பிற மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான வார்ப்புருவாக (Template) செயல்படுவது தாய்மொழிதான். தாய்மொழியில் ஒரு கருத்தைப் புரிந்துகொள்வதுதான் இன்னொரு மொழியில் அதே கருத்து சொல்லப்படும்போது அதைப் புரிந்துகொள்ள உதவும். எளிதாகச் சொல்வதென்றால், தாய்மொழியில் ஒரு கருத்தைப் புரிந்துகொள்வது என்பது அசல் ஆவணம் போன்றது.
அசல் ஆவணத்தைக் கொண்டு பல நகல்கள் எடுப்பதைப் போலத் தாய்மொழியில் புரிந்துகொள்வதே வேறு பல மொழிகளில் அதைப் புரிந்துகொள்ள அடிப்படையாக அமையும். பிறரைத் தொடர்புகொள்ள மட்டுமன்றி, உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த சமூக வாழ்வுக்கும், கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதற்கும் எளிதான வழியாக இருப்பது தாய்மொழிதான்.
ஆங்கிலம் உள்பட அந்நிய மொழிகளைக் கற்றுக்கொள்வது தொடர்புகளை விரிவாக்கவும், கல்வியில் மேம்பாடு அடையவும் மட்டுமே உதவும். பிறமொழிகளில் தொடர்புகொள்வதுதான் நாகரிகத்தின் அடையாளம் எனக் கருதப்படுவது அந்தந்தத் தாய்மொழிக்கான வாய்ப்புகளை குறைக்கும். அசலை அழித்துவிட்டால் நகல்கள் எடுப்பது சிரமம்.
மொழிக் கோட்பாடுகள்: குழந்தைகள் சராசரியாக 6 மாதங்களில் ஓர் உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்தால் உருவாக்கப்படும் வார்த்தையைக் கொண்டு ஒலியெழுப்புவதில் ஆரம்பித்து, 10ஆவது மாதத்தில் இரண்டு உயிர் மற்றும் மெய்யெழுத்துக்களினால் பேசி, 3 வயதில் சிறிய கதையை வாக்கியமாகச் சொல்லும் அளவுக்குக் கற்றுக்கொள்கிறார்கள்.
இதை அவர்கள் எழுதப்பட்ட மொழி வடிவத்திலிருந்து கற்றுக்கொள்ளாமல், வீட்டில் இருக்கும் நபர்கள் பேசும் பேச்சுமொழியிலிருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள். இந்தக் கற்றலில் நடத்தைக் கோட்பாடும் (Behaviourist theory), அறிவாற்றல் கோட்பாடும் (Cognitive theory) சேர்ந்துதான் மொழித்திறனை உருவாக்குகின்றன.
நாம் வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வதற்கு முன்பே பேசக் கற்றுக்கொள்கிறோம். இது மனித மூளையின் அடிப்படை, தனித்திறன் என்பதுதான் உள்ளார்ந்த திறன் கோட்பாடு (Innatism). பல மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லாமல் இருந்தும் அவர்களால் அந்த மொழிகளைப் பேசியே வளர்க்க முடிவது இதற்குச் சிறந்த உதாரணம்.
இதன் அடிப்படையில் பார்த்தால், எதில் பேசுகிறோமோ அதில் கற்றுக்கொள்வதுதான் எளிதான கற்றலாக அமையும். ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள்கூட வேலையின் நிமித்தம் வேறு மாநிலங்களுக்கு, நாடுகளுக்குச் செல்லும்போது பிறரைத் தொடர்புகொள்ள வேண்டிய கட்டாயத்தின் அடிப்படையில் அப்பகுதிகளின் பேச்சு மொழியைச் சில மாதங்களுக்குள் கற்றுக்கொள்கின்றனர் (Interactionism).
அனைவருக்கும் பொருந்துமா? - இதற்கு மேல் தாய்மொழியிலோ, பிற மொழிகளிலோ புலமை பெறும் அளவுக்கு மனித மூளைக்கு ஆற்றல் உள்ளது என்பதால் சிறுவயதிலேயே பல மொழிகளைக் கற்றுக்கொள்வதை ஒரு சாரார் ஊக்குவிக்கின்றனர். இது தவறல்ல; ஆனால் தனிப்பட்ட, சமூகக் காரணங்களால் எல்லாக் குழந்தைகளுக்கும் இது பொருந்துவதில்லை.
கற்றல் நடைபெறும் சூழ்நிலை ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே, ஒவ்வொரு குழந்தையும் சமமாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பது ஆல்பர்ட் பண்டூராவைப் பின்பற்றும் சமூகக் கற்றல் கோட்பாட்டாளர்களின் (Social learning theory) வாதம். இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் இந்தச் சமநிலை சாத்தியமில்லை.
ஏழைக்கு ஒரு கல்வி, வசதி பெற்ற வீட்டுக் குழந்தைகளுக்கு இன்னொரு வகையான கல்வி என்கிற நிலையை மாற்றும்போதுதான் இந்தச் சிக்கலையும் தீர்க்க முடியும். இயற்கையின் கொடையாகச் சில குழந்தைகள் கல்வி கற்காமலேயே உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்ட மொழியாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மீது பிறமொழிகள் - ஆங்கிலம் உள்பட - கட்டாயமாகத் திணிக்கப்படும்போது சந்தேகத்துக்கு இடமின்றி, அவர்களது மொழியாற்றலோடு தாய்மொழியை வார்ப்புருவாகக் கொண்டு வளர்க்கப்படும் படைப்பாற்றலும் பாதிக்கப்படும்.
