வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் சாமானிய, நடுத்தர மக்கள் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை வைப்பு நிதியாக இட்டு வைத்துள்ளார்கள். அது பாதுகாப்பாக உள்ளதா?
தற்போதைய நிலவரம்: 2024 மார்ச் மாதக் கணக்குப்படி, பொதுத் துறை வங்கிகள், உள்நாட்டுத் தனியார் வங்கிகள், வெளிநாட்டுத் தனியார் வங்கிகள் உள்பட மொத்தம் 1,997 வங்கிகள் உள்ளன. இவற்றில், 12 அரசு வங்கிகளில் ஏறத்தாழ ரூ.124 லட்சம் கோடி, 43 கிராம வங்கிகளில் ரூ.6 லட்சம் கோடி, 85 தனியார் வங்கிகளில் ரூ.76 லட்சம் கோடி, 1,857 கூட்டுறவு வங்கிகளில் ரூ.12 லட்சம் கோடி என ஆக மொத்தம் ரூ.218 லட்சம் கோடி வைப்புத்தொகை உள்ளது.
இந்தத் தொகை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 74%. இவ்வங்கிகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி ஒழுங்குபடுத்துகிறது. ஆனால், இதில் உள்ள மக்களின் சேமிப்பில் ஒரு பகுதிக்கு மட்டுமே வைப்புத்தொகைக் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (Deposit Insurance and Credit Guarantee Corporation –DICGC) மூலமாக ரிசர்வ் வங்கி காப்பீடு வழங்குகிறது.
இவை தவிர, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், நிதிக் கம்பெனிகள் ஆகியவற்றில் உள்ள மக்களின் வைப்புத்தொகைக்கு ரிசர்வ் வங்கி எந்தவிதமான பாதுகாப்பும் வழங்காது. 1961இல் ரிசர்வ் வங்கியால் முதல் இடப்பட்டு உருவாக்கப்பட்ட டிஐசிஜிசி, வங்கிகளின் வைப்புத்தொகைக்குப் பாதுகாப்புக் காப்பீடு வழங்கும் நிறுவனம்.
அன்றைய காலக்கட்டத்தில் ஸ்டேட் வங்கி - அதன் துணைவங்கிகள் தவிர மற்ற அனைத்து வங்கிகளும் தனியார் வங்கிகளாகவே இருந்தன. தனியார் வங்கிகள் திவால் ஆவது என்பது தொடர் நிகழ்வாக இருந்த காலம் அது. 1947க்கும் 1969க்கும் (வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வருடம்) இடைப்பட்ட காலத்தில் 500க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் திவாலாகி, மக்கள் தங்கள் சேமிப்பை இழந்தனர். அந்தப் பின்னணியில்தான் டிஐசிஜிசி உருவாக்கப்பட்டது.
பாரபட்சமான அணுகுமுறை: வங்கிகள் திவாலாகும்பட்சத்தில்,1961இல் தனிநபர் கணக்குக்கு ரூ.1,500 வரை ஒரு கணக்கில் உள்ள வைப்புத்தொகைக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து, 2020இல் ரூ.5,00,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் ஒரு நபரின் வைப்புத்தொகைக்கு அதிகபட்சக் காப்பீட்டுப் பாதுகாப்பு ரூ.5 லட்சம் மட்டுமே.
அதாவது, ஒருவர் பெயரில் ஒரு வங்கியில் எத்தனை கிளைகளில், எத்தனை கணக்குகள் இருந்தாலும், அத்தனை கிளைகளிலும் உள்ள அவரின் சேமிப்பு வைப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, தொடர் வைப்பு, நிலையான வைப்பு ஆகியவற்றின் அசல், அதன் வட்டித்தொகை – இவை முழுவதற்குமான பாதுகாப்பு அவ்வளவுதான்! அதேவேளை, டிஐசிஜிசியின் இந்தக் காப்பீடு மத்திய அரசு, மாநில அரசு, பொதுத் துறை, தனியார் துறை நிதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், மற்ற வங்கிகள், அந்நிய அரசுகள் – ஆகியவை வங்கிகளில் போட்டுவைத்துள்ள வைப்புத்தொகைக்குக் கிடையாது.
இது 2024 மார்ச் மாதக் கணக்குப்படி மொத்த வைப்புத்தொகையில் 39%, அதாவது, ரூ.85 லட்சம் கோடி. ஆக, ஒரு வங்கி திவாலானால், அரசுகள், இந்த நிறுவனங்கள் அந்த வங்கியில் சேமித்துள்ள வைப்புத்தொகைக்கு டிஐசிஜிசி மூலம் எந்த இழப்பீடும் கிடைக்காது.
டிஐசிஜிசிக்கு அதன் உறுப்பு வங்கிகளான 140 வணிக வங்கிகள், 1,857 கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ஆண்டுதோறும் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். இது 1961இல் 100 ரூபாய்க்கு 5 பைசா என்று தொடங்கியது. பின்னர், படிப்படியாக உயர்த்தப்பட்டு 2020இல் 12 பைசா என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை வங்கிகள் தங்கள் சொந்த நிதியிலிருந்து செலுத்த வேண்டும்.
