சிறப்புக் கட்டுரைகள்

ஒன்றுகூடல் இருக்கும்வரை வீதி நாடகம் இருக்கும்! - நாடகக் கலைஞர் பிரளயன்

ஆர்.சி.ஜெயந்தன்

நாற்பது ஆண்டுகளைக் கடந்து நடைபோட்டு வரும் சென்னைக் கலைக் குழுவுக்குத் தலைமை வகிப்பவர் பிரளயன். அடிப்படையில் கவிஞர், எழுத்தாளர், பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். ஆனால், ஓய்வறியா நாடகக் கலைஞர் என்பதுதான் அவருடைய முதன்மையான அடையாளம். தொண்ணூறுகளுக்குப் பிறகான தமிழ் நாடகத் துறையில், வீதி நாடகத்தை மிக முக்கியமான ஓர் அங்கமாக, போராட்ட ஆயுதமாக மாற்றிக் காட்டிய கலைஞர். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

1984இல் தொடங்கி 40 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது ‘சென்னைக் கலைக் குழு’. ஒரு மாற்று நாடகக் குழு வெற்றிகரமாக இயங்குவதே வியப்பானது... இது எப்படிச் சாத்தியமானது? - எங்களைவிட மூத்த குழுக்கள் பல இருக்கின்றன. அவை ஆண்டுக்கு இரண்டு நிகழ்வுகள் நடத்தினாலே சாதனை என்கிற நிலை இருக்கும்போது, நாங்கள் மாதத்துக்குக் குறைந்தது மூன்று நிகழ்வுகளை நடத்துகிறோம். காரணம், எங்கள் நாடகங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்துவரும் ஆதரவு.

எங்கள் நாடகங்களின் கருப்பொருளும் அவை மக்களோடு நிகழ்த்தும் உரையாடலும் தான் அதற்குக் காரணம். அதேபோல், எங்கள் குழுவில் நீண்டகாலமாகச் செயல்பட்டுவரும் சில ஆளுமைகளைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற உள்கட்டமைப்பு, ஜனநாயக வெளி இரண்டையும் கவனமாகப் பாதுகாத்து வருகிறோம். அதுவும் முக்கியமான காரணம்.

தன்னுடைய படைப்புகளுக்காக சென்னைக் கலைக் குழு ஒடுக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறதா? - நிறைய எதிர்​கொண்​டிருக்​கிறோம். அப்போது தமிழ்​நாட்டில் ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. பாரத் பந்த் நடக்க இருந்தது. அதற்கு ஆதரவாக ‘முற்றுப்புள்ளி’ என்றொரு வீதி நாடகத்தை சென்னையின் பல பகுதிகளில் நிகழ்த்​திவந்​தோம். அப்படித்தான் ராயப்​பேட்​டையில் ஒரு தெருவில் போக்கு​வரத்​துக்கு இடையூறு இல்லாத வகையில் நிகழ்த்​திக்​கொண்​டிருந்​தோம். வீதி நாடகத்தைப் பொறுத்​தவரை, அதைப் பொதுவெளியில் நிகழ்த்து​வதற்கு போலீஸ் அனுமதி பெறத் தேவையில்லை.

இதுதான் சட்டம். ஆனால், இது காவல் துறையினருக்குத் தெரியாது. அந்த நாடகத்தை நடத்திக்​கொண்​டிருந்தபோது ‘நீங்கள் அனுமதி பெறவில்லை; உடனே கலைந்து செல்லுங்கள்’ என்று காவலர்கள் எச்சரித்​தார்கள். திரளாகக் கூடியிருந்த மக்கள் எங்களுக்கு ஆதரவாகக் காவலர்​களிடம் வாக்கு​வாதம் செய்து அங்கிருந்து அகற்றி​னார்கள். ஆனால், அடுத்த நாள் நாங்கள் தங்கி​யிருந்த விடுதிக்கு வந்த காவலர்கள் எங்கள் நாடகப் பொருள்​களை​யெல்லாம் கைப்பற்றிச் சேதப்​படுத்​தி​யதுடன், நான் உட்பட எங்கள் குழுவில் இருந்த 14 பேரைக் கைதுசெய்து, தடுப்​புக்​காவல் சட்டத்தின் கீழ் 8 நாள்கள் சிறையில் அடைத்து​விட்​டார்கள். இப்படி நிறைய...

