சிறப்புக் கட்டுரைகள்

மகிழ்ச்சியின் அளவுகோல் என்ன?

ஜி.எஸ்.எஸ்

உலகின் மிக மகிழ்ச்சியான நாடு எது? ஃபின்லாந்து. அப்படித்தான் கூறுகிறது, சமீபத்தில் ஐ.நா. அவை வெளியிட்டிருக்கும் ஒரு கணக்கெடுப்பு. 147 நாடுகளுக்கிடையே நடத்தப்பட்ட கணக்கெடுப்பு இது. ஆண்டுதோறும் இப்படி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக ஃபின்லாந்து முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த இடங்கள் டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன் ஆகியவற்றுக்குக் கிடைத்திருக்கின்றன.

‘​நார்டிக் பகுதி’ (Nordic Region) என அழைக்​கப்​படும் பிராந்​தி​யத்தைச் சேர்ந்த இந்த நாடுகளில் வசிக்கும் மக்கள்தான் அவ்வளவு மகிழ்ச்சிகரமாக வாழ்கிறார்கள். வட ஐரோப்​பாவில் உள்ள சில நாடுகள் நார்டிக் நாடுகள் எனப்படு​கின்றன. டென்மார்க், ஸ்வீடன், நார்வே, ஃபின்​லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்​லாந்து போன்ற சில தீவுப் பகுதிகள் இவற்றில் அடங்கும். வரலாறு, புவியியல், கலாச்​சாரக் காரணங்​களால் இவை ஒன்று​பட்​டுள்ளன. நார்டிக் என்ற சொல்லுக்கு ஸ்காண்​டிநே​வியன் மொழியில் வடக்கு என்று பொருள்.

அக்கறை உள்ள அரசுகள்: எல்லாம் சரி, எப்படி இவர்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக வாழ முடிகிறது என்பதுதான் கேள்வி. சொல்லப்​போனால் ஃபின்​லாந்தில் வரி விகிதம் அதிகம். நீண்ட காலத்​துக்குக் கடும் குளிர்​காலம் நீள்கிறது. எனினும் நார்டிக் நாடுகளில் அரசுகள் உறுதியாக உள்ளன. மக்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்​கின்றன.

பெண்களுக்குப் பணியிடங்​களில் சுதந்​திரத்தையும் சமத்து​வத்தையும் அளிக்​கின்றன. இந்தப் பகுதி​களில் தற்கொலை சதவிகிதம் பெரிதும் குறைந்து​வரு​கிறது. அதுமட்டுமல்ல, தனிநபர் சராசரி வருமானம் இங்கு அதிகம்.

அமெரிக்கா, ஜெர்மனி போன்றவை இந்தப் பட்டியலில் முதல் 20 இடங்களில் இருந்து வீழ்ந்​திருக்​கின்றன. சமூக ஊடகங்கள், மாறுபட்ட சூழல்கள், மனநலம் குறித்த விழிப்பு​ணர்வு போன்றவை இப்படி மாறுபட்​டதற்குக் காரணமாக இருக்​கக்​கூடும். உக்ரைன் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டியலில் கொஞ்சம் முன்னேறி வந்திருக்​கிறது. போர்ச் சூழலில், ஒன்றிணைந்த தேசிய ஒற்றுமை இதற்குக் காரணமாக இருக்​கக்​கூடும்.

உணர்வு​களுக்கு மதிப்பெண்: மக்களின் மகிழ்ச்சி அளவை எப்படி இவர்கள் அளவெடுக்​கின்​றனர்? ஐ.நா. அவை இதற்காக ‘கால்அப்’ (Gallup) என்ற அமைப்பைப் பயன்படுத்​திக்​கொள்​கிறது. பங்கேற்​பவர்​களிடம் ‘நீங்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்​கிறீர்கள் என்பதை பூஜ்யத்​திலிருந்து 10 என்கிற எண்ணுக்குள் ஒன்றைக் குறிப்​பிட்டு உணர்த்​துங்கள்’ என்கிறது. மிக வருத்தமாக இருந்தால் பூஜ்ஜியம்.

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தால் 10. தனிநபர் வருமானம், சமூக ஆதரவு, ஆரோக்​கியமான ஆயுள், தாங்கள் விரும்​புவதைத் தேர்ந்​தெடுக்கும் சுதந்​திரம், நாட்டில் நிலவும் தர்ம சிந்தனை, அரசிடம் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை போன்ற​வற்றை அடிப்​படை​யாகக் கொண்டு இந்த மகிழ்ச்சியின் அளவு கணக்கிடப்​படு​கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உள்ள 1,000 பேரிடம் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்​படு​கிறது. இப்படி நடத்தப்பட்ட சமீபக் கணக்கெடுப்​பில்தான் ஃபின்​லாந்தைச் சேர்ந்​தவர்கள் சரசரியாக 7.7 என்கிற மதிப்​பெண்ணை வெளிப்​படுத்தி இருக்​கிறார்கள் (உலக அளவில் இது 5.6 மட்டுமே).

