சிறப்புக் கட்டுரைகள்

தெய்வமான மனுஷி | தொன்மம் தொட்ட கதைகள் - 29

சுப்பிரமணி இரமேஷ்

எழுத்​தாளர் ந.முத்​து​சாமி ‘பாஞ்​சாலி’ என்​றொரு சிறுகதையை எழு​தி​யுள்​ளார். பாஞ்​சாலி​யாக நடிக்​கும் ஒரு நடிகை​யின் பின்​புலத்தை அடிப்​படை​யாகக் கொண்டு இக்​கதையை எழு​தி​யுள்​ளார். இவர் உரு​வாக்​கிய கூத்​துப் பட்​டறை, நவீன நாடக உரு​வாக்​கத்​தில் முக்​கியப் பங்​காற்றி வரு​கிறது. பாஞ்​சாலி துகிலுரிதல் கூத்​தின் பின்​னணி​யைத்​தான் இக்​கதை விவரிக்​கிறது.

இக்​கதை​யில் பாஞ்​சாலி​யாக நடிக்​கும் பெண் தேவ​தாசி மரபைச் சேர்ந்​தவள். ஆனால், அவள் பாஞ்​சாலி​யாக வேடம் புனைந்​தவுடன் அனை​வரும் அவளைப் பாஞ்​சாலி அம்​ம​னாகப் பார்க்​கின்​றனர். கூத்​தில் பாஞ்​சாலி​யின் ஆடையைத் துச்​சாதனன் கலை​யும்​போதெல்​லாம் பெண்​களின் தொன்ம மனம் தூண்​டப்​படு​கிறது. பாரதக்​கதை நடை​பெற்ற கால​மாகக் கருதப்​படும் துவாபர யுகத்​தின் மாந்​தர்​களாகவே அவர்​கள் தங்​களைக் கரு​திக்​கொள்​கின்​றனர்.

துவாபர யுகத்​தின் மக்​களைப்​போன்று நெட்டை மரங்​களாக​வும் வீரமிலா நாய்​களாக​வும் நிற்​காமல் பாஞ்​சாலி​யின் துயரத்​தில் தாங்​களும் பங்​கெடுத்​துக் கொள்​கின்​றனர். அதற்​கான கலகச் செய​லாகவே அவளது உடலில் இருந்து கழி​வாக வெளி​யேறும் உதிரத்தை எடுத்துப் பொட்​டாக வைத்​துக்​கொள்​கின்​றனர். பாஞ்​சாலிக்​குக் கற்​பூரஆரத்​திக் காட்​டு​கின்​றனர். கௌர​வர்​கள் சபை​யின் பிழையைக் கலி​யுகத்​தில் நேர்​செய்​யும் முயற்​சி​யாகவே இதனைப் பார்க்க வேண்​டி​யிருக்​கிறது.நாட்​டார் இலக்கியத்தில் பஞ்ச பாண்​ட​வர்​களை​விடத் திரௌப​திக்கே அதிக முக்​கி​யத்​து​வம் கொடுத்து கலை இலக்​கியப் பிர​தி​களை உரு​வாக்​கி​யுள்​ளது.

இதிலிருந்து நாட்​டார் மரபு பிர​தி​கள், திரௌப​திக்கு எந்த அளவுக்கு முக்​கி​யத்​து​வம் அளித்து வரு​கின்றன என்​பதை விளங்​கிக் கொள்​ளலாம். இதன் தொடர்ச்​சி​யாக ந.முத்​து​சாமி​யின் ‘பாஞ்​சாலி’ சிறுகதை​யும் வாசிக்க வேண்​டி​யிருக்​கிறது. தேவ​தாசி மரபைச் சேர்ந்த ஒரு பெண் பாஞ்​சாலி​யாக வேடம் புனை​யும்​போது மக்​கள் அவளைப் பாஞ்​சாலி​யாகவே உள்​வாங்​கு​கின்​றனர்; அம்​ம​னாகத் தரிசிக்​கின்​றனர். துச்​சாதனன் பாஞ்​சாலி​யின் ஆடையை உரு​வும்​போது கொதித்​தெழுகின்​றனர்; எதிர்ப்​புக்​குரல் கொடுக்​கின்​றனர். இந்த ஏற்பு எவ்​வாறு நிகழ்​கிறது என்​பதை ஒரு நாடகக்​கார​ராக ந.முத்​து​சாமி புரிந்​து​கொண்​டிருக்​கிறார். இந்​தப் புனை​வில் அதனை அனை​வருக்​கும் கடத்​த​வும் முயன்​றிருக்​கிறார். மிராசுகள் நிரம்​பிய பகுதி தஞ்​சை. அந்​தப் பகு​தி​யில்​தான் தேவ​தாசி மரபும் செழித்​திருந்​தது. தேவ​தாசி மரபைத் தக்க வைத்​திருந்​த​தில் மிராசுகளுக்​கும் பெரும் பங்​குண்​டு. மிராசுகள் புழங்​கிய வீட்​டிலிருந்​து​தான் ஒரு பெண் பாஞ்​சாலி​யாக உரு​மாறுகிறாள். மாத​வி​டாய் நாளில்​தான் இவள் பாஞ்​சாலி​யாக வேடம் புனைகிறாள். கொஞ்​சநேரத்​தில் இவள் ஊரார் வணங்​கும் பாஞ்​சாலி அம்​மன் ஆகிறாள்.

