சிறப்புக் கட்டுரைகள்

ஆணின் விடுதலையையும் உள்ளடக்கியது பெண்ணுரிமை! - சமூகச் செயல்பாட்டாளர் ஓவியா

பிருந்தா சீனிவாசன்

வாதி, பெரியாரியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். ‘புதிய குரல்’ அமைப்பின் நிறுவனர். பெண்ணுரிமைகளுக்காகவும் சாதியற்ற சமூகம் அமைவதற்காகவும் பல்வேறு பணிகளைச் செய்துவருகிறார். ஏராளமான சாதி மறுப்பு - சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். சர்வதேச உழைக்கும் மகளிர் நாளை (மார்ச் 8) முன்னிட்டு அவருடன் நடத்திய நேர்காணலில் இருந்து:

ஆணுக்கென்று ஒரு நாள் இல்லாதபோது பெண்களுக்காக ஒரு நாள் தேவையா? - இது இந்தத் தலைமுறை​யின் கேள்வி. பெரும்​பாலான வீடு​களில் ஆணும் பெண்​ணும் சமமாகத்​தானே நடத்​தப்​படு​கிறார்கள் என்று தோன்​றலாம். ஆனால், சமூகத்​தில் அனைத்​துப் படிநிலைகளி​லும் இது நடக்​கிறதா? அப்படியே நடந்​தா​லும் இந்தச் சமத்துவம் எதுவரை? கல்லூரிப் படிப்பு, திரு​மணம், பிள்​ளைப்​பேறு, சொத்து பிரிப்பது போன்ற​வற்றின்​போது ஆணுக்​கும் பெண்​ணுக்​கும் சமத்துவம் இருக்​கிறதா? வாழ்க்கை​யின் அனைத்து நிலைகளி​லும் சமத்துவம் இல்லாத நிலை​யில், இன்னொரு புறம் சிறு குழந்தை​கள்​கூடப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்​கப்​படு​கிறார்​களே.

இதை எப்படிப் புரிந்து​கொள்​வது? ஆணுக்கு ஏதோவொரு வன்மம் இருக்​கிறது. ஓர் இனம் இன்னும்கூட மற்றொரு இனத்தை இவர்கள் என் ஆதிக்​கத்​துக்கு உட்பட்​ட​வர்​கள், எனக்​குக் கட்டுப்​பட்​ட​வர்​கள், இவர்கள் வளர்ந்து​விடக் கூடாது என்கிற உளவியல் காரணம் இல்லாமல் இதுபோன்ற கொடூரங்கள் நடக்​காது. இந்தப் பூமி இதில் இருக்​கும் அனைவருக்​கும் பொது​வானது என்ப​தைச் சொல்​வதற்​காக​வும் இந்த நாள் அவசி​ய​மாகிறது.

பல்வேறு போராட்​டங்கள் இல்லாமல் இந்த நிலை மாறாது. சர்வதேச அளவில் பெண்கள் எட்டு மணி நேர வேலை கேட்டும் கூலி உயர்​வுக்​காக​வும் போராடிய வரலாறு இருக்​கிறது. பெண்​களின் வாழ்​நிலையை மேம்​படுத்​த​வும் நினை​வு​கூர​வும் இந்த நாளை நாம் கொண்டாட வேண்டிய தேவை இருக்​கிறது.

இந்திய அளவில் நடைபெற்ற பெண்ணுரிமைப் போராட்டங்கள் என்னென்ன? - பலரும் அறிந்தது ‘சதி’ ஒழிப்பு. ஆனால், இது மக்கள் எழுச்சியால் விளைந்தது என்று சொல்லிவிட முடியாது. ராஜாராம் மோகன்ராய் போன்ற தலைவர்கள் முன்னெடுத்தாலும் சதி கொடுமையைப் பார்த்து அதிர்ந்த பிரிட்டிஷ் அரசு நிறைவேற்றிய சட்டம் அது. பெண்ணுரிமைக்கான குறிப்பிடத்தக்க போராட்டங்கள் நாட்டின் தென்பகுதியில்தான் நடைபெற்றுள்ளன.

கேரள மாநிலத்தின் சில பகுதிகளிலும் தமிழகத்தின் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பெண்கள் மேலாடை அணிவதற்காக முன்னெடுத்த ‘தோள்சீலை’ போராட்டம் முக்கியமானது. பெண்ணடிமைத்தனத்தை எதிர்க்க வேண்டுமென்றால் சாதியை எதிர்க்க வேண்டும் என்பதற்கான உதாரணமும் இந்தப் போராட்டம்தான்.

