சிம்பொனி இசைக்க லண்டன் சென்ற இசைஞானி இளையராஜா, அதற்கு முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட குறிப்பிட்ட ஒரு கேள்வியும் அது தொடர்பான ஊடகப் பதிவுகளில் காணக் கிடைத்த பின்னூட்டங்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன; ஒரு சமூகமாக நாம் எதை நோக்கிப் பயணிக்கிறோம் என அச்சம்கொள்ள வைக்கின்றன. மனமும் முகமும் உற்சாகம் ஊற்றெடுக்க நின்ற இளையராஜாவிடம் இடம் பொருள் ஏவல் அறியாத ஓர் ஊடகவியலாளரின் கேள்வி கண்டனத்துக்கு உரியதாகவே இருந்தது.
கண்டனத்தைப் பலரும் பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் கேள்வியையும் அதற்கான பதிலையும், இளையராஜாவின் சங்கடத்தையும் தலைப்புச் செய்தியாக வைத்து எண்ணற்ற காணொளிகளைச் சமூக ஊடகங்கள் வெளியிட்டன. பெரும்பாலான தலைப்புகள் எதிர்க்கருத்துகளை விதைப்பதாகவே இருக்கின்றன. அந்தக் காணொளிகளுக்கான பின்னூட்டங்கள் இன்னும் துயரமானவை. சில, நேரடியாக அவதூறு பரப்புகின்றன, வேறு சில “இசைமேதைதான் ஆனால்...” என ‘இக்கு’ வைத்துத் தூற்றுகின்றன.
இது தொடர்பாக ஓர் இளைஞனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “பின்னூட்டங்கள் அனைத்தும் உண்மைதான், அவர் அப்படியானவர்தான்” என்றான். இவ்வளவுக்கும் இளையராஜாவைவிட 60 வயது சிறியவன் அவன். “அவர் அப்படித்தான் என உனக்கு எப்படித் தெரியும்? எந்தெந்தச் சூழலில் அவ்வாறு அவர் நடந்துகொண்டார்? அவருடைய இடத்தில், உணர்வில் நீ நின்று, அத்தகைய கேள்விகளை எதிர்கொள்ளும்போது நீ வேறு எவ்வாறெல்லாம் நடந்துகொண்டிருப்பாய்?” எனக் கேட்டபோது, “அதெல்லாம் தெரியாது.
பல ஆண்டுகளாகப் பார்க்கிறேன், இளையராஜா பற்றிய காணொளி எது வந்தாலும் கீழே உள்ள பின்னூட்டங்கள் அப்படித்தான் இருக்கின்றன. அப்படியென்றால், உண்மையாகத்தானே இருக்க வேண்டும். அதனால்தான் நானும் சொல்கிறேன்” என்றான்.
ஆளுமையில் தாக்கம்: இளையராஜாவை மட்டுமல்ல, எழுத்தாளர்கள், தலைவர்கள், அலுவலகத்தில் உடன் பணியாற்றுகிறவர்கள், குடும்ப உறுப்பினர்கள், உடன் படித்தவர்கள் குறித்து எதிர்க்கருத்துகளை நம்புவதும், பதிவிடுவதும், பகிர்வதும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
பிறர் மீது எதிர்மறைக் கருத்து உள்ளவர்கள், அதீத சந்தேக எண்ணம் கொண்டவர்கள், பாதுகாப்பற்ற உணர்வில் உழல்பவர்கள், தேவையற்ற பதற்றத்தில் உள்ளவர்கள், முன்னுணர்வு ஏதுமின்றி உணர்ச்சித் தூண்டலுக்கு ஏற்பச் செயல்படுகிறவர்கள், எதிலும் பங்கெடுக்காமல் விலகி இருக்கிறவர்கள், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்கிறவர்கள், எதிலும் ஒத்துப்போகாதவர்கள் போன்றோர்தான் தவறான தகவல்களை நம்ப வாய்ப்புள்ளவர்கள் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
சிவகங்கையிலிருந்து ஓர் அதிகாரி காரைக்குடிக்குப் பணி மாறுதலானார். அவர் வருவதற்கு முன்பே, காரைக்குடி அலுவலகத்தில் உள்ள சிலர், அவர் ‘என்ன ஆள்?’ என்பதில் தொடங்கி, அவரது குணம், பலம், பலவீனம் உள்ளிட்ட பலவற்றைத் தேடிச் சேகரித்தார்கள். அனைத்துத் தகவல்களுமே அதிகாரியின் நடத்தையை, ஆளுமையைக் குலைப்பதாகவே இருந்தன.
