ஓர் இசைக் கலைஞர் மறையும்போது, அவரைப் பற்றிய உரையாடல்களில் - சில நேரம் மிகை மதிப்பீடுகள் அல்லது பொருத்தமில்லாத ஒப்புமைகள் இடம்பெறுவது உண்டு. சமீபத்தில் மறைந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன் குறித்தும் இப்படியான உரையாடல்கள் நிகழ்ந்தன.
ஜெயச்சந்திரனுக்கு அஞ்சலிக் குறிப்பு எழுதிய கவிஞர் வைரமுத்து, ஜெயச்சந்திரன் பாடிய சில பாடல்களைப் பட்டியலிட்டு நெகிழ்ந்ததுடன் அவரை ‘ஏழைகளின் யேசுதாஸ்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். ஃபேஸ்புக் நண்பர் ஒருவர், யேசுதாஸைவிடவும் நல்ல பாடகர் ஜெயச்சந்திரன் என்று எழுதியிருந்தார். ஜெயச்சந்திரன் ஒருபோதும் இப்படியான ஒப்பீடுகளை விரும்பியதில்லை.
தனித்துவம் மிக்கவர்: ஜெயச்சந்திரன் பாடிய சில பாடல்களை யேசுதாஸ் பாடியதாகக் கருதிக்கொள்பவர்கள் உண்டு. ‘காதல் மயக்கம்’ (புதுமைப் பெண்) ஓர் எடுத்துக்காட்டு. யேசுதாஸ் பாடிய ‘உறவுகள் தொடர்கதை’ பாடல் ஜெயச்சந்திரன் பாடியதுதான் எனச் சவால் விட்டவர்கள் உண்டு. இந்த ஒப்புமைகள், குழப்பங்கள் தவிர்க்க முடியாதவைதான். ஆனால், ஜெயச்சந்திரன் இதில் தெளிவாக இருந்தார்.
“எங்களுக்கு முன்னர் கமுகாரா, உதயபானு, பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ.எம்.ராஜா போன்ற திறமையான பாடகர்கள் இருந்தார்கள். ஆனால், நாங்கள் சொந்த பாணியில்தான் பாடினோம்.” இதில் அவர் தன்னுடன் யேசுதாஸையும் சேர்த்தே ‘நாங்கள்’ எனக் குறிப்பிட்டார். இசைக் கலைஞர்களின் செயல்பாடுகளில் இருக்கும் பொருத்தப்பாடுகளை ஒப்பிடலாம். ஆனால், அவர்களின் தனித்திறன்களை ஒப்பிட்டுவிட முடியாது. அதிலும் ஜெயச்சந்திரனின் தனித்துவம் மிக முக்கியமானது.
திரையுல வருகையில் யேசுதாஸ் மூத்தவர் என்றாலும், அவரும் ஜெயச்சந்திரனும் இசையுலகில் ஏறத்தாழ சமகாலத்தில் உருவானவர்கள். யேசுதாஸின் இசைப் பயணத்தில் பெரிய தொய்வுகள் இருந்ததில்லை. ஆனால், ஜெயச்சந்திரன் ஏனோ சில காலம் திரைப் பாடல்களிலிருந்து ஒதுங்கியிருந்தார். சில காரணங்களால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் பேசப்பட்டது. ஆனால், இசையிடமிருந்து தான் ஒதுங்கியிருக்கவில்லை என்றும் மேடை நிகழ்ச்சிகள், பக்திப் பாடல்கள் என்று இயங்கிக்கொண்டிருந்ததாகவும் பின்னாட்களில் அவர் குறிப்பிட்டார்.
2024 ஜூலையில், ஜெயச்சந்திரனின் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவியபோது அதை மறுத்த அவரது குடும்பத்தினர் முதுமை காரணமாக ஏற்பட்டிருக்கும் பிரச்சினைதான் என்று விளக்கம் அளித்தனர். மலையாளப் பாடலாசிரியர் ரவி மேனன் அப்போது ஒரு தகவலைக் குறிப்பிட்டிருந்தார் - “ஜெயச்சந்திரன் இப்போதும் தனது நண்பர்களுடன் அலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். தனது உடல்நலக் குறைவை இசை மூலம் கடந்துவர அவர் முயல்கிறார்.” ஒவ்வொரு இசைக் கலைஞரும் தன்னை மீட்டெடுக்க இசையைப் பற்றிக்கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் செய்திருக்க முடியாது. ஜெயச்சந்திரனும் அதற்கு விதிவிலக்கல்ல!
