2025 ஜனவரி மாதம் செயற்கை நுண்ணறிவுத் துறையின் (ஏ.ஐ.) நெடும்பரப்பில் ‘புராஜெக்ட் ஸ்டார்கேட்’ (PROJECT STARGATE) என்னும் அறிவிப்பு வெளியானது. அமெரிக்காவின் தொழில்நுட்ப வல்லமையை உலகுக்கு அறிவிக்கும் வண்ணம் இருந்தது அந்த அறிவிப்பு.
சாட்ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓபன் ஏ.ஐ. நிறுவனம், ஆரக்கிள், சாஃப்ட்பேங், எம்.ஜி.எக்ஸ். ஆகிய தனியார் பெருநிறுவனங்கள் மேற்கொண்டுள்ள ஒரு கூட்டு முன்னெடுப்புதான் இந்தத் திட்டம். அடுத்த நான்கு ஆண்டுகளில் ஏ.ஐ. கட்டமைப்புகளில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் உருவாகியுள்ளது.
ஸ்டார்கேட் - டீப்சீக் மோதல்: ஏ.ஐ. துறையில், அமெரிக்கா அதன் மேலதிகாரத்தை நிறுவுவதற்குப் பெரும் விருப்பம் கொண்டிருப்பதை இந்த அறிவிப்பும் வெளிப்படுத்தியது. இந்தத் திட்டத்தை அமெரிக்காவின் தொழில்நுட்பத் தலைமைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று கூறுகிறார், இந்தத் திட்டத்தின் அரசியல் முகமாக இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். ஸ்டார்கேட் திட்டம் அறிவிப்பு வெளியான ஒரே வாரத்தில் வெளியான மற்றொரு செய்தி அந்தத் திட்டத்தின் மீது ஒரு பேரிடியாக வந்து இறங்கியது.
குறைந்த முதலீட்டில், அசல் மூலக் குறியீடு இலவசமாகக் கிடைக்கக்கூடிய முறையில் (ஓபன் சோர்ஸ்) உருவாக்கப்பட்ட ஏ.ஐ. செயலியான டீப்சீக் (DeepSeek), ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்ஜிபிடி செயலியைக் காட்டிலும் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டது. ஏ.ஐ. துறையில் ‘பிரம்மாண்ட முதலீடு’, ‘வேலைவாய்ப்பு உருவாக்கம்’ என்று அமெரிக்கா கட்டமைத்த பெரும் பிம்பத்தையும், அதன் தொழில்நுட்பச் செயல்திறமின்மையையும் டீப்சீக்கின் பாய்ச்சல் அம்பலப்படுத்தியதுடன், அது போன்ற பெரும் முதலீடு தேவைதானா என்கிற அடிப்படைக் கேள்வியையும் உலக அரங்கில் முன்வைத்தது.
இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்தனர்; உலக பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. என்விடியா (NVIDIA) நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் (2025 ஜனவரி 27) சுமார் 600 பில்லியன் டாலர் (ரூ.51.36 லட்சம் கோடி) அளவுக்குச் சரிந்தது. சில பெருநிறுவனங்கள் மட்டுமே எதிர்கொண்ட சவால் அல்ல இந்தச் சரிவு.
அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் என்றும் இதனைச் சுருக்கிவிட முடியாது. லாபம், ஏகபோக உரிமை, அதிகாரம், கட்டுப்பாடு ஆகிய காரணிகளால் நமது இன்றைய பொருளாதார முறை எவ்வாறு இயக்கப்படுகிறது என்பதைத்தான் இந்த ஸ்டார்கேட் - டீப்சீக் மோதல் அத்தியாயமும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
டீப்சீக் வெற்றியின் சூட்சுமம்: எதிர்கொண்ட சவால்களை எல்லாம் வெற்றிக்கான படிக்கற்களாக டீப்சீக் நிறுவனம் மாற்றிக்கொண்டது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இயந்திரங்கள் தயாரிப்புக்கு அவசியமான வன்பொருள் (Hardware) உற்பத்தியில் என்விடியா நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. அந்நிறுவனத்தின் H800 செயலாக்க அலகுகள் (Graphics Processing Units) கூட ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுடன்தான் சீனாவுக்கு விற்கப்படுகின்றன. இது போன்ற செயலாக்க அலகுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தொழில்நுட்பப் பின்னடைவுகளில் இருந்து மீண்டெழ வேண்டிய கட்டாயம் டீப்சீக் நிறுவனத்துக்கு ஏற்பட்டது.
தொழில்நுட்பரீதியாகப் பல அசாதாரண தீர்வுகளை, கணினி அமைப்புகளைக் (Mixture of Experts Architecture, Multi-head latent attention) கொண்டு, டீப்சீக் நிறுவனம் அதன் மாதிரிகளை (Models) அதிகச் செயல்திறன் மிக்கவையாக வடிவமைத்தது; குறைந்த செலவில் அதிகமான செயல்திறன் என்னும் இலக்கை எட்டிப் பிடித்தது. ஓபன் ஏ.ஐ. போன்ற பெருநிறுவனங்கள் நிர்ணயித்த விலையைக் காட்டிலும் பன்மடங்கு குறைந்த விலையில், அதேவேளை மிக அதிகமான செயல்திறன் கொண்ட ஏ.ஐ. மாதிரிகளை டீப்சீக் நிறுவனம் தயாரித்து, தொழில் துறைப் பயன்பாட்டுக்கும் வழங்கத் தொடங்கியது.