என் நண்பர் இதை என்னிடம் சொன்னபோது, “அதிகாரி குறித்த நல்ல செய்திகளை யாருமே உங்களிடம் சொல்லவில்லையா? உங்களிடம் சொன்னவர்களிடம், எந்தெந்தச் சூழலில் அதிகாரி கடுமையாக நடந்துகொண்டார்? யாரிடம், ஏன் கடுமை காட்டினார் எனக் கேட்டீர்களா? அடுத்தவரிடம் நடந்துகொண்டதுபோலவே உங்களிடமும் நடந்துகொள்வார் என எதை வைத்து நம்புகிறீர்கள்?” என்று கேட்டேன். பதில் இல்லை.
எல்லாரும் எல்லாரிடமும் ஒன்றுபோல் நடந்துகொள்வதில்லை. எந்தவொரு சிக்கலான உரையாடலிலும் இருவருக்குமே பொறுப்பு உண்டு. உங்களுக்கு எதிரில் உள்ளவர் சிக்கலுக்கு 80% காரணம் என்றால், 20 சதவீதத்துக்கு நீங்கள் பொறுப்பேற்றாக வேண்டும். மற்றொன்று, எல்லாரும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒருவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரச்சினையை அணுகியதுபோல, இப்போது அணுகுவது இல்லை.
அவரவரின் கல்வியறிவு, வாசிப்பு, பயணம், அனுபவங்கள் அனைவரையும் பக்குவப்படுத்துகிறது. எனவே, இன்னொருவரின் தனிப்பட்ட கசப்பான அனுபவத்தைத் தனக்கான அனுபவம்போல ஏற்றுக்கொள்வதும், எதிர்மறை எண்ணங்களுடன் மற்றவரை அணுகுவதும், தன் பங்குக்குத் தானும் அக்கருத்தைப் பரப்புவதும் மன அமைதியைக் குலைப்பதுடன் ஆளுமை வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
உளவியல் கூறுகள்: தவறான தகவல்களை நம்பவும், அதன்படி செயலாற்றவும் நான்கு உளவியல் காரணிகள் காரணமாக இருப்பதாக அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு குறிப்பிட்டிருக்கிறது.
பகிர்வது யார்?: தனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் சொல்வதைவிட, தான் நம்புகிற ஒருவர் சொல்வதை அல்லது குழுவில் பகிர்வதை உண்மை எனப் பலரும் நம்புகிறோம். பெற்றோர், பிள்ளைகள், ஆசிரியர்கள், நண்பர்கள், கல்வி கற்றவர்கள் அனைவருமே யாரோ சிலருக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாகத்தான் இருக்கிறார்கள். கரோனா காலத்தில் எவ்வளவு தவறான தகவல்களை ஆய்வுத் தேடல் ஏதுமின்றி படித்தவர்களே நம்பினார்கள், பதிவிட்டார்கள், பகிர்ந்தார்கள்.
அவர்கள் சொன்னதை அப்படியே நம்பியவர்களும் கூடுதலாகத் தேடி வாசிக்காமல் அப்படியே நம்பி, பேசி, பதிவிட்டு, பகிர்ந்தார்கள்தானே! நாம் சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும் எனக் கண்ணை மூடி நம்பும் 10 பேரையாவது நாம் ஒவ்வொருவரும் கொண்டிருப்போம். நாம் தவறான தகவலைப் பரப்புகிறோம் என்பதை அவர்கள் அறிய வரும் அந்நேரம், நம் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது. எனவே, ஒரு செய்தி, காணொளியைப் பகிர்ந்துகொள்வதற்கு முன் கூடுதல் நிதானமும் வாசிப்பும் அனைவருக்கும் தேவைப்படுகிறது.
