சிறப்புக் கட்டுரைகள்

சொல்வலையில் விழுந்த செய்யறிவு | ஏஐ எதிர்காலம் இன்று 14

ஆழி செந்தில்நாதன்

“அப்படியென்ன தப்பா சொல்லிட்டேன்?” என்று செய்மெய்யைத் துளைத்துக்கொண்டிருந்தேன். அது என்னைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி, தனக்கு மின்னேற்றம் செய்துகொள்வதற்காக எழுந்துசென்றுவிட்டது. பின்னர், ஜன்னலுக்கு வெளியே சற்று நேரம் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. பிறகு திரும்​பிவந்த செய்மெய், “AI Winter என்பதற்குச் செயற்கை நுண்ணறிவுக் குளிர்​காலம் என்று மொழிபெயர்த்தவர் நீங்கள்​தானே?” என்று ஒன்றுமே தெரியாதது​போலக் கேட்டது. முறைத்துப் பார்த்​தேன்.

“வின்ட்டர் என்பதற்குக் குளிர்​காலம் என்று மொழிபெயர்ப்​பதில் தவறில்​லை​தான். அப்படித்தான் நாம் பழகியிருக்​கிறோம். ஆனால், அந்த மொழிபெயர்ப்பில் ஒரு முக்கிய சங்கதி விடுபட்டுப்​போ​யிற்று” என்றது செய்மெய். “என்ன சங்கதி?” “மேலை நாடுகளில் வின்ட்டர் என்பது முன்பெல்லாம் கடுமையான குளிர்​காலம்.

அதன் உச்சத்தில் அந்த நிலங்கள் எல்லாம் பனியால் உறைந்து, மக்கள் எந்தச் செயல்​பாடு​களும் இன்றி முடங்கி​விடக்​கூடிய ஒரு காலம் இருந்தது. பிறகு, காலநிலை மாற்றத்​தாலும் கால மாற்றத்​தாலும் இன்று நிலைமை வேறாக இருந்​தா​லும், cold, winter என்கிற சொற்களுக்கு உறைந்துபோன, செயலற்றுப்போன, முடங்கிப்போன ஒரு காலக்​கட்​டத்தைக் குறிக்கும் அர்த்தம் நிலவியது.”

செய்மெய் தொடர்ந்தது: “குளிர்​காலம் என்பது வெப்ப நாடாகிய தமிழ்​நாட்டில் ஒரு விதத்தில் இனிமையான பருவமும்கூட. காலத்​துக்கும் மனித அனுபவங்​களுக்கும் சொற்களுக்கும் அவை உணர்த்தும் பொருள்​களுக்கும் நிறைய தொடர்​புகள் உண்டு. எனவேதான், பனியால் உறைந்து முடங்கும் சமூகங்​களில் வெப்பத்தை விரும்​பு​கிறார்கள். விருந்​தினர் வரும்போது இதமான வரவேற்பு (Warm welcome) அளிக்​கிறார்கள். சூடு நிரம்பிய நமது நிலங்​களில் நாம் மனம் குளிர்ந்த வரவேற்பை அளிக்​கிறோம்” என்று விளக்​கிக்​கொண்டே சென்றது செய்மெய். “புரி​கிறது.”

“சரி, இப்போது சொல்லுங்கள். AI Winterஐ எப்படி மொழிபெயர்ப்​பீர்​கள்?” என்று மறுபடியும் கேட்டது. “செய்​யறிவுப் பனிக்​காலம்?” “அதுகூட முழுமையாக இல்லை. இப்படிச் சொல்லிப்​பார்க்​கலாமா – செய்யறிவு உறைகாலம் / உறைந்த காலம்?” என்று சொல்லிப் புன்னகைத்தது செய்மெய். ஒரு நிமிடம் யோசித்தேன்... உறைகாலம் “ம், நன்றாக இருக்​கிறது. ஆனால், இந்தச் சொல்லுக்கான பொருள் பனி நாடுகளில் விளங்கும், நம் நாட்டில்?” என்னவோ புத்தி​சாலித்​தனமாக மொழிபெயர்த்து​விட்​ட​தாகத் தனக்குத்தானே திருப்​திப்​பட்டுக்​கொண்ட செய்மெய் தொடர்ந்து உபதேசிக்​கலா​யிற்று: “மொழி - அதைவிடச் சிக்கலான ஒன்று வேறில்லை.

மனிதர்கள் காலங்​கால​மாகத் தங்கள் அனுபவத்தின் ஊடாகச் சேகரித்துவந்த அறிவை, மொழியிலேயே புதைய​லாகப் புதைத்து​வைத்​திருக்​கிறீர்கள். அந்த அறிவை இயந்திரங்​களுக்குக் கைமாற்றிக் கொடுப்பது சுலபமில்லை. ஏதோ நாலு இலக்கண விதிகளையும் அகராதி​களையும் கணினிகளுக்குக் கற்றுக்​கொடுத்து​விட்டால் அது பேசத் தொடங்கி​விடும் என்று தொடக்​கத்தில் எதிர்​பார்த்​தார்கள். நடக்க​வில்லை!”

