காசாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் சற்று அதிகமாக இஸ்ரேல் நடத்திவரும் இனக்கொலைப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாகச் சொல்லப்படும் டொனால்டு டிரம்ப்பின் ‘இருபது அம்சத் திட்ட’த்தை ரஷ்யா, சீனா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், எட்டு அரபு நாடுகள், மூன்று முஸ்லிம் நாடுகள் வரவேற்றுள்ளன. பிரதமர் மோடியும்கூட மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
திட்டத்தின் முதல் பகுதிக்கான பேச்சுவார்த்தையை இரு தரப்பினரும் விவாதித்து ஒரு முடிவை எட்டியுள்ளதாக ஹமாஸின் அரசியல் தலைவர் கலில்-அல்-ஹாயா ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்: “போரையும் காசா மக்கள் மீதான ஆக்கிரமிப்பையும் முடிவுக்குக் கொண்டுவர ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.”
திட்டத்தின் நோக்கம்: தன் சமாதானத் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளாவிட்டால், முன்னுதாரணம் அற்ற வகையில் காட்டு வெள்ளமாய் ரத்தம் ஓடும் என்று டிரம்ப் எச்சரித்ததையும் நினைவுகூர வேண்டியிருக்கிறது. இஸ்ரேலின் இனப்படுகொலைகளைக் கண்டித்து உலகெங்கும் நடத்தப்பட்ட போராட்டங்கள், அண்மையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும்கூட பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ள சூழலில், டிரம்ப்பின் திட்டம் வெளியிடப்பட்டது.
காசா மக்கள் அனுபவித்துவரும் துயரங்களைப் போக்குவதும், இஸ்ரேலியப் படைகளைத் திரும்பிச்செல்ல வைப்பதும், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதும் ‘இஸ்ரேல்’, ‘பாலஸ்தீனம்’ என்ற இரு அரசுகளை ஏற்படுத்துவதை நோக்கிய நீதியான, முழுமையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவைப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று செளதி அரேபிய அரசாங்கம் கூறுகிறது.
உண்மையில், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை இத்திட்டம் உறுதிப்படுத்தும்; நாளொன்றுக்கு 600 லாரிகளில் நிவாரணப் பொருள்கள் செல்வதை இஸ்ரேலியப் படைகள் அனுமதிக்கும் என்று இத்திட்டம் கூற, தொடக்கத்தில் 400 லாரிகளை மட்டும் அனுமதிக்கப்போவதாகவும் பின்னர், அவற்றின் எண்ணிகையை அதிகரிக்கப்போவதாகவும் இஸ்ரேல் கூறிவிட்டது.
10,000 குழந்தைகளை உள்ளடக்கிய 67,000 பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்து, அவர்களது வாழ்விடங்களை இடிபாடுகளாக்கி, அங்கு உணவு செல்லவிடாமல் தடுத்து, ‘பட்டினி போடுவதன் மூலம் பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்தல்’ என்ற புதிய உத்தியைப் பயன்படுத்திய இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு உள்ள பரிசுதான் டிரம்ப்பின் திட்டம்.
இஸ்ரேலின் தந்திரம்: இஸ்ரேலும் ஹமாஸும் செய்துகொண்ட உடன்படிக்கையின் பகுதியாக காசாவின் 58% நிலப்பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும்; பிறகு, அது படிப்படியாகக் குறைந்து (அதற்குக் காலக்கெடு ஏதுமில்லை) கடைசியில், இஸ்ரேலும் அதன் பகை சக்திகளும் மோதிக்கொள்ளாமல் இருக்கும் ஒரு பகுதி (buffer zone) இஸ்ரேலியப் படைகளின் கட்டுப்பாட்டில் நிரந்தரமாக இருக்கும்.
ஹமாஸால் பிணைக்கைதிகளாகக் கொண்டுசெல்லப்பட்ட இஸ்ரேலியர்களை உடனடியாக இஸ்ரேலிடம் ஒப்படைப்பர்; பதிலாக, ஹமாஸ் முன்வைத்த பட்டியலில் உள்ள பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ஒப்படைக்கும். ஆனால், ஒப்பந்தத்தின் மை காய்வதற்கு முன்பே, அந்தப் பட்டியலிலிருந்து சில முக்கிய பாலஸ்தீன அரசியல் தலைவர்களின் பெயர்களைச் சத்தமில்லாமல் நீக்கிவிட்டது இஸ்ரேல்.
உண்மையில் இந்த ஒப்பந்தம், காசாவில் ஆதிக்கம் செலுத்தவும் பாலஸ்தீன தேசிய சுயநிர்ணய உரிமையை அடியோடு மறுக்கவும், இஸ்ரேலும் அமெரிக்காவும் கொண்டுள்ள குறிக்கோளை அடைவதற்கான இன்னொரு நகர்த்தல்தான். அதாவது, பாலஸ்தீனத் தலையாட்டிகளையும் இஸ்ரேலியப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி, அமெரிக்காவால் மேற்பார்வையிடப்படும் குழுவால் நிர்வகிக்கப்படும் ஒரு காலனியாக காசாவின் பெரும் பகுதி மாற்றப்படும் என்பதை டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தக் குழுவில் ஹமாஸின் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, மேற்குக் கரையை நிர்வகிக்கும் ‘பாலஸ்தீன அதிகாரம்’ என்கிற அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடமில்லை. மாறாக, ஒரு காலத்தில் பாலஸ்தீனத்தைத் தன் காலனி நாடாக வைத்திருந்த பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேய்ர் அதில் இடம்பெறுவார்.