தமிழ்​நாட்​டில் பெண்​களுக்​குக் கல்வி கொடுத்​ததும் பிள்​ளைப்​பேறுக்காக அவர்களை மருத்​துவ​மனைக்கு அழைத்​துச் சென்​றதும்கூட மிகப்​பெரிய மாற்​றங்​கள். மக்கள் திரளாக நடைபெற்ற போராட்​டங்​களில் முக்​கிய​மானது மூவலூர் ராமாமிர்தம் அம்மை​யார் முன்னெடுத்த தேவதாசி முறை ஒழிப்புப் போராட்​டம். டாக்டர் அம்பேத்கர் முன்​மொழிந்த இந்து சட்ட மசோதா, சொத்​துரிமை, ஜீவாதார உரிமை, வாரிசுரிமை உள்ளிட்ட பெண்​ணுரிமைக்கான சட்ட உரிமைகள் அடங்கிய தொகுப்பு.

மதத்​தின் அடிப்​படை​யில் பெண்களை அடிமைப்​படுத்திய அனைத்து நடைமுறை​களை​யும் மாற்று​வதற்காக அவர் கொண்டு​வந்த மசோதா ஏற்றுக்​கொள்​ளப்​பட​வில்லை. ‘பெண்​களுக்கு ஆதரவாக ஒரு சட்டத்தைக் கொண்டு​வந்​ததற்கு இரண்டு பெண்​கள்கூட எனக்கு ஆதரவாக இல்லையே’ என்று வருத்​தப்​பட்​டார் அம்பேத்​கர். ஒருவேளை அன்றைக்கு இந்தியா​வின் தலைநகரம் சென்னையாக இருந்​திருந்​தால் அந்த மசோதா நிறைவேறி​யிருக்​கும். காரணம், வீரியமான பெண் உரிமைப் போராட்​டங்​களை​யும் சிந்​தனை​களை​யும் கொண்​டிருந்த மாநிலம் இது.

உங்களைக் கவர்ந்த பெண்ணுரிமைப் போராளிகள் யார்? - பலர் இருக்​கிறார்கள். இருவரைக் குறிப்​பிட்டுச் சொல்​லலாம். எந்தப் பெண்​ணும் செய்யத் துணியாத தியாக வாழ்க்கையை ஏற்றுக்​கொண்ட அன்னை மணியம்​மை​யார். பெரி​யாரை மணந்து​கொண்​டால் எவ்வளவு பெரிய இழிவை இந்தச் சமூகம் தன் மீது சுமத்​தும் என்பதை அறிந்தே அதைச் செய்​தார். சமூகத்துக்காகத் தனது சுக துக்கங்களை எல்லாம் இழந்து தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

அடுத்​த​தாக, மூவலூர் ராமாமிர்தம் அம்மை​யார். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்​டம், சாதி மறுப்பு மணம், கைம்​பெண்
மறுமணம் என்று எத்தனையோ சீர்​திருத்​தங்களை அவர் முன்னெடுத்​திருக்​கிறார். அவருக்கு அவர் சமூகத்தைச் சேர்ந்​தவர்களே விஷம் கொடுத்​தனர்.

அப்போது அவர்கள் மீது புகார் கொடுக்​கும்படி ராமாமிர்தம் அம்மை​யாரிடம் சிலர் சொன்ன​போது, அதை உறுதியாக அவர் மறுத்து​விட்​டார். “நான் அவர்​களுக்​காகத்​தான் போராடு​கிறேன். அவர்கள் மீதே புகார் கொடுப்பது என் கொள்​கைக்கே விரோத​மானது” என்றார். இப்படி ஒரு மனம் யாருக்கு வரும்​?

பெண்ணியம் என்பது காலாவதியாகிவிட்ட சொல் என்று சிலர் சொல்கிறார்களே? - பெண்​ணியம் யாருக்​கும் எதிரானதல்ல. ஆணாதிக்கச் சமூகத்​தில் அனைத்து ஆண்களும் சமமாக நடத்​தப்​பட​வில்லை. சாதிரீ​தியாக அவர்​களும் அடிமைப்​படுத்​தப்​படு​கிறார்​கள். அதனால், பெண்​ணுரிமை என்பது ஆணின் விடு​தலை​யை​யும் உள்ளடக்​கியதே. தற்போது உலகம் முழு​வதும்
வலது​சாரிச் சிந்தனை வலுப்​பெற்று​வரும் சூழலில், பெண்கள் தங்களுக்கு இருக்​கும் உரிமை​களைத் தக்க​வைத்​துக்​கொள்ளவே போராட வேண்​டி​யிருக்​கிறது. ஆணாதிக்கம் முழு​வதுமாக விலகாத நிலை​யில் பெண்​ணியம் எப்படிக் காலா​வ​தி​யாகும்​?

பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பது உண்மையா? - சிறை​யில் ‘கன்விக்டட் வார்​டன்’ என்று ஒரு பொறுப்பு இருக்​கிறது. கைதி​களில் ஒருவர் மற்றவர்​களைக் கண்காணிப்​பார். வீடு​களில் மாமி​யார் என்பவர் அதைத்​தான் செய்​கிறார், தானும் ஒரு கைதி​தான் என்பதை மறந்து. இதற்​குப் பெண்​களின் தனிப்​பட்ட மனநிலை மட்டுமே காரணமல்ல. குடும்​பம், சாதியச் சூழல் என்று பல காரணங்கள் உண்டு.

இன்று அலுவல​கங்​களில் பெண்​களுக்​கிடையே நல்ல ஒருங்​கிணைவு உண்டு. பெண்​களுக்கான அணிதிரட்டல் இல்லாதது பெரும் பின்னடைவு. ஆண்களுக்​குக் கட்சி, ரசிகர் மன்றம், பூங்கா போன்ற பொது இடங்​களில் கூடுவது என்று எத்தனையோ வழிகள் உண்டு. பெண்கள் அப்படி ஒன்று​படு​வதற்கான வாய்ப்பும் சூழலும் குறைவு. உண்மை​யில் இது அரசியல் பிரச்சினை. பெண்​ணுக்​குப் பெண்ணே எதிரி என்பது ஏமாற்று வாசகம்​.

அறிவியலுக்குப் புறம்பான விஷயங்களைச் சொல்லிப் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள். இதை எப்படிக் கடந்து வருவது? - பெண்​ணின் உடலைத் தீட்டு என்று சொல்வதே அறிவியலுக்​குப் புறம்​பானது. மாதவி​டாய் தொடங்கி மெனோ​பாஸ் வரை உடல் பற்றிய புதிர்​களுக்​குள் பெண் நிறுத்​தப்​படு​கிறாள். அதைச் சரிகட்​டத்​தான் அழகு என்கிற கற்பித​மும் உருவாக்​கப்​பட்​டது. ‘நீ எல்லா இடத்​துக்​கும் தகுதி​யானவள் அல்ல.

நாங்கள் அனும​திக்​கும் இடத்​துக்கு, நாங்கள் அனும​திக்​கும் நேரத்​துக்கு மட்டும் வந்தால் போதும்’ என்று சொல்வதே அறிவியலுக்கு எதிரானது​தானே. பெண்​களைப் புனிதப்​படுத்​தும் எதுவாக இருந்​தா​லும் அது அறிவியலுக்​குப்புறம்​பானதாக இருந்​தால், அதைப் பெண்கள் புறக்​கணிக்க வேண்​டும். இந்த மனப்​பான்​மையை வளர்க்​க​வும் அரசி​யலில் பெண்​களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்​டும்​.

பெண்களை அடிமைப்படுத்தும் சாதியைக் கடந்து வருவது எப்படி? - ​சா​தியை ஒழிப்​பது​தான் அதற்கு ஒரே வழி. சாதி மறுப்பு மணங்கள், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஆகிய இரண்டும்தான் அடிப்படையான வழிகள். சாதி மறுப்பு மணங்கள் மூலம் சாதியை இல்லாமல் ஆக்கலாம். இடஒதுக்கீடு மூலம் அனைவரும் சமமான நிலையை எய்தும்போது சாதிக்கு இடமில்லாமல் போகும்.

இன்றைக்கு நிலைமை ஓரளவுக்கு மாறி​யிருக்​கிறது. சாதி​யின் அடிப்​படை​யில் நாம் இன்னொரு​வரைத் தாழ்த்த முடி​யாது என்ப​தைப் பலர் புரிந்து​கொண்​டிருக்​கிறார்​கள். ஆனால், இன்னொரு​புறம் சாதி என்பது அரசி​யல்​ரீ​தியாக மறுகட்​டமைப்பு செய்​யப்​படு​கிறது.

மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? - பெரி​யாரிடம் ஒருவர் பெண்​ணுரிமை என்றால் என்ன எனக் கேட்​டார். ‘எதையெல்​லாம் உங்கள் உரிமை என்று நினைக்​கிறீர்​களோ... அதெல்​லாம் பெண்​களின் உரிமை’ என்றார் பெரியார். பெண்கள் இரக்​கத்தைக் கேட்​க​வில்லை. அவர்​களது உரிமை​யைக் கேட்​கிறார்​கள்.

பெண்​களுக்கு இழைக்​கப்​பட்ட வரலாற்றுரீ​தியான கொடுமைகளை ஆண்கள் புரிந்து​கொள்ள வேண்​டும். பெண் உரிமை என்பது பெண்​களுக்கான உரிமை மட்டுமல்ல; ஆண்களுக்கான உரிமை​யை​யும் உள்ளடக்கிய மனித உரிமை அது. அதை அடைய பெண்​களுக்கு ஆண்​கள் துணைநிற்க வேண்​டும்​.

- தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

SCROLL FOR NEXT