சிறப்புக் கட்டுரைகள்

வசந்தத்தைக் கொன்றுவிட்டோம்!

ஆதி வள்ளியப்பன்

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் காலநிலை மாற்றம் குறித்துத் தமிழில் பேசினால், அது ஏதோ அறிவியலாளர்களுக்கான உரையாடல் என்றே பொதுவாகப் பார்க்கப்பட்டது. காலநிலை மாற்றம் இன்று நம் கண் முன்னால், உலகின் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் தீவிரமாக அரங்கேறத் தொடங்கிவிட்டது. ஆனால், இப்போதும் நமது அலட்சியமும் அக்கறையின்மையும் தொடரவே செய்கின்றன.

இந்தியா ஒரு வெப்பமண்டல நாடு. மேற்கத்திய நாடுகளைப் போலக் கதகதப்​புக்காக ஏங்குபவர்கள் அல்ல நாம். வளத்தை வாரித்​தரும் மழைக் காலத்​துக்​காக​வும், கோடையில் இதமான வெப்பநிலைக்​காகவும் ஏங்குவதே நம் வழக்கம். ஹோலி, வைசாகி, சித்திரைத் திருவிழா, போஹாக் பிஹு போன்று நாட்டின் ஒவ்வொரு பகுதி​யிலும் நடைபெறும் விழாக்கள் வசந்தத்​தின்​-இளவேனிலின் வருகையை வரவேற்றுக் கொண்டாடுபவை. ஆனால் ஒன்று தெரியுமா, வசந்தம் நம்மிடம் இருந்து அதிவேக​மாகக் காணாமல் போய்க்​கொண்​டிருக்​கிறது.

நாட்டின் பல பகுதி​களில் பகல் வெப்பநிலையும் இரவு வெப்பநிலையும் இயல்பைவிட அதிகரித்​திருக்​கின்றன. இளவேனில் என்பது இல்லாமலாகி, வேனிலே ஒரே காலமாகிவரும் ஆபத்து உருவாகி​யிருக்​கிறது. கோடைக் காலத்​தில்தான் வெப்ப அலைகள் வீசும் என்பது மாறி, முன்கூட்டியே வெப்ப அலைகள் வீசும் ஆபத்தும் ஏற்பட்டு இருக்​கிறது.

குலையும் சமநிலை: 2024இன் 11 மாதங்​களில் இரவு நேரச் சராசரி வெப்பநிலை அதிகமாகவே இருந்​திருக்​கிறது. வரலாற்றின் ஜனவரி, பிப்ரவரி மாதங்​களிலேயே அதிக சராசரி வெப்பநிலை பதிவானவையாக 2025 ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் மாறியுள்ளன. இந்த இரண்டு மாதங்​களிலும் தொழில்​புரட்​சிக்கு முந்தைய காலத்தைவிட 1.75 டிகிரி செல்சியஸ் அதிகமாக சராசரி வெப்பநிலை பதிவாகி​யுள்ளது. இது மிகவும் ஆபத்தானது, பாரிஸ் காலநிலை ஒப்பந்​தத்​தின்படி 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்​புக்குள் சராசரி வெப்பநிலையைக் கட்டுப்​படுத்​தியாக வேண்டும்.

கடந்து சென்ற குளிர்​காலம் முழுவதும் பகல் வெப்பநிலையும் இரவு வெப்பநிலையும் இயல்பைவிட அதிகமாகவே இருந்தன. குளிர்கால வெப்பநிலை வேகமாக அதிகரித்து​வரு​கிறது. சில நாட்களில் இரவு குளிராக இருந்​தாலும் பகல் நேர வெப்பநிலை கடுமையாக அதிகரித்​த​தால், பலரால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

காரணம், குறைந்த​பட்​ச-அதிகபட்ச வெப்பநிலைகளுக்கு இடையிலான இடைவெளி பெரிதாக அதிகரித்ததே. அதிலும் தென்னிந்தியாவில் டிசம்பர், ஜனவரி மாதத்தில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்​பட்டது. நாடு முழுவதும் பிப்ரவரி, மார்ச் மாதச் சராசரி வெப்பநிலை சட்டென்று அதிகரித்​த​தால், வசந்தம் இல்லாமலாகி வருவதும் தெரிகிறது. வெப்பநிலை படிப்​படியாக அதிகரிப்​பதுதான் பருவகால வழக்கம். இது வேகமாக மாறிவரு​கிறது.