சமகாலப் பாடகர்கள் மீதும், புதிய தலைமுறை இசையமைப்பாளர்கள் மீதும் ஜெயச்சந்திரன் கறாரான மதிப்பீட்டைக் கொண்டிருந்தார். வாய்ப்புகள் சார்ந்தும் அவருக்குச் சில வருத்தங்கள் இருந்ததாகவே உணர முடிகிறது. பிரபலமான பாடகர் என்றாலும் அதிகப் பாடல்கள் பாடாதது அவரைப் பற்றிய சித்திரங்களில் ஒன்று. எனினும், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளிலும், எளிமையான வாழ்க்கையிலும் அவர் நிறைவான மனதுடனே வாழ்ந்தார். விருதுகள், பட்டங்கள் குறித்து அவர் அதிக ஆர்வம் காட்டியதில்லை. தான் ஒரு சோம்பேறி என்று சொல்லிக்கொண்டாலும், கைக்கொண்ட பணியில் அவர் காட்டிய முனைப்பும் அர்ப்பணிப்பும் மகத்தானவை.
பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் முறையாக இசையைக் கற்றுக்கொள்ளவில்லை என்கிற வருத்தம் ஜெயச்சந்திரனுக்கு இருந்தது. எனினும், மலையாளத்தில் ‘பாவ காயகன்’ என்ற பெயரைப் பெறும் அளவுக்குப் பாடல்களில் நுட்பமான பாவங்களை, உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்தினார். திரைப் பாடல்களில் கதாபாத்திரங்களின் உணர்வு வெளிப்பாடு முக்கியமானது என்பதில் உறுதியாக இருந்தார். திரையிசையைத் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் உன்னிப்பாகக் கவனித்தார்.
இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ஜான்சன் ஆகியோர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் போன்ற கலைஞர்களை அவர்களின் தனித்தன்மையை முன்வைத்துப் போற்றினார். தேவையின்றி வேண்டுமென்றே சிக்கலாகப் பாடல்கள் உருவாக்கப்படுவதில் அவருக்கு விருப்பம் இருந்ததில்லை. அதேவேளையில், குரல்களை நவீனத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி பாடலுக்குப் புதிய பரிமாணம் சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் மீது ஜெயச்சந்திரனுக்கு நிறைய மதிப்பு இருந்தது.
கனிவான குரல்: 1970களில் எம்.எஸ்.வி-யின் இசையில் தமிழில் பாடத் தொடங்கியிருந்த ஜெயச்சந்திரனுக்கு ‘பொன்னென்ன பூவென்ன கண்ணே’ (அலைகள்), ‘வசந்தகால நதிகளிலே’ (மூன்று முடிச்சு) போன்ற அழகான பாடல்கள் கிடைத்தன. அந்தாதிப் பாடலாக அமைந்த ‘ஆடி வெள்ளி தேடி உன்னை’ (மூன்று முடிச்சு) பாடலை அத்தனை இலகுவாக, ருசியாகப் பாட மொழி மீதும் உச்சரிப்பு மீதும் ஜெயச்சந்திரன் கொண்டிருந்த கவனம் மிக முக்கியமானது.
இளையராஜாவின் வருகைக்குப் பின்னர் ஜெயச்சந்திரனுக்கு அமைந்த பாடல்கள் தனித்த சுவையைக் கொண்டிருந்தன. ‘ஒரு வானவில் போலே’ (காற்றில் வரும் கீதம்), ‘தவிக்குது தயங்குது’ (நதியைத் தேடிவந்த கடல்), ‘கீதா சங்கீதா’ (அன்பே சங்கீதா), ‘ராஜா பொண்ணு அடி வாடியம்மா’ (ஒரே முத்தம்) போன்ற பாடல்களை உதாரணங்களாகச் சொல்லலாம். புகழ்பெற்ற பாலிவுட் இசையமைப்பாளர் சலீல் செளத்ரி தமிழில் ஒரு சில படங்களுக்கே இசையமைத்திருந்தாலும், ஜெயச்சந்திரனுக்கு அற்புதமான பாடல்களைத் தந்தார்.