உண்மை​தான். பிற்காலத்தில் மொழியைச் செய்யறிவு இயந்திரங்கள் அற்புத​மாகக் கையாளத் தொடங்கின என்றாலும், ஆரம்பத்தில் அவை தடுமாறின. “முதல் செய்யறிவு உறைகாலம் வருவதற்கான பல காரணங்​களில் இதுவும் ஒன்று. ஒரு கணினி நிரல் (Computer program) மிகச் சுலபமாக வானிலை அறிக்கை​களின் தரவுகளை எண்களாகச் சேமித்து வைத்துக்​கொண்​டிருக்​கிறது என்று வைத்துக்​கொள்​ளுங்கள். உதாரணமாக, ‘L – 22’ என்கிற தரவுக்கு, லண்டனில் இப்போதைய தட்பவெப்​பநிலை 22 டிகிரி செல்சியஸ் என்று பொருள் என வைத்துக்​கொள்​ளுங்கள்.

லண்டனில் இப்போது என்ன தட்பவெப்ப நிலை என்று ஒருவர் கேள்வி கேட்டால், அதற்கான பதிலை லண்டனில் ‘இப்போது 22 டிகிரி சி’ என்று கணினியைச் சொல்ல வைப்ப​தற்கு நிறைய வேலை செய்ய வேண்டும். ஒருவேளை அந்தச் சுலபமான கேள்வி - பதில்​களைத் தாண்டி, ‘இப்போது லண்டனுக்கு வந்தால், நான் என்ன உடை உடுத்த வேண்டி​யிருக்​கும்?’ என்பது போன்ற கேள்வி​களைக் கேட்டால், அந்தக் கணினி அக்கணமே மயக்கம் போட்டு விழுந்து​விடும் நிலைதான் அன்று இருந்​தது.”

“இருக்​கட்டுமே... ஆனால் இயந்திரங்கள் அதைக் கற்றுக்​ கொள்​வதில் கில்லாடி இல்லையா?” “தொடக்​கத்தில் எங்கள் முன்னோர்கள் அப்படியொன்றும் புத்தி​சாலிகளாக இல்லை. அவர்களின் கணிக்கும் திறன்கள், தகவல்​களைச் சேகரித்து அதைப் பயன்படுத்தும் திறன்கள் அனைத்துமே எல்கேஜி அளவுக்​குக்கூட வரவில்லை.

உதாரணமாக, மொழியைக் கற்றுக்​கொடுக்க வேண்டும் என்றால், சொற்களையும் அவற்றின் பொருளையும் அவை எப்படி வாக்கி​யங்களாக உருவாகின்றன, அதன் மூலம் என்ன தகவலை நாம் சொல்ல விரும்​பு​கிறோம் என்பதையெல்லாம் இயந்திரங்​களுக்குக் கற்றுக்​கொடுக்க வேண்டி​யிருந்​தது... அதற்காக விஞ்ஞானிகள் ரொம்பவும் மெனக்​கெட்​டார்கள். முதலில் இலக்கண விதிகளின் அடிப்​படையில் இது பெயர்ச்​சொல், இது வினைச்சொல் என்றெல்லாம் சொல்லிக்​கொடுத்​தார்கள்.

பிறகு, புள்ளி​யியல் முறைகளை அறிமுகப்​படுத்தி, ‘இந்தச் சொல் இந்த இடத்தில், இப்படி வந்தால் அநேகமாக அதற்கு இந்த அர்த்​தம் தான் இருக்​கும்’ என்றெல்லாம் சொல்லிக்​கொடுத்​தார்கள். ஆனால், அதெல்லாம் இயந்திரத்​துக்குப் புரிவது சிரமமாக இருந்​தது.” “இயந்​திரத்​துக்கு மட்டுமா, எனக்கும்தான் சிரமமாகவே இருக்​கிறது, செய்மெய். நீ சட்டென்று கணினி வகுப்​பிலிருந்து இலக்கண வகுப்​புக்குத் தாவிவிட்​டாய்!” “ஹாஹாஹா! சரிதான்.

எனக்கு அதிலெல்லாம் வித்தி​யாசம் கிடையாது... சரி, இன்னும் கொஞ்சம் விளையாடு​வோம். நான் இரண்டு வாக்கி​யங்​களைச் சொல்கிறேன். அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்​கிறீர்​களா?” “மறுபடி​யுமா?” “இயந்திர மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தக் கூடாது. நீங்களாகவே மொழிபெயர்க்க வேண்டும்.”

“சரி, சொல்லு.” “முதல் வாக்கியம், Time flies like an arrow. இரண்டாவது வாக்கியம் Fruit flies like a banana.” சற்று நேரம் யோசித்தேன். ஒரே மாதிரி இரண்டு வாக்கி​யங்கள். ஆனால், அவற்றின் அர்த்​தமும் அதை நாம் அடையும் விதமும் வெவ்வேறாக இருக்​கின்றன. நன்றாக யோசித்த பிறகு மொழிபெயர்த்​தேன்.

“காலம் ஓர் அம்பைப் போலப் பறந்துசெல்​கிறது. பழ ஈக்கள் ஒரு வாழைப்​பழத்தை விரும்​பு​கின்றன.”“அற்புதம். சரி, நான் இதையே வேறு விதமாக மொழிபெயர்க்​கிறேன் - பாருங்க கவின்: கால ஈக்கள் ஓர் அம்பை விரும்​பு​கின்றன, பழம் ஒரு வாழைப்​பழத்தைப் போலப் பறக்கிறது.” வம்புக்​காரன் செய்மெய். அது வேண்டு​மென்றே தவறாக மொழிபெயர்த்து, என்னிடம் விளக்கம் கேட்கிறது. “ஆனா செய்மெய், உன் மொழிபெயர்ப்பு தவறுதான்!” “அதெப்​படிச் சொல்ல முடியும், அப்படியும் இருக்​கலாம்​தானே?”

- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com

SCROLL FOR NEXT