ஒரு போராட்ட வடிவமாக இருந்த வீதி நாடகம், இன்று அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சி பற்றிக் கூற முடியுமா? - மக்களைத் தேடிச் சென்று நடத்தப்படும் வீதி நாடகம், அதிகாரத்தின் முகத்தின் முன்னால் உண்மையைப் பேசும் வடிவம். மக்களுடைய பொதுப்புத்திக்கு எதிராகவும் பேசுகிறது. அது தோன்றிய வரலாற்றுப் பின்னணியும் காரணமும் வேறாக இருக்கலாம்.

ஆனால், இன்று பல தளங்களில் வீதி நாடகம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசாங்கத்தின் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் கீழ் வீதி நாடகம் நடத்தப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக வீதி நாடகத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதைப் போராட்ட வடிவமாகவே பயன்படுத்திவரும் எங்களைப் போன்ற குழுக்களால் இந்த மாற்றம் சரியா, தவறா என்று சொல்ல முடியாது.

சென்னைக் கலைக் குழுவுக்கு அடையாளமும் பெயரும் பெற்றுக்கொடுத்த நாடகங்கள் எவை? - 1987 சர்வதேச இளைஞர்கள் ஆண்டு. அப்போது ராஜரத்​தினம் மைதானத்தில் போஸீஸ் வேலைக்கான ஆள் தேர்வின்​போது, கூட்ட நெரிசலில் சிக்கி மனோகரன் என்கிற இளைஞன் இறந்தார். அந்தத் துயர நிகழ்வைப் பொறுக்​க ​முடி​யாமல் ஒரு கவிதை எழுதினேன். அதையே பின்னர் நாடகமாக்​கினேன். அந்த நாடகம் எழுப்பிய கேள்வி​களுக்​காகத்தான் நாங்கள் கைது செய்யப்​பட்​டோம்.

அடுத்து ‘பெண்’ என்கிற நாடகம். அவள், பிறப்பு முதல் இறப்பு வரை எப்படிப் பாரபட்சமாக நடத்தப்​படு​கிறாள் என்பதை எடுத்​துச் சொன்னது இந்த நாடகம். புத்தா​யிரத்​துக்குப் பிறகு சென்னைக் கலைக் குழு மேடையில் நடத்திய நாடகங்​களில் பேசு பொருளானது ‘உபகதை’. நம்முடைய புராணங்களையும் இதிகாசங்களையும் வீழ்த்தப்பட்ட சாமானிய மக்களின் கண்ணோட்​டத்தில் பார்க்​க​வைத்த நாடகம். இது மக்கள் தங்கள் வரலாற்றைத் தாங்களே மீட்டுக்​கொள்வதை உண்மையின் பக்கம் நின்று சித்தரித்தது. இது இந்திய அளவில் மிகப்​பெரிய அங்கீ​காரத்தைப் பெற்றது.

‘உபகதை’ தெலுங்கில் மொழிபெயர்க்​கப்​பட்டு பலமுறை நிகழ்த்​தப்​பட்​டிருக்​கிறது. பொருளாதார அறிஞர் அமர்த்திய சென்னின் மகளான அந்திரா தேவ் சென், ‘உபகதை’யின் முதல் இரண்டு அத்தி​யா​யங்களான ‘ஏகலை​வன்’, ‘சம்புகன்’ கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘ராமாயணம்’ பற்றிய சிறப்பு இலக்கிய மலரில் வெளியிட்​டார். ராமாயணம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்​டுள்ள அமெரிக்கப் பேராசிரியர் பௌலா ரிச்மென் ‘உபகதை’ குறித்து நேர்காணல் கண்டு எழுதி​யிருக்​கிறார்​.

