சிறப்புக் கட்டுரைகள்

புதிய காலநிலை அறிக்கை: செயல்பாட்டுக்கான அறைகூவல்

நாராயணி சுப்ரமணியன்

2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய காலநிலை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முக்கியமான அறிக்கையை உலக வானிலை ஆய்வு அமைப்பு (World Meteorological Organisation) தயாரித்திருக்கிறது. காலநிலை மாற்றம் எவ்வளவு தீவிரமானதாக மாறிவருகிறது என்பதை இந்த அறிக்கையின் தரவுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

அதிகரித்து​வரும் வெப்பம்: தொழிற்​புரட்​சிக்கு முந்தைய காலத்​துடன் ஒப்பிடும்போது உலகளாவிய சராசரி வெப்பநிலை எவ்வளவு அதிகரித்​திருக்​கிறது என்பதே காலநிலை மாற்றத்தின் முக்கியமான அலகு. உலகளாவிய சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சி​யஸுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது எனவும், முடிந்தால் அதை 1.5 டிகிரி செல்சி​யஸுக்குள் கட்டுப்​படுத்த வேண்டும் எனவும் காலநிலைக்கான பாரிஸ் ஒப்பந்​தத்தில் தெரிவிக்​கப்​பட்டு
இருந்தது.

175 ஆண்டுகளாக வெப்பநிலைத் தரவுகள் சேகரிக்​கப்​பட்டு வருகின்றன. அந்த அடிப்​படையில் பார்த்​தால், இதுவரை ஆவணப்​படுத்​தப்பட்ட ஆண்டு​களிலேயே அதிக வெப்பநிலை கொண்டது 2024தான். 2015 முதல் 2024 வரையிலான 10 ஆண்டு​களுமே மிகவும் அதிக வெப்பநிலை கொண்டிருந்தன என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. 2024ஆம் ஆண்டின் உலக சராசரி வெப்பநிலை தொழிற்​புரட்​சிக்கு முந்தைய அளவைவிட 1.55 டிகிரி அதிகரித்​திருந்தது.

அதாவது, உலக வெப்பநிலை முதன்​முறையாக 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்​திருக்​கிறது. ஓர் ஆண்டை மட்டுமே வைத்து 1.5 டிகிரி உச்சவரம்பை எட்டி​விட்டோம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது ஓர் ஆரம்பக்கட்ட எச்சரிக்கை என்பதில் சந்தேகமில்லை. அடுத்​தடுத்த ஆண்டு​களிலும் இதே வெப்பநிலை தொடர்ந்தால் பாரிஸ் ஒப்பந்​தத்தின் அதிகபட்ச இலக்கை எட்ட முடியாத சூழல் ஏற்படும்.

சில ஆண்டு​களுக்கு முன்பாக இந்த உச்சவரம்​பு​களைப் பற்றிப் பல ஆய்வுகள் நடந்தன. அப்போது இருந்த காலநிலைச் செயல்​பாடுகளை முன்வைத்தே இந்த ஆய்வுகள் நடத்தப்​பட்​டிருந்தன. கரிம உமிழ்வுகள் இப்படியே தொடர்ந்து, சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 1.5 டிகிரி செல்சி​யஸைத் தாண்டி​விட்​டால், பிறகு வெப்பநிலையைக் கட்டுப்​படுத்தவே முடியாது எனப் பல காலநிலை வல்லுநர்கள் கூறியிருக்​கிறார்கள். 2 டிகிரி செல்சியஸ் உச்சவரம்​புக்குள் இருப்​ப​தற்கும் நாம் அதிகமான முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று அவர்கள் எச்சரித்​திருந்​தார்கள். அந்தப் பின்னணியில் பார்த்தால் இந்த வெப்பநிலைத் தரவு கவலையளிக்​கக்​கூடியது. நாம் ஏற்கெனவே உச்சவரம்பின் முதற்​படியைத் தொட்டு​விட்​டோம்.

