சிறப்புக் கட்டுரைகள்

பிறப்பு அடிப்படையிலான பாகுபாடு அறிவுக்குப் புறம்பானது - அருணா ராய்

பிருந்தா சீனிவாசன்

அருணா ராய் - இந்தியாவின் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களில் முக்கியமானவர். மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதன் (MKSS - தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் வலுசேர்க்கும் அமைப்பு) அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். தகவல் அறியும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர். பிரதமருக்கு ஆலோசனை வழங்கும் தேசிய ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்தவர். இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தில் தலைவராக இருந்தவர். சமீபத்தில் சென்னை வந்திருந்தவரைச் சந்தித்து உரையாடியதில் இருந்து...

இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்த உங்களைப் பொதுநலன் சார்ந்து பணியாற்றத் தூண்டியது எது? - டெல்லியில் என்னுடன் பணியாற்றிய அதிகாரி​களில் பெரும்​பாலானோர் பசியைப் பற்றியும் வறுமையைப் பற்றியும் பேசிய​தில்லை. இடமாற்​றமும் பதவி உயர்வும்தான் எப்போதுமே அவர்களது பேசுபொருளாக இருக்​கும். ஊழலும் லஞ்சமும் மலிந்​திருக்கும் இடத்தில் அதிகாரமும் உடன் சேரும்போது என்னவாகும்? அந்த அதிகாரமும் இடமும் தேவையில்லை என விலகினேன்.

சமத்து​வத்​தையும் பெண்ணி​யத்​தையும் உங்கள் போராட்​டத்தின் கருப்​பொருளாகக் கொண்டது ஏன்? - சாதி, வர்க்​கரீ​தியாக அனைத்து உரிமை​களையும் சலுகைகளையும் பெற்ற குடும்பத்​தில் நான் பிறந்​தேன். வீட்டில் அனைவருமே நன்கு படித்​தவர்கள். முற்போக்குச் சிந்தனை கொண்ட​வர்கள். என் அப்பா பெரியாரியக் கொள்கைகளைப் பின்பற்றியவர். விடுதலைப் போராட்ட வீராங்​கனையும் கல்வி​யாள​ருமான அருணா அசஃப் அலி நினைவாகத்தான் எனக்கு அருணா எனப் பெயரிட்​டனர்.

டெல்லியில் எங்கள் வீட்டில் பல மதங்களைச் சேர்ந்​தவர்​களும் சமூகத்தின் பல படிநிலைகளைச் சேர்ந்​தவர்​களும் ஒன்றாகத் தேநீர் அருந்​து​வார்கள். அது இயல்பானது என்று நினைத்​திருந்​தேன். ஆனால், சென்னை வருகைதான் சாதியை எனக்கு அறிமுகப்​படுத்​தியது.

கலாக் ஷேத்ரா நடனப் பள்ளியில் பயின்​றபோது ஒருவர் என்னிடம், “நீ என்ன சாதி?” எனக் கேட்டார். அதை நான் என் தந்தை​யிடம் கேட்டேன். “சாதி என்று எதுவும் இல்லை. நாம் அனைவரும் மனிதர்கள்” என்றார் அப்பா. நான் வளர வளர சாதிரீ​தியிலான ஒடுக்​குமுறை குறித்து அறிந்​து​கொண்​டேன். பிறப்பின் அடிப்​படையிலான பாகுபாடும் ஒடுக்​கு​முறையும் நியாயமற்றவை, அறிவுக்குப் புறம்​பானவை. அறிவுக்குப் புறம்பானதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதன் அமைப்பு எப்படி உருவானது? - நான் சஞ்சித் பங்கர் ராயை மணந்து​கொண்ட பிறகு, அவர் பணியாற்றிய ராஜஸ்​தானுக்குக் குடிபெயர்ந்​தேன். நாங்கள் வசித்த சிறு கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. பங்கர் நடத்திய ‘பேர்ஃபுட்’ கல்லூரியில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினேன். அதுவரை நான் படித்ததை எல்லாம் மறந்து​விட்டு, வாழ்க்கையின் வேறொரு பரிமாணத்தை அந்தக் கிராம வாழ்க்கை கற்றுக்​கொடுத்தது.