இன்றைக்குத் தொடுதிரைகள் மூலம் கற்பது, கணினித் தட்டச்சு மூலம் எழுதுவது என்று பள்ளிகளில் கற்றல் எளிதாக்கப்பட்டு வருவது, ஒருவகையில் மொழிகளின் எழுத்துவடிவம் கற்றுக்கொள்ளப்படுவதை அழித்துவருகிறது. இன்னொரு பக்கம் திறன்பேசிகளின் அதிகப் பயன்பாட்டினால் செயற்கையான கற்றல்திறன் குறைபாடு அதிகரித்துவரும் சூழ்நிலையில், அதைச் சரிசெய்யும் முயற்சிக்கு முன்னுரிமை கொடுப்பதே உடனடித் தேவை.
குறைந்தபட்சம் தாய்மொழியில் கற்றலை உறுதிசெய்வதும், உயர் கல்விக்குத் தேவையான இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்வதுமே சாலச்சிறந்தது. கற்றல் திறன்களும், கற்கும் வாய்ப்புகளும் உள்ள மாணவர்கள் வேண்டுமானால் மூன்றாவது மொழியை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அரசுப் பள்ளிகளிலும் அப்படித் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அளிக்க வேண்டும்!
சமூக மாற்றமும் மொழித்திறனும்: 25 வருடங்களுக்கு முன்புவரை தமிழ்வழிப் பள்ளிக் கல்விதான் முதன்மையாக இருந்தது. மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்த பெரும்பாலான மாணவர்கள் அறிவியல் பாடங்களைத் தமிழில் கற்றுத்தேர்ந்து, கல்லூரியில் அதே பாடங்களின் தொடர்ச்சியை ஆங்கிலத்தில் கற்றறிந்தனர். முதல் ஓரிரு மாதங்கள் இந்த மொழிமாற்றம் கடினமாக இருந்தாலும், பின்பு பாடங்களை ஆங்கிலத்தில் எளிதில் படித்துத் தேர்ச்சிபெற்று இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் மருத்துவர்கள் ஏராளம்.
தாய்மொழியில் கற்றுக்கொள்வது வார்ப்புருவாக அமைந்ததனால், பிறமொழிகளில் பாடங்களின் தொடர்ச்சியைக் கற்றுக்கொள்வதில் எந்தச் சிக்கலும் இருந்ததில்லை. இன்றைக்குத் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்திலும், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் தாய்மொழியாகிய தமிழிலும் எழுதும்போது, ஏராளமான எழுத்து / இலக்கணப் பிழைகள் ஏற்படுவதை மறுக்க முடியாது. இந்த வகை மாணவர்கள்தான் பெரும்பான்மை என்பதையும் மறந்துவிடக் கூடாது. ஆங்கிலவழிக் கல்வி பெருகிவிட்டதால் மாணவர்கள் தமிழையே அந்நிய மொழியாகப் பார்க்கும் நிலையும் அதிகரித்து வருகிறது.
கற்றல்திறன் குறைபாடு: மூன்றாவது மொழியை இளம் வயதிலேயே கற்றுக்கொண்டால் வேலைவாய்ப்பு, தொடர்புகளை எளிதாக்க உதவும் என்கிற வாதம் புறந்தள்ளத்தக்கதல்ல என்றாலும், இது சாதகமற்ற சூழலில் வாழும் குழந்தைகளுக்கு இன்னும் அதிகச் சுமையையே கொடுக்க சாத்தியமுள்ளது; ஏற்கெனவே கற்றல்திறன் குறைபாடு உள்ள மாணவர்களோடு போராடிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கும் அதிகப் பணிச்சுமையையும் மன அழுத்தத்தையும் இது கொடுக்கும்.
இந்தியாவில் சுமார் 6 முதல் 10 சதவீதம் வரை கற்றல்திறன் குறைபாடு உள்ள மாணவர்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனவளர்ச்சிக் குறைபாடு, ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளான மாணவர்களைச் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம்-2016இன்படி, கற்றல் திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இரண்டாவது மொழிப் பாடத்திலிருந்து விருப்பத்துக்கேற்ப விலக்கு பெற்றுக்கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதியினர் இரண்டாவது மொழியைக் கற்பதிலேயே நடைமுறைச் சிக்கல் உள்ள சூழலில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மூன்றாவது மொழிப்பாடம் என்பது நடைமுறையில் பெரும் சிரமம்தான்.
மொழிப் பாடங்களுக்கே போராட வேண்டிய சூழல் உண்டானால் அறிவியல், கணிதம் உள்பட மற்ற பாடங்களைக் கற்பது இன்னும் சிரமத்தை ஏற்படுத்தும். கல்வியில் மொழி சம்பந்தப்பட்டிருந்தாலும், கல்விக்கொள்கை வேறு, மொழிக்கொள்கை வேறாக இருப்பதே மாணவர்களுக்கு நல்லது. கொள்கை எதுவானாலும் தனியார் பள்ளி - அரசுப் பள்ளி என்கிற பேதமும் அதில் கூடாது.
- தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com