வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. “அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் தொடுத்து, அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் தலைமையிலான வெனிசுவேலாவை விடுவிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்த மரியாவுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுவது விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கிறது.
ஒன்பது போர்களை நிறுத்தியதற்காகத் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் எனக் கூறிவந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இந்தப் பரிசு வழங்கப்படாவிட்டாலும், இந்தப் பரிசை டிரம்ப்புக்குச் சமர்ப்பிப்பதாக மரியா அறிவித்தது இன்னொரு சர்ச்சைக்கு வழிவகுத்தது.
வெனிசுவேலா மீது டிரம்ப் போர் முஸ்தீபுகள் செய்துவரும் சூழலில், அதனை உறுதியாக எதிர்த்துப் போராடுவோம் என நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ள காலத்தில் இப்பரிசு மரியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இச்சூழலில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவர் எவ்வாறு தேர்வுசெய்யப்படுகிறார் என்பது குறித்தும் அடிப்படையாக ஒரு புரிதலுக்கு வர வேண்டும்.
அமைதிப் பரிசின் அடிப்படை: ‘மக்களின் அமைதிக்கும் சகோதரத்துவத்துக்காகவும் நாடுகளுக்கு இடையேயான சகோதரத்துவத்துக்காகவும் நிரந்தரமான படைகளை ஒழித்தல், படைபலத்தைக் குறைத்தல், சமாதான மாநாடுகளை நடத்துதல், அத்தகைய அரங்குகளை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்காக அதிகபட்சமான, சிறந்த பணிகளைச் செய்தவர்களைக் கௌரவிப்பதற்காக’ - அமைதிக்கான நோபல் பரிசை ஆல்பிரட் நோபல் நிறுவினார்.
பிற பரிசுகள் அனைத்தும் அந்த முறையில் மேதைமை கொண்ட கல்வியாளர்களால், அறிவாளிகளால், அந்தத் துறையில் அனுபவத்தின் - நடைமுறையின் அடிப்படையில் நிகழ்ந்த உண்மைக்காகத் தரப்படுகின்றன. இப்பரிசுகள் அரசியல்வாதிகளின் தலையீடற்ற - துறைசார் வல்லுநர்களால் தேர்வுசெய்யப்படுபவை.
அமைதிப் பரிசின் தேர்வுக் குழு இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. நார்வே நாட்டின் நாடாளுமன்றத்தினால் இந்தத் தேர்வுக் குழு நியமிக்கப்படுகிறது. சமகால நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத, கடந்தகால நாடாளுமன்ற உறுப்பினர்களான அரசியல்வாதிகளைக் கொண்டதாக இந்தத் தேர்வுக் குழு இயங்குகிறது.
ஐந்து பேர் கொண்ட இந்தக் குழுவில் வலது - நடுவாந்திர - தாராளவாதிகளே அதிகம் இடம்பெறுவர். மூன்று தேர்வுக் குழு உறுப்பினர்களால் தேர்வுசெய்யப்படுபவர் பரிசுக்குரியவராக அறிவிக்கப்படுவார். இவ்வாறு பிற துறைகள் போலன்றி சமாதானப் பரிசு இயல்பாகவே அரசியல்வாதிகளின் அகநிலையில் இருந்து முடிவு செய்யப்படுகிறது.
விருதாளர்களின் பின்னணி: அமைதிக்கான உண்மையான பங்களிப்புகளைவிட சர்வதேச வியூக அரசியல் காரணங்களுக்காக இது வழங்கப்படுவதாகத் தோன்றும்போது விவாதங்கள் எழுகின்றன. 1901 முதல் கடந்த 125 ஆண்டுகளில் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் 25 பேர்தான் ஐரோப்பியர் அல்லாத ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
மற்ற அனைவரும் மேற்கு ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், கிழக்கு ஐரோப்பியர்கள். சோவியத் யூனியன் குறித்த மனித உரிமை விமர்சகர்கள், ஐரோப்பியர் அல்லாதவர்களின் மனித உரிமை, பெண் சுதந்திரம், ஐரோப்பிய வகை ஜனநாயகம் போன்றவற்றுக்காகத் தேர்வுசெய்யப்பட்டவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
இயல்பாகவே ஐரோப்பிய மைய சமாதானம், மனித உரிமை, முன்னேற்றம் போன்ற கருத்தாக்கங்கள் குறித்த ஒரு மதிப்பீட்டுக்கு நாம் வர வேண்டும். அது ராணுவ வலிமை அல்லது போர்களின் வழி சுமத்தப்பட்ட சமாதானம், பொருளாதாரச் சமத்துவம் என்பதல்லாமல் தனியார் செல்வக்குவிப்பு என்பதன் அடிப்படையிலான பொருளியல் முன்னேற்றம், உணவு, உடை, இருப்பிடம், கல்வியுரிமை, சமூகப் பாதுகாப்பு, நாடுகளின் இறையாண்மை தவிர்த்த மனித உரிமை என்பதே ஐரோப்பியத் தர்க்கம்.
