சிறப்புக் கட்டுரைகள்

பு​திர் விளை​யாட்டுக் கோடுகள்

ஜீவ கரிகாலன்

இந்தியா​வின் பதிப்பு ஓவியங்கள் என ஆவணப்​படுத்​தினால், அந்த வரிசை ஆர்.எம். பழனியப்பன் என்கிற பெயரில்​லாமல் பூர்த்தி​யடை​யாது. சென்னை தக் ஷிணசித்​ரா​வில் இவரது நாற்பது வருடக் கலைப்​படைப்புகளின் தொகுப்​புக் கண்காட்சி நடைபெற்று​வரு​கிறது.

வேறு எந்த ஓவியர்​களின் படங்​களோடு இருந்​தா​லும், இவரது ஓவியத்​தைக் கண்டு​பிடிக்க இயலும். அதைக் கண்டு​பிடிக்க உதவுவது அவரது கோடு​களின் அமைப்பே. அதற்கு அவர் சூட்​டி​யிருக்​கின்ற தலைப்பும், பதிப்​போ​வி​யத்​தில் பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கும் பல்வேறு ஊடகங்​களும் இதை உள்வாங்​கிக் கொள்ள எனக்​குப் பயிற்சியை அளித்​திருந்​தது.

அவரது ஆரம்பகால உருவப்பட ஆய்வு​களி​லிருந்து, நேர்த்தியான கட்டமைப்​பிலிருந்து வெளி​யேறித் தப்பிக்​கும் பிரசித்தி பெற்ற அவரது விமானத் தொகுப்பு காட்​சிகள், பல்-ஊடகப் பதிப்​போ​வி​யங்​கள், உலோகங்​களால் உருவாக்​கப்​பட்​டவை. சட்டகங்​களில் பொருத்திவைத்த கம்பி​யால் ஆன கோடு, காண்​பியல் மாயைகளை உருவாக்​கும் நிழற்​படப் பதிப்​போ​வி​யங்கள் எனச் சென்னை சிந்​தனைப் பள்ளி​யின் பிரதான ஆளுமை ஒருவரின் பிரதி​நி​தித்து​வமாக இதை வரிசைப்​படுத்​தலாம்.

ஒரு கலைஞன் எங்கு வந்துசேர்​கிறானோ, தற்போது எங்கு பயணிக்​கிறானோ அதையே அவரது படைப்​பெனக் கொண்​டால் அதை இரு பகுதி​களாகப் பிரித்​துக்​கொள்​ளலாம்; ஒன்று நிலம்; மற்றொன்று அவரது கருத்​துரு​வாக்​கம். அவர் படைப்பு​களுக்கு வைத்த தலைப்பு​களைக் கொண்டு படைப்பு பேசும் பரிமாணத்​தைப் புரிந்​து​கொள்வது ஒரு புதிர்த்தன்மை கொண்​ட​தாக​வும் ஈடுபட வைப்​ப​தாக​வும் இருக்​கிறது. இன்னும் சரியாகச் சொல்லப்​போனால் ஒரு விளை​யாட்டுத் தன்மை​யும் கொண்​டதாக இருக்​கிறது.

இதுவரை முற்றி​லும் யோசிக்காத பரிமாணம் இதுவே. முதல்​நாள் எனது கலையுலக நண்பர்​களோடும் இரண்​டாவது நாள் எனது இரண்டு வயது மகளோடும் அவ்வோ​வி​யங்களை அணுகினேன்.

ஒரு கோட்​டினை எந்த முன்​முடிவு​களும் இல்லாமல் முழு​மை​யாக​வும், கவனம் குன்​றாமலும் ஓர் ஓவியத்​தைப் பார்க்க அவளால் முடிந்​தது. அந்த ஓவியத்​தின் கோடுகள் விடு​தலையான ஒன்றாக​வும் விளை​யாட்டுத்​தன​முடனும் பொருள் தந்தன.

பிக்​காஸோ​வின் ஒரு கூற்று நினை​வுக்கு வந்தது: “நான் ரஃபேலைப் போல ஒரு ஓவியத்தை வரைய நான்கு ஆண்டுகள் ஆயிற்று, ஆனால் ஒரு குழந்​தையைப் போல ஒரு ஓவியத்தை வரைவதற்​கு​த்தான், என் ஆயுள் முழுக்கத் தேவைப்​படும்”. பழனியப்​பனின் ஓவியங்கள் புரிதலுக்​குக் கடின​மான​தாக​வும், உணர்​வதற்கு மறைவாய் இருந்​தா​லும் மிக நெருக்​க​மான​தாக​வும் இருக்​கின்றன. தேவக்​கோட்​டையி​லிருந்து வந்து, சென்னை கவின்கலை கல்லூரி மாணவ​ராய்த் தொடங்கிய இவரது கலைப்​பயணம் பல்வேறு கண்காட்​சிகள், பயிற்​சிப் பட்​டறை​கள், கருத்​தரங்​கங்கள் எனச் சர்வதேச அளவில் விரிவடைந்​துள்ளது.

(ஆர்.எம்.பழனியப்பனின் ஓ​வி​யக் கண்​காட்சி, சென்னை, கிழக்​குக் கடற்​கரைச் சாலை, ​முட்டுக்​காட்​டில் உள்ள தக் ஷிணசித்​ரா​வில் ​நடைபெ​றுகிறது. இது மார்ச் 31இல் நிறைவடைய உள்ளது.)

-பதிப்​பாளர், யாவரும் பதிப்பகம்
தொடர்​புக்கு: kaalidossan@gmail.com

SCROLL FOR NEXT