மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பான விவாதம் தேசிய அளவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. 888 இருக்கைகளுடன் நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் உருவானபோது இப்பிரச்சினை சற்று வலுவடைந்தது. தொகுதி மறுவரையறைக்கான கால அவகாசம் நெருங்கிவரும் தருணத்தில், இப்பிரச்சினை உச்சம் தொட்டுவிட்டது.
பின்னணி
‘ஒரு குடிமகனுக்கு ஒரு வாக்கு. குடிமக்களின் எண்ணிக்கை உயர உயர அதற்கு ஏற்ப வாக்காளர் எண்ணிக்கை உயரும். இதனைப் பிரதிபலிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும்’ என்ற அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதல் 1971ஆம் ஆண்டு வரை பின்பற்றப்பட்டது. கூடவே, சுதந்திரம் அடைந்த வீரியத்தோடும், பெரும் கனவுகளுக்கான தீனியாகவும், இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. மக்கள்தொகையின் வளர்ச்சியால் அவை தடைபடுவது உணரப்பட்டது. மக்கள்தொகைக் கொள்கை இதற்கெனத் தனியாக வகுக்கப்பட்டது.
அப்போதைய மக்கள்தொகைப் பெருக்கம், ‘மக்கள்தொகை வெடிப்பு’ (Population Explosion) என்றே அழைக்கப்பட்டது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் எதிர்பார்க்கும் வளர்ச்சி சாத்தியமில்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு அரசு வந்தது. ‘சிறு குடும்பம் சீரான வாழ்வு’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘வளமான எதிர்காலத்துக்குக் குடும்பக் கட்டுப்பாடு’ எனப் பிரச்சார முழக்கங்கள் தொடங்கி, எண்ணற்ற வடிவங்களில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பிரச்சார வடிவங்கள் என முடுக்கிவிடப்பட்டன.
துரதிர்ஷ்டவசமாக இக்கொள்கை நாடு முழுவதும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நீண்ட காலமாகச் சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் நடந்துவந்த மாநிலங்கள், கல்வி, குறிப்பாகப் பெண் கல்வியில் சிறந்து விளங்கிய மாநிலங்கள், சுகாதாரக் கொள்கைகளில் அக்கறை செலுத்திய மாநிலங்கள் மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கையைச் சரியாக உள்வாங்கிக்கொண்டன. ஆனால், ஏற்கெனவே நிலவிவந்த வடக்கு - தெற்கு என்கிற அரசியலோடு அழுத்தமாக ஒத்துப்போவதாக இருந்தது.
தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும் மக்கள்தொகை வளர்ச்சி விகித வேறுபாடு மக்களவைத் தொகுதிகள் மறுவரைவுக்கு ஓர் அழுத்தமான முரண்பாட்டை உருவாக்கியது. ‘மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தல்’ என்பது வளர்ச்சிப் பாதையை ஏற்றுக்கொண்ட தண்டனையாகவும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகக் கருத்தில் கொள்ளாத மாநிலங்களுக்குப் பரிசாகவும் அமைந்துவிடும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மக்களவை இடங்கள் குறையும். கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்குக் கூடுதல் மக்களவை இடங்கள் கிடைக்கும்.
மாற்றுச் சிந்தனைக்கான தருணம்: எழுபதுகளிலேயே எழுந்துவிட்ட பிரச்சினை இது. அப்போதே இதற்கு நிரந்தரத் தீர்வு காணத் திட்டமிட்டிருக்க வேண்டும். ஆனால், தற்காலிகத் தீர்வுகளையே அப்போதைய ஆட்சியாளர்கள் முன்வைத்தனர். இதனால், இன்றைக்கு இப்பிரச்சினை தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் முக்கியமான பேசுபொருளாகியிருக்கிறது.
இந்நிலையில், மக்கள்தொகைக்கு ஏற்பத் தொகுதிகள் மறுவரையறை என்ற சிந்தனையில் இருந்து வெளிவந்து தீர்வைத் தேடுவது அவசியம். அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி அடுத்த கட்ட ஆரோக்கியமான நகர்வுக்கு வழி வகுத்தால் என்ன? ‘மக்கள்தொகை அடிப்படையில், பொத்தாம் பொதுவாக வெறும் ஆட்களின் எண்ணிக்கை அடிப்படையிலான ஜனநாயகப் பிரதிநிதித்துவம் தேவை’ என்பதை மறுசிந்தனைக்கு உள்ளாக்க வேண்டிய தருணம் இது.
மக்களவை உறுப்பினர்களின் பணிகள் மக்கள்தொகை அளவு சார்ந்தவை அல்ல; திட்டங்கள் / கொள்கைகள் உருவாக்கம் / செயலாக்கம் சார்ந்தவை. மக்களவை அல்லது அதன் உறுப்பினர்களின் பணிகள் மக்கள்தொகை வகைமையைப் பொறுத்தே அமைகின்றன. சாதி, மத அடிப்படையில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், பொருளாதாரரீதியில் எத்தனை வர்க்கங்களின் கலவையாக மக்கள் திரட்சி உள்ளது என்பதெல்லாம் முக்கியமானவைதான்.