ஓபன் சோர்ஸ் முறையில் உருவாக்கப்பட்ட இது போன்ற ஏ.ஐ. மாதிரிகள், இந்தத் துறையில் பெரும் செல்வாக்குடன் திகழும் பெருநிறுவனங்கள் நிர்ணயித்த விலை - செயல்திறன் அளவீடுகளுக்கு மிகப்பெரும் சவாலாக எழுந்தன. அது மட்டுமன்றி, ஒரு மென்பொருள் (Software) மற்றொரு மென்பொருளுடன் தொடர்புகொள்வதற்கான ஒருங்கிணைப்புக் குறியீடுகளை (Application Programming Interface) டீப்சீக் மிகக் குறைந்த செலவில் வழங்கியது.
இதன் விளைவாக, தெற்குலக நாடுகளும், செயற்கை நுண்ணறிவுத் துறையில் இயங்கிவரும் சிறிய நிறுவனங்களும் ‘அமெரிக்கச் சார்புநிலை’ என்னும் நிலையில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியும் என்கிற புதிய சூழலை டீப்சீக் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மாபெரும் மூலதனப் பாய்ச்சலை (Massive Capital Inflow) நியாயப்படுத்திய பொருளாதார வாதங்களை எல்லாம் தகர்த்தெறிந்த டீப்சீக், செயற்கை நுண்ணறிவுத் துறையில் பலரும் பங்கேற்கலாம் என்கிற சாத்தியக்கூறையும் அறிமுகப்படுத்தி உள்ளது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிலவும் ஏகபோக உரிமை, கட்டுப்பாடுகள் என்னும் கோட்டைக்குள் டீப்சீக் என்னும் ஜனநாயக மின்னல்கீற்று ஒரு மகத்தான அதிர்வலையைத் தோற்றுவித்துள்ளது என்றே கூறலாம்.
டீப்சீக் எதிர்கொள்ளும் சவால்: டீப்சீக்கின் ஓபன் சோர்ஸ் புரட்சி என்பது தொழில்நுட்பத் துறையில் இயங்கிவரும் பெருநிறுவனங்களுக்கு ஒரு சிக்கலான பிரச்சினை மட்டுமல்ல. ஏகபோகம், லாப வேட்கை, தேவையற்ற நுகர்வு ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஏ.ஐ. நெடும்பரப்பில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அவசியமான அதிர்வலை ஆகும். மிகக் குறைந்த விலையில் ஏ.ஐ. கருவிகளை வழங்குவதன் மூலம், பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை முன்னிறுத்தும் பொருளாதாரத் தர்க்கத்தை டீப்சீக் தகர்த்தெறிகிறது. மேலும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடித்தளங்கள் குறித்த மாற்றுச் சிந்தனைகளை முன்வைக்கிறது.
செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடிப்படைக் கட்டமைப்பு, அதன் பலவீனங்கள், முரண்பாடுகள், சாத்தியமான மாற்றங்கள் பற்றி ஆராய்ந்து, விமர்சனரீதியாக உரையாடல்களை மேற்கொள்வதற்கான தளங்களை டீப்சீக் உருவாக்கியிருக்கிறது. தற்போதைய சர்வதேசப் பொருளாதார அடித்தளத்தையே அதிரவைத்த டீப்சீக் செயலி, பெரும் சைபர் தாக்குதலுக்கும் உள்ளாகிவருகிறது. எனவே, டீப்சீக்கை வெறுமனே ஒரு மாற்றுத் தயாரிப்பு என்று கருதி நாம் கடந்துவிட முடியாது.
சந்தையின் உள்முரண்பாடுகளை, அவற்றின் பலவீனங்களை எதிர்கொள்ள சந்தை சக்திகளையே உந்தித்தள்ளும் ஆற்றல் கொண்ட ஓர் அதிர்வலையாக டீப்சீக் திகழ்கிறது. ‘முதலாளித்துவ முரண்பாடுகளில் இருந்தே முதலாளித்துவ நெருக்கடி உருவாகிறது’ என்கிற கார்ல் மார்க்ஸின் கருத்தையும் டீப்சீக் அத்தியாயம் நமக்கு நினைவூட்டுகிறது. இதுநாள் வரையில் தொழில்நுட்பத் துறையின் எதிர்காலத்தைத் தங்கள் பிடிக்குள் வைத்திருந்த பெருநிறுவனங்களும் ஏகபோக சக்திகளும் கட்டவிழ்த்துவிடும் தாக்குதல்களையும் சவால்களையும் டீப்சீக் எவ்வாறு எதிர்கொள்ள இருக்கிறது என்கிற கேள்விக்குக் காலம்தான் பதில் கூற முடியும்.
- தொடர்புக்கு: ashokan.arun@gmail.com