நாடுகளுக்கு இடையில் சமாதானம், மக்களுக்கு இடையில் அமைதி என்னும் ஆல்பிரட் நோபலின் கருத்தாக்கங்களுடன் அடிப்படையிலேயே இது முரண்படுகிறது. இது குறித்த விமர்சன உணர்வு கொண்ட அரசியல்வாதிகள் தேர்வுக் குழுவில் இடம்பெறும்போது, ரிகபர்ட்டோ மஞ்சு என்னும் லத்தீன் அமெரிக்கப் பூர்வகுடி உரிமைப் போராளி, தென் ஆப்ரிக்க நிறவெறி எதிர்ப்பு விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலா போன்றவர்கள் நோபல் சமாதானப் பரிசு பெற்றார்கள்.
இது இல்லாத ஐரோப்பிய மையவாதத்தை முன்னெடுப்பவர்கள், காலனிய, முதலாளிய, போரின் வழி சமாதானம் என்பதை வைத்து முடிவெடுக்கிறார்கள். பராக் ஒபாமாவின் பதவிக்காலம் தொடங்கி ஒன்பது மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், அவருக்கு 2009ஆம் ஆண்டுக்கான அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.
ஏன் அதைப் பெற்றோம் என்பது குறித்துத் தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று பல ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒபாமா சொன்னார். அவரது பதவிக்காலத்தில் அமெரிக்க ராணுவப் படைகள் ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் தீவிரமாகச் செயல்பட்டன.
காலனிய ஆதிக்க மனோபாவம்: உலக வரலாற்றில் இரண்டாம் உலகப் போரும், ஹிட்லரின் முடிவும் இரண்டு செய்திகளை அறிவித்தன. ஒன்று, மனித உரிமைப் பிரகடனத்தின் அடிப்படையிலான, சர்வதேச நீதிமன்றம், ஐநா மன்றம் போன்றவை வழங்கும் உலகச் சட்டங்களின் அடிப்படையிலான அரசியல். மற்றது, இனக்கொலையை இனி வரலாறு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்னும் தரிசனம்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னும் வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஐரோப்பா, ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் அதிகம் ராணுவத் தலையீடுகளை நிகழ்த்தியவை அமெரிக்க அரசும் - மேற்கத்திய அரசுகளும்தான். சமாதானம் என்பது இரு தரப்பும் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வது. பாலஸ்தீன விஷயத்தில் இன்றும் செயல்படுவது காலனியக் கட்டமைப்பின் சமாதானம். வலுவற்றவர் மீது சுமத்தப்படும் சமாதானம்.
நாடகீயமான போர் அச்சுறுத்தல்கள், யார் அதிகமாக அணு ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்னும் முழக்கங்கள், ஊடகப் பிரச்சாரம் போன்றவற்றின் மூலம் அமைதி அடையப்படுவதில்லை. அது உண்மையான சமாதானம், மனித உரிமைப் பாதுகாப்பு, போரற்ற உலகு, நீண்டகாலச் சமூக மாற்றம் போன்றவை மூலம் அடையப்படுகிறது. இந்த லட்சியங்களை உண்மையிலேயே உள்ளடக்கியவர்களை நோபல் அமைதிப் பரிசு கௌரவிக்கும்போது, அது உலகளாவிய கலங்கரைவிளக்கமாகத் திகழ்கிறது.
1937ஆம் ஆண்டு முதல் 1948 வரை ஐந்து முறை நோபல் அமைதிப் பரிசுக்கு மகாத்மா காந்தி பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஐந்து முறையும் அந்தப் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது. இதன் பின்னிருப்பது காலனிய ஆதிக்க மனோபாவம் என்பதன்றி வேறல்ல. அதிகாரத்தையும் கொள்கையையும் சமாதானத்தின் இலக்கையும் குழப்பும்போது நோபல் அமைதிப் பரிசு, தனது நோக்கத்தை இழக்கிறது. ஆக, வெனிசுவேலா மீது போரை விரும்பும் டிரம்ப்பின் ஆசி பெற்ற, தனது சொந்த நாட்டின் மீது இஸ்ரேலிய - அமெரிக்கப் படையெடுப்பைக் கோரும் மரியாவுக்கு அறிவிக்கப்பட்ட அமைதிப் பரிசு சர்ச்சைக்குள்ளாவது வியப்புக்குரிய விஷயம் இல்லை!
- தொடர்புக்கு: rajrosa@gmail.com