உலகம் இயலும் மனிதர்களுக்காகவே (abled persons) இயங்கிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால், அதில் தர்க்கம் இல்லாமல் இல்லை. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாற்றுத்திறனாளி அல்லாதோரும் குரல் கொடுக்க வேண்டும் என்பது முக்கியமான வாதம்.
அதேவேளையில், தங்களின் பிரச்சினைகளுக்கான குரல்களைத் தாங்களே எழுப்புவதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டுதானே! அப்படியென்றால், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் எல்லா மட்டங்களிலும், எல்லா தளங்களிலும் இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் பல மைல்கற்களைக் கடந்திருக்கிறோம். பயணம் இன்னும் நீள்கிறது!
முக்கிய மாற்றங்கள்: உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை என்பதை ‘டிசம்பர் 3’ இயக்கம் உணர்ந்தது. எனவே, கடந்த 2014இலிருந்தே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாகவும் போராட்டங்கள் வாயிலாகவும் இதுதொடர்பாகக் குரல் எழுப்பிவருகிறோம். மாற்றுத்திறனாளிகள் தேர்தல் அரசியலில் (உள்ளாட்சித் தேர்தல்கள் உள்பட) பங்கேற்க முடியும் என்பதை மெய்ப்பிக்கும் பணியிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறோம்.
கடந்த 2010இல், விழுப்புரம் - புதுச்சேரிக்கு இடையே உள்ள நவமால் காப்பேர் கிராமத்தைச் சேர்ந்த கவிதா உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். அவர், காது கேளாத-வாய் பேச இயலாதவர். கவிதாவின் மனுவைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. செவித்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இயலாது என்கிற விதிதான் இதற்குக் காரணம். இந்த நிராகரிப்பே பலருக்கும் புதிய செய்தி.
களத்தில் இறங்கிய எமது அமைப்பு, நீதிமன்றத் தீர்ப்பு மூலம் அவ்விதியைத் தகர்த்தது. இன்று, செவித்திறன் மாற்றுத்திறனாளிகளும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட முடியும். 2019இல் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவின் சட்டமன்ற உறுப்பினரும் இன்றைய அமைச்சருமான சேகர் பாபு, காது கேட்காத - தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற விதியை மாற்றியமைக்க சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பைப் பெற்று மாற்றுத்திறனாளிகளின் குரலாக ஒலித்தார்.
அதேவேளையில், ஒரு குறிப்பிட்ட அமைப்போ, அரசியல் கட்சியோ மட்டும் குரல் எழுப்பினால் அது சமூக மாற்றத்தை ஏற்படுத்தப் போதுமானதாக இருக்காது. அதை உணர்ந்த ‘டிசம்பர் 3’ இயக்கம், 2018 நவம்பர் 30இல், ‘மாற்றுத்திறனாளிகளின் குரலும் அரசியல் பிரதிநிதித்துவ உரிமையும் சமூக நீதியே’ என்கிற தலைப்பிலான மாநாட்டை நடத்தியது. மாற்றுத்திறனாளிகள் உலகம் அண்மையில் முன்னெடுத்த அரசியல், சித்தாந்த மாநாடு அது மட்டுமே.
ஒவ்வொரு அரசியல் கட்சியிலும், சமூகநீதி இயக்கத்திலும், தன்னார்வத் தொண்டு நிறுவனத்திலும் மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய ஆழமான கருத்துகளையும், பல திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறு ‘டிசம்பர் 3’ இயக்கம் கேட்டுக்கொண்டது. அவரவர் அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பைக் கணிசமான விழுக்காடு பாகுபாடு இன்றி உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொண்டது.
மேலும், இம்மாநாட்டில் 1,800 மாற்றுத்திறனாளிகள் முன்னிலையில் ‘சென்னை பிரகடனம்’ வெளியிடப்பட்டது. திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியின் தலைமையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் இப்பிரகடனத்தை ஏற்றுக்கொண்டனர். இதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, இந்திய அரசமைப்பின் முகப்புரை ஆகியவற்றின் வழிநின்று, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க, தோள் கொடுக்குமாறு உலகக் குடிமக்கள் அனைவரிடமும் அப்பிரகடனம் கேட்டுக்கொண்டது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டுறவு சங்கத் தேர்தலில்... 2019இல் கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் நடைபெற்றது. அதில் தர்மபுரியைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி சரவணன் போட்டியிட்டார். மாற்றுத்திறனாளி என்பதாலேயே அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. ‘டிசம்பர் 3’ இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் இதற்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கின.