நிறையப் பெண்களோடு இணைந்து பணியாற்றும் சூழல் அமைந்தது. பங்கரின் திட்டங்கள் அடிப்படை வளர்ச்சி குறித்​தவையாக இருந்தன. எனக்கோ மக்களின் அடிப்படை உரிமை​களுக்​காகப் போராடுவது பிடித்​திருந்தது. நண்பர்கள் சங்கர் சிங், நிகில் டே இருவரோடும் நூற்றுக்​கணக்கான விவசா​யிகளோடும் இணைந்து, மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதனைத் தொடங்​கியபோது எனக்கு 41 வயது.

மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதன் சாதித்தது என்ன? - ராஜஸ்​தானின் கிராமங்​களில் இருந்த பெண்கள் முதலில் என்னை ஏற்றுக்​கொள்ள​வில்லை. அவர்களோடு தங்கி​யிருந்து அவர்களில் ஒருவராக என்னை மாற்றிக்​கொண்ட பிறகு​தான், அவர்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வந்தது. முதலில் நில மீட்புப் போராட்​டத்தைக் கையில் எடுத்​தோம். ராஜஸ்​தானில் சாதி ஆதிக்​கமும் பொருளாதார வலுவும் கொண்ட நிலச்சு​வான்​தார்​களுக்கு எதிராக விளிம்​புநிலை மக்களோடு நின்று போராடி வென்றோம்.

விவசா​யிகளின் வேலை உறுதிக்கான போராட்​டத்தில் ஈடுபட்​டோம். எங்கள் போராட்​டத்​துக்கு அரசு செவிசாய்த்தது. 365 நாள்களில் குறைந்தது 100 நாள்களுக்கு வேலை உறுதி என்பதால் அதற்கு ஒப்புக்​கொண்​டோம். குறைந்​தபட்ச ஆதாரக் கூலிக்கான எங்கள் போராட்​டமும் வெற்றி கண்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், எங்கள் போராட்​டங்​களின் மைல் கல். அரசின் செயல்​பாடு​களில் வெளிப்​படைத்​தன்மை வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. ஆயிரக்​கணக்​கானோர் வீதிகளில் கூடாரம் அமைத்துத் தங்கி, எங்களோடு சேர்ந்து போராடி​னார்கள். 11 நெடும் ஆண்டுகள் நீடித்த எங்கள் போராட்​டத்தில் மக்கள் துணைநின்​றனர். அதன் விளைவாக 2005இல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்​பட்டது. ஒவ்வோர் ஆண்டும் லட்சக்​கணக்கான மக்கள் இந்தச் சட்டத்தின் வாயிலாகத் தகவல் பெற்று​வரு​கிறார்கள். ஆனால், அதற்கும்கூட இப்போது ஆபத்து வந்து​விடும்போல இருக்​கிறது.

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (Digital Personal Data Protection Act, 2023) ஒரு பிரிவைக் காரணம்​காட்டி, சிலவற்றைத் தனிநபர் அந்தரங்கம் என்பதை முன்னிறுத்தித் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்​துப்​போகச் செய்யும் வேலைகளை மத்திய அரசு செய்து​வரு​கிறது. ஒருவரது தனிப்பட்ட தகவலைப் பராமரிப்​ப​தாகக் காரணம்​காட்டி, மக்கள் அறிந்​து​கொள்ள வேண்டிய அடிப்​படைத் தகவல்களை மறைப்பது எப்படி நியாயம்? எது அந்தரங்கம், எது அரசியல் என்பதைத் தெளிவுபடுத்தாத வரை டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பாதிக்​கும்.