இந்தக் கணக்கெடுப்பில் வருமானம் குறைவாக இருந்​தா​லும், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக லத்தீன் அமெரிக்​காவைச் சேர்ந்த பலர் கூறியிருக்​கிறார்கள். தாங்கள் அடிக்கடி சிரிப்​ப​தாகவும் மகிழ்ச்சி​யடைவ​தாகவும் கூறியிருக்​கிறார்கள். இது குறித்த ஆய்வில் அங்கு உள்ளவர்கள் தனியாக உணவு உண்ணாமல் பலரோடு சேர்ந்து சாப்பிடு​வதால் தங்கள் மகிழ்ச்சி நேரம் அதிகரிப்​பதாக, ஒரு முடிவுக்கு வந்திருக்​கிறார்கள்.

லத்தீன் அமெரிக்​காவில் உள்ளவர்கள் குடும்ப​மாகவோ நண்பர்​களுடனோ சேர்ந்து வாரத்​துக்கு ஒன்பது முறையாவது சாப்பிடு​கிறார்​களாம். இதன் காரணமாக அவர்கள் தனிமை உணர்வு பெரிதும் குறைகிறது. அமெரிக்​காவில் தனியாகச் சாப்பிடும், வாழும் பழக்கம் அதிகரித்து​வரு​கிறது. அங்கு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 18% இளைஞர்கள் தங்களுக்கு நெருக்​க​மானவர் என்று யாரையும் குறிப்பிட முடியாது என்கிறார்கள்.

கணக்கெடுப்பின் முக்கி​யத்துவம்: பொருளாதார வளர்ச்சி மட்டுமே ஒரு நாட்டின் மக்களை மகிழ்ச்சிகரமாக ஆக்கி​விடாது என்பதை இது உணர்த்து​கிறது. சமூக இணைப்பு என்பது வாழ்வின் தரத்தை நிர்ண​யிக்கும் மிக முக்கியமான அளவீடு என்பதும் இதன்மூலம் தெரிகிறது. சரி, இந்த 147 நாடுகளில் இந்தியா எங்கே இருக்​கிறது? 118ஆவது இடத்தில்! (கடந்த ஆண்டு பெற்றிருந்த 126 என்கிற இடத்தைவிட இப்போது பரவாயில்லை என்று வேண்டு​மானால் ஆறுதல் பட்டுக்​கொள்​ளலாம்).

வியப்பை அளிக்​கக்​கூடிய ஒரு புள்ளி​விவரம் என்ன தெரியுமா? பாகிஸ்தான் நம்மைவிட முன்னணியில் இருக்​கிறது (109). தெற்கு ஆசிய நாடுகளில் நேபாளம் தன்னை அதிக மகிழ்ச்சிகரமான நாடாக வெளிப்​படுத்​திக்​கொண்​டுள்ளது. 92ஆவது இடத்தில் அந்நாடு இருக்​கிறது. தங்கள் வாழ்க்கை மிகவும் துயரமாக இருக்​கிறது என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றிருப்பது ஆப்கானிஸ்​தான். தொடர்ந்து போரினால் சீரழிந்து​வரும் நாடு இது.

இந்த மக்கள் 1.4 என்றுதான் தங்கள் மகிழ்ச்சியின் அளவை உணர்த்தி​யிருக்​கிறார்கள். அரசியல், பொருளா​தாரம், சமூகச்​சூழல் போன்ற பல கோணங்​களில் வஞ்சிக்​கப்​பட்​டுள்ள மக்கள் இவர்கள்! இந்தப் புள்ளி​விவரத்​திலிருந்து பொருளாதார வளர்ச்சி அவசியம்தான் என்றாலும், அதை மட்டுமே எல்லா​வற்றுக்கும் முன்னிறுத்துவது தவறு என்பது தெரிய​வந்​திருக்​கிறது. இந்தப் பின்னணியில் பெரிதும் பின்தங்​கி​யுள்ள தெற்காசிய நாடுகள் மற்ற அம்சங்​களில் கவனம் செலுத்தத் தயாராக வேண்டும். அதுவே மக்களின் மகிழ்​ச்சியை உறுதிப்​படுத்​தும்​.

- தொடர்புக்கு: aruncharanya@gmail.com

SCROLL FOR NEXT