1.5 டிகிரி செல்சியஸ் என்கிற இலக்கைத் தாண்டும்போது பல புதிய சிக்கல்கள் உருவாகலாம். காலநிலையின் பல சுழற்சி​களும் வலைப்​பின்னல்​களும் நிரந்​தரமாக அறுபடலாம். அதற்கான முன்னேற்​பாடுகள் நம்மிடம் இல்லை. அது மட்டுமல்​லாமல், ஒரு குறிப்​பிட்ட உச்சவரம்பைத் தாண்டிய பிறகு, ஏற்கெனவே இருக்கும் பாதிப்பு​களின் தீவிரத்​தன்​மையும் அதிகரிக்​கக்​கூடும்.

இதை Positive Feedback Loop என்பார்கள். பூமியின் காலநிலைக்கும் இந்தப் பண்பு உண்டு என ஏற்கெனவே வல்லுநர்கள் தெரிவித்​திருக்​கிறார்கள். ஆகவே, புதிய பாதிப்புகள் மட்டுமல்​லாது, ஏற்கெனவே நாம் எதிர்​கொண்டு​வரும் பாதிப்பு​களும் தீவிரமடைய​லாம். அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். பொதுவாக, சூரியனிலிருந்து வரும் வெப்பத்தில் 90% கடலில் சென்று சேர்கிறது. ஆகவே, கடல் வெப்பத்தின் அளவும் காலநிலையின் ஒரு முக்கிய அலகாகப் பார்க்​கப்​படு​கிறது. 2024இல் கடல் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டிருக்​கிறது.

கடந்த 65 ஆண்டு​களில் இல்லாத அளவுக்குக் கடலில் சேரும் வெப்பம் அதிகரித்​திருக்​கிறது. இதனால் கடல் சூழல் பாதிக்​கப்​படும் எனவும், வெப்பமண்டலக் கடற்பகு​தி​களில் புயல்கள் தீவிரமடையும் எனவும் இந்த அறிக்கை தெரிவிக்​கிறது.

கடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்: வெப்பம் மட்டுமல்​லாது, கடலின் பல்வேறு அம்சங்​களிலும் சென்ற ஆண்டு பல மாற்றங்கள் ஏற்பட்​டிருக்​கின்றன. 2024இல் கடல்நீரின் அமிலத்​தன்மை அதிகரித்​திருக்​கிறது. குறிப்பாக, இந்தியப் பெருங்​கடல், தென்கடல் ஆகிய பகுதி​களில் உள்ள கடல்நீரின் அமிலத்​தன்மை அதிகரித்​திருக்​கிறது. 1993 முதல் 2002 வரையிலான காலக்​கட்​டத்தில் கடல் மட்ட உயர்வானது ஆண்டுக்கு 2.1 மி.மீ. என்கிற அளவில் இருந்தது. 2015-2024 காலக்​கட்​டத்தில் இது 4.7 மி.மீ ஆக உயர்ந்​திருக்​கிறது. அதாவது, கடல்மட்ட உயர்வு இரு மடங்காக அதிகரித்​திருக்​கிறது. இந்தப் போக்கு தொடர்ந்​தால், கடலோரத்தில் வசிக்கும் மக்கள் அதிகமான பாதிப்​புக்கு உள்ளாக நேரிடும்.

1979 முதல் கடலில் உள்ள பனிப்​பாறை​களின் தரவுகள் சேகரிக்​கப்​பட்​டிருக்​கின்றன. எல்லா ஆண்டு​களோடும் ஒப்பிடும்போது 2024இல் கடல் பனிப்பாறை மிகவும் குறைவாக இருந்தது என்று இந்த அறிக்கை தெரிவிக்​கிறது. குறிப்பாக, ஆர்க்டிக் பகுதி​களில் உள்ள பல பனிப்​பாறைகள் சென்ற ஆண்டு உருகி​யிருக்​கின்றன. நிலப் பகுதி​களைப் பொறுத்தவரை நார்வே, ஸ்வீடன், ஸ்வால்​பார்ட் ஆகிய பகுதி​களில் உள்ள பனிப்​பாறைகள் அதிகமாக உருகி​யிருக்​கின்றன.