உள்ளடக்கம்: ஒரு செய்தியின் உள்ளடக்கம் நம் உணர்வுகளைப் பிரதிபலிக்கும்போது யோசிக்காமல் நம்புகிறோம், பின்னூட்டம் இடுகிறோம், பகிர்ந்துகொள்கிறோம். உதாரணமாக, சிறு குழந்தை தடுமாறிக் கீழே விழுகிறது. அருகில் நின்ற நபர் ஏதோ சிந்தனையிலோ அல்லது அவசரத்திலோ அதைக் கவனிக்காமல் போகிறார். அந்தக் காணொளி நம் கவலையுடன், கோபத்துடன் ஒத்துப்போகிறது. அல்லது, நமக்குத் தெரிந்த ஒருவர் நம்மைவிட வாழ்வில் முன்னேறியிருக்கிறார்.
அவரைப் போல நம்மால் முடியவில்லையே என்கிற ஆற்றாமை நமக்குள் இருக்கிறது, அவரைப் பற்றி யாராவது குறை சொல்லும்போது அவர்களோடு அறிந்தோ அறியாமலோ சேர்ந்துகொள்கிறோம். பிறர் மீதான கோபம், நான்தான் பெரியவன் என்கிற எண்ணம், நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், எங்கள் சமூகமே மற்ற சமூகங்களைவிட உயர்வானது என்னும் உணர்வு இத்தகு செயலை அதிகரிக்கவைக்கிறது. 1,58,473 பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்ட 170 ஆய்வுகளை ஆய்வுசெய்த அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு இதை உறுதி செய்திருக்கிறது.
மீண்டும் மீண்டும் சொல்வதால்: ஒரு செய்தியை மீண்டும் மீண்டும் கேட்கும்போது அது உண்மை என்று நம்ப ஆரம்பிக்கிறோம். குறிப்பிட்ட நபரை அல்லது நிகழ்வைக் குறித்து ஏற்கெனவே நல்ல கருத்து இருந்தாலும் அதைத் தள்ளிவிட்டு, உண்மைக்கு மாறான தகவல்களைப் பற்றிக்கொள்கிறோம்.
ஆளுமைப் பண்புகள்: எல்லாரும் தவறான தகவல்களை நம்புவதில்லை, பின்னூட்டம் இடுவதில்லை, பகிர்வதில்லை. அவரவரின் கல்வி, பகுத்தறியும் பண்பு இதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஆனாலும், தவறான ஒன்றை நம்பும்போது மன உளைச்சல் அதிகரிக்கிறது. இளைஞர்களைவிடப் பெரியவர்கள் எது சரி தவறு எனச் சீர்தூக்கிப் பார்க்கிறார்கள். ஆனாலும், இளைஞர்களைப் போலப் பெரியவர்களுமே தவறான தகவல்களைப் பகிர்ந்துவிடுகிறார்கள்.
இதிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள ஒரு செய்தி, ஊடகங்களில் வந்தாலும், நம்பிக்கைக்கு உரியவர் சொன்னாலும் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். எதிர்மறைச் செய்திகளைத் தொடர்ந்து கேட்பதையும் பின்னூட்டங்களை வாசிப்பதையும் தவிர்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தை உங்கள் குடும்ப - சமூக விழுமியங்களைப் பிரதிபலிக்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
முறையான கல்வி, மக்களைச் சென்று சேரும் விளம்பரம் - நிகழ்ச்சிகள் வழியாக நிதானமாகச் செய்திகளை அணுகவும் நற்பண்புடன் பின்னூட்டம் இடவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மறைமுகமாகவோ பின்னூட்டங்களாலோ பிறரைக் காயப்படுத்தாமல் வாழ்வது நமது மனநலனுக்கு மிகவும் நல்லது.
- தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com