‘நவீன இந்தியாவின் கோயில்கள்’ என்று நாட்டின் பெரிய அணைகளை, ஜவாஹர்லால் நேரு குறிப்பிட்டார். இந்தியாவின் தொழில் வளர்ச்சி, உணவு உற்பத்தி தொடர்பான சவால்கள் அணைகள் கட்டுவதன் மூலம் தீர்க்கப்படும் என்று அந்தக் காலக்கட்டத்தில் கருதப்பட்டது.
வேறு எந்தப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும் போலவே, அணையின் ஆயுள்காலமும் வரையறுக்கப்படுகிறது. பல்வேறு காரணிகளையும் மாற்றங்களையும் தாண்டி, ஒரு சிறந்த அணைக் கட்டுமானம் சுமார் 1,000 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் எனக் கொள்ளலாம்.
வண்டல் படிதலும் சிக்கல்களும்: அணையின் செயல்பாட்டு நிலை, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பல்வேறு காரணிகள் ஆகியவற்றின் காரணமாக, தற்போதுள்ள அணைகளின் எஞ்சியுள்ள கால சேவைக்கு ஒரு கால அளவை நிர்ணயிக்க முடியாது. ஒவ்வொரு தனிப்பட்ட அணையின் கட்டுமானம், பராமரிப்புத் தர அடிப்படையில் இது மதிப்பிடப்பட வேண்டும்.
இருப்பினும், சில கான்கிரீட் அணைகளுக்கு - அசாதாரண நிலையின் காரணமாக - பெரிய அளவிலான மறுசீரமைப்பு தேவைப்படலாம். கட்டுப்பாடற்ற வண்டல் படிதல் நீர்த்தேக்கத்தின் பயன்பாட்டைக் குறைக்கும்.
உலக அளவில், அணைகளின் தற்போதைய சேமிப்புத் திறனில் தோராயமாக 1%, ஆண்டுதோறும் வண்டல் படிவு காரணமாக இழக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கையின்படி, இந்திய நீர்த்தேக்கங்களில் ஓர் ஆண்டில் வண்டல் படிவு அவற்றின் அசல் கொள்ளளவில் சராசரியாக 1 முதல் 2 சதவீதம்.
பல்வேறு ஆய்வுகளின்படி, இந்திய நீர்த்தேக்கங்களில் இதுவரை சுமார் 50 பில்லியன் கன மீட்டர் (பிசிஎம்) அளவு வண்டல் மண் குவிந்துள்ளது. இதன் காரணமாகப் பெரிய அளவிலான நீர்த்தேக்கங்களின் நேரடி சேமிப்புத் திறன் சுமார் 20-30% குறைந்துள்ளது.
அதிகரித்துவரும் நீர் நுகர்வு விகிதங்கள், குறைந்துவரும் சேமிப்புத் திறன், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள், மாசுபாடு உள்ளிட்ட காரணிகளால், உலகம் பெருமளவில் நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. நீர்த்தேக்கங்களின் ஆயுள்காலமும் குறைந்துள்ளது. வண்டல் படிவு காரணமாக அவற்றின் சேமிப்புத் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது. இது வெள்ளப்பெருக்கை அதிகரிக்கலாம்.
இந்த நிலைமை தொடர்ந்தால் அணையின் கீழ்நிலைப் பகுதிகள் பாதுகாப்பற்றதாகவும் மாறக்கூடும். கடந்த சில தசாப்தங்களாக உலகின் விளைநிலங்களில் மூன்றில் ஒரு பங்கை மண் இழப்பு பாதித்துள்ளது. அதேநேரம் அணையின் நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் இருந்து திரட்டப்பட்ட வண்டலை அகற்றும் செயல்முறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
என்னென்ன நன்மைகள்? - வண்டல் நீக்கம் செய்வது அணையின் தண்ணீரைச் சேமிக்கும் திறனை மீட்டெடுக்கிறது. நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு இது மிகவும் முக்கியமானது. அங்கு நீர்ப்பாசனம், குடிநீர், பிற தேவைகளுக்கு நம்பகமான சேமிப்பு மிக அவசியம்.
சேமிப்புத் திறனைப் பராமரிப்பதன் மூலம் அல்லது மேம்படுத்துவதன் மூலம், இந்தியாவின் சில பகுதிகளில் பொதுவாகக் காணப்படும் வறண்ட காலங்கள் அல்லது வறட்சியின்போது அணைகள் தொடர்ந்து தண்ணீரைத் தேக்கிவைத்து வெளியேற்ற முடியும். காலநிலை மீள்தன்மையை உறுதிசெய்வதில் நீர் சேமிப்புக் கட்டமைப்புகளைப் பலப்படுத்துவது மிக முக்கியம்.
வண்டல் நீக்கம் செய்வது, உகந்த நீரோட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது. மழைக்காலங்களில் வெள்ள மேலாண்மைக்கு இது மிகவும் முக்கியமானது. முறையாகப் பராமரிக்கப்படும் அணையைக் கொண்டு, கனமழையின்போது கீழ்நோக்கிச் செல்லும் வெள்ளத்தைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தலாம். அதிகப்படியான நீரை வெளியேற்ற வடிவமைக்கப்பட்ட கசிவுப் பாதைகளையும் வண்டல் அடைக்கலாம்.