நீங்கள் எழுதி, மேடையில் நிகழ்த்திவரும் ‘பாரி படுகளம்’, ‘வேள் பாரி’ நாவலுக்கு முன்பே எழுதப்பட்டது இல்லையா? - ஆ​மாம்! சங்க இலக்கி​யத்தின் அடிப்​படையில் எழுதினேன். சேர, சோழ, பாண்டியர்​களும் தமிழர்கள். பாரியும் தமிழன். அப்படி​யிருக்க அவர்கள் ஏன் பாரியைக் கொல்ல வேண்டும் என்பதைப் பின்னணி​யாகக் கொண்டு சமூக வரலாற்றை உருவாக்கம் செய்யும் முயற்​சிதான் ‘பாரி படுகளம்’. புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத் துறை மாணவர்​களுக்காக, தேசிய நாடகப் பள்ளி​யுடன் இணைந்து இந்த நாடகத்தைத் தயாரித்து 2008இல் அரங்கேற்றினோம்; தமிழ்​ நாட்டில் 14 இடங்களில் மேடையேற்றினோம். ‘சந்தியா’ பதிப்பகம் இதனைப் புத்தகமாக வெளியிட்​டிருக்​கிறது.

டிஜிட்டல் காட்சி யுகத்தில் நாடகத்துக்கான தேவை தற்போது குறைந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

உண்​மையில் டிஜிட்டல் யுகம் பொழுது​போக்கினை நுகரும் வழக்கத்தையே தலை கீழாக மாற்றி​விட்டது. எல்லாமே தற்போது உங்கள் கையில் உள்ள செயல் திறன்​பேசிகளில் கொண்டு வந்து பாய்ச்​சப்​படு​கின்றன. ஆனால்; நாடகக் கலை, உங்கள் கைபேசியில் வந்து பாய்ச்​சப்​ப​டாது. நாடகம் ஏதேனும் ஓரிடத்தில் ஏதேனும் ஒரு தருணத்தில் நிகழும். அந்த நாடக அனுபவத்தை நீங்கள் பெறவேண்டுமெனில் அந்நாடகம் நிகழும் இடத்தில் அந்நாடகம் நிகழும் தருணத்தில் நீங்கள் அங்கே இருக்கவேண்டும்.

ஆமாம், நாடகத்தைப்பார்க்க நீங்கள்தான் மெனக்கெடவேண்டும். ஏனெனில் நாடகம் என்பது நிஜமான உயிருள்ள ஓர் அனுபவம்; தொட்டுணரக்கூடிய அனுபவம்; நாடகக் கலை நிகழ மனித ஒன்று கூடல் அவசியம். நாடக அனுபவம் என்பது என்பது மக்களின் உற்சாகமான ஒன்று கூடலில்தான் தான் கிடைக்கும். அது நிகழும் கால இட ஓர்மைதான் அதன் தனித்துவம். இதை வேறு எந்தக்கலை வடிவத்திடமும் பெறமுடியாது. ஒரு சமூகமாக, குழுவாக மனித ஒன்றுகூடல் எப்போதுவரை இருக்குமோ அப்போதுவரை நாடகம் என்கிற கலைவடிவமும் வாழும்.

கமல்ஹாசனின் ‘அன்பே சிவம்’ படத்தில் தொடங்கி திரையிலும் செயல்பட்டீர்கள்... ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட கதையுடன் ‘அன்பே சிவம்’ படக் குழு படப்பிடிப்​புக்கான வேலைகளில் இறங்கி​யிருந்தது. அதில் கமலின் கதாபாத்​திரத்தை ஒரு வீதி நாடகக் கலைஞராக அமைப்பது என்று முடிவுசெய்து என்னை அழைத்​தார்கள். கோமல் சுவாமி​நாதன் வழியாக கமல் ஏற்கெனவே எனக்கு அறிமுக​மாகி​யிருந்​தார். இரண்டு நாள் கலந்துரை​யாடலுக்குப் பின்னர், எங்கள் நாடகங்​களைப் பார்க்க வேண்டும் என்றார். மூன்றாவது நாள் அவருக்கு நாடகங்களை நிகழ்த்​தினோம்.

எங்கள் நாடகங்​களைப் பார்த்த பிறகு ‘அன்பே சிவம்’ படத்தின் கதைப் போக்கையே மாற்றிக்​கொண்டார் கமல். கதையில் ஒரு வீதி நாடகம் வேண்டும் என்றார். அதை எட்டு நிமிடப் பாடல் வடிவில் நானே எழுதி வடிவமைத்​தேன். படம் பெரிதும் பேசப்​பட்டது. பின்னர் ‘விரு​மாண்​டி’யில் இரண்டாவது உதவி இயக்குந​ராகப் பணிபுரிய அழைத்​தார். இப்போதும் கமலுடன் நட்பு தொடர்​கிறது.

- தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

SCROLL FOR NEXT