ஆய்வு சொல்லும் முடிவு: குளிர் நிறைந்த ஜனவரிக்கும் தகிக்கும் வெப்பம் நிறைந்த ஏப்ரல் மாதத்​துக்கும் இடையிலான வசந்த காலம் குறுகிவரு​வ​தாகவும் இந்தக் காலத்​திலும் வெப்பநிலை அதிகரித்து​வரு​வ​தாகவும் 50 ஆண்டு வானிலை ஆய்வுத் தரவுகளை ஆராய்ந்​ததில் தெரிய​வந்துள்ளது.

‘கிளைமேட் டிரெண்ட்ஸ்’ என்கிற முகமையும் ‘கிளைமேட் சென்ட்ரல்’ என்கிற காலநிலை ஆராய்ச்சி​யாளர் குழுவும் தனித்​தனியாக மேற்கொண்ட இந்த ஆய்வில் 1970 தொடங்கித் தரவுகள் ஆராயப்​பட்டன. இந்த ஆராய்ச்சிக்கு 1970-க்குப் பிந்தைய தரவுகள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டதற்குக் காரணம், இந்தக் காலத்​தில்தான் புவி வெப்பமடைதலின் தாக்கம் நேரடியாக உணரப்​பட்டது, இந்தக் காலத்​துக்​குத்தான் தொடர்ச்சியான தரவுகளும் நம்மிடம் இருக்​கின்றன.

இந்த ஆராய்ச்சிகளின் அடிப்​படையில் இந்தியாவில் வசந்த காலம் காணாமல் போய்க்​கொண்​டிருக்​கிறது. வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக வசந்த காலம் குறுகு​கிறது. இது தாவர வளர்ச்சி​யையும் பாதிக்​கிறது. பயிர்கள், காய்கள் பழமாகவும் தானிய​மாகவும் முதிர்​வதற்கான காலம் குறுகு​வ​தால், உணவு உற்பத்தி பாதிக்​கப்​படலாம்.

கடந்த ஆண்டில் மாங்காய் விளைச்சல் தாமதமானது நினைவிருக்​கலாம். காலநிலை மாற்றத்​துக்கான நாடுகளுக்கு இடையிலான குழுவின் (ஐ.பி.சி.சி.) 6ஆவது அறிக்கை​யின்படி, 1-4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வு இருந்தால் தெற்கு ஆசியாவில் சோள சாகுபடி 25-70 சதவீதமும் நெல் விளைச்சல் 10-30 சதவீதமும் சரியும் என்கிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் வசந்தம் தாமதமாகிறது/குறுகிவரு​கிறது. ஜப்பானில் செர்ரி மரங்கள் மலர்வது பலரையும் ஈர்க்​கும், அது பெரும் கொண்டாட்டமாக இருக்​கும். 1953 தொடங்கி இந்த செர்ரி மரங்கள் மலர்வது ஒவ்வொரு பத்தாண்​டு​களுக்கும் 1.2 நாள் முன்னதாக நகர்ந்து​வரு​கிறது. குளிர்​காலம் குறுகு​வதும், வெப்பநிலை அதிகரிப்புமே செர்ரி மலர்தலை விரைவுபடுத்​தி வரு​கின்றன.

“மாறிவரும் காலநிலை குறித்த உருமா​திரிகள் கூறுவதன்படி குளிர்ச்சி குறைந்து புதிய விஷயங்​கள்​/வளர்ச்சிகளின் தொடக்​க​மாக​வும், வேளாண்​மைக்கு அவசிய​மானதுமான உற்சாகமூட்டும் வசந்த காலம் பெரும் ஆபத்துக்குத் தள்ளப்​பட்​டுள்ளது. வேளாண்மை, உயிர்ப்​பன்மை, பண்பாட்டு நடைமுறைகள் போன்றவை பருவகால உருமாற்​றங்​களில் ஆழமாக வேரூன்​றி​யிருப்பவை.

இவை எல்லாமே ஆபத்தில் உள்ளன. எனவே, வசந்த காலம் குறுகு​வதால் ஏற்படும் தாக்கம் காலநிலையில் மட்டுமல்​லாமல், மேற்கண்ட அம்சங்​களிலும் தாக்கத்தைச் செலுத்​தும். பருவகாலங்​களின் சீர்மையைப் பாதுகாக்​கவும் விளைவுகளை மட்டுப்​படுத்​தவும் ஒருங்​கிணைந்த, உடனடி முயற்சிகள் அவசியம்” என்கிறார் ஐ.பி.சி.சி. ஆராய்ச்சிக் குழுவில் அங்கம் வகிக்கும் பேராசிரியர் அஞ்சல் பிரகாஷ்.