‘உள்ளமெல்லாம் தள்ளாடுதே’ (தூரத்து இடிமுழக்கம்), ‘பூவண்ணம் போல நெஞ்சம்’ (அழியாத கோலங்கள்) ஆகிய பாடல்கள் இருவரும் தமிழுக்கு அளித்த அற்புதப் பரிசுகள். வழக்கமான டூயட் பாடல்களைவிடவும், ஏதேனும் ஒரு விதத்தில் நுட்பமான உணர்வு வெளிப்பாட்டைக் கோரும் பாடல்கள் ஜெயச்சந்திரனுக்கு இயல்பாகவே அமைந்தன.
புகழ்பெற்ற ‘ராசாத்தி உன்ன’ பாடல் மிகப் பெரிய உதாரணம். இழந்துவிட்ட தனது காதலின் நினைவுகளைப் பாடலாக உருவாக்கி ஒரு கிராமத்தையே தாலாட்டும் கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமானதாக அமைந்திருந்தது ஜெயச்சந்திரனின் குரல். காதலி மீது காதல் மட்டுமல்ல, கனிவும் கொண்டிருக்கும் நாயகனின் குரல் என்றால் அதில் ஜெயச்சந்திரனுக்கு முன்னுரிமை என்ற விதியை இசையமைப்பாளர்கள் பின்பற்றியிருக்க வேண்டும்.
எம்.எஸ்.வி. இசையில் ஜெயச்சந்திரன் பாடிய, ‘நான் தாயுமானவன் தந்தையானவன்’ (தாம்பத்யம் ஒரு சங்கீதம்) பாடலைக் கேட்டிருப்பவர்கள் இதை மறுபேச்சின்றி ஒப்புக்கொள்வார்கள். ‘தாலாட்டுதே வானம்’ (கடல் மீன்கள்) பாடலில் இளையராஜாவின் வளமான இசைக்கோவையையும் தாண்டி ஜெயச்சந்திரனின் கனிவான குரல் ஈர்க்கும்.
‘சொன்னது நீதானா?’ படத்தில் இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன் பாடிய, ‘வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது’ பாடலைக் கேட்டுப் பாருங்கள். அதில் இருக்கும் தந்தைமையின் உருக்கம் ஒரு கணமேனும் கண்ணில் நீரைக் கொணர்ந்துவிடும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலிலும் அந்தத் தந்தைமையின் உருக்கத்தை உணர முடியும்.
‘மார்பில் ஊரும் உயிரே’ என்று முடியும் பல்லவியில் ஜெயச்சந்திரனின் குரலில் இருக்கும் நெகிழ்வு, தந்தைகளால் மட்டுமே உணரக்கூடியது. ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ (சூரியவம்சம்) பாடலின் காதல் வடிவத்தை ஹரிஹரனுக்கும், அதே பாடலின் சோக வடிவத்தை ஜெயச்சந்திரனுக்கும் அளித்த எஸ்.ஏ.ராஜ்குமார், ‘வானத்தைப் போல’ படத்தின் ‘காதல் வெண்ணிலா கையில் சேருமா’ என்னும் காதல் பாடலை ஹரிஹரனுக்கும், அதன் சோக வடிவத்தை ஜெயச்சந்திரனுக்கும் அளித்தார்.
தான் இசையமைத்த முதல் படமான ‘சின்னப்பூவே மெல்லப் பேசு’ படத்தின் தலைப்புப் பாடலையும் ஜெயச்சந்திரனின் குரலிலேயே பதிவுசெய்தார். அவரது இசையில் வந்த ‘பூந்தென்றலே நீ பாடிவா’ (மனசுக்குள் மத்தாப்பூ) பாடல் காதல் பாடல்களிலேயே மிகவும் கனிவானது.
‘பகல் நிலவு’ படத்தில் காட்சி வடிவம் பெறாத ‘பூவிலே மேடை’ பாடல், நாயகியின் காதலனுக்கானதா, அண்ணனுக்கானதா என ஒரு குழப்பம் உண்டு. பரிவான குரல் கொண்ட ஜெயச்சந்திரன் பாடியதால் அந்த இனிய குழப்பம் நேர்ந்தது எனக் கருதிக்கொள்ளலாம். அன்பின் அசரீரி அது!
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in