பேரிடர்​களும் இடப்பெயர்​வு​களும்: கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 151 தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்பட்​டிருக்​கின்றன. வெப்பமண்டலப் புயல்கள், வெப்ப அலைகள், காட்டுத்தீ நிகழ்வுகள், வறட்சி எனப் பல பேரிடர்கள் நிகழ்ந்​திருக்​கின்றன. இதுபோன்ற நிகழ்வுகளாலும் காலநிலை சார்ந்த பிரச்சினை​களாலும் கடந்த ஆண்டில் மட்டும் உலக அளவில் 3.6 கோடி பேர் இடம்பெயர்ந்​திருக்​கிறார்கள். காலநிலைப் பிரச்சினை​களால் ஏற்படும் இடப்பெயர்​வுகள் கடந்த பதினாறு ஆண்டு​களாகச் சேகரிக்​கப்​பட்டு​வரு​கின்றன. இந்தப் பதினாறு ஆண்டு​களிலும் மிக அதிகமான இடப்பெயர்வு ஏற்பட்​டிருப்பது 2024இல்​தான். இது இப்படியே தொடர்ந்தால் பல சமூகச் சிக்கல்கள் தீவிரமடைய​லாம்.

சுருக்​க​மாகச் சொல்ல வேண்டு​மென்​றால், கடந்த ஆண்டில் பல உலகளாவிய காலநிலை அலகுகள் புதிய உச்சத்தைத் தொட்டிருக்​கின்றன. “நாம் விழித்துக்​கொண்டாக வேண்டும், அதற்கான அறைகூவலே இந்த அறிக்கை” என்கிறார் உலக வானிலை அமைப்பின் பொதுச்​செய​லாளர் செலஸ்ட் சாலோ. காலநிலை பெரிய அளவில் மாறி வரு​கிறது என்று இந்த அறிக்கை அழுத்​தம்​திருத்தமாக முன்வைக்​கிறது. “அலாரத்தை அணைத்து​விட்டுத் தூங்கு​வதுபோல நாம் இனியும் காலம் தாழ்த்த முடியாது” என்கிறார் அறிவிய​லாளர் சாரா பெர்க்​கின்ஸ்.

இவ்வளவு பாதிப்புகளை உலகம் எதிர்​கொண்ட அதே 2024இல், கரிம உமிழ்வு​களும் உச்சத்தைத் தொட்டிருக்​கின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஒருபக்கம் நெருப்பு கொழுந்து​விட்டு எரிந்து​கொண்​டிருக்​கும்​போது, அதை அணைக்க எந்த முயற்​சியும் செய்யாமல், புதிய இடங்களில் தீவைப்​பது​போன்ற அபத்தமான செயல்பாடு இது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு காலநிலை மறுப்​பாளர். பதவிக்கு வந்த உடனேயே பாரிஸ் ஒப்பந்​தத்​தில் இருந்து அமெரிக்காவை அவர் விலக்​கி​னார்.

உலகளாவிய காலநிலைச் செயல்​பாடு​களில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்​தலாம் என்று கணிக்​கப்​பட்​டிருக்​கிறது. அது மட்டுமல்​லாமல், காலநிலை மறுப்​பாளர்​களும் புதைபடிவ எரிபொருள் ஆதரவாளர்​களும் இப்போதும் தீவிர​மாகச் செயல்​பட்டுக்​கொண்​டிருக்​கிறார்கள். இந்தப் பின்னணியில் இதுபோன்ற அறிக்கைகள் முக்கிய​மானவை. உடனடி​யாகவும் தீவிர​மாகவும் நாம் செயல்பட வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை இந்த அறிக்கை மீண்டும் வலியுறுத்து​கிறது. இதுபோன்ற அறிக்கைகளைப் பார்த்த பின்ன​ராவது காலநிலைச் செயல்​பாடுகள் முடுக்​கி​விடப்​படுமா என்பதே நம் முன் இருக்கும் முக்கியமான கேள்வி.

- தொடர்புக்கு: nans.mythila@gmail.com

SCROLL FOR NEXT