கவிதாஞ்சலி: இந்த நேரத்தில், நம்மால் செய்யக்கூடியது எல்லாம் இனக்கொலைக்குப் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மட்டுமே. காசாவின் கான்யூனிஸில் இருந்த மருத்துவ வளாகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த குழந்தை மருத்துவர் அலா அல்-நஜ்ஜார் (Ala’ Al-Najjar). அவருடைய ஒன்பது குழந்தைகள் யாஹியா, ரக்கா, ரஸ்லான், ஜுப்ரான், ஈவ், ரேவன், சதீன், லுக்மன், சிட்ரா கொல்லப்பட்டுவிட்டனர்.
அவருடைய மூத்த மகளுக்கு 12 வயது; கடைசிப் பச்சிளம் குழந்தைக்கு 6 மாதம். ஒன்பது நாள்களுக்குப் பிறகு அவருடைய கணவரும் மருத்துவருமான ஹம்தி அல்-நஜ்ஜார் கடுங்காயங்களால் மரணமடைந்தார். அலா அல்-நஜ்ஜாருக்கு ஒரே ஒரு குழந்தைதான் உயிரோடு விட்டு வைக்கப்பட்டிருந்தது.
புகழ்பெற்ற பாலஸ்தீனக் கவிஞர் இப்ராஹிம் நஸ்ருல்லா அவருக்காக எழுதிய அலா அல்-நஜ்ஜாரின் பறவைகள் என்ற நெடுங்கவிதை. அதன் ஒரு பகுதி இது (அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் மருத்துவர் அல் கரிமி):
எங்கள் படுக்கைகள்
எங்களுக்கு முன்பே
கடவுளை அடைந்தன
எங்கள் பொம்மைகள்
எங்களுக்கு முன்பே
கடவுளை அடைந்தன
எங்கள் கனவுகள்
எங்களுக்கு முன்பே
கடவுளை அடைந்தன
எங்கள் பெயர்கள்
எங்களுக்கு முன்பே
கடவுளை அடைந்தன
எங்கள் உடல்களின் எச்சங்கள்
எங்களுக்கு முன்பே
கடவுளை அடைந்தன
எங்கள் அண்டைவீட்டார்
எங்களுக்கு முன்பே
கடவுளை அடைந்தனர்
எங்கள் தெரு,
எங்கள் அண்டைப்பகுதி,
எங்கள் வகுப்பறை,
எங்கள் ஆசிரியர்
ஆம்! நாங்கள் எஞ்சியிருக்கிறோம்
உங்கள் இதயத்தைச் சுற்றிலும்
சிலவேளை வாழ்க்கையின்
அர்த்தம் பற்றிச் சந்தேகித்தும்
வேறு சமயங்களில்
அதன் நிச்சயத்தன்மையைக்
கேள்விக்கு உட்படுத்தியும்
உங்கள் மிக இளம் குழந்தை
மேகமாகிவிடும்போது
உங்கள் நடுக்குழந்தை
தணலின் துணுக்காகும்போது
உங்கள் மூத்த குழந்தை
பிசைந்த மாவின் துண்டாகும்போது
உங்களைத் தழுவுவது
எவ்வளவு கடினம் என்பதை
நாங்கள் அறிந்திருப்பதால்
உங்கள் இதயத்தைத் திறங்கள் இப்போது
நான் ஏன் பிறந்தேன்?
பிரசவிப்பது ஏன்?
அவர்களின் ஆன்மாக்களுக்கு
விடை கொடுத்தனுப்புவதற்காக,
அடிவானத்தில் பறவைகள்
ஒன்றுசேராமல்
பிய்த்தெடுக்கப்படுவது போல்
அவர்கள் சிதறி மறைந்து
போவதைக் காண்பதற்காகவா?
ஓ! விடியல் காலையே
எங்களை உற்றுப்பார்.
இந்த இனப்படுகொலையிலிருந்து
எங்களைப் பிடுங்கி எடு
அதிசயிக்கத்தக்க விதத்தில்
அல்லது உன் கதிரவனின்
ஞானத்தைக் கொண்டு
ஓநாய்கள் ஒரு தாயின்
இதயத்தின் மீது கூடியுள்ளன
கொடுமனம் படைத்த போர் வீரர்கள்,
மிருகங்கள்,
தளபதிகள்.
அவர்களுக்குப் பின்னால்,
இருளில்,
ரத்தமும் கொலையும் கொண்டு
செழித்தோங்கும்
ஒடுக்குமுறையாளர்கள்.
இளம் வயதினரையும் முதியவர்களையும்
எரித்துக்கொண்டிருக்கிறார்கள்:
இது இனப்படுகொலையின் பாதியா?
அல்லது கால் பங்கா?
அல்லது பத்தில் ஒன்பதா?
என விவாதித்துக்கொண்டு
கடை கண்ணிக்குப்
போய்வருவதுபோல்
மீன் பிடிப்பதுபோல்
பனிச்சறுக்கும் கோல்ஃபும்
விளையாடுவதுபோல் ஒரு பழக்கம்!
- தொடர்புக்கு: sagumano@gmail.com