கவலைக்​குரிய எதிர்​காலம்: வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டு 2024. 2023 ஜூன் தொடங்கி 2024 ஆகஸ்ட் வரையிலான 15 மாதங்கள் தொடர்ச்சியாக வெப்பநிலை அதிகமாக இருந்த மாதங்​களாகப் பதிவாகி​யுள்ளது. இந்த வெப்பநிலை தொழில்​புரட்​சிக்கு முந்தைய கால வெப்பநிலை​யைவிட 1-1.5 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலை என்பதும் குறிப்​பிடத்​தக்கது. இப்படிப் புவியின் சராசரி வெப்பநிலை அதிகரித்து​வருவது உலகெங்​கிலும் பரவலாக​வும், பருவகாலங்​களிலும் தாக்கத்தை ஏற்படுத்​திவரு​கிறது.

அனைத்து உலகப் பெருங்​கடல்​களின் சராசரி வெப்பநிலையும் அதிகரித்தே காணப்​படு​கிறது. பெருங்​கடல்​கள்தான் 90 சதவீத வளிமண்டல வெப்பத்தை உள்வாங்​கிக்​கொண்டு, வெயிலின் உக்கிரத்​திலிருந்து நம்மைக் காத்து​வரு​கின்றன. பெருங்​கடல்கள் மூலமே புவியின் வெப்பநிலை முறைப்​படுத்​தப்​படு​கிறது. அதேநேரம் பெருங்கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் அதிகரிப்பும், வெப்பத்தைத் தணிக்கும் கடலின் செயல்​பாடும் சிறிது சிறிதாக மட்டுப்​பட்டு​வரு​கின்றன. இது கவலைக்​குரிய எதிர்​காலத்தையே முன்வைக்​கிறது.

காலநிலைப் பேரிடரின் விளைவாக இயற்கைச் சீற்றங்கள் நாடுகளைத் தாக்கத் தொடங்கி​விட்டன. காலம் கரைந்து​கொண்​டிருக்​கிறது. வசந்தங்கள் மட்டும் குறுகிக் கொண்டிருக்க​வில்லை. புவியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்​தால், மற்ற பருவகாலங்​களும் முற்றிலும் இல்லாமல் போகக்​கூடும். வசந்த காலம் இல்லாமல் ஆகிவிட்​டால், அடுத்து இலையு​திர்​காலமும் விரைவில் இல்லாமல் போகும்.

கோடையும் குளிரும் மட்டுமே பருவகாலங்களாக எஞ்சக்​கூடும். அதிலும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி வரை இந்தியாவில் நிலவிவந்த குளிர்​காலம், தற்போது இரண்டு மாதங்​களுக்​கான​தாகச் சுருங்​கிவருவது குறிப்​பிடத்​தக்கது. மற்றொரு​புறம் தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்களை வெப்பநிலை உயர்வு மோசமாகப் பாதிக்கத் தொடங்கி​யிருக்​கிறது.

உலக வெப்பநிலையைக் கட்டுப்​படுத்து​வதில் ஒவ்வொரு நாடும் உரிய வகையில் பங்களிக்​கா​விட்​டால், காலநிலை மாற்றத்தின் தீவிர எதிர்​விளைவுகளை எதிர்​கொண்டே ஆக வேண்டும். ஆனால், பல்வேறு நாடுகள் பங்கேற்​புடன் ஆண்டு​தோறும் நடைபெறும் காலநிலை மாற்றப் பேச்சு​வார்த்தைகள் பெரிய பலன்களை அளிப்​ப​தில்லை. இப்படிக் காலநிலை மாற்றம் அடுத்​தடுத்து விடுத்து​வரும் எச்சரிக்கைகளை அரசுகளும் ஆட்சி​யாளர்​களும் புறக்​கணித்​தால், இயற்கைப் பேரழி​வு​களையும் பருவகாலச் சுழற்சி​களையும் யாராலும் தடுக்கவோ பாதுகாக்கவோ முடியாது.

SCROLL FOR NEXT