‘Personal is Political’ புத்தகத்தை எழுதி​யிருக்​கிறீர்கள். அந்தரங்கம் எந்த வகையில் அரசிய​லாகும்? - பெண் மீது இந்தச் சமூகம் நிகழ்த்தும் எந்த ஒரு எல்லைமீறலும் அரசியல்​தான். பெண்கள் எல்லா நிலைகளிலும் எளிய இலக்காக இருப்பதன் அரசியல் இது. ஒடுக்​கப்​படு​கிறவர்​களின் அரசியலைப் பற்றிப் பேசினால், தலித் பெண்கள் மீதான ஒடுக்​குமுறை அதற்குச் சரியான உதாரணமாக இருக்​கும். இந்த ஒடுக்​கு​முறைக்கு எதிராக நாம் போராடத்தானே வேண்டும்?

பெண்ணாக இருப்பது உங்கள் அரசியல் செயல்​பாடு​களுக்குத் தடையா, பலமா? - அதை ஒருபோதும் தடையாக நினைத்தது இல்லை. போராட்டக் களங்களில் அச்சமின்றி நிற்கிற துணிவை எனக்குத் தமிழ்​நாடும் தமிழ்ப் பண்பாடும் கொடுத்​திருக்​கின்றன. ராஜஸ்தான் கிராமங்​களில் நான் பார்த்த பெண்கள் மற்றவர்கள் முன் முகத்​தைக்​கூடக் காட்ட மாட்டார்கள். சத்தமாகப் பேசவும் தடை உண்டு. இதுபோன்ற எந்தத் தடையும் இல்லாத தமிழ்​நாட்டில் இருந்து சென்றிருந்த எனக்கு, அவையெல்லாம் புதிதாகத் தெரிந்தன. கடினமான சூழல்களை எதிர்​கொள்ளும் வலிமை​யையும் இந்தச் சுதந்​திரம்தான் எனக்குக் கையளித்தது.

ராஜஸ்​தானைச் சேர்ந்த தலித் பெண் நோரதி என் நீண்ட​காலத் தோழி. முறையான கல்வியோ சரளமான ஆங்கிலப் பேச்சோ அவளுக்கு இல்லை. ஆனால், மிகச் சிறந்த போராளி. இந்தத் துணிவும் போராட்டக் குணமும் பெண்களுக்கு அவசியம். பெண்கள் மூன்று விஷயங்​களைக் கவனத்​தில்​கொள்ள வேண்டும். தன் கருத்து​களைத் துணிச்​சலோடு சொல்லும் உரிமை, சுயமாக முடிவெடுக்கும் உரிமை, நம் அந்தரங்கம் என்று சொல்லப்படுவனவற்றில் இருக்கிற அரசியல்.

சமத்து​வத்​துக்கு எதிரான சமகாலப் பிரச்சினை எது? - தேசிய ஆலோசனைக் குழுவில் நான் அங்கம் வகித்த​போது, சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் சமத்து​வத்தை நிலைநாட்டு​வதற்​காகக் கொள்கைரீ​தியான பணிகளில் ஈடுபட்​டோம். தற்போது சக மனிதருக்கு எதிரான சகிப்புத்​தன்மை குறைந்​து​வருவது மிகப்​பெரிய அச்சுறுத்தல். இன்றைக்கு அம்பேத்கர், பெரியார், காந்தி அனைவரும் நமக்கு வேண்டும்.

ஒவ்வொரு​வருடைய கருத்தும் நமக்கு அவசியம். காந்தியின் பெயரைப் பயன்படுத்து​கிறோம்; ஆனால், அவர் முன்மொழிந்த மத நல்லிணக்​கத்தைக் கடைப்​பிடிக்​கிறோமா? அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய சகிப்​புத்​தன்மை நிறைந்த அரசியலே இன்றைய தேவை.

- தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

SCROLL FOR NEXT