போராடிய மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். திமுகவின் மா.சுப்பிரமணியன், கனிமொழி ஆகியோர் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவம் அவசியம் என்பதை உணர்ந்து உடனிருந்தனர். போராட்டம் நீண்டது. ‘கூட்டுறவு சங்கத் தேர்தல் மாற்றுத்திறனாளிகளை நிராகரித்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது’ என்கிற அறிக்கை ஐந்தாம் நாளில் வந்தது.
அரசியல் பங்கேற்பு: ‘டிசம்பர் 3’ இயக்கத்தைச் சேர்ந்த 40 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் பற்றிய பயிற்சிகள் தரப்பட்டு, அவர்களை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வைத்தோம். அதன் விளைவாக, எந்தப் பின்புலமும் இல்லாமல் கிட்டத்தட்ட 9 மாற்றுத்திறனாளிகள் 2021இல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினர்.
‘மனிதன் பிறக்கும்போதே உருவாகும் மாண்பு பகுக்கவோ விலக்கவோ முடியாதது; மாற்றுத்திறனாளிகளுக்கும் மனித உரிமை உண்டு’ என்பதை மனித உரிமை சாசனம் எடுத்துரைக்கின்றது. 2021இல் ஐநா அவையின் மாற்றுத்திறனாளிகளின் உரிமை உடன்படிக்கை, ‘இருக்கின்ற மாண்பு மதிக்கப்பட வேண்டும்’ என்கிறது. 2024இல் உலக மாற்றுத்திறனாளிகளின் நாள் கருப்பொருளாக (theme) ‘மாற்றுத்திறனாளி தலைமைத்துவத்தை உயர்த்திப் பிடிப்போம்’ என்று ஐநா முழங்கியது.
2012இல் தென் கொரியாவில் இன்சியான் நகரத்தில் உலக அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள், இன்சியான் பிரகடனத்தை முன்வைத்தனர். ‘உரிமையை உண்மையாக்கு’ என்னும் அறைகூவலை முன்னிறுத்தி, வியூகங்கள் வகுக்கப்பட்டன.
அவற்றுள் இரண்டாவது வியூகமாக ‘முடிவெடுக்கின்ற முக்கியமான இடங்களுக்கு மாற்றுத்திறனாளிகளைக் கொண்டுவர வேண்டும்’ என்பது பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இன்சியான் பிரகடனம் வலியுறுத்தும் முக்கியமான விஷயம், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயமரியாதை. அதனால்தான் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உண்மையாக்க, அவர்கள் ‘பெறும் இடத்தில் இருந்து கொடுக்கும் இடத்துக்கு நகர்த்தப்பட வேண்டும்’ என்று 2007இல் ஐநாவின் உரிமைப் பிரகடனம் (உள் பிரிவு 29) கேட்டுக்கொண்டது.
வெற்றிக்கான முதல்படி: உரிமைகள் உண்மையாக வேண்டும் என்றால் சட்டம் இயற்றும், செயல்படுத்தும் அவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும். தொடர்ந்து இதை வலியுறுத்திவந்த நிலையில், தமிழக அரசியல் களம் எங்களைச் செவிமடுத்தது. சட்டமன்ற உறுப்பினர் ஆனவுடன் உதயநிதி ஸ்டாலின் தனது முதல் பேச்சில், உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
முத்தாய்ப்பு வைத்ததுபோல, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனப் பதவி வழங்கப்படும்’ என்று அறிவித்தார். இது மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்கான போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி. உள்ளாட்சி அமைப்புகளில் நியமன ஒதுக்கீடு என்பது மிகப்பெரிய மைல்கல். அதற்காக டிச. 3, தோழமை அமைப்புகள் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளும் வரலாற்றில் தடத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
அதேவேளையில், அரசியல் சூழ்நிலைகள் நியமனப் பதவிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என்று சகல உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவம் கிடைக்க இருக்கிறது.
இந்த வெற்றியை, ஒரு மாபெரும் தொடக்கத்துக்கான முதல்படியாக மாற்றுத்திறனாளிகள் சமூகம் பார்க்கிறது. குறிப்பிட்ட விழுக்காடு இடஒதுக்கீடு என்ற பெரும் இலக்கு, மாற்றுத்திறனாளிகளின் ஜனநாயக அரசியல் பங்கேற்பை உறுதிசெய்யும் என்பதால், அனைத்து மக்கள் பிரதிநிதித்துவ அவைகளைக் கருத்தில் கொண்டு அக்கோரிக்கையை மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து எழுப்புவோம்.
- டி.எம்.என்.தீபக், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாரிய உறுப்பினர், ‘டிசம்பர் 3’ அமைப்பின் நிறுவனர் - தலைவர்.
- கா.சு.துரையரசு இதழாளர் - ‘டிசம்பர் 3’ அமைப்பின் இணை நிறுவனர்.