சட்டமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவதாக, மும்மொழிக் கொள்கை தொடர்பாக உருவான சர்ச்சை, நிதிநிலை அறிக்கையின் தொனியையும் உள்ளடக்கத்தையும் வடிவமைத்திருக்கிறது.
இரண்டாவதாக, அடுத்த ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளும் அரசியல்ரீதியிலான பரிசீலனைகள் நிதிநிலை அறிக்கைக்கு மற்றொரு எல்லையை நிர்ணயித்துள்ளன. மத்திய அரசுடனான பிணக்கு - நிதி இழப்பு ஆகியவற்றை உள்வாங்கிக்கொண்டு, கல்வி, வீட்டுவசதி போன்ற திட்டங்களுக்கு மாநில வருவாயைச் செலவிடுவதன் மூலம், இந்த நிதிநிலை அறிக்கையில் அரசியல் ரீதியாகச் சில வியூக செலவினங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
சில ஒப்பீடுகள்: மாநிலத் திட்டக் குழு வெளியிட்ட முதல் பொருளாதார ஆய்வறிக்கையில், நிதிநிலை அறிக்கையின் பின்னணி விளக்கப்பட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) (நடப்பு விலைகளில்) ரூ.31,55,096 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2023-24ஐவிட 16% வளர்ச்சியாகும். இதன் அடிப்படையில், 2024-25இல் உண்மையான வளர்ச்சி விகிதம் (real growth) சுமார் 8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட வளர்ச்சியின் அடிப்படையில், 2024-25ஆம் ஆண்டுக்கான மொத்த வருவாய் ரூ.2,99,010 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023-24ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட (revised estimate) 10% அதிகம். இதில், ரூ.2,25,901 கோடி (76%) மாநில அரசு வரிகள் மூலம் திரட்டப்படும். மேலும் ரூ.73,109 கோடி (24%) மத்திய அரசிடமிருந்து கிடைக்கும். மத்திய அரசிடமிருந்து மாநிலம் பெறும் நிதி வளங்கள், மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கு (வருவாய் வரவுகளில் 17%), மானியங்கள் (வருவாய் வரவுகளில் 8%) வடிவில் இருக்கும்.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சொந்த வரி வருவாய் (total own tax revenue) 2024-25ஆம் ஆண்டில் ரூ.1,95,173 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023-24ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட 15% அதிகம். இதில் மாநில ஜிஎஸ்டி சொந்த வரி வருவாயின் மிகப்பெரிய ஆதாரமாக (38% பங்கு) மதிப்பிடப்பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளைவிட மாநில ஜிஎஸ்டி வருவாய் 17% அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. விற்பனை வரி/வாட்(sales tax/VAT) வருவாய் ரூ.69,588 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 2023-24ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது 12% அதிகம். முத்திரைத் தீர்வை, பத்திரப் பதிவு (12%), கலால் வரி (6%), மோட்டார் வாகன வரி (5.9%) ஆகியவற்றிலிருந்து மற்ற வருவாய் திரட்டப்படுகிறது. 2023-24ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளைப் போலவே, 2024-25ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சொந்த வரி வருவாய் 6.2%ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையின் செலவினப் பக்கத்தில், 2024-25ஆம் ஆண்டுக்கான வருவாய் செலவினம் (Revenue expenditure) ரூ.3,48,289 கோடியாக இருக்கும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. இது 2023-24ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட 10% அதிகம். இதில் சம்பளம், ஓய்வூதியம், வட்டி, மானியங்கள், நிதியுதவிகளுக்கான செலவும் அடங்கும். இவற்றில் சம்பளம், ஓய்வூதியம், வட்டி ஆகியவை மொத்த வருவாய் செலவினத்தில் 64%ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவதாக, 2024-25ஆம் ஆண்டுக்கான மூலதனச் செலவு ரூ.47,681 கோடியாக இருக்கும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. இது 2023-24ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட 12% அதிகம். மூலதனச் செலவு என்பது சொத்துகளை உருவாக்குவதற்கான செலவினத்தைக் குறிக்கிறது. மூன்றாவதாக, மாநிலத்தால் வழங்கப்படும் முன்பணம், கடன்கள் (advances and loans) ரூ.16,534 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துறைசார் ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, மொத்தச் செலவினத்தில் கல்வித் துறைக்கு 13.7% ஒதுக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரம் (5%), சாலைகள்-பாலங்கள் (5%), விவசாயம் (6.1%), கிராமப்புற மேம்பாடு (3%), எரிசக்தி (4.7%). இந்த ஒதுக்கீடுகள் அனைத்தும் 2023-24ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளைவிட அதிகமாக உள்ளன, எரிசக்தித் துறையைத் தவிர.
பரிசீலிக்கப்பட வேண்டிய அம்சங்கள்: இந்த நிதிநிலை அறிக்கையிலும் முந்தைய நிதிநிலை அறிக்கையிலும் உள்ள பொதுவான அம்சம், ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்களுக்கான சமூக நலனில் கவனம் செலுத்துவதுதான். மானியங்கள், நேரடிப் பணப் பரிமாற்றங்கள் போன்றவற்றின் மூலம் இது செய்யப்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் ‘கலைஞர் கனவு இல்லம்’, பெண் தொழில்முனைவோருக்கான ஊக்கத் திட்டம் போன்ற திட்டங்கள் அந்த உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன.