வண்டல் நீக்கம், இந்தக் கட்டமைப்புகள் பயனுள்ளதாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. அணை உடைவது அல்லது நீர் நிரம்பி வழிவது போன்ற அபாயங்களையும் இது தடுக்கிறது. அணையின் மின்சார உற்பத்தித் திறனை மீட்டெடுக்கவும், நிலையான நீர்மின்சக்தி உற்பத்திக்குப் பங்களிக்கவும், புதைபடிவ எரிபொருள்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இது உதவுகிறது.
வறண்ட காலத்தில், வண்டல் நீக்கம் விவசாய நிலத்துக்குத் தொடர்ச்சியான, நம்பகமான நீர் விநியோகத்தை உறுதிப்படுத்துகிறது. இது பயிர் உற்பத்தியைப் பராமரிப்பதற்கும் போதுமான விளைச்சலை எட்டுவதற்கும் மிகவும் முக்கியமானது. அணையிலிருந்து அகற்றப்படும் வண்டல் மண், விவசாய நிலங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்தப்படலாம். வண்டல் மண் அகற்றுதல் பொதுவாகப் புதிய உள்கட்டமைப்பை உருவாக்குவதைவிடச் செலவு குறைந்தது.
வண்டல் மண்ணை அகற்றுவது - நீர்ப் பற்றாக்குறை, வெள்ளச் சேதம் அல்லது எரிசக்தி உற்பத்திச் செயலிழப்பு போன்ற நீண்ட கால நெருக்கடிகளின் சாத்தியக்கூறுகளைக் குறைக்க உதவும். சாலைக் கட்டுமானம், ரியல் எஸ்டேட், ரயில்வே / மெட்ரோ திட்டங்கள், பிரத்யேக சரக்கு வழித்தடம், அணைகள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற பல்வேறு கட்டுமான நோக்கங்களுக்காக இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 4 முதல் 5 பிசிஎம் மண் தேவைப்படுகிறது. இது மொத்த வண்டல் மண் இருப்பான 50 பிசிஎம்-இல் வெறும் 10 சதவீதம் மட்டுமே.
எனவே, நீர்த்தேக்கங்களைத் தூர்வாருவதன் மூலம், நாட்டின் மொத்த மண் தேவையை - குறைந்தது 10 ஆண்டுகளுக்குப் பூர்த்திசெய்ய முடியும். இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தூர் வாருவதற்கான செலவினங்களுக்கு நிதி அளிக்க முடியும். மாநில அளவிலான பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி, அதனிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் மாநிலங்களுக்கான வருவாயை நீண்டகால அளவில் அதிகரிக்கலாம்.
கவனம் அவசியம்: நீர்த்தேக்கத்தில் உள்ள வண்டலின் ஆழம், இருப்பிடம், அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேம்பட்ட கருவிகள், நிபுணத்துவம் வண்டலை அகற்றுவதற்குத் தேவைப்படலாம். அவை எப்போதும் உள்ளூரில் கிடைக்காது. அணையின் வடிவமைப்பும் கட்டுமானமும் சில சவால்களை ஏற்படுத்தலாம்.
சில சந்தர்ப்பங்களில், அணையின் அமைப்பு அல்லது நீர்த்தேக்கத்தின் அமைப்பு வண்டலை அகற்றுவதையும் கடினமாக்கலாம். இது வண்டல் படிவு நீக்கச் செயல்முறையை மிகவும் செலவு பிடிப்பதாகவும், சிக்கலானதாகவும் மாற்றலாம்.
வண்டல் மண் அகற்றுதலை நிர்வகிப்பது தளவாடங்களைக் கொண்டுசெல்வதில் உள்ள சவால்களை அதிகரிக்கிறது. வண்டல் மண் அள்ளுதல் என்பது அதிக அளவிலான மூலதனம் தேவைப்படும் ஒரு செயல்முறையாகும். அரசியல் / மக்கள் அழுத்தம் இல்லாதபோது, அத்தகைய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது ஒரு சவாலாக இருக்கலாம்.
சில சந்தர்ப்பங்களில், வண்டல் மண் அள்ளும் செயல்முறையானது அணைக்கு அருகில் வசிக்கும் சமூகங்களின் இடம்பெயர்வு, அணையைச் சார்ந்த பகுதிகளைத் தற்காலிகமாக மூடுவது போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம் - குறிப்பாக, மீன்பிடித்தல் அல்லது விவசாயத்தை நம்பியிருக்கும் பகுதிகளில் இது எதிர்ப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும்.
இந்தியாவின் அணைகளில் வண்டல் மண் அள்ளுதல் என்பது நீர் சேமிப்பு, நீர் மின்உற்பத்தி, வெள்ளக் கட்டுப்பாடு, ஒட்டுமொத்த அணை செயல்திறனைப் பராமரிப்பதற்கு மிக முக்கியமானது. இருப்பினும், சுற்றுச்சூழல் சார்ந்த சவால்கள், தொழில்நுட்பச் சிக்கல்கள், தளவாடங்களைக் கொண்டுசெல்வதில் உள்ள தடைகள், சமூகரீதியான சிக்கல்கள் எனப் பல்வேறு சவால்கள் இதில் உள்ளன. வண்டல் மண் அள்ளும் திட்டங்களுக்கு நீர்வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்ளூர் நிர்வாகம், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு அவசியம்.
- ஜ.முரளி, கு.இளங்கோவன்; தொடர்புக்கு: muralijana@gmail.com