வைப்புதாரர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது. டிஐசிஜிசியில் உள்ள வைப்புக் காப்பீட்டு நிதி வருடா வருடம் உயர்ந்துகொண்டே வந்து, 2024 மார்ச் மாத நிலவரப்படி 1.99 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. பொதுத்துறை வங்கிகள், கிராம வங்கிகளில் அரசின் பங்கு 51%க்குக் கூடுதலாக உள்ளது. எனவே, அவை திவால் ஆவதற்கான சாத்தியமே கிடையாது.
அதன் காரணமாக இது நாள் வரை இந்த நிதியில் இருந்து பொதுத்துறை, கிராம வங்கிகளின் வைப்புதாரர்களுக்கு ஒரு பைசாகூடக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. ஆனாலும் டிஐசிஜிசி இவ்வங்கிகளிடமிருந்தும் பிரீமியம் தொகை வசூலிக்கிறது என்பது முரணான விஷயம்.
மாறாக, இதுவரை திவாலான 27 தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு ஏறக்குறைய 300 கோடி ரூபாயும், திவாலான 431 கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு 15,700 கோடி ரூபாயும் காப்பீட்டு இழப்புத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 2014 முதல் 2023 வரையிலான பத்தாண்டுகளில் 60 கூட்டுறவு வங்கிகள் திவாலாகி உள்ளன. 2023இல் மட்டும் 17 கூட்டுறவு வங்கிகள் திவாலாகி உள்ளன. திவாலாகும் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2025 பிப்ரவரி மாதம் நியூ இந்தியா கூட்டுறவு வங்கி என்ற ஒரு வங்கி திவாலாகிவிட்டது. இந்த வங்கியில் 1,30,000 வைப்புதாரர்கள் உள்ளனர். மொத்த வைப்புத்தொகை ரூ.2,436 கோடி. உயர் மட்டத்தில் நடந்த ஊழல்தான் இந்த வங்கியின் திவாலுக்குக் காரணம். பொதுவாக, கூட்டுறவு வங்கிகளில் உள்ள வைப்புத்தொகையில் 60% மட்டுமே காப்பீட்டுப் பாதுகாப்பு கொண்டவை. அப்படிப் பார்க்கும்போது, இந்த வங்கியில் ரூ.1,460 கோடி வரைதான் இழப்பீடு கிடைக்கும்.
டிஐசிஜிசியின் உறுப்பு வங்கிகளில் சுமார் 290 கோடி கணக்குகள் உள்ளன. அதில் சுமார் 283 கோடி கணக்குகளில் உள்ள வைப்புத்தொகை ரூ.5 லட்சத்துக்கு உள்பட்டவை என்பதால், அவை முழுமையாகக் காப்பீட்டுப் பாதுகாப்பின் கீழ் உள்ளன. அதாவது, 97.8% வைப்புதாரர்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஆனால், மொத்த வைப்புத்தொகையான 218 லட்சம் கோடி ரூபாயில் 43.1% தொகை மட்டுமே, அதாவது 94 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே பாதுகாக்கப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்? - 1969இலிருந்து இன்று வரை 38 தனியார் வங்கிகள் திவாலாகி உள்ளன. அவற்றில் 25 வங்கிகள் பொதுத்துறை வங்கிகளுடனும், 13 வங்கிகள் பிற தனியார் வங்கிகளுடனும் இணைக்கப்பட்டுக் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆனால், சமீபத்தில் தனியார் வங்கிகளில் நடந்த உயர்மட்ட ஊழல்கள் பற்றிப் பல செய்திகள் வெளியாகின்றன.
21 உள்நாட்டுத் தனியார் வங்கிகளில் உள்ள ரூ.72 லட்சம் கோடி வைப்புத்தொகையில், 32% தொகைக்கு மட்டுமே காப்பீட்டுப் பாதுகாப்பு உள்ளது. 44 வெளிநாட்டு வங்கிகளில் உள்ள 10 லட்சம் கோடி ரூபாய் வைப்புத்தொகையில் 5% மட்டுமே காப்பீட்டுப் பாதுகாப்பில் உள்ளது.
இந்தியாவில் தனிநபர் கணக்குக்கு ரூ.5 லட்சம் வரை மட்டுமே காப்பீட்டுப் பாதுகாப்பு உள்ள நிலையில், இங்கிலாந்தில், ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு கணக்குக்கும் ரூ.90 லட்சம் வரை உள்ள வைப்புத்தொகைக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் இதுவே ரூ.2.15 கோடி.
நம் நாட்டிலும் இந்தக் காப்பீட்டுத் தொகை உச்ச வரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து கணிசமாக உயர்த்தப்பட வேண்டும். பொதுத்துறை, கிராம வங்கிகளிடம் இருந்து டிஐசிஜிசி காப்பீட்டுப் பிரீமியத் தொகை வசூலிக்கக் கூடாது. மத்திய அரசு, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் வைப்புத்தொகையைப் பொதுத்துறை வங்கிகள், கிராம வங்கிகளில் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நிர்வாக உத்தரவு போடப்பட வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளின் மீது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட வேண்டும். அவற்றில் உள்ள வைப்புத்தொகைக்கு மாநில அரசுகள் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், நிதி கம்பெனிகளின் வைப்புத்தொகைக்கும் டிஐசிஜிசி மூலம் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
- தொடர்புக்கு: cpkrishnan1959@gmail.com