ஆனால், அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. உதாரணமாக, விவசாயத்தை எடுத்துக்கொள்வோம். சிறு குறு விவசாயிகள், குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என்கிற வகையில்தான் மக்களவை உறுப்பினர்களின் பணிகள் அமைந்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் அல்ல. எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடுதான் மாறுபடும்.
பயிர் சாகுபடிச் சிக்கல்களுக்கான தீர்வுகள் என நகர்ந்தால், நன்செய் புன்செய் நிலம்; அதில் விளையும் பயிர்கள்; அதனை ஒட்டிய செயல்பாடுகள், செயல்திட்டங்கள் ஆகியவை முக்கியமானவை. ஒருவேளை நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகம் எனில் மக்கள்தொகை மறுவரையறைக்குத் தேவை எழுகிறது. குடிநீர் விநியோகம், குப்பை மேலாண்மை, தெருவிளக்கு இப்படித் தொடங்கிப் பல பிரச்சினைகளுக்கு மக்கள்தொகை அளவு முக்கியம்.
மக்கள் பிரதிநிதிகள், நேருக்கு நேர் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் குடிமக்களைப் பார்த்தே தீர வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்கள். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணிகள் மக்களின் தன்மை, தரத்தின் அடிப்படையில் அமைபவை. எனவே, மக்களவை எண்ணிக்கையில் மாற்றங்கள், மறுவரையறை தேவையில்லை. வளர்ச்சிக் குறியீடுகள் அடிப்படையில் மாநிலங்களவையில் சில மாற்றங்களைச் செய்யலாம்.
மக்கள்தொகையின் தன்மை, தரத்தின் அடிப்படையில் மாநிலங்களவை மறுவரையறையை அணுக வேண்டும். பொருளாதார வளர்ச்சி மக்கள் நலன் சார்ந்து பல வளர்ச்சிக் குறியீடுகள் உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் அடிப்படையில் மறுவரையறை அமையலாம்.
பொருளாதார வளர்ச்சி எனில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, தனிநபர் வருமானம், எழுத்தறிவு விகிதம், பள்ளி - கல்லூரி சேர்க்கை விகிதம், பாலின எழுத்தறிவு விகிதம், மக்களின் சராசரி வாழ்நாள், பள்ளிகளில் குழந்தைகள் செலவிடும் காலம், பச்சிளம் குழந்தை மரண விகிதம், பேறுகால மரணம், நோய்த் தடுப்பு விகிதாச்சாரம், மருத்துவமனைகள் - மருத்துவ ஊழியர்கள் எண்ணிக்கை, சமூக வளர்ச்சித் திட்டங்கள் - அவற்றின் அமலாக்க விகிதம் போன்ற பல வளர்ச்சிக் குறியீடுகள் உள்ளன.
இத்தகைய வளர்ச்சிக் குறியீடுகளில் குறைந்தபட்சம் எவற்றையெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என மத்திய - மாநில அரசுகள் இணைந்து ஒரு முடிவுக்கு வரலாம். மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் போல் பத்தாண்டுகளுக்குக் காத்திருக்கத் தேவையில்லை. இந்த வளர்ச்சிக் குறியீட்டுப் புள்ளிவிவரங்கள் மத்திய - மாநில அரசுகளால் சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாக தொடர்ந்து சேகரிக்கப்படுபவைதான்.
இவையே போதுமானவை. சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநலத் திட்டங்கள் என எந்தத் துறையில் ஒரு மாநிலம் சிறப்பாகச் செயல்படுகிறதோ அந்த மாநிலம், ஒரு மாநிலங்களவை உறுப்பினரை நியமிக்கலாம். அடுத்து வரும் காலங்களில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலத்தின் அனுபவங்கள், பணிகள், உத்திகள் ஆகியவற்றை மத்திய அரசோடும் இதர மாநிலங்களோடும் பகிர்ந்துகொள்ளலாம்.
மாநிலங்கள், தங்கள் வளர்ச்சியின் வழியாகப் பெற்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஓர் அங்கீகாரமாக, கௌரவமாகக் கருதும். அதேவேளை, இதர மாநிலங்கள் அந்த மாநிலங்களவை உறுப்பினரைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதுபோன்ற மாநிலங்களவை இடங்களைப் பிடிக்க ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சிப் போட்டியில் ஈடுபடும். அதேவேளை இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பயன்படும்.
இதில் மிகச் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி வழங்கலாம். வளர்ச்சித் திட்டங்கள் தயாரிப்பில் கூடுதல் பங்களிப்பு செய்யுமாறு கோரிக்கைவிடுக்கலாம். இதைச் செய்து முடிக்க இன்னும் முப்பது ஆண்டுகள் தேவையில்லை. அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் எனத் திட்டமிட்டு ஒரு புதிய மறுவரையறையை நோக்கி நகர்ந்தால் அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பலனளிக்கும்!
- தொடர்புக்கு: tnsfnmani@gmail.com