பாஞ்​சாலி​யாக வேடம் புனைந்​தவளுக்கு உண்​மை​யில் ஒரு காதலன் உண்​டு. அவன் பெயர்ஹரி. மிராசு​வின் மகன். அவனை அர்​ஜுன​னாகக் கற்​பிதம் செய்​து​கொள்​கிறாள். சிறு​வயது முதலே காதல் தொடர்​கிறது. இவர்​கள் இரு​வருக்​கும் இடை​யில் துரியோதனனைப் போன்று ஒரு​வன் குறுக்​கிடு​கிறான். அவனால் இவர்​கள் பாதிக்​கப்​படு​கிறார்​கள். பிரதி இவ்​விடத்​தில் மாற்​றுக் கருத்​தொன்றை முன்​வைக்​கிறது. சமூகத்​தில் ஒடுக்​கப்​பட்ட பெண்​கள் இன்​றும் ஆதிக்க வர்க்​கத்​தின​ரால் வெவ்​வேறு வடிவங்​களில் துகில் உரியப்​படு​கிறார்​கள். சமூகம் நெட்டை மரங்​களைப் போன்று வேடிக்கை பார்த்​துக்​கொண்​டு​தான் இருக்​கிறது. துரியோதனனும் துச்​சாதனனும் இன்​றும் வேறு​வேறு பெயர்​களில் நடமாடிக்​கொண்​டு​தான் இருக்​கிறார்​கள் என்​றும் இக்​கதையை வாசிக்​கலாம். இவளே பிற்​காலத்​தில் பாஞ்​சாலி​யாக வேடமேற்​கும்​போது அவளது துயரத்​தில் மக்​கள் பங்​கெடுத்​துக் கொள்​கிறார்​கள். துரியோதனனுக்​கும் துச்​சாதனனுக்​கும் எதி​ராகக் குரல் கொடுக்​கிறார்​கள். இந்த இரட்டை முரண்​பாட்டை எப்​படிப் புரிந்​து​கொள்​வது? மேலும், தேவ​தாசிகள் இறைவனுக்கு அணுக்​க​மானவர்​களாக​வும் இருந்​தார்​கள்.

இறைவ​னால் கைவிடப்​பட்​ட​வர்​களாக​வும் இருந்​தார்​கள். துயரத்​தில் இருந்து விடுபட முடி​யாத​போது அதில் கரைத்​துக்​கொள்​வதைத் தவிர வேறு வழி​யில்​லை​தானே! அவ்​வகை​யில், கலைகளில் தங்​களைக் கரைத்​துக் கொண்​ட​வர்​களாகத் தேவ​தாசிகளைக் கருதலாம். கோயில்​கள் சார்ந்தே இவர்​கள் தங்​கள் வாழ்க்​கையை அமைத்​துக் கொண்​டிருந்​தா​லும் இவர்​களுக்​கும் இறைவனுக்​கும் இடை​யில் ஒரு சுவர்எப்​போதும் இருந்​த​தாக ந.முத்​து​சாமி எழு​தி​யிருக்​கிறார். தான் எந்​தத் தெரு வழி​யாக ஊர்​வலம் போகவேண்​டும் என்​ப​தைப் பாஞ்​சாலி​யாக வேடம் புனைந்​திருக்​கும் தேவ​தாசிப் பெண்​தான் தீர்​மானிக்​கிறாள்.

பாஞ்​சாலி​யின் கூந்​தலைப் பிடித்​திழுத்​து, அவள் ஆடையைக் கலைந்த துச்​சாதனன் தாகம் எடுத்​துத் தவிக்​கிறான். நிகழ்த்​துக் கலைக்​கும் அதில் பங்​கேற்​கும் நடிகர்​களுக்​கும் இடை​யில் ஒரு வாழ்க்கை இருக்​கிறது. அதனைப் புரிந்​து​கொள்​ள​வும் இக்​கதை உதவும். பாஞ்​சாலி, பாண்​ட​வர்​கள், துரியோதனன், துச்​சாதனன், விகர்​ணன் ஆகியோர் நிஜத்​தில் யார்? ‘பாஞ்​சாலி துகிலுரிதல்’ நாடகத்​திற்​காக இவர்​கள் வேடம் புனைந்​த​ பிறகு, மக்​கள் இவர்​களை என்​ன​வாகப் புரிந்​து​கொள்​கிறார்​கள் போன்ற பல உள்​ளீடு​களை இக்​கதை கொண்​டிருக்​கிறது. ந.முத்​து​சாமி, பாஞ்​சாலி என்ற தொன்​மக் கதா​பாத்​திரத்​தைக் கொண்டு இக்​கதையை எழு​தி​யிருந்​தா​லும் இவர் பேசி​யிருப்​பது ஒரு சமூக யதார்த்​தம். புனை​வுக்​கும் உண்​மைக்​கும் இடை​யில் எவ்​வளவு பெரிய இடைவெளி இருக்​கிறது. அந்​த இடைவெளி காலந்​தோறும்​ பாது​காக்​கப்​பட்​டே வரு​கிறது. அந்​தப்​ பாது​காப்​பு வேலி​யின்​மீது ஓர்​ அசைவை ஏற்​படுத்​தியிருக்​கிறது இக்​கதை.

SCROLL FOR NEXT