்​கொள்​ளலாம்’ எனக் கூறினோம்.

இந்த நடைமுறைக்குப் பின்னர், கடந்த பத்து ஆண்டுகளாக அங்கே பூச்சிக்​கொல்லி காரணமான தற்கொலை நிகழவில்லை. ‘குறைந்த செலவிலான தடுப்பு நடவடிக்கை’ என இதை உலகச் சுகாதார நிறுவனம் பாராட்​டியது.தற்கொலைத் தடுப்​புக்கெனத் தேசிய அளவிலான செயல்​திட்​டத்தை உருவாக்கி மத்திய அரசிடம் முன்வைத்​துள்ளோம். இதை அரசு ஏற்றுக்​கொண்​டாலும், இன்னும் அமல்படுத்​தவில்லை. அதை மாநில அளவில் அமல்படுத்​துமாறு தமிழக அரசிடமும் கூறிவரு​கிறோம். விரைவில் அது அமலுக்கு வரும் என நம்புகிறேன்​.

- தொடர்புக்கு: anandchelliah@hindutamil.co.in

SCROLL FOR NEXT