நேரடிப் பணப் பரிமாற்ற அடிப்படையிலான நலத்திட்டங்களின் தற்போதைய அணுகுமுறையில் உள்ள சிக்கல் என்னவென்றால், நீடித்துவரும் சமத்துவமின்மையை இதனால் தீர்க்க முடியாது. நேரடிப் பணப் பரிமாற்றம் சார்ந்த நன்மைகள், பொருளாதாரத்தை விரிவாக்கக்கூடிய நுகர்வுப் பெருக்கத்தையே உருவாக்குகின்றன. ஆனால், முதலீட்டு உருவாக்கத்தில் விரிவாக்கமும் / அதன் விளைவாக ஊதிய வளர்ச்சியும் இல்லாவிட்டால், அத்தகைய நுகர்வு அடிப்படையிலான விரிவாக்கத்தின் நிலைத்தன்மை சாத்திய மற்றதாகிவிடும்.
இந்த நிதிநிலை அறிக்கையிலும் மூலதனச் செலவு முந்தைய நிதிநிலை அறிக்கைகளைப் போலவே உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையிலும் கல்வி (வகுப்பறைகளை நவீனமயம் ஆக்குதல்), வீட்டுவசதி, ஐடி பூங்காக்கள், ஜவுளிப் பூங்காக்கள், சாலைகள், கிராமப்புற மேம்பாடு போன்ற திட்டங்கள் இருந்தாலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூலதனச் செலவு சுமார் 1.5% மட்டுமே.
மூலதனச் செலவுகள் புதிய சொத்துக்களை உருவாக்கி மக்களுக்குப் புதிய வருமானத்தை உருவாக்குகின்றன. நுகர்வு அடிப்படையிலான வளர்ச்சி அணுகுமுறை என்பது வருமான உருவாக்கத்தைப் பொறுத்ததே. புதிய மூலதன உருவாக்கம் இல்லையென்றால், நுகர்வு அடிப்படையிலான அணுகுமுறை என்பது பணப் பரிமாற்றம் அல்லது வரிக் குறைப்பு அல்லது கடன் விரிவாக்கங்கள் மூலம் மட்டுமே நிலைநிறுத்தப்படும். முதல் இரண்டு வழிமுறைகள் அரசாங்கத்தின் கடன் சுமையை அதிகரிக்கும். மூன்றாவது வழிமுறை பொருளாதாரத்தை நிலையற்றதாக மாற்றும்.
இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம், பொருளாதாரரீதியாக நன்மை பயக்கும் மூலதன உருவாக்கத்தையும் அரசியல் ரீதியாக நன்மை பயக்கும் சமூகநலத் திட்டங்களையும் அரசாங்கம் இணைத்திருக்கலாம். கலைஞர் கனவு இல்லம் திட்டம் இந்த வகையைச் சேர்ந்தது. அதேபோல், பல நலத்திட்டங்களிலும் இந்த அணுகுமுறையை அரசாங்கம் முன்னெடுத்திருக்கலாம். உதாரணமாக, பெண்களுக்கு அதிகாரமளித்தல் பிரச்சினையை எடுத்துக்கொள்வோம்.
தொழிலாளர் பங்களிப்பில் பெண்களுக்கான இடம் கிடைக்காமல் போவதற்கான தடைகளில் ஒன்று, அவர்களை அழுத்தும் வீட்டுப் பராமரிப்புப் பணிகளின் சுமை. குழந்தைப் பராமரிப்பு என்பது பெண்களுக்காக வரையறுக்கப்பட்ட பொறுப்புகளில் மிகப்பெரிய ஒன்று.
நகர்ப்புறங்களில் இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமானது. தொழிலாளர் படையில் அதிகப் பெண்கள் பங்கேற்க உதவும் அரசுப் பராமரிப்பு உள்கட்டமைப்பு வசதிகளை (care infrastructure) உருவாக்குவது, இந்தப் பிரச்சினையை மாற்றுவதற்கான மாறுபட்ட அணுகுமுறையாக இருக்கும்.
பெரிய அளவிலான பராமரிப்பு உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வது, பொருளாதாரம் -சமூகம் இரண்டிலும் தேவையான மாற்றங்களையும் ஏற்படுத்தும். லத்தீன்-அமெரிக்க நாடான கொலம்பியாவின் அனுபவம், அத்தகைய உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குவது பற்றிச் சிந்திக்க நமக்கு உதவலாம்.
பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டியின் ‘சமத்துவமின்மை என்பது ஒரு தேர்வு, ஆனால் நாம் வேறு பாதையைத் தேர்வு செய்ய முடியும்’ என்கிற கருத்தை மேற்கோள் காட்டி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
ஆனால், சமத்துவமின்மை என்பது பொருளாதாரக் கட்டமைப்பு நிலைமைகளால் ஏற்படும் விளைவே. சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கும், பொது சுகாதாரம், கல்வி, பொருளாதாரத்துக்கான பிற அடிப்படைத் தேவைகளுக்கு அரசுப் பராமரிப்பு சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைப்பது குறித்துப் பரிசீலிப்பது நீண்ட கால நோக்கில் பலன் தரும்.
- தொடர்புக்கு: raghav.srinivasan@apu.edu.in